வேணியக்கா..(பகுதி-1)


                                       வேணியக்கா..(பகுதி-1)




கண்ணை திறந்து பார்த்தேன் ,மணி சாயங்காலம் ஆறு. கை,காலெல்லாம் எதோ ரக்பி விளையாண்டவன் மாதிரி ஒரே வலி. இன்னும் ஒரு வாரம் நைட் ஷிப்டில் வேலையா என மலைப்பாய் இருந்தது. டீ.வி யை போட்டேன். சன் மியூசிக்கில் பொம்மரேனியன் நாய் மாதிரி முடி வைத்திருந்த ஒருத்தன் ,"ஹை குட்டீஸ்..நீங்க பாட்டு பாடுரீங்களா, இல்ல ரைம்ஸ் சொல்றீங்களா" என பெனாத்திக் கொண்டிருந்தான். வயிறு பசித்தது. ஊரே தூங்கப்போகும் நேரத்தில் நான் ஆபிஸ் போனுமா என கோபமாய் இருந்தது.கடவுள் அசிடிட்டி பிரச்சனையில் இருக்கும் போது என் தலை எழுத்தை எழுதி இருப்பாரோ என நொந்து கொண்டேன்.வழக்கம் போல குளித்துக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு ஆபிஸை அடைந்தேன். சாந்தோமில் கடலை முத்தமிடும் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தில் தான் அலுவலகம் இருந்தது. பத்து அடுக்கு கட்டிடம் அது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கடல் அழகாய் தெரியும். ஒன்பது மணிக்கு தான் நம்ம டுயூட்டி ஆரம்பம் அதனால் நேராய் லிப்டில் என் பத்தை அழுத்தி கடலை சைட் அடிக்க மாடிக்கு கிளம்பினேன். வாகனங்கள்,மனிதர்கள் எல்லாம் பொடிப்பொடியாய் தெரிந்தனர். கடல் காற்று ரம்யமாக என் மூஞ்சில் வந்து அடித்துக்கொண்டிருந்தது. எவன் சொன்னது சென்னை அழகான ஊரில்லை என. .


"டே வெண்ணை கால் பண்ணா எடுக்க மாட்டியா.... ". பிரபு போனை காட்டிய படி வந்தான்.ஜீன்ஸ் பேண்டை இதற்குமேல் இறக்க முடியாது என்கிற நிலையில் அணிந்திருந்தான். என்னுடன் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் மற்றொரு பட்சி. நான் பதிலேதும் சொல்லாமல் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன். "கடல் கடவுளோட மாஸ்டர் பீஸ்" ல என்றேன் பிரபுவை பார்த்து. வாயில் சிகரெட்டை பத்த வைத்தவாரே என்னை பார்த்தான்.


"கடவுள் ஒரு மாவுருண்டை செஞ்சு வச்சாராம் அது பூமியாகிருச்சாம்...அப்புறம் அதுல ஒன்னுக்கடிச்சாராம் அது கடலாகிடுச்சாம்.. அப்டின்னு எங்க பாட்டி சொல்லும்.." என சொல்லி சிரித்தான்.


"உங்க பாட்டி இப்போ உயிரோட இருக்கா..???"


"இல்ல டா..போன வருஷம் டெங்கு காச்சல்ல போயிருச்சு"


"நல்லவேளை..எனக்கு முன்னாடி டெங்கு முந்திருச்சு". சிகரட்டை என்மேல் சூடு வைப்பது போல பாவனை காட்டினான். பேசிக்கொண்டே கீழே அலுவலகத்துக்கு போனோம். எல்லா பய புள்ளைகளும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார்கள். எங்களை பார்த்ததும் ஜெயராமன் மட்டும் சிரித்துக்கொண்டே "வந்துட்டாய்ங்கடா.. வாட்ச்மேனுக..." என்றார். மதுரைக்காரர். பேண்டை டக் இன் பண்ணாமல்,செருப்புப் போட்டுக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஐ.டி போராளி. பிரபு அவர் பக்கத்தில் போனான்.


"யோவ் ஜெயா... நல்லா Laughing புத்தா மாதிரி தொப்பையும் தொந்தியும் வச்சிக்கிட்டு ஒனக்கெல்லாம் குசும்பு ஜாஸ்தியா போச்சு" என்றான்.


."டேய் நாய் நக்குன மண்டையா.. உங்கள செக்குயூரிட்டி ரத்தினம் தேடுனாரு..அத சொல்லத்தான் கூப்டேன்.."


இரவு மூணு மணிக்கு மேல் எங்களுக்கு செக்கியூரட்டி ரத்தினம் அண்ணன் தான் தூக்கம் போக்கும் ரட்சகர்.அரசியல்,சினிமா என புகுந்து விளையாடுவார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எதற்காகக் கூப்பிட்டிருப்பாரு என யோசித்துக்கொண்டே அவருக்கு போன் செய்தேன். "நான் நேரா வரேன்" என சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் வந்தார்.சாம்பல் நிறத்தில் அந்த செக்யூரட்டி உடுப்பில் இருந்தார். முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லை, நெற்றியில் பெரிய திருநீர் கோடு. "என்னாச்சுண்ணா...எதாவுது பிரச்சனையா??" என்றேன். "நேத்து ராத்திரி சிக்கலாகிப்போச்சு பா" என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார். இப்போது அலுவலகம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது. 


