பிரதி புதன் பேசலாம் -1

 அந்த அறை கொஞ்சம் பெரியதாய்  இரண்டு மூன்று ஜன்னல்களுடன் இருந்தது. ஒரு  டேபிள் போடப்பட்டு ஒரு பக்கம் பெரிய ரோலிங் சேரும் ,எதிரே மூன்று பிளாஸ்ட்டிக் சேரும்  இருந்தது. நான் பவ்வியமாய் நடுவில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டேன். ஒரு வயதான அம்மா அறையை பெருக்கிக்கொண்டிருந்தாள்.  சுவற்றில் ஒரு  தாமரை படம்  போடப்பட்டு  அதன் பின்னே கமலம் என அடர்த்தியான பச்சை நிறத்தில் எழுதியிருந்தது. அதன் கீழே "தமிழகத்தின் நம்பர் ஒன்  வார இதழ்"  என  சின்ன எழுத்துக்களில் போடப்பட்டிருந்தது. இரண்டு பக்கம் ஷோகேசுகளிலும்  நிறைய விருதுகளும் , நிறுவனர்  மற்றும் தலைமை பதிப்பாசிரியர் பாலகுரு சிரித்தபடி  எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் சேர்ந்து நிற்கும்  போட்டோக்களும் இருந்தது.  பாலகுரு கிட்டத்தட்ட  ஆறடியில் ஆஜானுபாகுவாய்  தெரிந்தார். அவர் ஒரு அறை அறைந்தால் கண்டிப்பாய் வாயில் இரத்தம் வரும் என தோன்றியது.எச்சில் விழுங்கிக்கொண்டேன். பாக்கெட்டில் இருக்கும் பேப்பர்களை ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.என் காதுக்கு மிக அருகில் கீச்சுக்கீச்சில்  அந்த குரல் மீண்டும் முனங்கியது.





"பதினேழு கிரெனெடு...போலியா தைச்சி போட்டுக்கிட்ட ராணுவ ட்ரெஸ்ஸோட ,"உரி" ராணுவ தளத்துக்குள்ள நுழைஞ்ச தீவிரவாதிக கூட இவ்ளோ பயந்திருக்க மாட்டாங்க ..ராஜா நீ நடந்தத சொல்லிண்டு போய்ட்டே இருக்கப்போறே..கத்திய வச்சி வெண்ணைய வெட்டுற மாதிரி ஸ்மூத்தா போகப்போகுது..அதுக்கப்புறம் அவர்பாடு ..எம்பாடு..."


எனக்கு அந்த குரல் எரிச்சலாய் இருந்தது. "உஷ்" என்றேன்.

"திருவாளரே..."பாடு" னு நான் ஒன்னும் திட்டலை..வம்பாடு..பெரும்பாடு மாதிரி அவர்பாடு-எம்பாடு"

கோபம்  தலைக்கேறியது. "கொஞ்சம் வாய மூடுங்க..ப்ளீஸ்" என்றேன்.


"ஏம்ப்பா..சிரிக்கிறதுக்கு கூட ஜி.எஸ்.டி இருக்கா..ரொம்ப பண்ற.."


தலையில் கைவைத்துக்கொண்டேன். கூட்டிக்கொண்டிருந்த ஆயா, நான் பொலம்புவதை கண்டுகொள்ளவில்லை. ஏதோ ப்ளூ டூத்தில்  பேசிக்கொண்டிருக்கிறேன் என நினைத்திருப்பாள். இவ்வாறாக இந்த நவீன கண்டுபிடிப்புகள் நான் பைத்தியக்கார ஆஸ்பத்திரி போவதை ஒருவாரமாய் தடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த  பாலகுரு வந்து தொலைந்தால் தான் என்ன என்று  தோன்றியது . நினைத்த  மாத்திரத்தில் கனைத்த படி வந்தார். வேகமாய் வந்து டேபிளில் இருந்த விநாயகர் படத்தை கும்பிட்டு விட்டு சேரில் உட்கார்ந்தார்.  அவர் மீது  வியர்வையுடன் கூடிய திருநீர் வாசனை அடித்தது.

