பெக்-3 : காதல்



முன்குறிப்பு: உள்ளதை உள்ள படி உரைக்க முயன்றதால் இது வயது வந்தோருக்கான கட்டுரை ஆகிறது. கலாசார காவலர்கள் படிக்காமல் இருப்பதே உத்தமம்.


ஹைதராபாத்தில் குளிர் எட்டு டிகிரியை தொட்டிருந்த ஒரு இரவுப்பொழுது. விவேக் சத்தம் போட்டு ஏப்பம் விட்டபோது எல்லோரும் எங்களையே பார்த்தார்கள். உபயம் அல்கஹால். நகரின் பெரிய ஹோட்டல்களில் அதுவும் ஒன்று. 'லேட்டாகுதுடா கெளம்புவோம்..' என நான் சொன்னது அவன் காதுகளை சென்றடைந்ததாய் அறிகுறி எதுவும் இல்லை. 'ஒன் பெக் ஓல்ட்மங்க்' என்றான் வெயிட்டரிடம்.எனக்கு அடி வயிற்றில் கோபப்பந்து உருண்டது. எனக்கு வந்த பிரியாணியை நான் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. விவேக் என்அலுவலகத்தோழன்.ஒரே வீட்டில் வேறு தங்கியிருக்கிறோம்.

'டேய்..போதும்டா..நெறையா குடிச்சா யாராவது ஒனக்கு அவார்டு தரேன்னு சொல்லிருகாங்களா' என்றேன் அலுப்புடன்.

விவேக் குனிந்தான்.அந்த குண்டான உடம்பு மட்டும் குலுங்கியது.பிற்பாடு தான் புரிந்தது அவன் அழுது கொண்டிருக்கிறான். 'அய்யயோ..அந்த விஷயமா' என எனக்கு கொஞ்சம் பீதி ஏற்பட்டது. விவேக் போதை முத்திப்போனால் தன்னுடைய காதல் கதையை சொல்லித்தொலைவான்.கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் நானே கேட்டிருக்கிறேன்.

'இன்னைக்கு என்ன நாள் தெரியுமா??'

'அவ குழந்தைக்கு பொறந்த நாளா??'

என்னை முறைத்து பார்த்துவிட்டு 'அவ கிட்ட என்னோட காதல சொன்ன நாள்' என்றான்.

'ஓ அப்டியா..காலெண்டர்ல எதுவும் போடல சாரி... அதான்...'

இந்தியாவில் மக்கள் தொகைக்கு அப்புறம் அதிகமாய் இருப்பது காதல் தான். அதுவும் முக்கால் வாசி காதல்கள் இந்திய கால்பந்து அணி போல,தோத்து தான் போகும்.அவன் உளறத்தொடங்கினான். நான் வழக்கம்போல் அக்கம்பக்கத்து டேபிள்களில் அமர்ந்திருக்கும் வட இந்திய பெண்களை சகோதர பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு பெரியவர் ஜீன்ஸ் டீ சர்ட் சகிதமாய் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் விவேக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. இடதுகை ஆள்காட்டி விரலால் அடிக்கடி மூக்கை சொரிந்து கொண்டிருந்தார்.


'2007ல அவ பிறந்த நாளன்னைக்கு நைட் 12 மணிக்கு நேரா போய் wish பண்ணேன். என் கை நிறைய அவளுக்கு புடிச்ச பூக்களும்,புத்தகங்களும்.அவளோட கண்ணுல அப்டியே தண்ணி அருவி மாதிரி கொட்டியது. நேரா ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா தெரியுமா?? அத என்னைக்கும் மறக்க முடியாது'

கன்னத்தில் கொடுத்தாளா?? இல்லை உதட்டில் கொடுத்தாளா?? என்ற உன்னத சந்தேகம் எனக்குள் தோன்றியது. தருணம் சரி இல்லை என்பதால் கேட்கவில்லை.

