பிரதி புதன் பேசலாம் -3

"சார்.."

"....."

நன்றாக  தூங்கி எழுந்துவிட்டிருந்தேன். மணி இத்தனைக்கும்  ஆறு தான் காட்டிக்கொண்டிருந்தது. "சார்" எதுவும் பேசுவது போலில்லை. பாலகுரு என்னை  'ரெங்கன்' ஆக்குவதற்கோ, என் புகைப்படத்தைப்போடுவதற்கோ ஆட்சேபனையேதும் தெரிவிக்கவில்லை. தமிழின் தலைசிறந்த வாரஇதழ் ஒன்றில், தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் எழுதிய ஒரு கட்டுரைக்கு மேல் என் புனைப்பெயரும் , என் முகமும் தெரியப்போகிறது. தவிர நிறைய ஐநூறு ரூபாய் திணிக்கப்பட்ட ஒரு வெள்ளைக்கவரும் "கமலத்திடம்" இருந்து கொடுக்கப்பட்டு விட்டது. எட்ஜ் வாங்கி ஃபோர் போகும்..சிக்ஸ் போகும் ..ஆனால் எனக்கு நூறே அடித்தது போல இருந்தது. கொஞ்சூண்டு தலை தூக்கும் சுய மரியாதையை நறுக்கென கொட்டி உள்ளே அமுக்கிவிட்டால் நான் நூறு சதவீதம் சந்தோசமாய் இருப்பதாய் சொல்லலாம்



"சார்.. நீங்க ஒரு நாள் "ரெக்க" கதை சொன்னீங்களே அது இப்போ தான் புரிஞ்சது...ஏதாவது பேசுங்க சார்..."

".........."


"தயவு செஞ்சு பாலா சார் கொடுத்த காசுல பாதிய ஏதாச்சு ஆசிரமத்துக்கு கொடு ,அது இதுனு பேசி என் சந்தோசத்துல ஸ்ப்ரே அடிச்சுராதீங்க..சென்றாயனுக்கு சம்பளம்..இன்டர்நெட் பில்லு....வாடகை போக எதுவும் மிஞ்சாது....கிட்டத்தட்ட நானும் அசிரமத்துக்கு வெளிய தான் நிக்குறேன்னு வைங்களேன் .."


"........."


அவர் எதுவும் பேசவில்லை. காலையிலெழுந்து காபி குடிக்காததைப் போல அசௌகர்யமாய் இருந்தது.சென்றாயன் அந்த நேரத்தில் சரியாய் என் மொபைலில் அழைத்தான். பல நாட்களாய் அவனின்  போனை எடுக்கவில்லை. எடுத்து சில விஷயங்களை அவனிடம் பகிர்வோம் என்று நினைத்த அந்த நொடியில் தலைவன் வெளியே வந்தார்.


"மட்டி..அவன்கிட்ட எதையாச்சும் சொன்ன ... நீ  பழையபடி சுடுகாட்டுப் பக்கம் சுத்த வேண்டியது தான் ..மொத தடவையா மூளைய  உபயோகப்படுத்தி  சொல்ல வேண்டியதை மட்டும்  சொல்லு ..நீ பாக்குற வேலைக்கு உனக்கு ஒரு அசிஸ்டென்ட் வேற .."

திட்டினாலும் அவர் பேசியது கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது. போனை எடுத்து சென்றாயனிடம் " சொல்லுடா.." வென்றேன்.


"ஜி ...என்னாச்சு ஒரு வாரமா பிடிக்க முடில..எல்லாம் ஓகே தான.."

"லைட்டா வைரல் ஃபீவர்  மாதிரி இருக்கு..கை..காலுலாம் வலி அதான் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க.."


"ஓ ..அப்பிடியா..ஜி..அந்த செல்லம்பட்டி மேட்டரு   ஃப ர்ஸ்ட்  கட் ரெடி ஆகிருச்சு..லிங்க் அனுப்புனேனே பாத்தீங்களா.."


"இல்லடா...அதை நீயே பாத்துக்கோ..சனிக்கிழமை அப்ளோடு பண்ணு..ஃபேஸ்புக்கில நம்ம க்ரூப்ல ஷேர் பண்ணி விட்ரு.."


