அன்றும் தற்காலிகச் சாவு வர
பன்னிரெண்டாகிவிட்டது..
இமைகளுக்கும் விழிகளுக்கும்
இடைவெளியே இல்லை..
அத்துனை புலன்களும் நிம்மதியாய்
ஓய்வெடுக்க
நாசி மட்டும் கோபத்தில்
பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது.
தூக்கம் என்னைத்தழுவ மீண்டும்
நான் தூக்கத்தைத் தழுவினேன்.
விளம்பரமேதும் போடாமல்
தரச்சான்று காட்டாமல்
யாருக்கும் நன்றி கூட சொல்லாமல்
ஒரு கனவுக்காட்சி ஆரம்பமானது.
கன்னிகை ஒருத்தி வந்து
புன்னகை பூத்தாள்.
கருத்த கானகம் போல்
தலைமயிர்
எதிராளி இதயத்தை
ஊடுருவும் கண்கள்..
பாந்தமான மூக்கு
அழகாய் படர்ந்த காதுகள்...
தாமரையே தோல்வியை
ஒப்புக்கொள்ளும் இதழ்கள்..
வித்தகன் செதுக்கியது
போல் கழுத்து...
கீழ்கொண்டு சொன்னால் என்னை
கீழானவன் என்பீர் என்பதால்
விவரனை விடுத்து
விஷயத்தை மேற்கொண்டு சொல்கிறேன்.
அந்த பேரழகி வந்து
தன் பிஞ்சிக்கரம் நீட்டி
"காதல் கொள்வாயா??" என்றாள்.
சொக்கியிருந்த நான்
சுதாரித்தேன்.
கோபம் வந்ததெனக்கு
கொடுஞ்சொல் செலவிட்டேன்.
"ம்..காதல் கொல்வேன்" என்றேன்
அவள் "ல"கரம் தெரியாதவள் போல ...
தன் லாவண்யத்தை தொடர்கிறாள்.
"இத்தனை அழகை ஆள
ஆசையில்லையா??" என கொஞ்சினாள்.
அவள் சற்று உயரமானவள்
அவளை விட உயரம் அவள் கர்வம்.
நான் சிரித்தேன். பின் சொன்னேன்.
"மன்னிக்கவும்.தற்சமயம்
ஆட்சியமைக்க எண்ணமில்லை"
"ஏன்??"-- அவள் உதட்டை பிதுக்கி
கேள்விக்குறி ஆக்குகிறாள்.
"என் பொருளாதாரம் உன் இடை
போல மெலிந்தே இருக்கிறது..." விளக்கினேன்.
"பரவாயில்லை". அடம்பிடிக்கிறாள்.
"என்னவள் ஆனால் நீ
தங்கத்தை விளம்பரத்தில் தான் பார்ப்பாய்" என்றேன்.
"சொகமான வாழ்க்கைக்கு சொர்ணம் பொருட்டா??" என்கிறாள்
கேள்வியில் பதிலை
சொல்ல முயல்கிறாளாம்.
தங்கத்தை புறக்கணிக்கும் பெண்ணா??
செவ்வாயில் பிறந்தவளோ??..
ஆச்சர்யத்தில் அவளை பார்த்தேன்
இன்னுமும் அழகாய்த்தெரிகிறாள்.
"நிலபுலன்கள்..." என தொடரப்போனேன்
"தோளில் சாய்ந்து கொள்கிறேன்" என
சொல்லி சொன்னதை செய்தாள்.
பெண்ணின் ஸ்பரிசம்
போதைகளின் அரசி.
தெரிந்தும் மீள முயலவில்லை.
பின் குழந்தைகள் பெற்றோம்
பெயரிட்டோம்.செலவிட்டோம்.
இருந்த காசில்
எங்கள் உலகம் வாங்கினோம்.
பல நேரங்களில் உதடுகளின் வேலையை
கண்களே செய்கிறது.
எங்களுக்கு அழுகையென்ற உணர்ச்சி
இருப்பதே தெரியவில்லை.
கவிதையாய் வாழ்கிறோம்.
கணங்கள் உறைகின்றன.....
ஏதோ சத்தம் கேட்டு
உயிர் பெற்று உலகுக்கு திரும்பினேன்.
அலைப்பேசி தும்மி இருக்கிறது.
எடுத்துப்பார்த்தேன். குறுஞ்செய்தி.
"Fool..kirukkaa..loosu...
itz 10..im already in PVR"
சுந்தரிகள் கனவில்
மட்டுமே சுந்தரமாய் வருகிறார்கள்.....
கருத்துகள்