எழுத்தாளன் - பகுதி2

                                         



                                                           எழுத்தாளன்- பகுதி 1

இளையராஜா வெண்கல குரலில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தார். அவன் கிங்க்ஸ் சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டான்.ஒரு பெரிய பெக்கை நிரப்பி அளவு பார்த்து ஜேக்கப்புக்கு கொடுத்தான். அவர் பாட்டை ரசித்துக்கொண்டே கிளாசை கையில் வாங்கினார். பாடலின் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். "ஏன்டா...மூனாவதா...நாலாவதா...வீட்டுக்கு போகனும்டா...கூடிப்போச்சுனா சிக்கலாகிடும்" என்றார்.

"நாமளே எப்பயாச்சும் தான் சாப்பிடுறோம்..கணக்குப்பண்ணி சாப்டா நல்லாவே இருக்காது..நாமென்ன ஹோம்வொர்க்கா பண்றோம்..என்ஜாய் பண்ணி அடிங்க ஜேக்"

 "உங்க வீட்லலாம் உன்ன திட்ட மாட்டாங்களா... உங்கப்பா என்ன பண்றார்.."

பதிலேதும் அவன் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அறையில் சத்தமில்லை. அவன் தூங்கிப்போயிருந்தான். ஜேக்கப் இரண்டு தடவை அவனை கூப்பிட்டுப் பார்த்தார். மட்டையாகிவிட்டான். அறையை ஒரு நோட்டம் விட்டார்.  புகை ரூமை ஆக்கிரமித்திருந்தது. ஜன்னல்களில் ஜட்டிகள் தொங்கியது. "கழுதைக" என முனங்கினார்.குமரேசன் ஊருக்கு போயிருந்தான்.அப்படியே தடுமாறி எழுந்தார். அலமாரியில் நீல நிற நோட்டுப்புத்தகம் ஒன்று துறுத்திக்கொண்டு நின்றது. சாதாரண நாட்களில் அதை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. கவனமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து அது மட்டும் ஒழுங்கில்லாமல் நின்றது. உள்ளுக்குள் பேனா ஒன்றும் இருந்தது. குமரேசன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன். முதலில் அவனது நோட்டாய் இருக்குமென தான் கையிலெடுத்தார். முதல் பக்கத்தைப் புரட்டினார்.

"எழுத்துக்களும் ஓவியங்களே... வாசிக்கையில் எல்லோர் மனத்திலும் காட்சிகளை வரைவதால்..." என எழுதி அவனது பெயர் போட்டிருந்தது.கையெழுத்து அவனது தான். ஒரு முறை கண்ணைக் குறுக்கிப் படித்துப்பார்த்தார். லேசாய் சிரித்தார். "படிக்கலாமா.." வென ஒரு முறை யோசித்தார். அடுத்தவர் விஷயங்களில் ஏற்படும் இயல்பான கிளர்ச்சியின் உந்துதலில் முதல் பக்கத்தைப் புரட்டினார். நன்றாய் குண்டு குண்டு தமிழ் எழுத்துக்கள். நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டு பக்கத்தில் அவன் கோல்கொண்டா மலையின் ரம்யத்தைப் பற்றியும், இரவு நேரத்தில் அங்கு வீசும் காற்றைப்பற்றியும் கவிதை போல எழுதி இருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுத்தில் நேர்த்தியும், ரசனையும் தெரிந்தது. மூன்றாம் பக்கம் வந்தார்.



"சித்திக் கொடுத்துவிட்டுப் போன பின் நேராய் மாடிக்கு வந்து விட்டேன். வீட்டில் யாருமில்லை. வித்யாசமான பழுப்பு நிறத்தில் காய்ந்த இலைகள் போல அந்த காகிதத்தில் அது இருக்கிறது.உண்மையிலேயே மூவாயிரம் இதற்கு அதிகம் தானென தோன்றுகிறது.பெங்களூரில் வெறும் எண்ணூறுக்கு வாங்கியிருக்கிறேன்.ஆனால் இது லடாக் சரக்கு..வீரியம் ஜாஸ்தியென சித்திக் சொல்கிறான். இதோ பேப்பரை சுருட்டி வாயில் வைக்கிறேன்.லேசாய் உப்புக்கரிப்பது போல உணர்வு. லைட்டரை பத்த வைக்கிறேன். எத்தனை முறை இழுத்தாலும் முதல் இழுவை கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஹா...ஹா... என்ன சுகம் அடி வயிற்றை மயிலிறகு வைத்து யாரோ வருடுவது போல இருக்கிறது..மிதமாய் போதை ஏறிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் எழுந்தது போல ஒரு நிதானமின்மை என்னை ஆட்கொள்ள தயாராகிறது. ஏதேதோ நினைவுகள் வந்து போகிறது... மூன்றாவது படிக்கும் போது அப்பாவின் ரம் பாட்டிலை திறந்து திருட்டுத்தனமாய் குடித்தது..முதன் முறையாய் சுயமைத்துனம் செய்தது... ம்ஹூம்..எழத முடியவில்லை..கை குழறுகிறது..."

