காலத்தில் கரைந்து கானல் நீராகிப்போனது
உங்களுடன் நான் நனைந்த தருணங்கள்.
எனக்கு நினைவுகளை கொடுத்து விட்டு
என் நிஜத்திலிருந்து விடுபட்டு போனீர்கள்.
பள்ளிக்கு கூட வரும் சைக்கிள் தோழர்கள்
விரட்டி விரட்டி சைட் அடித்த முட்டக்கண்ணி.
பட்ட பெயரில் பதிந்து போன ஆசிரியர்கள்
வயதுக்கு வந்த பின் காணமல் போன தோழிகள்...
சுவாரஸ்யமாய் பேய்க்கதை சொல்லிய
வாட்ச்மேன் வீரமணி
"லெக் ஸ்பின்" சொல்லிக்கொடுத்த
பிரசாத் அண்ணன்.
எல்லோரைப் போலவும் பல்கிப்பெருகி நிற்கிறது
என் வாழ்க்கையிலிருந்து காணாமல் போனோர் பட்டியல்.
நீங்கள் எங்கிருக்கிறீர்... என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா??
என் குரலை கண்டுகொள்வீரா?...
ஒரு வேளை மறந்து போனீரா ??
அல்லது ஞாபகம் தூண்டினால் "அட..எப்டி டா இருக்க.." என ஓடி வந்து
கட்டிக்கொள்வீரோ??
இது எதுவுமில்லாமல் மாண்டு போனீரா??
எங்கோ புகைப்படங்களில் சந்தனப்பொட்டுடன்
சிரித்துக்கொண்டிருக்கிறீரா??
உண்மையைச் சொல்லட்டுமா..எனக்கு அதுபற்றி அக்கறையில்லை.
காலம் கூட்டிக்கொண்டு போனோரும் ,
காலன் கூட்டிக்கொண்டு போனோரும்,
எந்நாளும் திரும்புவதில்லை..அழுதென்ன செய்ய...
உபத்திரமில்லை. நீங்கள் தான் என் மூலையில்
உறைந்த செல்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்குறீர்களே.
நான் நினைக்கையில் வந்து சிரிப்பீர்கள்.
நிகழ்வுகளை பிசகாமல் மீண்டும் செய்து காண்பிப்பீர்.
உங்களுக்கு முதுமை இல்லை.முடிக்கழிவில்லை.
நோய்களேதுமில்லை. உபத்திரமில்லை.
நான் வாழும்வரை நீங்களும் வாழ்வீர்
உங்களுக்கு மரணமுமில்லை!!!!!!!!
கருத்துகள்