Y




                                                            
"தலைய தூக்கி பாக்காத டா" ரஞ்சித்தை பார்த்து அந்த பரட்டைத்தலைக்காரர் சொன்னார். முழுவதும் இருட்டி இருந்தது. காஞ்சிவரம் அங்கிருந்து முப்பது கிலோமீட்டர் என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.பரட்டைத்தலைக்காரர் ரஞ்சித்தின் பக்கத்தில் வந்தார்.

 'சொரிப்பயலா இருப்ப போல...தலைய நீட்டி நீட்டி பாத்துக்கிட்டு கெடக்க.. யாராவுது பாத்துட்டா என்னய்யா செய்யுறது...உள்ள மண்டபத்துக்குள்ள இருக்குற முப்பது பேரு உசுரும்,வாழ்க்கையும் உன்கைல தாண்டா இருக்கு...சூதானமா இரு' என்றார்.

 "இனி கரக்டா இருந்துக்கிறேண்ணே" என்றான். அவன் ஒரு பாறையின் அருகில் மறைந்த படி நின்றிருந்தான். இரண்டு நாள் தூங்காத களைப்பு அவன் முகத்தில் தெரிந்தது. திடீரென தூரத்தில் ஒரு லாரி அருகே வருவது தெரிந்தது. அதன் விளக்குகள் வெளிச்சமாய் இவர்கள் அருகே வருவது போல் இருந்தது. ரஞ்சித் மிரண்டு போய் பின்னால் திரும்பி மெல்லிசாய் விசில் அடித்தான். 


மண்டபத்தின் உள்ளே இருந்த எல்லாரும் மெழுகுவர்த்தியை அணைத்தார்கள். வண்டி இடது பக்கம் திரும்பி மறைந்தது. இரண்டு நிமிடத்தில் உள்ளே இருந்து ஒருவன் ஆந்தை போல் ஒலி எழுப்பினான். முன்னால் இருந்து ரஞ்சித் 'இல்லை' என்பது போல் கை காட்டினான். எல்லோரும் பெருமூச்சி விட்டார்கள். எல்லாருடைய மூஞ்சிலும் மரண பயம் அப்பி இருந்தது.


***********************************************************************************************************

பெரிய கணினி திரைகள், மேசையில் இந்திய அரசின் முத்திரையுடன் கூடிய பதக்கங்கள் எல்லாம் இருந்தது. அலமாரியில் முறையாய் அடிக்க வைக்கப்பட்ட புத்தகங்கள். கணினி திரையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ராம். இளமஞ்சள் நிறத்தில் சேலை அதன் மேல் ஸ்வெட்டர் அணிந்திருந்தாள் நிர்மலா. கையில் பாதி முடிந்திருந்த சிகரெட்.

"ராம்...அந்த பாஸ்டர்ட் நாளைக்கு பார்லிமென்ட்ல என்ன கிளிச்செடுக்கப் போறான்.. "What the Fuck our Honourable Fertility Minister did" னு கேப்பான். நா விரல சப்பிட்டு நிக்கணும்" என்றாள் கடுங்கோபமாக. பேசி விட்டு மூச்சி வாங்கினாள்.

"மேடம்..லேப்ல Foul Language பேசாதீங்க...நாம எவ்வளவு முயற்சி பண்ணோம்னு உங்களுக்கு தெரியாதா.."

"யு.எஸ்ல பண்ணிட்டாங்களாமே...முன்னூறு பேர ரெடி பண்ணிட்டாங்களாம்...காலைலயிருந்து பி.பி.சில போட்டு நாரடிக்குறான்..."

"Thats Absurd.. அந்த முன்னூறு பேருல யாரும் Y ஜெனரேட் பண்ண முடியாது..அவுங்கள வெறும் செக்ஸ்க்கு வச்சிக்கிரலாம். ஆனா நிரந்தர தீர்வு கெடயாது. அவுங்கள விட்டா இன்னும் பெர்டிலிட்டி Ratio மோசமா தான் போகும்.."

