எழுத்தாளன் - பகுதி 1


வேறு யாராவதாய் இருந்தால் அந்த சத்தத்துக்கு உடனே எழுந்திருப்பார்கள். அது அவன்.அறைக்கதவை தட்டி சரியாய் ஒன்றரை நிமிடத்துக்கு அப்புறம் தான் திறந்தான். வெளியே குமரேசன் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.ஜேக்கப் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஹாலில் ஹிந்துவை நோட்டமிட்டபடி உட்காந்திருந்தார். குமரேசனையும், ஜேக்கப்பையும் கண்ணைச்சுருக்கி பார்த்துவிட்டு நேராய் டாய்லெட்டுக்கு போனான். கதவைக் கொஞ்சம் வேகமாய் சாத்தினான்.சட்டென குழாய் திறக்கும் சத்தம் அந்த அதிகாலை அமைதியை சலனப்படுத்தியது. குமரேசன் முனங்கிக்கொண்டே வேகமாய் ஜேக்கப்புக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்து அவர் சிரித்தார். "நீ கோபப்படக்கூடாது ராஜா..உங்களுக்கு வீடு கொடுத்தனே...நான் தான் பழைய செருப்பெடுத்து...எம்மூஞ்சிலயே அடிச்சிக்கனும்..". சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டார். குமரேசன் குனிந்திருந்தான். எதுவும் பேசவில்லை. ஒரு நிமிடம் அமைதியாகவே கழிந்தது. 

ஜேக்கப் அறுபதை கடந்த பெரியவர். சொந்த ஊர் சென்னையாக இருந்தாலும் ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர். சுங்கத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்க, ஹைதராபாத்தில் உள்ள நீலிமா கிரீன்ஸ் குடியிருப்பில் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீடுகளுக்கு கேட்கும்படி மனைவியிடம் திட்டு வாங்குவது இவருக்கு நீண்டநாள் பொழுது போக்கு. சுகருக்கும் மனைவிக்கும் பயந்து தினமும் வாக்கிங் போகும் வயசாளி. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு தமிழ் பசங்க தான் குமரேசனும் அவனும். குமரேசன்,எந்த நேரமும் கல்யாணம் ஆகலாம் என்கிற நிலையில் வாழும் மேட்ரிமோனி இளைஞன். வாரம் ஒருமுறை ஃபேசியல், தினமும் ஜிம் என ஸ்கெட்ச் போட்டு  சுத்திக்கொண்டு இருப்பவன். மிச்சமிருப்பவன் அவன் மட்டும் தான். உண்மையில் அவனை பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சோம்பேறி,குழப்பவாதி, சித்தாந்தங்கள் எதுவில்லாமல் எல்லாரையும் வெறுப்பேற்றுபவன். குமரேசனின் கம்பெனியில் கூடவே வேலை செய்கிறவன். குடிகாரன். அவனை பற்றி பேசி பத்தியை விரயம் செய்யாமல் நிகழ்காலத்துக்கு போவோம்.

வெளியே வந்தான். குமரேசன் அவனைப்பார்த்து "ஏழு மணிக்கு கம்யூனிட்டி செக்ரட்ரிய பாக்கப்போகணும்...இல்லேனா சாயங்காலம் வீட்டைக்காலி பண்ணனும்டா.. தெரியும்ல.." அவன் ஒரு முறை நிமிரிந்து பாத்துட்டு "ஓ பஞ்சாயத்து காலைலயா..." என லேசாய் சிரித்தான். உண்மையிலேயே அவனுக்கு இது போன்ற பிரச்சனைகள் பிடித்திருந்தது. எதுவுமே நடக்காத சாதாரண நாட்களை அவன் வெறுத்தான். ஜேக்கப் பக்கம் திரும்பி " ஓ... அதான் நம்ம ஜேக் காலைலேயே அனல் கக்கிக்கிட்டு உட்காந்திருக்கார்..பாத்து பாஸ் சூடு பிடிச்சுக்க போகுது.." யாருமே சிரிக்கவில்லை. ஜேக்கப் அவன் பக்கம் வந்தார். " நல்லா சிரிச்சிக்கோ..எது எப்படியோ நீ இந்த வீட்ல இனிமே இருக்க முடியாது...செக்ரட்ரி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்தது என்னான்னு தெரிஞ்சாகனும்...போலிஸ் கம்ப்ளைன்ட் அது இதுன்னு போகாம உங்கள நான் காப்பத்தனும்னா..."

