வாயாடிகள் உலகம்


எங்கள் வீட்டில் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால், ஏதாவது ஒரு செய்திச் சேனலைப்போட்டு விடுவேன். ஐந்தே நிமிடத்தில் கொசுக்கள், பூச்சு பட்டைகள் எல்லாம் தெறித்து ஓடிவிடும். டீமாண்டிகளும், காஞ்சனாக்களும் மிரளுமளவு கூச்சலிடுகிறார்கள்.நம்மை டம்மாரமாக்க தினமும் விடாமுயற்சி செய்கிறார்கள். எல்லா தமிழ் ஆங்கில செய்திச்சேனல்களிலும் சாயங்காலத்துக்கு மேல் "கோட்சூட் தொகுப்பாளர்", வீடியோகான்ஃப்ரன்ஸ் போட்டுவிட்டு உட்கார்ந்து விடுவார். எல்லா கட்சியிலிருந்தும் "ஏழு கட்டையில்" பேசக்கூடியவர்கள் விக்ஸ் போட்டுவிட்டு ஆஜராகி விடுவார்கள். அன்றைய டாபிக்கை எடுத்து பிரிச்சி பேன் பார்க்க ஆரம்பிப்பார்கள். பெரும்பாலும் பெட்ரோல் விலை உயர்வு, ஜெயலலிதா விடுதலை, யோகா நாள் என இவர்களுக்காகவே தினமும் ஒரு ஃபுல்டாஸ் பால் காத்திருக்கும்.

தொகுப்பாளர்கள் கோட்சூட் போடவில்லையென்றால் டிவி லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என எதுவும் விதிமுறைகள் இருக்கின்றனவா தெரியவில்லை?. "இந்த பரபரப்பான அரசியல் சூழலில் விஜயகாந்த், கலைஞரின் வீட்டுக்கு அருகில் வாக்கிங் போனது எந்த வித சலனத்தை ஏற்படுத்தும்..?" என்கிற ரீதியில் ஆரம்பிப்பார்கள். எல்லா கட்சியிலிருந்தும் ஒரு உருப்படி வந்திருக்கும். தலைப்பு என்னவிருந்தாலும் இவர்களுக்கு கவலையில்லை, அவர்கள் தயார்செய்ததை கொப்புளிப்பார்கள். போனவாரம் கூட மெட்ரோ ரயில் பற்றிய விவாதத்தில் குமாரசாமி தீர்ப்பை பற்றி ஐந்து நிமிடம் பேசினார் ஒரு பராக்கிரமசாலி. அவர்  பேசியதை அவர் கட்சிக்காரர்கள் கேட்டால் கூட ரத்த வாந்தியெடுத்து செத்து விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மூன்று நிமிடம் தங்கு தடையின்றி தமிழில் பேசினால் இவர்கள் வென்று விட்டதாய் நினைக்கிறார்கள். எல்லாக்கட்சிகளும் ஆளும்கட்சியை கழுவி ஊற்ற வேண்டும், ஆளும்கட்சி போன ஆட்சியை கரித்துக்கொட்ட வேண்டும். சமூக ஆர்வலர்கள் எல்லாவனையும் திட்ட வேண்டும். போன்றவையெல்லாம் இந்த விவாதங்களின் விதி.





கொஞ்ச நாட்களுக்கு முன் பா.ஜ.க வின் ஹச்.ராஜா "பர்தாவை தடை செய்ய வேண்டும்" என்று எங்கேயோ கூட்டத்தில் பொங்கிவிட்டார். இவர்கள் இங்கே 
சாயங்காலம் கடையை திறந்து விட்டார்கள். திராவிட கட்சிகளெல்லாம் சேர்ந்து ஏறி அடித்துக்கொண்டிருந்தன. திடீரென நாமம் போட்ட ஒருவர் "ஏன் பெரியார் கூட இதைத் தானே சொல்லியிருக்கிறார்.. ராஜா பெரியார் வழியில் நின்று இதை சொல்லிவிட்டார் என எடுத்துக்கொள்ளலாமே.." என்றார். இவ்வாறாக நேரலையில் வண்டி வண்டியாய் வாந்தியெடுக்கிறார்கள். காவிக்கும் கருப்புக்கும் கட்டாயத்திருமணம் செய்து வைக்கிறார்கள். கழகங்கள் சார்பில் பெரும்பாலும்  வழக்கறிஞர்கள் தான் களமிறங்குகிறார்கள். கேசுகள் கைவசம் நிறைய இருப்பதால் எல்லாக்கழகத்திலும் வக்கீல்களுக்கு "வாக் இன்" இண்டர்வ்யூ நடந்திருக்கும் போல. எல்லாரும் ஒரே நேரத்திலே பேசுவார்கள், அடுத்தவர் பேசுவது கேட்டு விடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பார்கள். 

