திருவள்ளுவரின் டைரி


                                                                                   
                                                                    


மணி காலை ஒன்பது ஆகியிருந்தது.கண்ணைத்திறக்க அறப்போராட்டம் நடத்திகொண்டிருந்தேன். சூரிய ஒளி ஜன்னல் வழியாக மூஞ்சில் அடித்தது. இனிமேலும் தூங்கினால் சூரியனே கீழே இறங்கி வந்து அடிக்கும் அபாயம் இருந்ததால் எழுந்தேன். மொபைலை எடுத்தேன். மூன்று மிஸ்டு கால். யாருன்னு பாத்தா சதீஷ். இந்தாளு எதுக்கு கூப்பிட்டார்னு யோசிச்சுகிட்டே பதிலுக்குக் கூப்பிட்டேன்.

"அன்பே..அன்பே...நீ எங்கே..." ன்னு ஒரு அழகான குரல் பாட ஆரம்பிக்க, அதுக்குள்ளேயே ஒரு கட்டைக்குரல் "ஹலோ" என்றது. நான் பேசினேன்.
"யோவ்... எத்தன மிஸ்டு கால்யா...இந்த மிஸ்டு கால் கொடுக்குறவனயெல்லாம் மிட்நைட்ல வித்அவுட்டா ஓட விட்டு சுடணும்"

"Balance இல்லைடா..."

"பக்கத்துல யாராய்ச்சும் பிடிச்சிக்கிட வேண்டியது தான..."

"வெளையாடாதப்பா...ஒரு முக்கியமான மேட்டர்... நாங்க மயிலாப்பூர்ல வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்ல.."

"ஆமா..பக்கத்துல கூட நெறய பிகர்ங்க இருக்காங்கன்னு சொல்லிட்டிருந்தீங்களே..."

"டேய்..பாத்துப்பேசு..ஸ்பீக்கர்ல போட்டிருக்கேன்..."

"யோவ்..இதென்ன குத்துப்பாட்டா..ஸ்பீக்கர்ல கேக்குறதுக்கு...எடுய்யா அத..."

"வீட்டுக்கு மண்ணைத்தோண்டுறப்போ ஒரு ஓலைச்சுவடி மாதிரி ஏதோ வந்துச்சுப்பா..உள்ள பாத்தா என்னென்னமோ எழுதிருக்கு..நீ வாயேன் இங்க"

"பாஸ்... நீங்க வர வர ராகுல்காந்தி மாதிரி பிரச்சனையக் கெளப்பிக்கிட்டே இருக்கீங்க...நீங்க வேணும்னா உங்க கண்டுபிடிப்ப தூக்கிக்கிட்டு இங்க வாங்க ..."

"சரிடா...வீட்லையே இரு... வந்திடுறேன்..."

வந்தார். கையில் ஒரு அட்டைப்பட்டி வைத்திருந்தார். அறையின் ஜன்னல்களெல்லாம் மூடினார்."இந்தாளு வர வர ஓவர் பில்ட்அப் கொடுக்கிறாரே"னு இருந்தது. அன்னைக்கு இப்படித்தான் ஏதோ ஒரு மொக்க படத்த பாத்துட்டு வந்து "இது ஒரு உலக சினிமா" னு பெனாத்துறார்.

"பாஸ் ..நாம என்ன சீன் படமா பாக்க போறோம். எதுக்கு இப்போ ஜன்னலெல்லாம் அடைக்குறீங்க". 

              

                                                                            


"பொறுடா..." என்றபடியே பைக்குள்ளேயிருந்த அதை எடுத்தார். பழுப்பு நிறத்தில் இருந்தது. முழுக்க மண்ணில் ஊறி இருந்த அடையாளம் தெரிகிறது. அத பார்த்தோனே கொஞ்சம் சீரியஸ்நெஸ் வருது.வேகமா அவர் பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.முதல் பக்கத்தை திருப்பினோம். "ஆதியானவன் அருட்சோதி என்னுள் எரியட்டும்- வள்ளுவக்கோமகன்" என்றிருந்தது.எழுத்துக்கள் ரொம்பவும் வித்யாசமாய் இருந்தது. அந்தக்காலத்து தமிழ்.

 "ஏங்க ஒருவேளை நம்ம திருவள்ளுவர் எழுதியதா இருக்குமோ" என்றேன். அவர் பேசாமல் அடுத்த பக்கம் திரும்பினார்.

"    ௧௨௨ - 0031
 பத்துவரியில் வெண்பா எழுவதாய் இருந்த முடிவை தற்சமயம் மாற்றி இரண்டுவரியில் எழுதச்சித்தம். வாசவிநறுமுகை கூட வெள்ளாமையை பார்த்துக் கொள்ளுங்கள் என வசைகிறாள்."

