முட்டைக்கன்னிகளும் பின்னே அவனும் -( பகுதி 4)


                                         மு.க.பி.அ -- பகுதி 1

                                         மு.க.பி.அ -- பகுதி 2

                                         மு.க.பி.அ --பகுதி 3 






பிரவீன் சென்னையில் அந்த உலகப்பிரசித்தி பெற்ற மூன்றெழுத்து கார்ப்பரேட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். சேர்ந்த மூன்றாவது மாதத்திலேயே பைக் வாங்கினான். மிக்ஸி,கிரைண்டர் தவிர எல்லாமிருக்கிற போன் வாங்கினான். சொந்த பந்தங்கள் அவனது ஜாதகத்தை கேட்டார்கள்.இரண்டு வருடங்களில் அவனது குடும்பப்பொருளாதாரம் மாறிப்போனது. பிரவீன் அலட்டிக்கொள்ளவில்லை. ஊருக்கு வரும்போதெல்லாம் எனக்கு போன் செய்வான், சந்தித்துப் பேசுவோம். கடைசி ஆண்டில் நடந்த காம்பெஸ் இண்டர்வ்யூவில் என்னையும் ஒரு கம்பெனி வேலைக்கு எடுத்தார்கள். சென்னை வந்து சேர்ந்தேன். பேசியிருந்த படி நுங்கம்பாக்கத்தில் இருந்த பிரவீன் வீட்டுக்குப் போனேன். இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீடு அது. கூடவே பிரவீனின் நண்பன் ஒருவனும் தங்கியிருந்தான். அவன் தலையில் காரச்சட்டினியை கொட்டியது போல கலரிங் செய்திருந்தான்.

"உள்ள வா..ஏன்டா இவ்ளோ நேரம்.வேமா குளிச்சிட்டு கெளம்பு எரும..இன்னைக்கு நான் ட்ராப் பண்ணிடுறேன்.."   

விருந்தோம்பலையெல்லாம் தமிழன் மறந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டது என எண்ணிக்கொண்டேன்.ஆபிசுக்கு போய்விட்டு மாலை வீட்டுக்கு வந்தேன். 
பிரவீன் குளித்துக்கொண்டிருந்தான். அவனுடைய போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தேன். "வாடா..எப்டிருந்துச்சு மொத நாள்.." என பேசிக்கொண்டே வெளியே வந்தான்.கொஞ்ச நேரத்தில் சுதாரித்து "நீ கேமெல்லாம் கம்ப்யூட்டரில் விளையாடு" என சொல்லி போனை புடுங்கினான். எவனெல்லாம் போனை தர பயப்படுகிறானோ அவனெல்லாம் எதோ ரகசியம் வைத்திருக்கிறான். பிரவீன் அடிக்கடி வெளியே தனியே நின்று போன் பேசுகிறான். மர்மமான முறையில் வெளியே கிளம்பிப்போகிறான். ஒரு நாள் அவனிடம் நானே கேட்டேன்.

"டேய்..என்னடா நடக்குது...வரலாறு திரும்புதா.."

"ஒன்கிட்ட சொல்லாமலா..நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது...தூங்கு காலைல பேசுவோம்"

ஆபிஸிலிருக்கும்போது போன் செய்தான்.ஆபிஸ் முடிந்தவுடன் மயிலாப்பூரில் உள்ள சரவணபவன் வரச்சொன்னான். போனேன். பிரவீனும், சேலை கட்டிய ஒரு பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். அவளே தான். அந்த மஞ்சக்கலர் சுடிதார்.அவன் என்ன சொல்லப்போகிறான் என்று யூகிக்க எனக்கு அப்துல்கலாம் அறிவெல்லாம் தேவைப்படவில்லை. அவளையும் என்னையும் அறிமுகம் செய்து வைத்தான்.

"இது சிவா..நான் சொன்னேன்ல..டேய் இது மதி...மதிவதினி..."

கை கொடுத்தோம். ரொம்பவும் ஜாலியான பெண்ணாக இருந்தாள். ரொம்ப நாள் பழகியவரிடம் பேசியது போல் பேசினாள். இவளை வந்தடையத்தான் இவன் வாழ்க்கையில் இத்தனை திருப்பங்கள் போல என எண்ணிக்கொண்டேன். "இவரு...." என பிரவீனை கைகாட்டி பேசிய போது அவள் கண்களில் ஒரு அடர்த்தியான காதல் தெரிந்தது. அவளை ஆஸ்டலில் விட்டுவிட்டு வீடு வந்தான். மொட்டை மாடியில் நான் வானத்தை வெறித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.பிரவீன் அமைதியாய் நடந்து வந்து என் பக்கத்தில் நின்றான்.

"தப்பா எடுத்துக்காதே..உன்கிட்ட சொல்ல சங்கடமா இருந்துச்சு.. அதான் ஒரு வருஷம் போகட்டும்...பாத்துட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்"

"நல்ல வேள..ஒரு குழந்தை பொறந்ததுக்குப்புறம் சொல்லிக்கலாம்னு நினைக்காம இருந்தியே.."