"அட்வெர்டைஸ்மென்ட்  ஃபார்ம்  நிரப்பி கொண்டு வந்துடீங்களா...லோகோ நீங்க கேக்குற சைஸுல பண்ண முடியாது..சரவணன் சொன்னானா.."

நான் பெரிதாய் எதுவும் செய்யத்தேவை இருக்கவில்லை. என் முழியும், முகம் போகிற போக்கையும் பார்த்து அவரே நிப்பாட்டினார்.

"நீங்க மதினீஸ் மசாலா ஆள் தான.."

எனக்கு நெஞ்சு படபட வென அடித்தது. வேகமாய் எழுந்து ஓடிவிடலாம் போல இருந்தது. கொஞ்சமாய் பலத்தை திரட்டி "நா அதில்ல சார் ...நா  வேற விஷயமா வந்திருக்கேன்..."

அவர் புருவத்தை உயர்த்தி என்னை உற்றுப்பார்த்தார். நான் என்ன விஷயம் சொல்லப்போகிறேன் என  கவனிப்பது போல தெரிந்தது. பேசத்தொடங்கினேன்.  காலை முதல் பல முறை சொல்லிப்பார்த்தவை தான்.உலகத்துலயே ரொம்ப கஷ்டமானது உண்மைய  சொல்றது தான்.அதுவும் எனக்கு நடந்ததை..

"சார்..ஒரு பதினஞ்சு  நிமிஷம் நான் சொல்றத காது குடுத்துக் கேளுங்க..கோபம் வந்தாலோ..எரிச்சல் வந்தாலோ  பொறுத்துக்கோங்க..ட்ராபிக்ல வண்டிய நிப்பாட்டி காத்திருப்போம்ல அந்த மாதிரி...அந்த பதினஞ்சு  நிமிஷம் முடிஞ்சதுக்கப்றம் உங்களுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க... I am in Big trouble..நா உங்ககிட்ட பேசியே ஆவனும் ..."

லேசாய் சிரித்தார். "சொல்லுங்க "என்றார். அவர் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிந்தது. நான் பயந்தது போல எதுவும் நடக்காது என தோன்றியது. குரல் திரும்பவும் காதுக்கு பக்கத்தில் விஜயம் செய்தது. "அவனுக்கென்ன முத்தமா கொடுக்கப் போற.. சொல்லித்தொல முண்டமே..."

"சார்..எம்ப்பேரு சுந்தர். ஒரு ஏழு வருஷமா "நெற்றிக்கண்" இணைய பத்திரிக்கைல வேல செஞ்சேன். யாரும் பொண்ண கட்டிக்கொடுக்க முடியாதளவுக்குத் தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் தான் வெளில வந்து நாலு ஃப்ரெண்ட்ஸ்ஸோட  சேர்ந்து  "அமானுஷ்யம்" னு ஒரு யூ ட்யூப்  சேனல் ஆரம்பிச்சோம். பயங்கர ஹிட். "பேரா நார்மல் ஆக்டிவிட்டி" கள் நடக்கிற இடங்கள தேடி கேமராவோட போயிடுவோம். அதன் பின்னணி கதைகளை அலசுவோம். அதை சுவையா, மிரட்டலா சொல்லுவோம். நிறைய நியூஸ் சேனல்களுக்கு கூட வீடியோ கொடுத்திட்டு இருந்தோம்..நல்ல பைசா வேற.."


தலையை அசைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தார். தொடர்ந்தேன்.

"உண்மையா  என்ன பயமுறுத்திற  மாதிரி எதையும் சமீபத்துல வரைக்கும் பாக்கல..எப்படி மக்கள பயமுறுத்துறது என்பதில தான் என் முழு சிந்தனையே..சில பேய்ப்பட டிஸ்கஷனுக்கு கூட போயிருக்கோம்..ஆனா புதுசா கான்செப்ட் பிடிக்கலேனா ஃபீல்ட்ல நிக்க முடியாது...சப்ஸ்க்ரிப்ஷன் ஏறல.. வெறித்தனமா கேஸ் தேட ஆரம்பிச்சோம்.. போன மாசம் அமாவாசைக்கு முதல் நாள் என் அசிஸ்டன்ட்  சென்றாயன் போன் செஞ்சு "ஜி.. மதுரைக்கு பக்கத்துல இருக்க செல்லம்பட்டில இருக்கேன்..ஏதோ பெருசா சிக்குன மாதிரி இருக்கு..வரீங்களா " என்றான்.