"நான் சொல்லல" ன்னேன். தாமதிக்காமல் அடுத்த பக்கத்தை திருப்பினோம்.

" ௧௨௨ - 0037
இன்று நீரிறய்க்கையில் நான் அழைப்பதை கேட்டு கோபம் கொண்டு அந்த தின்னமான குவளையை என் மேல் வாசவி வீசினாள். அவளது சினம் குறைய அந்த சித்தார்த்தனை வேண்டுகிறேன்."

"அடப்பாவிகளா..நம்ம கிட்ட வேற மாதிரி சொன்னாய்ங்களே " என்றார் சதீஷ். அடுத்த பக்கம் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

"௧௨௩ -0027
முன்பே சக்ரவர்த்தி இளமடற்கோ தன் சேந்தனபுற அரண்மனைக்கு அழைத்திருந்தார். முன்னூறு குந்தகை பயணஞ்செய்து வர ஒரு மாமாங்கம் ஆகும் என்பதால் மறுத்து விட்டேன். அரசன் என் உருவம் பார்ப்பதற்காக அரண்மனை ஓவியனை அனுப்பி இருந்தார். இன்று அவன் என்னை வரைந்து கொண்டு சென்றான். பார்ப்பதற்கு வாலிபன் போல் உள்ளீர் "தாடி மயிர்" இருப்பது போல் வரைந்து கொள்கிறேன்.என்றான். சரி என்று சொல்லிவிட்டேன்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். 

" ௧௨௭ -0019
இன்று மெய்யம்மை அவள் வீட்டுக்கு வந்திருந்தாள். முதல் குழந்தையை பிரசவிக்க வந்திருக்கிறாள். அவள் பார்த்தாள். நான் அவளை பார்க்க முடியவில்லை. கண்கள் குளமானது. நான் கொடுத்த மயிலிறகுகளை வைத்திருப்பாளா தெரியவில்லை. குடில் வந்ததும் அதே கண்ணீருடன் அன்புடைமையில் ஒரு பா எழுதினேன்.
 
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் 
புன்கணீர் பூசல் தரும்"

'திருவள்ளுவருக்கும் ஒரு ஜெஸ்ஸி இருந்திருக்கா போல' என்றேன். நான் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. "கவனிச்சீங்களா "சித்தார்த்தன்" ன்னு நடுவுல சொல்றாரு..அவரு பௌத்தர்னு ஒரு கூட்டம் சொல்றது உண்மையா இருக்குமோ..." என்றேன். "டேய் வாய மூடிட்டு இருடா..திருவள்ளுவர் சிலைக்கும் ஆப்பு வச்சிராதீங்கடா" என்றார் சதீஷ். நியாயம் தான்.

                                                 
"௧௨௭ -001
வானசாஸ்திரம் படிக்க லெமூரிய கண்டம் பயணப்படுகிறானாம் அருள்மடை. இங்கேயே காஞ்சிநாதரிடம் பன்மொழி பயிலலாமே என்றேன். மறுக்கிறான். கனியிருப்ப காய் கவர்ந்திற்று. மழலைகள் வளராமலே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்."

"௧௨௫ -041 
இன்று முழு வெண்பாமாலையும் முடித்து விட்டேன். வாசவி படித்து பார்த்து "பிடிக்கவில்லை" என்றாள். எனக்கு கவலையில்லை. மொத்தம் 1760 எழுதி விட்டேன். முதலில் 1330 பாக்களை அரண்மனைக்கு  அனுப்பி விட்டு, அவர்கள் விருப்பமறிந்து பின் மிச்சத்தை அனுப்ப உத்தேசம். கூட்டுத்தொகை ஏழு நல்லதென பொய்யாமொழி சொன்னார்."

நானும் சதீஷும் ஒருவரை ஒருவர் பார்த்தோம்."அப்போ மிச்சக்குறளும் இருக்குடா" என்றார். "ஒரு வேளை அதுவும் உங்க எடத்துல கெடச்சுதுனா..." என்றேன். சதீஷ் அவர் பைக்கை நோக்கி ஓடினார். நான் அவர் பின்னாலேயே ஓடினேன்.

கருத்துகள்

லெமூரியன்... இவ்வாறு கூறியுள்ளார்…
:) :) karppanai kuthirai kuthichi kuthichi oduthe..! :)
நீச்சல்காரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வள்ளுவனை கிண்டல் செய்யவில்லைஎன்றால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்