"அத விடுங்க.. நம்ம மிசன் லிங்கா எந்தளவுல இருக்கு...நாளைக்கு என்கிட்ட கேட்டா 75% முடிஞ்சிச்சுனு சொல்லிறவா... Fine தான.."

"Politically Correct" என்றார். நிர்மலா சிரித்தாள்.

************************************************************************************************************


"உங்க பேரு என்னங்க"

"ரஞ்சித்"

"பார்த்தா யங்கா இருக்கீங்க...வயசென்னா??"

"முப்பத்திஏழு.. நீங்க??"

"திவாகர்...இன்னைக்கு நான் தான் காவல். இன்னும் எத்தன நாளைக்கு தப்பிக்க முடியும்னு தெரில...சில நேரம் செத்துப்போயிரலாம்னு தோணுது". கண்ணாடியை கழட்டினான்

"சீ..தைரியமா இருங்க...காஞ்சிவரம்...செங்கல்பட்டு ..எச்சூர் கடந்துட்டோம்னு வைங்க..ஈசியா மகாபலிபுரம் போயிரலாம்..அங்க இருந்து கண்டிப்பா போட்ல ஏறி தப்பிச்சிரலாம்..."

திவாகர் உடல் குலுங்கி சத்தமில்லாமல் அழுதான். ரஞ்சித் அவன் தோள் தடவி "குழந்தை இருக்கா...?" என்றான்.

"ஆமா.."

************************************************************************************************************

டெல்லியில் கடுங்குளிரான நாள் அது. பாராளுமன்ற வளாகம் கூட்டமாய் இருந்தது. வெளியே லிப்ஸ்டிக் பெண்கள் மைக்கை பிடித்து நின்று கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேன்களும், அதி நவீன கார்களும் இருந்தன. பிரதமர் அஞ்சலிகாந்தியின் கார் வளாகத்துக்குள் வந்தது. வெளியே கூடியிருந்த காங்கிரஸ்காரர்கள் "அஞ்சலி மேடம் ஜிந்தாபாத்" என கோசமிட்டனர். பிரதமருடன் பேசிக்கொண்டே நிர்மலா கட்டிடத்துக்குள் நுழைந்தார். நிறைய காமிராக்கள் வெளிச்சம் காட்டின. உள்ளே அமளிகள் முடிந்து கதிரவன் பேச ஆரம்பித்தார்.

எல்லோரும் காதில் Translator பொருத்திக்கொண்டார்கள். தன் வழுக்கைத்தலையை ஒருமுறை தடவிக்கொண்டு பேசத்தொடங்கினார் கதிரவன்.

"இன்று எல்லோரும் இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள். இதே ஜனவரி இருப்பத்தியொன்று ,2012ல் அதாவது சுமார் முப்பத்தைந்து வருடம் முன் உலகின் கடைசி ஆண்குழந்தை பிறந்தது. புவிச்சூடு,கதிர்வீச்சு னு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. பிறகு ஆண்களால் Y Chromosome உருவாக்க முடியலயாம். அதனால் அப்புறம் நடந்த எல்லா இனப்பெருக்கத்துலயும் பெண்ணே பிறக்கிறாள்...  இப்பிடி பழைய கதைய சொல்லியே அழுதுகிட்டு இருக்கனுமா...இந்த அரசு என்னத்த செஞ்சது..."

"மிசன் லிங்காவில் நாம் தற்சம....." பேச முயன்றார் நிர்மலா.

"எது ஆராய்ச்சின்னு சொல்லிக்கிட்டு DNA ல Chromosome மாத்துறேன்னு மூணு ஆண்கள கொன்றீங்களே அதுவா..பாத்து மேடம் இருக்கிறதே தொண்ணூறு லட்சம் பேரு தான்...."

