அய்யம்மா



வீடு நிறைய கூட்டம் நிரம்பியிருக்கிறது. 'அய்யம்மா' ரொம்பவும் சுருங்கிப்போய் படுத்திருக்கிறாள். கண்களை மூடியிருக்கிறாள்.கண்டிப்பாய் நினைவு இருப்பதற்கான அறிகுறி இல்லை. மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள், பாவம் அவளுக்கு 'Gate pass'
கிடைப்பதாயில்லை.எல்லோரும் எப்போது 'அது' நிகழும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஓரமாய் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு யார் இவள்?? . என் அப்பாவை பெற்றவள். அப்பாவின் தாயை நாங்கள் 'அய்யம்மா' என்றே அழைப்போம். வீடு நிறைய இருக்கிற சாமி புகைப்படங்களை ஒரு முறை நோட்டம் விட்டேன். தொண்டைக்குழி தயக்கமாய் நகர்ந்து கொண்டிருந்த அய்யம்மாவை பார்த்து ,'சீக்கிரம் போயிரு அய்யம்மா' என மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அப்படி நான் நினைக்க என் வசம் இரண்டு காரணங்கள் இருந்தன.


1. இத்தனை வயதில் கடுமையான வலி, நினைவு பிறழ்வுகளுடன் அவளைப்பார்க்க சங்கடமாய் இருந்தது.

2. எனக்கு இன்னொருமுறை ஊருக்கு வந்து போக காசில்லை.

நம் மனதில் நினைப்பது அடுத்தவர்க்கு தெரிவதில்லை என்பது கொஞ்சம் வசதியாய் தான் இருக்கிறது.

என் எண்ணத்தில் இடியை இறக்கினாள் அய்யம்மா. ஒரு பெரியப்பா வீட்டுக்குள் வந்தவுடன் ,'ஏன் பிறந்தாய் மகனே...' என்ற பழைய பாடலை பாட ஆரம்பித்துவிட்டாள். அந்த அறையில் ஒரே சிரிப்பலை. அவள் சுருதி சுத்தமாய் பாடியது எனக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது. சிலர் 'எப்பா இது பழைய கட்டப்பா..இன்னும் ஒரு மாசம் தாங்கும் பா..' என சொல்லிக்கொண்டே வெளியேறினர். திடீரென அய்யம்மா 'பாயாசம்..பாயசம்' என கேட்டாள். சாக போகிறவர்கள் கேட்பதை மறுக்க கூடாது என்பதற்காக, ஒரு தேக்கரண்டி பாலில் ஒரு ஜவ்வரசி போட்டு அய்யம்மா வாயில் ஊற்றினார்கள். கொஞ்சத்தை விழுங்கினாள். கொடுத்து முடித்தவுடன் சும்மா இல்லாமல், அத்தை அய்யம்மாவை பாயாசம் எப்படி இருந்தது என கேட்டார். அது 'டுபாக்கூர்' பாயாசம் என்பதை அய்யம்மாவால் இந்த சூழ்நிலையில் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்.

' எம்மா...திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு..??'

'...............'

'சொல்லுங்கம்மா.. திடீர் பாயாசம் எப்டி இருந்துச்சு??'

'ம்ம்ம்.. திடீர் பாயாசம் மயிறு மாறி இருந்துச்சு!!!'

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனக்கிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிற்று.அய்யம்மாவின் பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தேன். சின்ன வயதில் அவள் சொல்லும் 'ஆதி பராசக்தி' கதைகள் ஞாபகம் வந்தது. பெரும்பாலும் கதைகளில் ஆதிபராசக்தி இறுதியில் அரக்கனை ஈட்டியில் குத்துவார். 'இத முதல்லயே செஞ்சிருக்கலாம்ல' என கேட்க நினைத்து, ஆதிபராசக்திக்கும்,அய்யம்மாவுக்கும் பயந்து அதை கேட்டதில்லை. அய்யம்மா ஒரு உணர்ச்சிப்பிளம்பு .கோபமோ, பாசமோ பொங்கிவிடுவாள். அவளை கண்டு நிறைய பேர் பயப்படுவதை பார்த்திருக்கிறேன்.திரும்பி அய்யம்மாவை பார்த்தேன். கிட்டத்தட்ட எலும்புக்கூடு போல படுத்திருக்கிறாள். கண்கள் முழுமையாய் மூடி இருக்கிறது. அவளைச்சுற்றி ஒருகூட்டம் உட்காந்து பேச்சுக்கொடுத்துகொண்டு இருக்கிறது.

'காசு...காசு...'

