நடுநிசி நாய்கள்







'ஹே..உண்மைய சொல்லு .... நீ தான நகட்டுற...'

'உஷா எரும..நீதான் பொய் சொல்ற..நீயே மூவ் பண்ணிட்டு என்னைய சொல்றியா..'

'என்னடி மதி சொல்ற..' எனக் கேட்ட உஷா முகத்தில் வியர்வை துளிகள் படர்ந்திருந்தன. அவர்கள் முன் ஒரு பெரிய அட்டை இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள், எண்கள் போன்றவை ஒரு வட்டத்திற்குள் எழுதப்பட்டிருந்தன. அந்த அட்டையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தில் மதி,உஷா இருவரும் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டே எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். உஷாவும்,மதியும் நாணயத்தையே பார்த்தபடி இருந்தனர்.இருவரும் சகோதரிகள் என பார்த்தவர் சொல்லிவிடும் தோற்றமே பெற்றிருந்தனர். 'ஆவிகளுடன் பேசுவது எப்படி' என்ற திகில் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர். அறையின் அத்தனை ஜன்னல்களும் மூடப்பட்டு இருந்தது. நாம் கேட்கும் கேள்விக்கு ஆவிகள் நாணயத்தை நகர்த்தி கட்டத்தில் உள்ள எழுத்துக்கள் மூலம் பதில் சொல்வது அந்த ஆட்டத்தின் சாராம்சம்.நாணயம் மெல்லமாய் வலப்புரமாய் ஊர்ந்து கொண்டிருந்தது. மதி முகத்தில் பயம் பரவி இருந்தது.

'போடீ..நீ தான் பயமுறுத்துற... நான் வரல..' என சொல்லிக்கொண்டே மதி அறையை விட்டு வெளியே ஓடினாள்.

'நா ஒன்னும் பண்ணலடீ.. 'வழிஅனுப்புதல்' பண்ணனும் மதி.. நில்லுடீ..'

'போடி லூசு'

உஷாவும் கொஞ்சம் பயந்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.வீட்டின் முகப்பில் இருந்த கடிகாரத்தில் மணி 7.30 என காட்டிக்கொண்டிருந்தது. அடுப்பறையில் கேட்கும் விசில் சத்தம் தவிர காலை வேளை என்பதற்கான அறிகுறி அந்த வீட்டில் தெரியவில்லை.
கோமதி காபி டம்ளர்களை கையில் வைத்தபடியே அடுப்பறையில் இருந்து வந்தாள். 'காலங்காத்தால பரணி ரூம்ல என்னடி பண்ணிக்கிட்டிருக்கீங்க??' எனகேட்டாள். 'நானும் மதியும் படிச்சிட்டு இருந்தோம்மா' என்றாள் உஷா. மதி கண் சிமிட்டி உஷாவை பார்த்து சிரித்தாள்.

கோமதி ''நீ காலைல உட்காந்து படிச்சேன்னு அந்த ஈஸ்வரன் சொன்னாலும் நா நம்ப மாட்டேன்டீ.. எந்நேரம் பாரு ஒரே டிவி, விளையாட்டு... உங்களை சொல்லி என்ன செய்ய, மூத்தவளே அப்படித்தான் இருக்கா..போய் குளிங்கடீ ஸ்கூல் பஸ் வந்துரப்போகுது...''

மதி சிரித்துக்கொண்டே வந்து அம்மாவை தலையால் முட்டினாள்.கோமதி அவளை விளையாட்டாய் பின்புறம் தட்டினாள். மாடியில் மூத்தவள் பரணியின் அறையில் ஜன்னல் காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. உஷா மேலே ஒருமுறை பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கிக்கொண்டாள். பள்ளிக்கு கிளம்பினாள்.

மாலை பள்ளி முடிந்து அனுவிடம் பேசிக்கொண்டே வந்தாள் உஷா. 'உனக்கு நேத்தே மூனு தடவ சொன்னேன்.. 'வழி அனுப்புதல்' பண்ணலேனா ஆவிகள் போகாது..வீட்டுக்குள்ளேயே தான் இருக்கும்'. உஷாவை பார்த்து அனு ரகசியமான குரலில் சொல்லிக்கொண்டு இருந்தாள். உஷா குழப்பமாய் அவளை பார்த்து ,'அதுக நம்ம வீட்ல இன்னுமும் இருக்கானு நாம எப்டி தெரிஞ்சிக்கிறது' . என்றாள்.



