பந்து

  


அப்பாவோட சைக்கிளில் முன்னாடி உட்கார்ந்து  ஸ்கூலுக்கு போறது ரொம்ப ஜாலியா இருக்கும்.  சைக்கிள் முன் கம்பி குத்தக்கூடாதுனு குழந்தைகள் உட்காறதுக்கு  ஒரு குட்டி  சீட் மாதிரி முன்னாடி மாட்டிருக்கும். மூனு  வயசுல போன அந்த பயணம் இன்னைக்கும் அப்டியே மூளையிலே உறைஞ்சு நிக்குது. நா பேசிட்டே வருவேன். அப்பா அமைதியா அதுக்கு பதில் சொல்லிட்டே வருவார். நா எதுவும் பேசலேனா வண்டிய கொஞ்சம் மெதுவாக்கி "டேய்.."ம்பார். பெரும்பாலும் குழந்தைகளுக்கு  கை சூப்ர பழக்கம் இருக்கும்.  ஆனா நா கொஞ்சம் விசித்திரமா நாக்கை  கொஞ்சம் உள்ள கூடி மடிச்சி  வாயமூடி கிட்டு சூப்பிகிட்டே இருப்பேன். எதுவும் பேசலேனா இதான் பண்ணிட்டு இருப்பான்னு எல்லாருக்கும் தெரியும். அப்பா அடிக்கடி கண்டுபிடிச்சு அதட்டுவார்.

"ப்பா...கீர்த்தி..ருக்காள்ல  என்னய குண்டா குண்டானு  சொல்றாப்பா.. நீங்க வந்து மிஸ்கிட்ட சொல்லுங்கப்பா.."

"நீ அவள என்ன செஞ்ச.."

"நா ஒரு தடவ தாம்பா மங்கினு சொன்னேன்..அவ அதுக்கு த்ரீ டைம்ஸ் குண்டானு சொல்றா... "

"தம்பி..சண்ட போடமா வெளாடனும்...எப்பப்பார் சண்ட போட்டா ஒன்ன எல்லாரும் என்ன சொல்வாங்க..சொல்லு.."

"..................."

"சொல்ல்ல்லு...என்ன சொல்வாங்க.."

"பேட் பாய்.."

ஸ்கூலுக்கு வெளியே நின்று அப்பா என் வயதுக்கு மீறிய சித்தாந்தங்களை எளிமையாய் சொல்ல முயல்வார்.அப்படி ஒரு நாள் தான் அந்த பந்து எனது லட்சியமாய் மாறியது. ஊர்லருந்து அத்தையும்,அவுங்க குழந்தைகளும் வந்திருந்தாங்க. அந்த நேரத்துல நான் ஸ்கூலுக்கு போறது எனக்கு இழைக்கப்படும் அநீதினு நினைச்சேன். போகவே முடியாதுன்னு அடம்பிடிச்சேன்.கன்னம்லாம் ஈராமாகுற அளவு  "ப்ளீஸ் மா" னு அழுதேன். கடைசியாய் அம்மாவின் "தோசைக்கரண்டி" என்னை ஸ்கூலுக்கு அனுப்பியது.சைக்கிள்ல போறப்ப அப்பா பேச்சுக்கொடுத்துப் பார்த்தார். நான் மசியலை.

"இப்போ ஏன் உம்முனு இருக்க..இன்னும் அஞ்சு நாள்ல உனக்கும் பரிட்ச முடிஞ்சிரும்..அப்றம் லீவு தான.. உனக்கு பரீட்ச முடிஞ்சோனே பாரு அப்பா அந்த பந்த வாங்கித்தருவேன்..சரியா"

அப்பா எங்க ஸ்கூலுக்கு எதிர்புறத்துல இருக்கிற  கடைல இருந்த அந்த பந்தை காண்பித்தார். ஆறு வண்ணங்களில் ஒரு பூசணிக்காய் அளவில் இருந்தது அது. ஆங்கில எழுத்துக்களும் ,அதில் ஆரம்பமாகும் விலங்குகளின் பெயர்களும், படங்களும் பந்தில் இருந்தது. அதை பார்த்த மாத்திரத்தில் எனக்கு பிடித்துப்போனது.ஸ்கூலுக்கு போய் பரீட்சை எழுதிக்கொண்டு இருந்த போதும் பந்து என் மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கும்.ஒரு கற்பனை உலகத்தில் அந்த பந்துடன் விளையாடிக்கொண்டே இருப்பேன்."புதன்,வியாழன்,வெள்ளி..." என எனது நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன்.