கிளம்பினேன். நான் போயிருக்கக்கூடாது. காலச்சக்கரத்திற்கு ரிவர்ஸ் கியர் கிடையாது. இப்போது பேசி பயனில்லை. சென்றாயனும் ,கோபியும்  மதுரை ரயில் நிலையத்துக்கே வந்திருந்தனர். சென்றாயன் எனக்கு அசிஸ்டன்ட், கிட்டத்தட்ட நாலு வருட பழக்கம். துடுக்கான பையன். நான் சோர்ந்து கிடக்கிறபோதெல்லாம் எங்கிருந்தாவது ஒரு பேயை ஓட்டிக்கொண்டு  வந்து எனக்கு பூஸ்ட் கொடுப்பான். அவன் என்னிடம் கோபியை காட்டி "ஜி..இவர்  தான் கோபி " என்றான்.


சென்றாயன் கண்ணைக்காட்டி  சொன்ன விதத்துலயே அவன் தான் "ஸோர்ஸ்" என புரிந்தது. பெரும்பாலும்  என் அனுபவத்தில் "ஸோர்ஸ்கள்" புரளிகளை மொத்தமாய் மேய்ந்து விட்டு  ஒரு பொது கதையை நம்மிடம் சொல்லுவார்கள். அது நிறைய  பிசிறடிக்கும்.நாம அதுல கொஞ்சம் ஒர்க் பண்ணி சரி பண்ணனும். ஆனா இவன் வேற மாதிரி தெரிந்தான். கனீரென பேசினான். மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் எம்.ஃபில் படிப்பதாய் சொன்னான்.

மதுரையிலிருந்து செக்காணூரணி போகிற டவுன்பஸ்ஸில் மூவரும் ஏறினோம். கோபியை நடுவில் உட்காரவிட்டு நாங்கள் இருபுறமும் உட்கார்ந்து கொண்டோம். அவனுக்கு இருபத்து ஐந்து வயதிருக்கும்.கோபியின் கையில் தட்டி "சொல்லுங்க" என்றேன்.

" சார்..இங்கன நாகமலை புதுக்கோட்டை பக்கத்துல  போன வருஷம் முழுக்க   அகழ்வாராய்ச்சி  செஞ்சாங்கள்ளே .. அப்போ மண்பானை, செம்புக்கம்பி  என நிறைய கிடைச்சிருக்கு .. விஷயம் என்னான்னா ஆறடிக்கு ஒரு விசனக்கல்லும்  கிடைச்சுதாம்....விசனக்கல்னா  இறந்தவர் உடலை புதைத்த  இடத்தில்  வைக்கும்  நினைவுக்கல் ...எழுத்துக்களோடு ஸ்ட்ரோக்ஸ்ஸ பார்க்கிறப்ப  முதலாம் தமிழ்ச்சங்க காலமா இருக்க வாய்ப்பு இருப்பதா சொன்னாங்க..அப்போ தான் யூனிவர்சிட்டில இத பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டேன்.."

" போன மாசத்துல இருந்து நம்ப செல்லம்பட்டில மக்கள் பார்வைக்கு அந்த பொருட்கள எல்லாம் வச்சாங்க..பெரும்பாலும் யாரும் வர மாட்டாங்க..தினமும் விசனக்கல்லில எழுதுன இரங்கலை படிப்பேன். அந்த மொழி நடை பிடிபட்டு, விஷயம் பின்பு தான் புலப்பட்டது"

"என்னானு?"