"ஓகே ஜி..பாஸ்வேர்டு ..அதே தானே..மாத்தலையே "


நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே கேட்டான். எனக்கு சட்டென கோபம் வந்து பின்பு அதை அடக்கிக்கொண்டு "அதே தான்டா " என்றேன்.

"டேய் சென்று...இந்த மாச சேலரி ..அக்கௌண்ட்ல போட்டுட்டேன் செக் பண்ணிக்கோ.."

"ஜி .."


"சொல்றா"


"உங்களுக்கு எதுவும் கேன்சர்..கீன்சர்னு சொல்லிட்டாங்களா...மூனா ந்தேதியே காசு போடுறீங்க.."


"எரும ..வேலைய பாருடா .."




சிரித்துக்கொண்டே போனை வைத்தான். திடீரென கொஞ்சம் மனது டல்லாய் ஆனது. அடுப்பை அனைத்தவுடன் பொங்கி வந்த பால் புஸ்ஸென கீழிறங்குவது போல உற்சாகமெல்லாம் கீழிறங்கியது. இந்த மனமெனப்படும் குரங்கு எப்போது தாவிக்குதிக்கும் , எப்போது குழம்பித்தவிக்கும் என்பதற்கெல்லாம் வரைமுறை கிடையாது போல.

"தம்பி ...நேத்தே உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன் ..என்  எழுத்துக்களில்  கூட பத்தி பத்தியாய் சொல்லக்கூடியவற்றை  சில வரிகளில் சொல்லிவிடுவேன்...நீட்டிப்பு எனக்கு பிடிக்காத சம்பிரதாயங்களில் ஒன்று ..நீ 'என் இனிய எந்திரா ' படித்திருக்கிறாயா ?..'


அந்த "கிறாயா" காதில் விழுந்தவுடன் தான் ஏதோ கேட்கிறார் எனப்புரிந்தது. "இன்னொரு முறை சொல்லுங்க" சொல்ல மனமில்லாமல் , அவர் பேசியதை மீண்டுமொருமுறை ரீவைண்ட் செய்து "இல்லை" என்றேன்.


"பரவால்ல ..அந்த கதைல அம்பத்தாறு வயதானதற்கு பிறகு மனிதர்களை  வலியில்லாமல் நவீன முறையில்  அரசாங்கமே கொலை செய்யும்..பழையன கழிதல், உலகம் சுழல்வதற்கு ஆதாரம் ...ஆகையால் நான் வேகமாய் விடைபெற்றுவிடுவேன் ..வருத்தப்பட வேண்டாம் .."

"ஐயோ ..சார் ...இப்போ எனக்கு செட் ஆகிருச்சு .. எனக்கு நீங்க இந்த 'அலெக்ஸ்சா '..'சிரி ' மாதிரி..நீங்க பேசலேனா தான் லோன்லியா  

ஃ பீல்  ஆகுது .."

".............ம்ம்ம்..."


"சார் ..நா என்னமோ  அந்த பைசாவுக்கு ஆசைப்பட்டு சொல்றேன்னு நினைக்காதீங்க ..உண்மைலியே  ஒரு பாண்டு கிரியேட் ஆகிடுச்சு ..படையப்பா பாணில சொல்லனும்னா 'நீங்க ரொம்ப லக்கி ..எனக்கே உங்கள பிடிச்சிருக்கு '..." 


"தம்பி..சொல்றேன்னு தப்பா நினைக்காத ..இந்த மாதிரி தயவுசெஞ்சு பேசாத ..எவனோ நீ இந்த மாதிரி பேசுறப்பெல்லாம் சிரிச்சி உன்ன கெடுத்து வச்சிருக்கான்..நாளைக்கு இந்நேரம் நீ ஒரு எழுத்தாளன்..பொதுவா எழுத்தாளர்கள் பேச மாட்டாங்க..அதுலயும் இந்த மாதிரி சத்தியமா பேச மாட்டாங்க.."


