முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் (பகுதி-3)

                           
                                              மு.க.பி.அ -பகுதி 1

                                              மு.க.பி.அ -பகுதி 2


பிரவீன் ஒரு மாதம் முழுக்க பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை, ஹரிணி ஒரு அமைதியான நாளில் பேசுவதை விட குறைவாகவே இருக்கும். எந்த விதத்திலும் இவர்களுக்குள் செட் ஆகாது என நான் நினைத்துக்  கொண்டிருக்கையில், இவர்கள் இருவரும் கைக்கோர்த்து நடந்துகொண்டிருந்தார்கள். அவள் தன் விருப்பத்தை இவனிடம் தெரிவிக்க, நம்மாளு மறுத்திருக்கிறார். அவள் விடாமல் விரட்ட, பாஸு சரண்டர் ஆகியிருக்கிறார். ஹரிணியின் அப்பாவும், பிரவீனின் அம்மாவும் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கையாம். ஆகையால் பிரச்சனை வர வாய்ப்பேதுமில்லை என நினைத்திருப்பார்கள். இந்தக்காதல் எப்பிடியும் புட்டுக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. ஆனால் எப்படி,எப்போது என்பதில் மட்டும் ஒரு குழப்பம் இருந்தது. அதுவும் ஒரு நாள் தீர்ந்தது. பிரவீன் போன் செய்திருந்தான்.

 "ப்ரீயா இருக்கியா..பேசணும்"

 "எனக்கு எதுவும் மாமா பொண்ணு உசார் ஆகலை. என்னோட போனுக்கெல்லாம் கிரடிட்கார்டு காரய்ங்க தவிர எவனும் கூப்பிடறதில்லை.வெட்டியா தான் இருக்கேன். நீங்க பேசலாம் ஆபிசர்.."

"வெளாட்டு மயிரா பேசுரதாயிருந்தா நான் போனை வைக்குறேன்.."

"விடுறா பிரவீன். சும்மா ஜாலிக்குத்தான..மேட்டருக்கு வா."

"ஹரிணியும் நானும் பிரிஞ்சிட்டோம். அவ எனக்கு செட் ஆக மாட்டாடா.."

"என்னடா ஆச்சு..."

"குடும்பப்பிரச்சனை, ரெண்டு பேர் வீட்டிலும் சண்டை போட்டுட்டாங்க. இவ எங்கிட்ட வந்து எங்கப்பாவ படு மோசமா பேசுனா.சப்புன்னு அறைஞ்சிட்டேன். எப்போப்பாத்தாலும் சண்டை வேற போடுறா, எனக்கும் சரியா வரும்னு தோணல..."

"அய்யோ...இதை அவ எப்டிடா தாங்குவா.."

"ஆமா தாங்க முடியாது தான். அதான் வீட்ல பாத்திருக்க பையன நவம்பர்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்குறா.."

"என்னடா சொல்ற.."

"உனக்கு நான் சொன்னது கேட்ருச்சு"

வழக்கம் போல ஆறுதலை தெளித்து விட்டேன். அவள் எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டுமென ஆரம்பித்து, போனை வைக்கையில் அவளோட உட்பீ ஒரு டொச்சுப்பயலாத் தான் இருப்பான்னு முடித்தோம்.பிரவீனுக்கு கவலையை விட எரிச்சலே அதிகமாய் இருந்தது. அவனுக்குப் பெண்கள் மீது ஒரு ஒவ்வாமை உருவாகிப்போனது. அவனுக்கு பெரிய சோகமெல்லாம் இருந்தது போல தெரியவில்லை. நானும் சினிமாக்களில் காட்டும் காதல் மாதிரி நிஜக்காதல் இருக்காது போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் ஹரிணியின் கல்யாணத்தின் போது மூன்று மாதம் அவன் ஊருக்கே வரவில்லை. அவன் கண்டபடி படித்துக்கொண்டிருப்பதாக அவனது நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள். குடும்பச்சண்டையின் போது ஹரிணியின் அப்பா "வக்கத்தவய்ங்க""என பிரவீன் குடும்பத்தின் பொருளாதாரத்தை பற்றி பேசியிருக்கிறார். கேள்விப்பட்ட பிரவீன் கடுப்பாகிப் போனான்.

அது கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து கொண்டிருந்த காலம். கணினி படித்து வேலைக்கு போவது குதிரைக் கொம்பாக இருந்தது. கடைசி செமெஸ்டரில் இருந்த நாலு அரியர்களை முடித்தான். பிற்பாடு சென்னைக்கு வந்து வேலை தேடிக்கொண்டிருந்தான். பெரிய கார்ப்பரேட் கம்பெனி ஒன்று  மதுரையில் ஒரு கல்லூரியில் நேர்முகத்தேர்வு வைத்திருந்தார்கள். பிரவீன் அதில் கலந்து கொள்ள வருவதாக சொன்னான்.நானும் மதுரையில் படித்துக்கொண்டிருந்ததால் போயிருந்தேன்.