அவன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு " சார்..முதலாம் தமிழ்சங்கம்ங்கிறது அகஸ்தியர் காலம்.. தோராயமா கி.மு  நாலாயிரம் ..அப்போ வாராகினு ஒரு பார்வையில்லா மன்னன் தெற்கு மதுரையை ஆண்டு வந்திருக்கிறான்..அவரோட தலைமைப் புலவர் அருமன்  ஒரு  நாள் இறந்து போறார். அரசனுக்கு தாங்க முடியாத சோகம். அருமனோட குரல் தான் அரசனுக்கு உலகமே. அரசவையிலும் நாட்டிலும் நடப்பவையை அவரே அரசருக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய கல்விமான். அரசரின் உணர்வறிந்து அறிவுரை தருவது அவர் தானாம்.."

நான் ஒருமுறை சென்றாயனை எட்டிப்பார்த்தேன்.அவன் கண்ணை கூர்மையாக்கி கேட்டுக்கொண்டிருந்தான். கோபி தொடர்ந்தான்.


"வாராகி அழுது புலம்பி..தன் குடும்பத்தினர் பேச்சையும் புறக்கணித்து   உண்ணாமல்  "வடக்கிருந்து" உயிர் விட முடிவெடுத்திருக்கிறார்..விஷயம் அகஸ்தியர் வரை சென்றது. பெரியவர் வந்தும் சமாளிக்க முடியவில்லை..அரசனின் அன்பில் அகஸ்தியர் நெகிழ்ந்தார்..இருவரி வெண்பா ஒன்றை எழுதி கொடுத்து விட்டு  'மகனே..இதனை அருமனின் சமாதி மீது வைக்கப்போகும் விசனக்கல்லில் பதித்து விடு..இரங்கற் செய்தியுடன் கடைசியில் இதுவுமிருக்கட்டும். அருமன் படைத்த நூலொன்றை  விசனக்கல்லில் வைத்து அமாவாசையன்று இப்பாவை முப்பது முறை  மனமுருக பாடு' வென சொல்லிவிட்டு சென்றாராம். சொன்னபடி செய்த பின் ,அடுத்த நாள் முதல்அரசன் காதுகளுக்கு அருமன் குரல் கேட்டதாம். அரசன் அதன் பின் மகிழ்ச்சியுடன் கடைசி வரை வாழ்ந்ததாய் சொல்லப்படுகிறது. சிலர் அரசருக்கு புத்தி சுவாதீனம் ஆனதாய் சந்தேகித்திருக்கிறார்கள்."




நான் சென்றாயன் பக்கம் திரும்பி "டிராஃ ப்ட்  எழுதிக்கோ..கடைசி பைத்தியம் மேட்டர விட்டுரு..செமத்தி தான் "

கோபி  "சார்  அரசன் நல்லாத்தான் இருந்திருக்கணும்  ...அரசன விடுங்க ..அகஸ்தியர்  யாரு தெரியுமா..தெய்வப்புலவன்..வார்த்த ஒன்னொன்னும் தமிழ் மந்திரம்.."

"சரி கோபி..நானும் தப்புன்னு சொல்லல..மக்களுக்கு வேற ஐடியா கொடுக்கிற மாதிரி எந்த செய்தியும் வரக்கூடாது அதான்..இன்னைக்கு அந்தக்கல்ல போயி பார்த்திருவோமா.."

என்னை ஒரு மாதிரி பார்த்தான். "போலாம்..நான் வாட்ச்மேன் கிட்ட சொல்லுடுறேன்..நைட் பத்து மணி வாக்குல வாங்க..."

நான் சென்றாயனிடம் "டேய்..இன்னைக்கு லொக்கேஷன்போய் லைட்டிங் எப்படி போகுதுனு பாக்கலாம்.. நாளைக்கு ஷூட் போயிடலாம் ..போன வாட்டி மாதிரி புகை போட வேண்டாம் " என்றேன்.

இரவு சொன்னபடி நானும் சென்றாயனும் செல்லம்பட்டியில் இருந்த அந்த அரசுக்கட்டிடத்துக்கு போயிட்டோம். அங்கே தான் அகழ்வாராய்ச்சி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. வாட்ச்மேன் தூங்கிக்கொண்டு இருந்தார். கோபி எங்களுக்கு முன்னமே  அங்கே காத்திருந்தான். உள்ளே நுழைந்தோம். நோட்டம் விட்டதில் திகிலை கூட்ட எல்லா காரணிகளும் அங்கே இருந்தது.  மாட்டின் மண்டை ஓடு, கடப்பாரை , முதுமக்கள் தாழி. எனக்கு ஒரு ஹிட் கொடுக்க போகிற சந்தோசம். கோபி என் கையைப்பிடித்து கொண்டு போய் அந்த விசனக்கல் முன்னிறுத்தினான். கையில் வைத்திருந்த புத்தகத்தை அந்தக்கல் மீது வைத்தான்.