அவர் சொன்னது சரியானு யோசித்து பார்க்கும் முன்பே "எழுத்தாளன்"கிற வார்த்தை என் காதுக்குள் எதிரொலித்தது. சன் செய்தியில்,"எழுத்தாளர் ரெங்கன் இந்த வருட  சாகித்ய அகாடெமி விருதுக்காக தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்" என ஒரு பட்டுச்சேலை பெண்மணி சொல்வது போல மனதில் காட்சி ஓடியது. மனக்குரங்கு மீண்டும் உற்சாக "மோடுக்கு" மாறியது.


டுத்த நாள் காலையென்பது கணக்கின் படி சில மணி நேரங்கள் ,ஆனால் எனக்கு அதை கடப்பது யுகம் போல இருந்தது.அவர் பெரிதாய் எதுவும் பேசவில்லை. அவருக்கென்ன தெரியும். கூட்டத்திலேயே வாழ்ந்து பழகிய ஒருத்தனுக்கு திடீரென மேடையில் ஏற்றி மாலை போட்டால்  அவனுக்கு சந்தோசத்தை விட பதட்டமே அதிகமாய் இருக்கும். அதுவும் யாருக்கோ போட வேண்டிய மாலை.
காலை பத்து மணி வாக்கில் டீக்கடைக்குப் போனேன். கமலத்தை தேடினேன். முன் வரிசையில் இருந்தது. அட்டையில் ஆர்யாவும் அவர் மனைவியும் வேஷ்டி சேலையில் இருக்கும் போட்டோ போட்டிருந்தார்கள். அந்தப்பெண்ணின் பெயர் பாத்திமாவா.. ஆயிஷாவா வென   யோசித்தேன். பிற்பாடு சூழ்நிலை உணர்ந்து "இப்போ இது ரொம்ப முக்கியம்.."மென கை விட்டேன்.காசு கொடுத்துவிட்டு ,தம்பதியை உள்ப்பக்கமாய் மடக்கி கமலத்தை கையகப்படுத்தி வீட்டுக்கு வந்தேன்.

சரியாய் நாலாம்பக்கத்தில் கட்டுரை இருந்தது. நான் நினைத்ததை விட போட்டோ பெரிதாய் போட்டிருந்தார்கள்.நான் கூட எங்கே ஆதார் அட்டையில் வருவது போல இருக்குமோ வென பயந்தேன்."என்னை"யே பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்சம் மீசை ட்ரிம் பண்ணியிருக்கிற போட்டோ கொடுத்திருக்கலாமோவென தோன்றியது. இதை எல்லோரும் படிப்பார்களா ? . கை லேசாய் நடுங்கியது.   எல்லோருமென்றால் எல்லோருமா? இந்த மனக்குரங்கு பழைய புண்களை ஏன் நோண்டுகிறது.

"கங்ராட்ஸ் பாஸ் ..."

"சொல்ல சொல்ல எழுதிட்டு ஸீன் போடுறானேனு ...கேலி பண்றீங்களா .."

"சே ..ச்சே "

"இல்ல  பரவால்ல ..எனக்கு பறக்கிற மாதிரி இருக்கு ..கடைசியா யாரு எப்ப என்ன பாராட்டுனாங்கன்னே ஞாபகம் இல்ல ..கோடிப்பேரு படிக்கிற ஒரு புத்தகத்துல  நான் எழுதற ...ம் ..அதாவது எழுதறதா வரது  என் கற்பனைக்கு அப்பாற்பட்ட 3டி கனவு .."

"கோடிப்பேரா ..இந்த பத்து வருசத்துல கமலம்  கண்டபடி பூத்திருக்கும் போல .."

"அரசியல் பேசாதீங்க .."

"குட் ஒன்"

பாலகுருவிடமிருந்து  போன்வந்தது . அவருக்கு "நூறு ஆயிசு" சொல்ல நினைத்து, அன்று முதல் எழுத்தாளர் தோத்திரத்தில் இணைந்ததால் தட்டையான குரலில் "ஹலோ.." என்றேன்.



"சுந்தர்..நேத்து சொல்ல மறந்துட்டேன்...தனியா ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஏதும் வச்சுக்காத...வாட்ஸாப் அது இதுல உளறி வைக்காத..என்னக்கேட்டா அத டெலிட் பண்ணிரு..பெர்சனல் ஈமெயிலுக்கு ஏதாவது மெயில் வந்தால் என்னை கேக்காம ரிப்ளை பண்ணாத.."

