சென்னை வாகன ஓட்டிகளுக்கு

         

தமிழகத்தின் எந்த ஊரில் நீங்கள் வாகன உரிமம் எடுத்திருந்தாலும், சென்னையில் வாகனம் ஓட்ட உங்களுக்கு அளப்பெரிய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த சூட்சமம் பிடிபடாததால் பலருக்கு காலையில் அலுவலகம் போவது காஷ்மீர் பார்டரில் டேங்கரில் போவது போல் திகிலாகவே இருக்கிறது. தமிழன் தன்னுடைய கெட்ட வார்த்தை பேசும் திறனை ரோட்டிலேதான் வளர்த்துகொள்கிறான். சென்னையில் வாகனம் ஓட்ட முக்கியமான சில விதிமுறைகள் உள்ளன.

1) சென்னையை பொறுத்தவரை சிகப்பு,பச்சை விளக்குகள் எல்லாம் ஒன்று தான். ஒரே நிறத்தை எந்நேரமும் காண்பித்தால் போர் அடிக்கும் என்பதாலேயே மாற்றி மாற்றி காண்பிக்க படுகிறது.சிகப்பு விளக்கு எறிந்தால் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ஹாயாக போய் விடலாம்.ஆகையால் பச்சை போட்டவுடன் நீங்க பாட்டுக்கு "பப்பரப்பே" என போனால் , எந்த மூலையிலிருந்தோ காரோ, பைக்கோ உங்க வண்டியை கிஸ் அடிக்க வாய்ப்பிருக்கிறது. சிக்னல் போட்டவுடன் முன்னூற்று அறுபது டிகிரியில் தலையை சுற்றி பார்த்து கிளம்புவது உசித்தம்.

2)காண்டாமிருகத்துக்கும், கரப்பான்பூச்சிக்கும் க்ராஸில் பிறந்தது போல் சைஸில் சில இரண்டு சக்கர வண்டிகள் ஊருக்குள் வலம் வருகின்றன. அதைக்கண்டாலே ஒதுங்கி வழி விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர்கள் ஆத்மா எந்த தெருமுக்கிலும் சாந்தி அடையலாம். அவர்கள் எந்த நேரம் எந்த பக்கம் திரும்புவார்கள் என கடவுளுக்கே தெரியாது.

3)மாநகராட்சி பேருந்தின் அருகே வண்டியை செலுத்தாதீர்கள். ஜன்னல் சீட்டுவாசிகள் ரோட்டில் எச்சில் துப்பி விளையாடுவார்கள். நீங்கள் முறைத்து பார்த்தால் "அச்சச்சோ..பாத்து போகக்கூடாதாப்பா.." என்று சொல்லி வெறியேற்றுவார்கள்.

4)கால்டாக்சிகள்,தண்ணிலாரியையெல்லாம் விட கொடுமையானவர்கள்.உங்கள் பக்கத்தில் வந்து ஹாரன் அடித்து பீதியை கிளப்புவார்கள்.சிலநேரங்களில் உங்கள்  அக்கிளுக்கு அடியில் புகுந்து கூட சைடு வாங்குவார்கள். அவன் போன பிறகு நாலைந்து கெட்டவார்த்தையை உபயோகிங்கள். உங்கள் மன அழுத்தம் சன்னமாய் குறையும்.

5)சென்னையின் பொதுஜனம் எந்த நேரமும் முன்னறிவிப்பின்றி காலாற ரோட்டை கடப்பார்கள். அதிலும் டாஸ்மாக் இருக்கும் ரோட்டில் ஆக்சலரேட்டரில் காலை வைக்காதீர்.

6)சென்னையின் ஓட்டுனர்கள் ப்ரேக்கில்லாமல் கூட வண்டி ஓட்டுவார்கள் ஆனால் ஹாரன் இல்லாமல் மாட்டார்கள். கோபத்தை காட்ட, சந்தோசத்தை வெளிப்படுத்த, பிகர்களின் கவனத்தை ஈர்க்க, சுறுசுறுப்பாக இருக்க என எல்லா காரணங்களுக்காகவும் ஹாரனில் டியூன் போடுவார்கள். நீங்கள் பதற தேவையில்லை.

7) டீ.நகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் டூ வீலரில் போவதும் வீராச்சாமி படத்தை 3டியில் பார்ப்பதும் ஒன்றுதான். எரிச்சல் எக்குத்தப்பாய் வரும். டீ நகருக்கு வண்டியில் போகாதீர்கள். என்னைக்கேட்டால் டீ நகருக்கே போகாதீர்கள்.

8) மனைவி உடனிருந்தால் அவருடன் பேசிக்கொண்டே வண்டியை செலுத்துங்கள். ரோட்டில் இருக்கும் எரிச்சல் கொஞ்சம் கம்மி தான் என்று தோன்றும் .

9) காலையில் அலுவலகம் போகும் போது யாராவது உங்களை வேகமாய் சைடு வாங்கிச்சென்றால் காண்டாகி வேகத்தை கூட்டாதீர். இந்த ஊரின் ரோடுகள் சிக்னல்களாலும், ட்ராபிக்குகளாலும் ஆனது. பயபுள்ள எப்படி போனாலும் நமக்கு முன்னாடி எதிலாவது சிக்கி நின்றிருப்பான். 

10) புதிதாய் இருக்கும் கார்கள் கொஞ்சம் நிதானமாய் போகும், அதிலேயே "L" போட்டிருந்தால் ரொம்பவே நிதானமாய் போகும். அதுவே கார் கொஞ்சம் ஆங்காங்கே நெளிந்திருந்தால் அவர்கள் வீடியோ கேம்களில் கார் ஓட்டுவது போல் ஓட்டுவார்கள். இதெல்லாம் நாம் சூத்திரம் போல் மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும்.

11)மழை பெய்த அடுத்த நாள் ரோட்டை மிக கவனமாய் பார்த்துக்கொள்ளுங்கள். ரோட்டில் ஆங்காங்கே கிணறுகள் இருக்கும்.

12) சென்னையின் காற்று எப்போதும் மண்ணைத்தூற்றி நம்மை சபிக்கும்.அதற்காகவாவது ஹெல்மெட் அணிந்து கொள்ளலாம்.

13) காலை எட்டு டூ பத்து மற்றும் மாலை ஏழு டூ ஒன்பது வண்டி ஓட்டினால் பொறுமையின் முழுமையான அர்த்தம் உங்களுக்கு பிடி பட்டுவிடும்.

14)இதற்காகவா ஈ.எம்.ஐ போட்டு வண்டியெல்லாம் வாங்கினேன் என தோன்றினால் தினம் பேருந்துகளில் நொந்து செல்லும் பொதுஜனத்தை பாருங்கள். பிற்பாடு "அடையார் போகனும்பா..எவ்ளோ" என ஆட்டோ ட்ரைவரிடமும் கேட்டுப் பாருங்கள். இது எவ்வளவோ தேவலைடா எனத் தோன்றும்.




கருத்துகள்

lavanya இவ்வாறு கூறியுள்ளார்…
Lively Post... 100 % true
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Super... my worry is, though well qualified, studied, salaried corporate people also driving reckless..