"என்னடா இவ்ளோ இளச்சிட்டே.. எத்தன பேர எடுக்குறாங்களாம்."

"தெரில...ஆனா இத மிஸ் பண்ணேன்னு வை, அடுத்த இன்டர்வியூ வர இன்னொரு ஆறு மாசம் கூட ஆகலாம். நிலைமை அந்தளவு மோசமா இருக்கு"

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வந்திருந்தார்கள். நிறைய பேர் முனுமுனுத்துக்கொண்டே படித்துக்கொண்டிருந்தார்கள். சாயங்காலம் நோட்டிஸ் போர்டில் முதல் முப்பது பேர் ஒட்டினார்கள். அதிலிருந்து பத்து பேர் எடுக்கப்போவதாகச் சொன்னார்கள். முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். பிரவீனின் பேர் இருந்தது.

"டேய் பிரவீன். சத்தியமா நம்ப முடிலடா...ஆயிரத்தில முப்பது..அதுல நீயும் ஒருத்தனாடா...இப்படில்லாம் கூட உலகத்துல நடக்குமா.."

"கடைசி பத்துலையும் வருவேன்டா "

"அதுக்குள்ள சிம்பு மாதிரி பேச ஆரம்பிச்சிட்ட..நாளைக்கு பெர்சனல் இன்டர்வ்யூ வேற இருக்குடா..."

சொன்னது போல பெர்சனல் இன்டர்வியூவிலேயும் கில்லி அடித்தான்.




பிரவீன் புத்திசாலி தான் ஆனால் அவன் படிப்பை அவ்வளவு முக்கியமாய் எடுத்துக்கொண்டதில்லை. நானெல்லாம் அவனுக்கு அறிவுரை சொல்லும்படி தான் அவனது மதிப்பெண்கள் இருந்தது. திடீரென அவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என திமுறவதை பார்க்கையில் வியப்பாக இருந்தது. அவன் கண்கள் முழுக்க கனவுகளும், தன்னம்பிக்கையும் தெரிந்தது. மேடையில் வைத்து தேர்வானவர்களுக்கு அப்பொழுதே பணி நியமனம் தந்தார்கள். கீழிருந்தே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பக்கத்திலிருந்த ஒரு மஞ்ச சுடிதாரிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். விதி அவனுக்கு ஒரு வேலையை கொடுத்துவிட்டு தன் வேலையை காட்டப்பாக்கிறதோ என எனக்கு பயம் வந்தது. "ச்சே..சே..ஒரே குழியில ஒருத்தன் ஓயாமலா விழுவான்" என சமாதானம் ஆனேன். எல்லாம் முடிந்து கீழே வந்தான்.

"போலாமா டா... அப்பாக்கு பிரசர் மாத்திரை வாங்கிட்டுப் போய் விசயத்த சொல்லுவோம்...பி.பி ஏறிடப்போகுது...நீயும் வந்து சொல்லு இல்லேன்னா நம்ப மாட்டாரு"

"அதிருக்கட்டும்..யாரு அந்த மஞ்சள்.."

"ஓ அவளா...அவளும் நானும் தான் க்ரூப் டிஸ்கசன்ல ஒரு டீம்..ரெண்டு பேரும் செலெக்ட் ஆயிட்டோம் அதான் பேசிட்டு இருந்தோம்..ரொம்ப நல்ல பொண்ணு"

அவன் சொன்னவுடன் என் மூளைக்குள் கரண்ட் அடித்தது. அவளைத்தேடினேன். கூட்டம் கலைந்து போய்கொண்டிருந்தது.தூரத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டே நடந்து கொண்டிருந்தாள். சுருட்டை முடி, காதில் ஜிமிக்கி, கைகளில் மெகந்தி..இன்னும் தேடினேன். கண்கள். எனக்கு போன உயிர் திரும்பவும் வந்தது.அவளுக்கு முட்டைக்கண்ணில்லை. பிரவீனை பார்த்து சந்தோசமாய் சிரித்தேன்.அவனும் சிரித்தான்.விதியும் சிரித்தது.
   
                                                                                                           ------------ தொடரும் 

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
VERY NICE THAMBI..
ANONYMOUS DHAAN AANAAL UN ANNAN DHAN... ELLAA NALLADHUKKUM KETTADHUKKUM UDAN IRUNDHAVAN.. IRUPAVAN...
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
PIRAVEEN???
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Hey good machi...try to write alot
Robert இவ்வாறு கூறியுள்ளார்…
பாஸ், அந்த அனானி கமெண்ட் போட்டது யாரு ??? மெய்யாலுமே நம்ம கதாநாயகன் பிரவீன் தானா ????.