"இப்போ மூச்சா வருது..அதுக்காவது போலாமா" வென கேட்க நினைத்தேன்.பிற்பாடு அடுத்த வாரத்திற்கான வெள்ளைக்கவரும் ஐநூறு ரூபாய்  நோட்டுக்களும் ஞாபகம் வந்து என்னை அமைதியின் பக்கம் திருப்பியது. கமலத்தின் இன்டர்நெட் அட்மின் அக்கௌன்ட் லாகின் கேட்டேன். அதாவது "அவர்" கேட்டார். அதனால் இவர் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் என் லேப்டாப்பின் வழி உட்புகுந்தோம். கமலத்தை அந்த நொடியில் உலகம் முழுவதும் சுமார் பனிரெண்டாயிரம் பேர் இணையத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள்.

"டேமிட்...ஒரு நாளைக்கு மினிமம் ரெண்டு லட்சம் பேர படிக்க வைக்கலாம்..ஆப்ப பாரு ..பாழடைஞ்சு கெடக்கு... சப்ஸ்கிரிப்சன்  சார்ஜ கம்மி பண்ணலாம்..பாலாவுக்கு இது புரிய இன்னும் ரெண்டு ஜென்மம் ஆகலாம்..பட் ஹி இஸ் மேக்கிங் குட் மணி.." 

கொஞ்ச நேரத்தில்  'பிரதி புதன்' பக்கத்திற்கு வந்தோம். நிறைய பேர் "குட் ஒன் ..நைஸ் " சொல்லியிருந்தார்கள். அதுவரை பத்தாயிரம் பேர் படித்திருந்தார்கள்.ஆயிரம் தான் இருந்தாலும் எழுதியவன் நானல்லவா...அதாவது சொல்ல சொல்ல எழுதியவன். அறுபது கமெண்ட்டுகள்  இருந்தது ..ஸ்க்ரோல் செய்து இன்னும் கீழே போனேன் "இவரு பெரிய மயிரு .." ..."உங்க நோபல் பரிச எங்க வச்சிருக்கீங்க.."  போன்ற கமெண்ட்டுகள் இருந்தது. கோபத்தில் டைப் அடிக்க போனேன்.

"நோ..நோ..எழுதுற வரைக்கும் தான் அது நம்ம வார்த்த..அதுக்கப்புறம் அது பொது சொத்து..அதுக்கு பூஜை போட்டாலும்..ஒன்னுக்கு அடிச்சாலும் கண்டுக்க கூடாது...பிஹேவ் லைக்க ரைட்டர்.."

கொஞ்சம் அமைதியானேன். அன்றைய நாள் மிக அயற்சியாய் போய்க்கொண்டிருந்தது. தெரிந்தவர்கள் யாராவது என் படத்தை  பார்த்து  விட்டு போன் பண்ண மாட்டார்களா என ஏக்கமாயிருந்தது.
தமிழ் வாத்தியார் பரமசிவம்...வாட்ஸாப் க்ரூப்பில் இருக்கும் ஏகப்பட்ட நண்பர்கள்...ஊர்க்காரர்கள்..சொந்தக்காரர்கள்.. அந்த பனிரெண்டாயிரத்தில் இவர்கள் ஒருத்தர் கூடவாயில்லை .. எரிச்சலாய் இருந்தது..



நான் எதிர்பார்க்காத அந்தப்பாடல் அப்போது ஒலித்தது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு மொபைலில் நான் வைத்திருக்கும் ரிங் டோன் அது. நான்கு வருடங்களுக்கு பிறகு அந்த ஒலி என் போனில் இப்போது ஒலிக்கிறது. மொபைலின் பக்கத்தில் போய் அதன் திரையை பார்த்தேன். அவள் சிரித்தபடி தெரிந்தாள்...மொபைல் அடித்துக்கொண்டே இருந்தது. இதயம் வேகமாய் துடித்தது..

"ஓ..இது தான் உன் பாஸ்வேர்டா..."


PARANI CALLING..........







கருத்துகள்

ARUN RAMA BALAN இவ்வாறு கூறியுள்ளார்…
Nice da. Keep going