கமல சாகசன்




நான் குழந்தையாக இருந்த காலத்தில் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் மறக்காமல் சில கேள்விகளை என்னிடம் கேட்பார்கள். " உனக்கு அம்மாவ ரொம்ப பிடிக்குமா அப்பாவ ரொம்ப பிடிக்குமா?? ", "நீ டாக்டர் ஆகபோறியா இல்ல இன்ஜீனியர் ஆக போறியா??",பெரும்பாலும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் 'ஈஈ...' என இளிப்பேன். அடுத்தத்தாய் 'உனக்கு கமல் பிடிக்குமா ,ரஜினி பிடிக்குமா?' என்பார்கள். கொஞ்சமும் தாமதிக்காமல் கமல் என கத்திவிடுவேன். இப்படியாக டவுசர் காலங்களில் இருந்தே இந்தாளை பிடித்துப்போனது. யாரோ ஒரு நடிகரை நமக்கு கொஞ்சம் அதிகமாய் பிடித்துப்போகும். எல்லா நல்ல படங்களை பார்த்தாலும், அவரின் மேல் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். இன்றுவரை நாயகன் படத்தை முழுமையாய் முப்பது முறையேனும் பார்த்திருப்பேன் இன்னமும் என் பிரமிப்பு அகன்ற பாடில்லை.

அது ஒரு தீபாவளி நாள். இப்போது போல் டி.வி யை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்காமல் உண்மையாய் பண்டிகையை கொண்டாடிய காலம் அது. கமலின் குணாவும் , ரஜினியின் தளபதியும் வெளியாகியிருந்தது. எங்கள் தெருவில் நானும், குரு அண்ணனும் மட்டுமே கமல் ரசிகர்கள். ஒரு பெரும்படையே ரஜினி பக்கம் இருந்தது. நானும்,குரு அண்ணாவும் 'குணா' ,தளபதியை தூக்கி சாப்பிட்டு விடும் என்கிற ரீதியில் கலாய்த்து கொண்டிருந்தோம். " 'கண்மணி அன்போடு ..' பாட்டுக்கே நீங்கெல்லாம் எங்க ஆளு காலுல விழுகணும் டோய் " என்று ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றிகொண்டிருந்தோம். கடைசியில் பார்த்தால் 'குணா' கவிழ்ந்து விட ,தளபதி வெற்றி பெற்று விட்டது. நானும் குரு அண்ணனும் வீட்டுக்குள்ளேயே பதுங்கிவிட்டோம். சில நண்பர்கள் எங்கள் வீட்டு ஜன்னல் வெளியே நின்று ' சிட்டுகுருவி ..சிட்டு குருவி.. ' என குணா கமல் போல் கத்தியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அதற்கு பின்னரும் தூர்தர்சனில் ரஜினி படம் போட்டால் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவது, 'ஒளியும் ஒலியும்' களில் கமல் பாடல் போட்டால் கரைச்சல் கொடுப்பது, என எங்களின் அறப்போராட்டம் தொடர்ந்தது. இன்னொரு தீபாவளி.இந்த முறை தேவர் மகனும்,பாண்டியனும் மோதின.
பழைய அனுபவங்களால் நானும் குரு அண்ணனும் கொஞ்சம் அடக்கி வாசித்தோம். நல்ல வேளையாய் தேவர் மகன் ஜெயித்தது. நாங்க 'சாந்து பொட்டு , சந்தன பொட்டு ' என பாடிக்கொண்டே வெளக்கமாத்து குச்சியால் சிலம்பம் சுற்றி ரஜினி ரசிகர்களை பழிக்கு பழி தீர்த்தோம்.