எல்லோரும் சிரித்தார்கள். சிலர் மேஜையை தட்டினார்கள்.கதிரவன் ஆவேசமாய் மேலும் பேசத்தொடங்கினார்.

"இன்று தினமும் நாட்டில் நடக்கும் வன்முறையை பார்த்தீர்களா...எங்கே போய் கொண்டிருக்கிறது இந்த பூமி....எஞ்சி இருக்கும்......

***********************************************************************************************************

திவாகர் பாறையின் மறைவில் அமர்ந்திருந்தான். மணி காலை மூன்று. பாதி தூக்கத்தில் காவல் இருந்தான். ஒரு லாரி புயல் வேகத்தில் அங்கு வந்தது. அவன் விசில் அடிக்க போவதற்குள் அது மண்டபத்தின் அருகில் போய் விட்டது. திவாகர் பாறையின் இருட்டில் பதுங்கி விட்டான். அவனுக்கு கைகள் நடுங்கியது. சிறுநீர் வருவது போல் இருந்தது. அடக்கிக்கொண்டான். லாரியில் இருந்து சிகப்பு ஜீன்ஸ்,சிகப்பு டாப்ஸ் அணிந்த பெண்கள் இறங்கினார்கள். பிறகு இரண்டு லாரி அங்கு வந்து சேர்ந்து கொண்டது. அனைத்திலும் சிவப்பு உடுப்பில் பெண்கள். 

"உள்ள இருக்குதுக டீ.." என்றாள் கொஞ்சம் குண்டாய் இருந்த ஒருத்தி.

மண்டபத்தில் இருந்தவர்கள் உள்ளே பதற ஆரம்பித்தார்கள். தப்பிக்க வழி தேடினார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் வெளியே பார்த்து நடுங்கினான். மண்டபத்தின் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே கர்ஜித்து கொண்டு பெண்கள் நுழைந்தார்கள். சிலர் விரகமாய் சிரித்தார்கள். ரஞ்சித் ஜன்னல் வழியாய் இறங்கி ஒரு புதரை நோக்கி ஓடினான். பின்னால் பத்து பெண்கள் ஓடினார்கள்.

திவாகர் வாயை மூடிக்கொண்டு அழுகையை அடக்கிக்கொண்டான். எதையோ யோசித்து விட்டு,தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் கத்தியை ஒருமுறை தொட்டுப் பார்த்தான்.

*********************************************************************************

"எஞ்சி இருக்கும் ஆண்கள் என்ன செய்வான்.. சொல்லு அரசாங்கமே....ஆண்களின் பாஸ்போர்டை முடக்கி விட்டீர்கள்...இந்த பூமியில் ஆணுக்கு ஏது பாதுகாப்பு...உங்களை பொறுத்தவரை நாங்கள் ஒரு போகப்பொருள். நேற்று செய்தியை கேட்டீர்களா... காஞ்சிவரம் அருகே மறைந்து இருந்த முப்பத்தி நாலு ஆண்கள் கற்பழித்து சாகடிக்கப்பட்டுள்ளனர். உங்கள் ஆராய்ச்சியின் தாமதம் இன்னும் எத்தனை உயிர்களை காவுவாங்க போகிறதோ...."  எல்லோரும் அமைதியாய் இருந்தனர். கதிரவன் தொடர்ந்தார்.

"ஆண்களுக்கான மானியத்தொகை முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாக மாற்ற வேண்டும். ஆண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். திரைப்படங்களில்,விளம்பரங்களில் ஆண்களை இழிவு படுத்துவது போல் காட்சிகள் இருந்தால் தடை செய்ய வேண்டும்...." கதிரவன் உரத்த குரலில் பேச்சை தொடர்ந்து கொண்டு இருந்தார்.

நேரடி ஒளிபரப்பில் இதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் கண் கலங்கி கை தட்டினார்கள்.

******************************************************************************

கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
:-) ithe madri naanum yosichirukken sive. Nice. :-)