"உட்காருங்க சார்..உங்களுக்கும் பைத்தியம் பிடிக்குதானு பார்க்கலாம்.."

நான் சிரித்தேன். கோபிக்கு சாயங்காலம் நான் பேசிய தொணி பிடிக்கவில்லை. எனக்கு உண்மை,பொய் மீது அக்கறையில்லை . நல்ல கன்டென்ட் கிடைக்க எந்தக்கதைகளையும் நான் கேட்கத்தயார் தான். வைக்கப்பட்ட புத்தகத்தின் அட்டையை பார்த்தேன் "மீண்டும் ஜீனோ" வென இருந்தது. ஒரு நாய் படம் போட்டிருந்தது. ஆசிரியர் பெயர் சிறியதாய் இருந்தது .அந்த வெளிச்சத்துல கண்ணுக்கு தெரியல.

"இப்போ எதுனா ஆவி வந்தா ஒன்ன விட நாங்க தான் செம்ம ஹேப்பி ஆவோம்..பேய விட அது கொடுக்கிற பயம் தான் ஒரு த்ரில்லே.... என்ன.."

போய் கல்லின் எதிரில் உட்கார்ந்தேன். புத்தகம் காற்றுக்கு ஆடி அதன் பக்கங்கள் பறந்தது. நான் கல்லில் எழுதிய பாடலை தேடினேன். எழுத்துக்கள் புரியவில்லை. மெதுவாய் படித்தேன்.

"மாயா த்தமிழ்ஈன்ற  புத்திர னேகாலன் 
கயிற்றறுத் தெம்மிடம் வா "

கோபி சிரித்தான். "இன்னும் இருபத்து ஒன்பது தடவ படிக்கணும்"
சிரித்துக்கொண்டே தொடர்ந்தேன். கோபி எண்ணிக்கொண்டிருந்தான். சென்றாயன் செல்போன் லைட் வெளிச்சத்தில் டிராஃப்ட் எழுதிக்கொண்டிருந்தான். சரியாய் கடைசி தடவை சொல்லையில் திடீரென பறப்பது போல இருந்தது. ஏதோதோ காட்சிகள் தெரிந்தது. ஒரு பேண்ட் சட்டை போட்ட மனிதன், கொஞ்சம் கூன் போட்ட வாரே நடந்து வருகிறார். சென்றாயனும், கோபியும் முகத்தில் தண்ணீரைத்தெளித்தனர். கண்ணைத்திறந்து நான் எழுந்த போது ஒரு ஆஸ்பத்திரியில் இருந்தேன்.

கோபி "சாரி சார்..உண்மைலயே என்ன ஆகும்னு பாக்கலாம்னு தான் செஞ்சேன்..நீங்க இப்படி மயக்கம் போடுவீங்கன்னு தெரியாது..."

திரும்பி சென்றாயனை தேடினேன். "அவன் ..சாப்பாடு வாங்க போயிருக்கான்..". கோபி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போனான். ஃபேன் ஓடுகிற சத்தம் மட்டும் தான் அங்கே கேட்டுக்கொண்டு இருந்தது. அந்த மிகச்சரியான நொடியில் தான் அந்த குரல் என் வாழ்க்கைக்குள் நுழைந்தது.

"தேங்க்ஸ்பா தம்பி..பொதுவா தெரியாமல் செய்கிற உதவிக்கு நான் யாருக்கும் நன்றி சொல்றதில்ல..''

காதுகளை தடவிப்பார்த்தேன். அறையின் எல்லா திசைகளையும் பார்த்தேன் அங்கே யாருமில்லை. காதுக்கு மிக அருகில் ,மிக துல்லியமாய் அந்த குரல் வந்தது.