எழுத்து கிறுக்கலாய் மாறி அந்த வரியுடன் நின்று போயிருந்தது. ஜேக்கப் ஒரு முறை அவனைப் பார்த்தார். அவன் குப்பற படுத்துக்கிடந்தான். அவருக்கு அதற்கு மேல் படிப்பதா வேண்டாமா என யோசனையாய் இருந்தது. குழப்பத்துடன் அடுத்த பக்கம் திருப்பினார். 

"காலணியில் எத்தனயோ பேர் இருக்கையில் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறானென யோசனையாய் இருந்தது. செக்யூரிட்டி யூனிபார்மில் இருந்த விசிலை நான் வரும்போது வேண்டுமென்றே ஊதினான். மற்ற செக்யூரிட்டிகள் யாரும் அப்படியில்லை.ரெண்டு முறை கேட்ட போதும் பதில் சொல்லாமல் சிரித்தான். அப்போது தான் அடக்க முடியாத கோபம் வந்தது. நடக்கப்போவது அப்போதே எனக்குத் தெரிந்து போனது. அன்று இரவு 14-c ப்ளாக்கின் பின்புறம் இருந்த புளிய மரத்தின் பின் நின்று கிளையை பலமாய் அசைத்தேன். நினைத்தது போலவே வேகமாய் விசில் ஊதிக்கொண்டே வந்தான். அருகில் வந்தான். அங்கு யாருமேயில்லை. அந்த இருளும்,தனிமையும் எனக்கு அடக்க முடியாத வெறியை கொடுத்திருந்தது. மூன்று நாளாய் தொராசின் வேறு சாப்பிடவில்லை.




அருகில் வந்து "நீங்களா சார்" என சிரித்தான். அது போதும். அதற்கு மேல் அங்கு நடந்த எல்லா விஷயங்களுக்கும் அது போதுமானதாய் இருந்தது. முகத்தில் மூன்று முறை குத்தினேன். வாயிற்குள் கர்சீப்பை அடைத்து கொச்சைக் கயிறால் அவனது கழுத்தை நெறித்தேன். அவனிற்கு போராடத்தெம்பில்லை. எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. எதோ எறும்பை நசுக்குவது போல இருந்தது. "தாவு..குதி..திமிறு.." என கத்திப் பார்த்தேன். ம்ஹீம்...சாவதற்கென்றே காத்திருந்து அந்த உடம்பு என்னை நோக்கி வந்ததாய் தோன்றியது. கழுத்தை இத்தனைக்கும் மிதமாய் தான் அழுத்தினேன்...துடித்துகொண்டிருந்த கால்களும் அடங்கியது...உடம்பு ஜில்லென குளிர்ந்தது. அது ஏன் உயிர் போனவுடன் உடல்கள் ஒரு சில வினாடிகள் அதிர்கிறதென தெரியவில்லை.... இதை எவனும் ஆராய்ச்சி கீராய்ச்சு பண்ணீருக்கானோ என்னவோ...ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவனைப்போட்டேன். மண்ணைப் போட ஆரம்பித்தேன்..மாலையில் பெய்த மழை காரணமாக மண் இறுகிப் போய்விட்டது..கொஞ்சம் கஷ்டப்பட்டு தோண்ட வேண்டியிருந்தது..ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டே மண்வெட்டியில் அள்ளிப் போட்டேன். நாளை இவனை யாரும் தேடுவார்களா....என்ன ஆகும் என யோசித்துப் பார்க்கையில் எனக்கு ரொம்பவும் த்ரில்லாக இருந்தது.."

ஜேக்கப்புக்கு ரத்த அழுத்தம் அதிகமானது போல இருந்தது. மூச்சு வாங்கினார். நடுங்கிய கைகளில் இருந்த நோட்டை டேபிளில் வைத்தார். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. வீட்டை விட்டு முதலில் வெளியேறி விடுவதென்று முடிவெடுத்து வேகமாய் வாசலுக்கு நடந்தார். நிலை படி தடுக்கி கீழே விழுந்தார். அவன் சத்தம் கேட்டு தலை தூக்கிப்பார்த்தான்.

                                                                                                                     --தொடரும் 

கருத்துகள்