சதா சர்வ நேரமும் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததால் நிறைய விசித்திரமான் சந்தேகங்கள் வரும். அன்றைய என் உலகத்தில் என்னை மதித்து பதில் சொல்றவர் அப்பா மட்டும் தான். அவரது பொறுமையையும் நான் சோதிக்க தவறியதில்லை.வியாழக்கிழமை காலை எழுந்தவுடன்

 "ஏம்பா..மொத்தமே அந்த அங்கிள் கடேல நாலு பால் தான இருந்துச்சு ..யாராச்சும் நாளைக்குள்ள எல்லாத்தையும் வாங்கிட்டா.."

பல் விலக்கிக்கிட்டுருந்தவர் அந்த நுரை வாயுடன் என்னையே பார்த்தார்.கொஞ்சம் முறைத்து "அதனால.." ன்னார்.

"நீங்க அந்த பந்த இன்னைக்கே வாங்கி வீட்ல வச்சிருங்க...எனக்கு பரீட்ச முடிஞ்சோனே கொடுங்க போதும்..ப்ளீஸ் பா..."

பக்கத்தில் வந்தார்."வர வர..நீ ரொம்ப அடம்புடிக்க ஆரம்பிச்சிட்ட.."

நானும் சத்தத்தை உயர்த்தி "அப்புறம் பால் தீந்திருச்சுனா.........."

அப்பா கொஞ்சம் முறைத்து பார்த்து "நீ அப்பாவா நா அப்பாவா " ன்னார் .
 கொஞ்சம் தொண்டை கரகரவென ஆனது.அம்மா மரணஅடி அடிச்சாலும் சமாளிப்பேன்.அப்பா முறைத்தாலே கண்லாம் கலங்கிடும். 

அப்பா லேசாய் சிரிச்சுக்கிட்டே " தலைலாம் நரச்சிருக்குல..தொப்ப இருக்கு பார்...அப்ப நான் தான் அப்பா. நீ நான் சொல்றத கேக்கணும் " நானும் சிரித்து விடுவேன்.என்னை தூக்கி கையில் வைத்துக்கொண்டு "உறுதியா அப்பா வாங்கித்தருவேன்..அதவே பேசி சீவன வாங்க கூடாது சரியா .." தலையாட்டுவேன்.


தவமிருந்த நாள் வந்தது. சாயங்காலம் அந்த இளவெயிலில் அந்த பந்தை நான் தொட்ட கணத்தை மறக்க முடியாது.அவ்வளவு மிருதுவாய் என் கைகளுக்குள் அடங்கிய அந்த நொடியை இன்னும் என்னால் மீட்டி பார்க்க முடிகிறது. என் மனது நிறைய சந்தோசம்.ஓடிப்போய் அப்பாவுக்கு "தேங்க்ஸ் பா" என முத்தம் கொடுத்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.வீட்டுக்கு வருகையில் பக்கத்துக்கு வீட்டுக் குழந்தைகளிடமெல்லாம் பெருமை பொங்க காட்டிக்கொண்டே வந்தேன்.அதன் பிரமிப்பு அடங்கவே எனக்கு ஒரு வாரம் பிடித்தது.அப்படி அதை கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குகையில் தான் அந்த கனவு வந்தது.


பந்து வாங்கிய கடைக்காரர் அழுது கொண்டே பேசுகிறார். "எல்லாரும் என்னை  ஏமாத்திட்டாங்க...என்னை ஏமாத்திட்டாங்க..இதப்போய் கொடுத்திட்டு என்னோட பாலெல்லாம் தூக்கிக்கிட்டாங்க..கொடுங்கடா கொடுங்கடா " என சொல்லிக்கொண்டே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி எறிகிறார். முழித்து விட்டேன்.  பக்கத்தில் இருந்த பந்தை அணைத்துக்கொண்டேன் .


இதோ இப்போ தான் நடந்தது போல் இருக்கிறது இந்த இருபத்து நாலு வயதான காட்சிகள் கடந்து. சொந்தமாய் சம்பாதித்து நிறைய பொருட்கள் வாங்கி விட்டேன் ,ஆனால் அந்த பத்து ரூபாய்  பந்து தந்த சந்தோசம் எதுவும் தரவில்லை. கொஞ்சமாய் யோசித்து பார்த்த போது ஒன்று மட்டும் விளங்கியது. இப்போது  நானும் அந்த கடைக்காரன் போலத்தான் என் சந்தோசங்களை விற்றுவிட்டு குப்பைகளை சேகரிக்கிறேன் .ஒரு நாள் நானும் குப்பைகளை வீசியெறிந்து என் சந்தோசங்களை மீட்டெடுக்க கிளம்புவேன் ,அப்போது என் குப்பைகளை பொறுக்கிக்கொள்ள தயாராயிரு சமுதாயமே!!




கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Nice.. Pugunthu viladu sivaraj..
Best deals to you இவ்வாறு கூறியுள்ளார்…
ทïςε
SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
You are always best in writing.. but this is one of the best among yours..
lavanya இவ்வாறு கூறியுள்ளார்…
very true.. this story drags me to my childhood and bring back..well narrated