"பதறாதே...பழகிக்கோ..இப்போ திடீர்னு  ஒரு நாள்  
காலம்பர எந்திருக்கிறே..பாத்தா ரெண்டு தோள்பட்டை பக்கத்துலேயும் ரெண்டு ரெக்கை  முளைச்சிருக்கு..பதறிடுற..ஆனா அது யாரு கண்ணுக்கும் தெரில..உனக்கு மட்டும் தான் தெரியுது..அழற..தலைல அடிச்சுக்குற..கடவுளை பழிக்கிற ..ரெண்டு நாள் போனப்புறம் லேசா றெக்கைய ஆட்டி பாக்குற..அது அழகா ஆடுது..கொஞ்சம் வேகமா ஆட்டுற ..அது உன்ன அப்படியே பறக்க வைக்குது..சந்தோஷமாயிடுது..பிற்பாடு தான் யோசிக்கிற..உனக்கு கை,கால்..எல்லாம் அப்படியே இருக்கு..எக்ஸ்ட்ராவா  யாருக்குமே இல்லாத ஒன்னு கிடைச்சிருக்கு..அது ஒரு கிஃப்ட்னு உணருற..ஆச்சா..இப்போ உனக்கு நான் தான் அந்த ரெக்க"  

என் தலைமுடியை இறுக்கிப்பிடித்துக்கொண்டேன்.



"ஹே ..ஹே ...ஸ்டாப்..ஸ்டாப் " பாலகுரு கிட்டத்தட்ட கத்துவது போல என்னை நிறுத்தினார். எனக்கு லேசாய் மூச்சு வாங்கியது.

"நீ இப்போ என்ன சொல்றே..டேய் ஃப்ராடு.. அந்த புக்க வச்சு நீ அத படிச்சோனே உன்கிட்ட அவரு பேசுறாராமா ..நீ அவர இதுக்குள்ள இழுத்தேன்னு வை .. " நாக்கை மடித்து கோபத்தில் ஏதோ பேசப்போனார். நிப்பாட்டினேன்.

"சார்...நீங்க நிப்பாட்டி ஏதாவது பேசுன உடனேயே இத கொடுக்க சொன்னார்"  பாக்கெட்டிலிருந்து ஒரு மடித்த வெள்ளைத்தாளை எடுத்து அவரிடம் நீட்டினேன்.பாலகுரு குழப்பமாய் அதை வாங்கினார். படிக்கத்தொடங்கினார். சொல்ல சொல்ல எழுதியது நானென்பதால்  எனக்கு அந்த கடிதத்தில் இருந்தவை தெரியும்.

"அன்பு பாலா..நலமா..உன் தீப்பெட்டி சைஸ் மூளையை பெரிதாக்க இந்த முறை நான் பிரயத்தனப்பட போவதில்லை..விஷயத்திற்கு வருகிறேன்..நான் ஆஸ்பத்திரியில் இருந்த கடைசி நாட்களில் நீ என்னைப்பார்க்க வந்திருந்தாய்.."அண்ணா அழாதேள்..எல்லாம் சரியாகிடும் ..தெம்பா எழுந்து வர போறேள்...பேசுனபடி நம்ம கமலத்துல அடுத்த வாரம் முதல் நீங்க எழுதறேள்..நாளைக்கு இஸ்ஸுல ஒரு பக்கம் பெருசா விளம்பரம் போடுறேன்..நீர் தமிழ் பீஷ்மன்"  அது இதுனு பெனாத்திட்டு போயிட்ட. ஆனா அடுத்த நாள் நர்ஸ் சொன்னா ..அந்த மாதிரி எதுவும் விளம்பரம் வரலேன்னு..நிம்மதியா சாகட்டும்னு சொல்லிருப்ப..பரவால்ல..ஆனா எழுதுறதா இருந்த அந்த  வார தொடருக்கு நான் கொடுத்த தலைப்பு நினைவு இருக்கா...கீழே இருக்கு படி..மாண்டு திரும்பியும் மாளாத என் ஞாபகத்தை மீண்டும் ஒரு முறை மெச்சு!!!"


             "பிரதி புதன் பேசலாம் "

                                                                                             










கருத்துகள்