'அதுக இருந்ததுனா நாய்களுக்கு தெரியும். கொலச்சிகிட்டே இருக்கும் விடாம..'

உஷா Tution முடித்து வீடு வந்து சேர மணி இரவு ஏழாகியிருந்தது..மேலே பரணி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மதி ஹாலில் உட்காந்திருந்தாள். பேப்பரில் பென்சிலை வைத்து எதையோ வரைய முற்பட்டுக்கொண்டிருந்தாள். உஷாவை பார்த்தவுடன் ,'உஷாக்கா.. எப்டி இருக்கு 'யானை' ??' என பேப்பரை திருப்பி காண்பித்தாள்.

'ஓ..இது யானையா ??..எதுக்கும் கீழ யானைனு எழுதீறு...'

உஷாவும் மதியும் கொஞ்ச நேரம் தலை மயிரை பிடித்து சண்டை போட்டனர். டிவி,சாப்பாடு முடித்து விட்டு இருவருக்கும் படுக்கைக்கு செல்ல மணி பத்து ஆகியிருந்தது. மேலே பரணியின் அறையில் விளக்கு அணைந்திருந்தது. 'பரணிக்கு எதோ தலைவலியாம்' என அம்மா சொல்லியிருந்தாள். இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போயினர்.பக்கத்து வீட்டு நாய் குலைக்கும் சத்தம் கேட்டு உஷா விழித்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். நாய் இவர்கள் வீட்டை நோக்கித்தான் குலைத்துக்கொண்டிருந்தது. காலையில் அனு சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. வேகமாய் திரும்பவும் படுக்கைக்கு வந்து மூஞ்சு வரை பெட்ஷீட்டை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.அப்போதுதான் அந்த சத்தம் மாடியில் இருந்து வந்தது 'ஆ...' வென காற்றைகிழித்து கொண்டு வந்த அந்த சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது..கோமதி எழுந்து விட்டாள். உஷாவும் அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள்.. 'என்னடி..ஆச்சு இவளுக்கு... கண்ட கண்ட கதை புஸ்தகத்த படிக்க வேண்டியது..அப்புறம் கனா கண்டு கத்துறது' என சொல்லிக்கொண்டே மாடியில் இருக்கும் பரணியின் அறை நோக்கி நடந்தாள். உஷாவும் அம்மாவின் பின்னாலேயே நடந்தாள். அவளுக்கு அடி வயிற்றில் பய உருண்டை உருண்டுகொண்டிருந்தது.கதவை திறந்து கோமதி முதலில் அறைக்குள் சென்றாள்.

அறை முழுக்க இருளாய் இருந்தது. 'டக்..டக்' என கட்டிலில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது.கோமதி விளக்கை போட்டாள். பரணி உட்கார்ந்து கொண்டு அந்த கட்டிலில் தலையை முட்டிக்கொண்டு இருந்தாள்.கோமதி மிரண்டு போய் ,'பரணிம்மா..என்னடா ஆச்சு ' என சொல்லிக்கொண்டே அவளருகே போய் கையை பிடித்தாள்.பரணி முகத்தை திருப்பினாள். அவளின் அந்த பெரிய கண்ணில் கருவிழியே தெரியவில்லை.கண் முழுக்க வெள்ளையாய் இருந்தது.வாயின் ஒரு பக்கம் உமிழ் நீர் ஒழுகிகொண்டே இருந்தது. கோமதி பயந்து போய் ரெண்டு அடி பின்னே நகர்ந்து விட்டாள். பின்னாலே பார்த்துக்கொண்டே இருந்த உஷாவும் 'வீல்' என கத்திவிட்டாள். பரணியின் முக்கத்தில் நிறைய 'மூர்க்கம்' தெரிந்தது. அவள் லேசாய் உறுமுவது போல் சத்தம் கேட்டது. நைட்டியில்,தலைவிரி கோலத்துடன் அந்த உருவம் யாரையும் மிரட்டிவிடும் என்றே இருந்தது. 'உஷா பக்கத்துக்கு வீட்ல ராதாக்காவை கூப்டு வா...' என கோமதி உஷாவை பார்த்து கத்தினாள்.

