காதல் கடிதம்

காங்கிரசிற்கு ஆதரவாய் கைகளை நீட்டி
முருக கடவுள் நின்றிருந்த காலெண்டரை பார்த்தேன்.
அன்றைய தேதிக்கு 'சிம்மம்-கேடு'
என ஆருடம் சொன்னது.
உண்மைதான் பலன் எனக்கு
"பன்மையில்" பலித்து கொண்டிருந்தது....

"ஆரம்பிக்கலாமா??" என பேப்பரை
என் பக்கம் தள்ளினான் பாலன்.
மீசை,தாடி இல்லா T.R போலிருப்பான்
எங்கள் ஒரு பானை சோற்றில்
ஒரு சோறு இவன் ......

"இதெல்லாம் எந்த நாய் செய்யுதோ
அந்த நாய் தான் எழுதனும்னு " சீறி
அந்த அமரக்காதலை
அஃறினை காதலாக்கினேன்.

"டேய் என் எழுத்து கேவலமா இருக்கும்
பிழை வேறு வரும்''
- என தன்னிலை விளக்கம் அளித்தான்
தன்மான தமிழன்.

"அதாவுது சிந்தனை உனது
சிற்பம் எனது ??!!!!" என்றேன்
"சூப்பர்டா.. மச்சான் எடேல இந்த மாதிரி
பிட்ட போடணும்டா " என்றான்.

இந்த சப்பை தமிழுக்கே
சங்க தமிழ் "feel" கொடுத்தான்.
"ஊரார் பிள்ளையை" பழமொழி வேறு
உள்ளுக்குள் வந்து போனதால் உடன் பட்டேன்!!!!!!!!!

"சொல்லித்தொல" எனச்சொல்லி
காகிதத்தின் நெற்றியில் "" போட்டேன்.
"அவ அழகிருக்கே அது என்னை அப்டியே
கொல்லுதுடா " வென சொல்லி பாயை பிராண்டினான்...

பேனாவை பின்னால் கூடி நெற்றியில் குத்தி
சிந்தனை கிடங்கை தோண்டுவது போல்
"கவிஞர்" டச் கொடுத்தேன்....

சட்டென " அழகு திளைக்கும் தேவதை நீ
என் அறிவை கொலைக்கும் ராட்சசி நீ " என்றேன்.
"அதான் அதே தான்..." என
குணா கமல் போல் கத்தினான்.
அவன் உளறியதையெல்லாம்
முடிந்தவரை உருமாற்றினோம்.

"வெட்கம் உனது தாய் மொழி
நீ வாய் மூடி சிரிக்கையில்
அது வெறும் வாய்மொழி" என்றெல்லாம் எழுதினோம்.

கிட்டத்தட்ட அவள் கிட்னி தவிர
அனைத்தையும் வர்ணித்தாகிவிட்டது!!!!!
கடிதத்தை மீண்டும் ஒருமுறை
படித்து பார்த்தான்.
"அன்புள்ள" பக்கத்தில்
அவள் பெயர் போட்டான்.

" டேய் ஐஸ்வர்யாராய்க்கு கடிதம் எழுதி
மனோரமாவுக்கு அஞ்சல் செய்வது போலுள்ளது" என்றேன்
நான் உரைத்தது
அவனுக்கு "உறைத்ததாய்" தெரியவில்லை.
வரேண்டா மச்சான்
என சொல்லி மறைந்தான்

கால சக்கரம் 4 வது கியரில் சுற்றியது
சமீபத்தில் தி.நகர் கூட்டத்தில் பாலனை பார்த்தேன்.
நலம் விசாரிப்புகளுக்கு பின்
நாசூக்காய் கேட்டேன்..
"இல்லடா ...கொடுக்கவே இல்ல
அவளுக்கு இப்ப கல்யாணமெல்லாம்
முடிஞ்சு போச்சு" ன்னு சொல்லி சிரிச்சான்.....

நாசா சொல்கிறது
"சொல்லப்படாத காதல் பூமியில்
சுற்றிக்கொண்டே இருக்குதாம்......... "



கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ஹ ஹ ஹ .......அருமையாய் இருக்கு தோழர்....ஆனா final ரொம்ப touching uh இருந்தது...!