பேசுவோர் எல்லோரும் கையில் ஆளுக்கு ரெண்டு பேப்பர் வைத்திருக்கிறார்கள்.சேனல்களில் மெதுவடை எதுவும் கொடுப்பார்களோ என்னவோ..  இன்னொரு ரக பேச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களது பேச்சு ஆழமாய் கருத்துள்ளது போல இருக்கும். முழுமையாய் விளங்காது. யாரோ மூளையில் கொத்து பரோட்டா போட்டது போல இருக்கும். "முதலாளித்துவத்தால்  கட்டமைக்கப்பட்ட கூறுகளினால் எழுப்பப்பட்ட ஒரு வினையூக்கியாய் மாறி நம் சக தோழனே நம் ரத்தத்தை உறிகிறான்". மேலே சொன்ன வாக்கியம் ஒரு பானை பிரியாணியில் ஒரு லெக் பீஸ். இவர்கள் எல்லாக்கட்சியினரையும் வாரிவிட்டு தாங்கள் நடுநிலையாளர்கள் 
என்று நிலைநாட்டுவார்கள்.

ஆங்கில சேனல்கள் "அதுக்கும் மேல" செய்கிறார்கள். டைம்ஸ் நவ் ஆசாமி.... சாரி... கோஸாமி , அடி வயிற்றிலிருந்து கத்தி ஒரு மிகப்பெரிய கேள்வி கேட்பார்.சம்பந்த பட்டவர் பதில் சொல்வதற்குள் புகுந்து இடைமறித்து இவரே பேசுவார். பெரும்பாலோனோர் பொண்ணு பார்க்க கூட வந்த ஒன்று விட்ட சித்தப்பா போல அமைதியாக உட்கார்ந்துவிட்டுப்போவார்கள். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல மொத்த இந்தியாவும் குத்த வைத்து உட்கார்ந்து எங்கள் சேனலை தான் வெறிக்க வெறிக்க பார்க்கிறார்கள் என உலகமகா விளம்பரம் வேறு போடுகிறார்கள்.


இதற்கு மேல எழுதுறதுக்கு மேற்படி டாப்பிக்கில் எனக்கும் எதுவும் தோன்றவில்லையென்பதால் பாயிண்ட் தேற்றுவதற்காக புதியதலைமுறையை போட்டேன். வழக்கம் போல வீடியோ கான்ஃபிரன்ஸ்ஸில்  கட்டம் கட்டி ஆறுபேரை காட்டிக்கொண்டிருந்தார்கள். மெட்ரோ ரயில் பற்றி "ப்ராது" கொடுத்திருந்தார்கள். எல்லோரும் மெட்ரோ ரயிலை "நாம்பெத்த புள்ள" என சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.

"மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட...."

"இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட..."


"நாங்கள் டெல்லயில் 2002ல் மெட்ரோ ரயிலை தொடங்கிய போது..."


"கட்டணத்தை குறைக்க வேண்டுமென்று நாங்கள் அப்போதிருந்தே சொல்...."


செயற்கைக்கோள் வழியாக இலவச "ரத்த அழுத்தத்தை" வழங்கத் தொடங்கினார்கள்.

கருத்துகள்

இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Comment viluguthanu testing
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பேசுறது பொறணி...
இதுல நடுநிலை-ன்னு வக்காலத்து வேற..

என்னை வச்சு செய்ய வேண்டாம்-ன்னு இவ்ளோ லஞ்சம்,
அவனை வச்சு செய்ய இவ்ளோ லஞ்சம்-ன்னு மீடியா நல்லா சம்பாதிக்குது.

ஆனா, ஒரு சில விவாதங்கள்-ல தொகுப்பாளர்கள் மூக்கு உடையறது கொஞ்சம் வேடிக்கை.