கோமதி பரணியின் அருகே சென்று தலையில் கைவைத்தாள். அவள் அதை பொருட்படுத்தாமல் தலையை வைத்து கட்டிலில் மீண்டும் முட்ட முற்பட்டாள். கோமதிக்கு அழுகை பீறிட்டது. 'இவரு வேற இந்த நேரம் பாத்து ஜெய்ப்பூர்க்கு போய் தொலைஞ்சிட்டார்..'
என புலம்பிக்கொண்டே வாசலை எதிர்பார்த்தாள். பரணி 'உர்..உர்' என இப்போது அதிக சத்தத்துடன் கத்திக்கொண்டிருந்தாள்.தன் கூரிய நகங்களால் அவள் கைகளில் அவளே பரண்டினாள். சுண்ணாம்பு சுவற்றில் நகத்தை வைத்து கீறினாள். கோமதியால் அந்த அசுர பலம்கொண்ட கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லவேளையாய் 'ராதாக்கா' வந்து சேர்ந்தாள். பரணியின் அந்த தோற்றத்தை பார்த்து கொஞ்சம் விக்கித்து நின்றாலும்,சுதாரித்துக்கொண்டு பரணியின் அருகே போனாள். கையில் வைத்திருந்த திருநீறை பரணியின் மேல் எறிந்தாள். உர் என உறுமிய அவளை கன்னத்தில் ரெண்டு முறை பளார் என விளாசினாள் ராதாக்கா. பரணி மயங்கி விழுந்தாள். உஷாவுக்கும் கண்கள் கலங்கியிருந்தது. வேப்பிலை,திருநீர் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி பரணிக்கு கொடுத்தாள்.

ராதாக்கா கோமதியை பார்த்து 'எதோ கெட்டதுக நடமாட்டமா தெரியுது' எனச்சொன்னாள். வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்தார்கள். வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டார்கள். உஷா கவனித்து இருந்தாள். பக்கத்து வீட்டு நாய் இப்போது அமைதி கொண்டிருந்தது. கொஞ்சம் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. பரணி லேசாய் முழித்தாள். கண்கள் பழைய நிலைக்கு வந்திருந்தன. ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு 'ரொம்ப Tiredஆ இருக்கும்மா' எனச்சொல்லிவிட்டு தூங்கிப்போனாள். அன்று இரவு எல்லாரும் ஹாலிலேயே படுத்துக்கொண்டார்கள். உஷாவுக்கும் கோமதிக்கும் நடுவே பரணி படுத்திருந்தாள். மதி கைசூப்பிக்கொண்டே கோமதியை கட்டிக்கொண்டு தூங்கினாள். ' நாளைக்கு முதல் வேளையாய் யாருக்கும் தெரியாம..அந்த 'வழி அனுப்புதல்' ஸ்லோகத்தை சொல்லி அந்த அட்டையை தூக்கி எரிந்திடனும்' என உஷா எண்ணிக்கொண்டாள். எல்லாரும் தூங்கிபோனார்கள். மணி ரெண்டு ஆகியிருந்தது.

பக்கத்துக்கு வீட்டு நாய் மீண்டும் முழு வீரியத்துடன் குலைக்கும் சத்தம் கேட்டது. உஷா விழித்து விட்டாள். உடல் அவளுக்கு நடுங்க தொடங்கியது. மெல்லமாய் இடது பக்கம் திரும்பி பரணியை பார்த்தாள். அவள் முழித்து இருந்தாள். அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.

****************************************************************************************
திகில்,அமானுஷ்ய பிரியர்களுக்கு கதை இத்துடன் முடிந்து விட்டது. மற்றவர்களுக்கு இன்னும் ரெண்டு வரி பாக்கி இருக்கிறது.தொடருங்கள்.

********************************************************************************************


அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.உதடு லேசாய் சிரிப்பது போல் இருந்தது. உஷா பெட்ஷீட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.பலமாய் அடித்த காற்றில் காலண்டரில் நேற்றைய தேதி ஆடிக்கொண்டே இருந்தது. மார்ச் 31.












கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Final Punch is super da..
April 1..
Raju இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லாருக்கு பாஸ் இந்தக் கதை..!
கீப் இட் அப்.
எஸ்.கே இவ்வாறு கூறியுள்ளார்…
கதை மிக நன்றாக இருந்தது! வாழ்த்துக்கள்!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி அருண்..

ராஜு தொடர்ந்து நீங்கள் தரும் அதரவுக்கு நன்றி!!!

@ எஸ்.கே ,
அப்போ நானும் இனிமே எழுதலாம்ங்கறீங்க தல!!!
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
kathai super
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.