"நேத்து ஒரு மணியிருக்கும் ரிசப்சன் ஷோபால பாட்டுக்கேட்டுக்கிட்டே படுத்துக்கிடந்தேன். ஜன்னலெல்லாம் தெறந்து கெடந்து இருந்ததால,கடல் காத்து ஜிலு ஜிலுனு அடிச்சிட்டு இருந்தது. என்னடா யாரோ பின்னாடி நிக்குராப்ல இருக்கேன்னு திரும்புறேன். கரு கருனு ஒரு உருவம். மூஞ்சு முழுசா முடி முளச்சிருக்கு. உதடு மட்டும் ரத்தச் செகப்பா துருத்திக்கிட்டே தெரியுது. எனக்கு தூக்கி வாரிப்போட்ருச்சி. நல்லா பின்னாடி நீளமான மயிர பாக்குறப்ப தான் பொம்பளனு தெரியுது. கத்தலாம்னு பாக்குறேன் வாய் வர மாட்டிங்குது. "நூறு ரூவாய கொடுரா..எம்டு நூறு ரூவாயா.." னு சொல்லிக்கிட்டே பக்கத்துல வர பாக்குது. திரும்பி ஓடிரலாம்னு திரும்புறேன். முதுகுல ஒரு அடி. எம்மா சவுக்க சொழட்டி அடிச்ச மாதிரி அந்த வலி. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரில.முழிக்குறப்ப விடிஞ்சிருச்சு."





"
   ஏங்க ஒங்க பொண்டாட்டிய நெனச்சிக்கிட்டு பயந்துகிட்டே தூங்கிருப்பீங்க. அதான் கெட்ட கனவா வந்திருக்கு.." ஜெயராமன் பையை தூக்கிகொண்டு கெளம்பும் போது கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றார்.நான் லேசாய் சிரித்தேன். பிரபு சிரிக்காமல் ரத்தினம் அண்ணனையே பார்த்தான். அவர் சட்டையை கழட்டி முதுகை காட்டினார்.முதுகில் பெரிய சிகப்பு கோடு தெரிந்தது. பயம் எனக்குள்  ஜிவ்வென பரவியது. கொஞ்சம் வேர்த்தது. காட்டிக்கொள்ளவில்லை. ரத்தினம் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் பேசினார்.


"நம்ம எலக்ட்ரீசியன் குமார கேட்டேன்..அவன் தான் சொன்னான். இந்த பில்டிங் கெட்டுரப்ப கிருஷ்ணவேணின்னு பக்கத்துல பட்டினபாக்கத்துல இருந்து ஒரு பொண்ணு வந்து வேல பாத்துச்சாம். கொழந்தை க்கு சாப்பாடு வாங்க வச்சிருந்த நூறு ரூபாய தொலைச்சுப்புட்டதாம். மாடில போய் தேடி பாக்குறப்ப,மேல இருந்து தவறி கீழ விழுந்து செத்து போச்சாம். அதுல இருந்து இந்தப்பக்கம் அலையுதாம். அவனுங்கூட பாத்திருக்கானாம். நீங்களும் தனியா சுத்தாம..ஒன்னு மண்ணா சூதானமா இருந்துக்கோங்க.."


சொல்லிவிட்டு போனார். இப்போது எங்கள் ப்ளோரில் என்னையும் பிரபுவையும் தவிர வேற யாரும் இல்லை. பிரபு சோகமாய் என்னையே பார்த்தான். "டேய்...ஐநூறா இருக்கு...அஞ்சு நூறு சேஞ்ச் இருக்கா.." என்றான். நான் சிரித்தேன். "ஏன்டா நீ நம்புறியா..." என்றேன்.


"நம்புறேனோ இல்லையோ...ஆனா இவய்ங்க சந்திரமுகி கதை மாதிரி சொன்னத கேக்குரப்ப தொடை ஷேக் ஆகுது. லைட்டா பாத்ரூம் வருது."


"ஆமாடா..அவரு முதுகுல அந்த காயத்த பாத்தப்போ...எங்காதுல ஓநாய் ஊளையிடுற சத்தம் கேட்டுச்சுடா.."


"டேய் எனக்கு துணையா ரெஸ்ட் ரூம் வரையும் வர்றியா... அர்ஜென்டா பாத்ரூம் வருது..."


"வேணியக்கா லேடீஸ் டா. ஜென்ஸ் பாத்ரூமுக்கெல்லாம் வராது..தைரியமா போ.."


"என்னடா அக்கானு முறை சொல்லி கூப்பிடுற..."


"அதுகள மரியாதையா பேசினோம்னா நம்மள அண்டாதாம்...."





ரெண்டு பேரும் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூம் போனோம். ஜன்னல் வழியே கடல் காத்து முகத்தில் அடித்தது. இந்த முறை பயமாய் இருந்தது.






                                                                                                                  தொடரும்...

கருத்துகள்

arya இவ்வாறு கூறியுள்ளார்…
so far so good..
will wait for the rest of the story !!!
JC இவ்வாறு கூறியுள்ளார்…
machi..kalakal...
ரசிகன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கதை. சுவாரசியமாக இருக்கிறது. கதைக்கு உண்டான நிறைய காரணிகள் அழகாய் பொருந்தி இருக்கிறது. வாழ்த்துக்கள்.
Janagar இவ்வாறு கூறியுள்ளார்…
machan imbuttu ariva..sa...