"டேய் என்ன கடுப்பாகிட்டியா??"

"அத விடு. சீரியஸா இருக்க தானே. அப்புறம் சரிப்பட்டு வராதுனு நினைக்குறேன்னு பொலம்ப மாட்டேள்ளே...."

"நான் எப்போவோ முடிவு பண்ணிட்டேன் அவ தான் என் பொண்டாட்டி.."




எனக்கும் அது தான் சரியெனத் தோன்றியது. அவனுக்கும் அவளுக்குமென ஒரு அழகான அலைவரிசை இருந்தது. கண்கள் வழியாகவே பேசிக்கொள்ள முடிகிறது.பிரவீனெல்லாம் இவ்வளவு சிரிப்பானென்பதே எனக்கு அந்த நாள் தான் தெரியும். இது சேர்ந்த ஜோடியில்லை பிறந்த ஜோடி என்றே பட்டது.இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். எனக்கு நாலு மணி நேரமாய் முட்டிக்கொண்டு நின்ற கேள்வியை அப்போது தான் கேட்டேன்.  

"யாரு மொத சொன்னது..?"

எல்லா காதலர்களும் எதிர் கொள்ளும் கேள்வி.

"நான் தான். எனக்கு அவ க்ளோஸ் பிரெண்ட். என்னத்த சொல்ல..அவ எது பண்ணினாலும் பிடிக்குது. அவ கூட இருந்தா அவ்வளவு சந்தோசமா இருக்கு. அவளுக்கும் புக்ஸ்னா உயிர். வைரமுத்துவ பத்தி பேசுனானு வை, சாப்பாடு தண்ணி இல்லாம கேட்டுக்கிட்டே இருக்கலாம். யாரையும் கோவிச்சு ஒரு வார்த்தை பேச மாட்டா. எனக்கென்னவோ அவ நெத்தில "பெறுநர்- பிரவீன்" னு எழுதி இருக்குன்னு தோணிச்சு . எனக்கு எப்பிடி சொல்றதுன்னு தெரிலடா. ஒரு படபடப்பு,குறுகுறுப்பு, எல்லாத்துக்கும் மேல தெகட்டுறளவு சந்தோசம்...அவகிட்ட சொல்றதுன்னு முடிவு பண்ணினேன்..."

பிரவீனா இவ்வளவு பேசுறான்னு ஆச்சர்யம். இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் "ம்..அப்றம்.." என்றேன்.

" ஒரு நா..அவள பாக்க ஆஸ்டலுக்கு போயிட்டேன். செம்ம மேக் அப். என்னானாலும் பரவாயில்லைனு தைரியம். போன்ல கூப்பிட்டு வெளிய வர சொன்னேன். அவள பாத்தான்னே எல்லாமே மறந்து போச்சு. இந்த நைட் நேரத்துல திடீர்னு கரண்ட் போனா எப்டியிருக்கும் அது மாதிரி இருந்தது. வைரமுத்துவ நினைச்சுக்கிட்டேன். "மதி..என்னைய நீ எவ்வளவு கேவலமா நினைச்சாலும் பரவால்ல..ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு.." னு சொல்லிட்டு வேமா நடந்து வந்துட்டேன்."

"டேய் மாங்கா.. ரெண்டாங்களாஸ் பையன் கூட கொஞ்சம் பெட்டரா ப்ரபோஸ் பண்ணியிருப்பான்டா.. அப்புறமென்னாச்சி? "  





"அடுத்த நாள் காலைல கால் பண்ணுனா..வீட்டுக்கு கீழே இருக்கேன் வான்னு சொன்னா. மெரண்டுட்டேன். போனேன். கைல ஒரு பார்சலை கொடுத்தாள். ரெட் ரோஸை கொடுத்தாள். இதெல்லாம் கொடுத்திட்டு சொல்லிருக்கணும்னு சொன்னாள். சந்தோசம்னா அப்டி ஒரு சந்தோசம் எனக்கு..கண்ணுல அழுக முட்டிக்கிட்டு வருது..அவளை கட்டிப்பிடிச்சு அப்டியே முத்தம் கொடுத்திட்டேன்.."

நான் அவனை ஒரு மாதிரியாய் பார்ப்பதை உணர்ந்து " கன்னத்துல தான்டா.." என்றான். அப்பிடியே மணிக்கண்ணில் பேசிக்கொண்டு இருந்தான். எனக்கும் சுவாரசியமாய் இருந்தது. பேச்சு மதியின் குடும்பத்தை பற்றி போனது. அப்பா இல்லை,இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள் என்றும் சொன்னான். போனில் இருந்த அவள் குடும்ப புகைப்படத்தை காட்டினான். எல்லோரும் சிரித்த முகமாய் இருந்தார்கள். 

"அதெல்லாம் சரி அவ வீட்ல சொல்லியாச்சா..."

"சொல்லப்போறோம்..."

"எப்போ.."

"நாளைக்கு..."

                                                                                     ------ நாளை க்ளைமேக்ஸ்-----

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Mr.Siva Love portion na ippadiya
sappunu solrathu...I think you rework it again-Alagar