'மூன்றாம் பிறை' பார்த்த போது தான் வாழ்க்கையிலேயே முதல் முறையாய் ஒரு சினிமா படத்திற்கு கலங்கினேன். அப்போது ஸ்ரீதேவி மேலே செமத்தியான கோபம் வந்தது. அது படம் என புரியாமல் அந்த சோகம் என்னையும் சேர்த்து கவ்வியது. அந்த மாதிரி நடிப்பு நடிக்க இப்போதிருப்பவர்களால் சத்தியமாய் முடியாது. அந்த படத்தில் ஸ்ரீ தேவி நடிப்பதை அந்த படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிக்குமாம். கமல் சிரித்துக்கொண்டே ஸ்ரீதேவியிடம் 'உங்கள நான் கிளைமாக்ஸ்ல பாத்துக்கிறேன்' என்பாராம். பிறகு நடந்ததெல்லாம் சினிமா சரித்திரம். சொச்சமாய் கமல் கையில் தேசிய விருது. வறுமை நிறம் சிகப்பு, பதினாறு வயதினிலே,நாயகன்,அபூர்வ சகோதரர்கள்,மகாநதி,புன்னகைமன்னன், தேவர்மகன் .... ம்கூம் சொல்லி மாளாது அந்த சொக்கிப்போன படங்களின் பட்டியலை.'அன்பே சிவம்' என்ற படம் ஓடி தொலைந்திருந்தால் இவ்வளவு மொக்கைபடங்கள் தைரியமாய் வெளிவந்திருக்காது. குருதிபுனல் படத்தில் கமல் பேசும் வசனங்கள் அத்தனையும் மனப்பாடம் எனக்கு. 'தைரியம்ங்கிறது பயப்படாத மாறி நடிக்கிறது தான்', ' பத்ரி..மிச்சமிருக்கிறவன்லாம் உன்ன மாறி பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்புல பொறந்தவனுங்க ..' இப்படி கமல் படத்தின் எல்லாவற்றிலும் உரையாடல் கவனிக்கப்படும்.

கமலின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களையும் நானும் ரொம்ப காலமாக கவனித்து வருகிறேன். கண்டிப்பாய் ஆங்கில படங்களின் பாதிப்பு சில கமல் படங்களில் உண்டு என்பதை நான் ஒத்துக்கொள்வேன். பாதிப்புக்கும், சுடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை சில அதிபுத்திசாலிகள் புரிந்து கொள்வதில்லை. இன்னும் இணையதளங்களில் சிலர் கமல் நிகழாத அற்புதமா?? என பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நம்ம சுஜாதா சொல்வது போல் 'அவர்களை பசித்த புலி தின்னட்டும்...' . அவ்வை சண்முகி , ராபின் வில்லியம்சின் Mrs.Doubtfire படத்தின் காப்பி என எவனாவுது சொன்னால் நான் அகோரியாகி அவனை கடித்து தின்பேன். இதுபோல் இணையத்தில் கமல் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் 'என்னிடமும் கீ போர்டு இருக்கிறது' என்பதற்காகவே எழுதப்பட்டவை. தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து கமல் முடிந்த வரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நல்ல இயக்குனர்களுடன் சேரும் பட்சத்தில் கமலின் இரண்டாவுது இன்னிங்க்ஸ் நொறுக்களாய் அமையும்.
இதோ இந்த வருட தீபாவளி நாளில் வீட்டில் உட்காந்திருந்தேன். தேசிய விளையாட்டான 'ரிமோட் அமுக்குதல்' விளையாடி கொண்டிருந்தேன்.

'நடுவர் அவர்களே இன்றைய இளைஞர்களுக்கு என்ன குறை.... ' டொபக்

'இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குபவர்கள் போத்திஸ்,
கோல்ட்வின்னர்...' டொபக்

'நாங்க பட்ட கஷ்டம் படத்தோட ஒவ்வொரு frameளையும் வந்திருக்கு..' டொபக்

'பக்தியையும் செக்ஸ் மாறி வீட்டுக்குள்ளேயே வச்சிகோங்க..வெளில கொண்டு வராதீங்க...'


உலக நாயகன் கருப்பு உடையில் வழக்கம்போல் தன் கருத்துக்களை தெனாவெட்டாய் பேசிக்கொண்டிருந்தான்.அதற்கு மேல் ரிமோட் என்கிற வஸ்து தேவை இல்லாமல் போகி விட்டது.


ஆமாங்க மன்மதன் அம்பு எப்போ ரிலீஸ் ???

கருத்துகள்

அருண் இவ்வாறு கூறியுள்ளார்…
நவம்பர் 26 பாடல் வெளியீடு என்றும் டிசம்பர் 17 படம் வெளியிடப்படும் என்றும் சொல்றாங்க.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.