'உங்களுக்கு எதுக்கும்மா இப்போ காசு??''

'ம்ம்ம்..நாய் குரைக்கிறப்ப குப்பைல போடுறதுக்கு..'

திரும்பவும் சிரிப்பு. 'நாய் குறைக்கிறப்ப' என்பதை தேவையில்லாமல் சேர்த்து கேட்பவர்களை குழம்ப வைப்பது அந்தக்காலத்து குசும்பு. அய்யம்மா எழுந்து வந்து 'என்ன சிவராஸ்...காபி போடட்டுமா??' என்று கேட்டுவிடுவாள் போலிருந்தது. கடைசி காலங்களில் முதுமையை விட தனிமையே அவளை ரொம்ப வருத்தியது. பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் கஷ்டப்பட்டாள். அதான் அவள் சாகும் போதுகூட பேச துடிக்கிறாள்.கைநிறைய பணம், அழகான வாழ்க்கைத்துணை, வீடு, கார், தூரதேச பயணங்கள் என நம் ஆசையின் பட்டியல் எப்போதும் நீண்டு கொண்டே இருக்கும். கடைசியில் '
இன்னைக்கு சரியா நாமளே கஷ்டப்பட்டாவது எழுந்து போய் காலைக்கடனை முடிச்சிட்டு வந்திடனும்' னு மானுடத்தின் இறுதி நிலை வந்திடுது. மரணம் அய்யம்மாவை கவ்வுவதை வேடிக்கையாய் உட்காந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'நாளைக்கு நமக்கும் இது தான்' என்கிற சின்ன பயம் கூட யார் கண்ணிலும் இருப்பதாய் தெரியவில்லை.



இரண்டு,மூன்று வாரங்கள் அய்யம்மாவின் இந்த நிலை தொடர்ந்தது. உறவுகள் எல்லாம் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தன. தூரத்து ஊர்களில் இருந்து வந்தவர்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அம்மாவாசைக்கு போய் விடுவாள், பௌர்ணமிக்கு போய் விடுவாள் என்று ஆக்டோபஸ் போல் அருள்வாக்கு சொன்னவர்களை எல்லாம் முறியடித்து முன்னேறிக்கொண்டிருந்தாள். நினைவு முழுமையாய் தப்பியதால் என்னென்னமோ பேசினாள். 'நா எவ்ளோ செகப்பு... கரு கருனு இருக்குற அவருக்கு போய் கொடுத்துட்டாக...தெருவுல போனா எல்லாரும் கேப்பாக...' என சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிப்போனார்கள். இதுவரை யாரிடமும் அய்யம்மா இந்த விஷயத்தை பேசியதில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடத்து ரகசியம். நல்லவேளை 'அய்யப்பா' உயிருடன் இல்லை. இன்னும் என்னென்ன ரகசியங்கள் அந்த மூளைக்குள் இருக்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். சொந்தங்கள் பொறுமை இழந்து போயினர். ஒருத்தர் ,'இப்படி தான் ஆண்டிபட்டில ஒரு பெருசு இழுத்துக்கிட்டு போகாம கெடந்துச்சு... 'அப்பா' போயிட்டியேனு நடுராத்திரில அவர் மேல விழுந்து மூச்ச அமுக்கி முடிச்சுப்புட்டானுங்க' என சொன்னார். நல்லவேளை அய்யம்மா யாரையும் அப்படி யோசிக்க வைக்கவில்லை. ஒரு காலைவேளையில் இறைவனடி சேர்ந்தாள்.

அய்யம்மா ஐஸ் பெட்டியில் வைக்கபட்டிருக்கிறாள். மருமகள்கள்,மகள்கள்,பேரன்,பேத்திகள் என நெறைய பேர் அழுதுகொண்டிருந்தனர். ஆச்சர்யமாய் இருந்தது.எனக்கு கொஞ்சம் கூட அழுகையே வரவில்லை. மூஞ்சை மட்டும் சோகமாய் வைத்துக்கொண்டேன். அய்யம்மா அமைதியாய் படுத்திருக்கிறாள். அழுகைச்சத்தம் அதிகமானது. மூன்று வீடு தள்ளி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கைக்குழந்தை ஒன்று சிரித்து கொண்டிருந்தது. குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் போல!!!


















கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
ஆரம்பிச்சதுல இருந்து நிறுத்தாம படிச்சுட்டேன். நல்ல ப்ளோ பாஸ்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Naan ungakitte innum ethir paakkuren.
innum konjam kooda eluthi irukkalaam about your grand ma. its ok we can have Aiyamma Revolution like Xman Revolution.. ;-)