"பாஸ்..ரொம்ப பயப்படாதீங்க..அவ்ளோ பெரிய மேட்டர் இல்ல.. இது சப்ப மேட்டர் தான்..."

"தூ நாயே..நான் ஏன்டா பயப்படனும்...நடந்தத சொல்லித் தொலைடா..என்னைய பேச வைக்காத..."

"சொல்றேன்..சொல்றேன்..கூல்... இந்த கம்யூனிட்டி வீக்லி மீட்டிங் நேத்து நடந்துச்சு.. நீங்க ஊர்ல இல்லாதனால நானும் குமரேசனும் அட்டென்ட் பண்ண போனோம்." கேட்டுக்கொண்டிருந்தவர் தலையில் கை வைத்தார். அவன் தொடர்ந்தான்.



"எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்,வீட்டுக்கு ஐநூறு ரூபா பணம் கொடுக்கணும்னு சொன்னாங்க... அதுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து..."

குமரேசன் வேகமாய் நிறுத்தினான். "நான் சொல்லவே இல்ல..நா எதுவுமே பேசல"

"சரிடா,,நாந்தா பேசுனேன்.. இந்த தடவ முருகனோட பிறந்தநாளான கார்த்திகை தீபத்த கொண்டாடுவோம். அதுக்கு வேணும்னா காசு தருவோம்னு சொன்னேன்.அப்டியே..கொஞ்ச நேரம் வாக்குவாதம் போச்சு... இந்த அஞ்சு பி ஹிதேஷ் இருக்கான்ல கோவத்துல என்ன பாத்து "ச்சூத்தியா.."னு சொல்லிட்டான்.நானும் பதிலுக்கு திட்டிட்டேன்.."

"என்னான்னு..."

"தேவிடியா பயலேன்னு.." கொஞ்சம் கூட நிறுத்தாமல் சொன்னான்.

"நீங்கள்லாம் படிச்ச பசங்க தான..இப்பிடியா பேசுவீங்க..."

"சிலபஸ்ல இதெல்லாம் கவர் ஆகல.."

குமரேசன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான். "அறிவுகெட்ட முண்டங்களா...சரி..காலைல தான வாக்குவாதம்..சாயங்காலம் திரும்பவும் எப்படி கைகலப்பு ஆச்சு.."அவன் திரும்பவும் முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு ஆரம்பித்தான். "சாயங்காலம்...நம்ம வீட்டுக்கு வாசலுக்கு வந்து..ஏன்டா எங்கம்மாவை திட்டுனேன்னு சட்டைய புடிச்சிட்டான்...நான் திரும்ப உனக்கு ஏன்டா இவ்ளோ லேட்டா அம்மா பாசம் பொத்துக்கிட்டு வருதுன்னு சொல்லி டஸ்ட்பின் வச்சு அடிச்சேன்...கொஞ்ச நேரத்துல பெருசுக வந்து வெளக்கி விட்டுட்டாங்க.. ஒரு பத்து மினிட்ல முடிஞ்சிருச்சு..வேணும்னா நீங்க ஆண்டிட்ட கூட கேட்டுப்பாருங்க..".




மூன்று பேரும் நடந்து செக்ரட்ரி வீட்டுக்கு போயினர். சொன்னது போல் பெருசாய் எதுவும் நடக்கவில்லை. இருவரும் இனி மீட்டீங்குகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது. அவன் வெளியே வரும் போது குமரேசனிடம் "வேமா முடிஞ்சிருச்சு..அவனுக சரியாவே விசாரிக்கல கும்ஸ்.." என சொல்லிக்கொண்டு வந்தான்.ஜேக்கப் அவன் முன்னாடி வந்து நின்றார்.

"சரி..வீட்ட எப்ப காலி பண்ணப் போற..."

"விடுங்க ஜேக்...இன்னைக்கு ஓல்ட் மாங்க் போட்டுக்கிட்டே இத அனாலைஸ் பண்றோம்..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"தந்தூரி ஒன்னு வாங்குறோம்... ரெண்டு பாக்கெட் கிங்க்ஸ்...லேப்டாப்ல இளையராஜா..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"மிக்ஸிங் பெப்சியா சோடாவா..."

"சோடா"

                                                                             ---------தொடரும் -----------



கருத்துகள்

SATHISH இவ்வாறு கூறியுள்ளார்…
summaa... nachu start.... waiting for next one..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Super:-)
லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
ha ha ha ha..! :-)