முகத்தை அஷ்ட கோணலாய் வைத்துக்கொண்டு ஒரு Pegஐ நிறுத்தாமல் குடித்தான். முகமெல்லாம் வியர்த்து போயிருந்தது. அவன் மேல் ஒரு வித வாடை வேறு வர தொடங்கி விட்டது.மட்டையாகி போனால் ,நான் ஒருத்தனாய் இவனை எப்படி வீடு போய் சேர்ப்பது என்ற கவலை வேறு வந்துவிட்டது. டீ ஷர்ட் பெரியவர் இப்பவும் விவேக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். ஒரு வேளை இந்த ஆளு இவனுக்கு சொந்தக்காரரோ என்றெல்லாம் எனக்கு யோசிக்க தோன்றியது.

எது நடந்திருமோனு பயந்தனோ அது அப்போது தான் நடந்தது. 'என் கைல மோதிரம்லாம் போட்டு விட்டு ,நீ தான் என்னோட புருசன்னுலாம் சொல்லிட்டு கடைசி என்னை விட்டுட்டு போயிட்டாடா அந்த தேவிடியா....' என மிகச்சத்தமாக சொல்லிவிட்டு பொல பொல வென வாந்தி எடுத்தான்.என் பேண்டும் கொஞ்சம் நாஸ்தி ஆனது.சாரில் இருந்து கீழே தரையில் உட்கார்ந்தான். நான் வேகமாய் கீழே விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் தோளை பிடித்தேன்.கொஞ்சமாய் திறந்த கண்களில் என்னை பார்த்தான். எல்லோரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் முகம் சுளித்தார்கள். பலர் 'இவனுகள யாருடா உள்ள விட்டது' என்பது போல பார்த்தார்கள்.

'எவ்வ்வ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..நிம்மதியா தூங்கி ரெண்டு வருஷம் ஆச்சுடா...' எனச்சொல்லி என் மடியில் படுத்து அழத்தொடங்கினான். அடிவயிற்றில் இருந்து இரைந்து அப்படி ஒரு அழுகை. எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது. நட்சத்திர ஹோட்டல் என்பதால் அதற்குள் சிப்பந்திகள் வந்து நாகரிகமாய் எங்களை வெளியே தள்ளினார்கள்.விவேக்கை தூக்கி வந்த ஒருத்தன் கடுப்பில் 'பென் சோத்' என்றான் சத்தம் குறைவாக.


ஹோட்டலின் வெளியே ஆட்டோவுக்காக காத்திருந்தோம் இருவரும். விவேக் என் தோளில் சாய்ந்திருந்தான். அந்த டீ ஷர்ட் பெரியவர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எங்கள் பக்கத்துக்கு வந்தார்.தலையில் நிறைய முடிகள் வெள்ளை.ஆனால் உடம்பு இருக்கமாய் இருந்தது. அவரும் கொஞ்சம்போதையில் தான் இருப்பதாய் தோன்றியது.விவேக்கின் அருகில் வந்து அவன் தாடையை பிடித்து முகத்தை தூக்கி , 'என்ன லவ் Failure ரா??' என்றார். மவுனமாய் இருந்தான்.

'காலைல எழுந்ததும் கை அடிச்சிடு ..எல்லாம் சரி ஆகிடும்' என சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார். நாங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றோம்.

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழி விட்டு
ஏறுங்கரைகண்டி லேன் ,இறைவா , கச்சியேகம்பனே

- பட்டினத்தார்




கருத்துகள்

Raju இவ்வாறு கூறியுள்ளார்…
"பெரியவர்" சொன்னதுதானே நிதர்சனம்!
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
தம்பி ராஜு,
அப்டிலாம் அவசர பட்டு கருத்து சொல்லிறாதே ... ஊர்ல பொண்ணு தரமாட்டானுங்க :)
Vetrivel இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாஞ் சரிதேன்... இந்திய கால் பந்து அணியை தோல்விக்கு உவமை கொடுத்திருப்பதுதான் உறுத்துகிறது...