பிரதி புதன் பேசலாம் -4

மூளைக்குள் ஓராயிரம் காட்சிகள் தரத்தரவென தறிகெட்டு ஓடியது. பதட்டத்தையும், உதறலையும்  மட்டுப்படுத்தி போனையெடுத்து திரையை ஆள்காட்டி விரலால் வலது பக்கம் வளித்தேன்.இதயம் எந்த நேரமும் வெடித்து விடக்கூடிய அபாயம் இருந்தது. 

"ஹலோ.."

ஐயோ அதே குரல்.  ஒரு காலத்தில் இரவெல்லாம் பேசி  என்னையும்  என் போனையும் சூடாக்கும் அதே குரல். பதட்டத்தைத்தணிக்க சில யதார்த்தங்களை  நினைவு கூர்ந்தேன். அவளுக்கு கல்யாணமாகி நாலு வருடமாகிறது. அவளது பையன் ஸ்கூல் போய்க்-
 கொண்டிருப்பான்.  அவள் தம்பதி சகிதமாய் அடிக்கடி ஃபேஸ்புக்கில்  போடும்  போட்டோவை பார்க்கையில் , என்னைப்பார்த்து  "நல்ல வேல..தப்பிச்சேன்" னு சொல்லுவது போலிருக்கும்.

"ஹலோ..சுந்தர்.."

"ம்ம்...ஹலோ..யாரு.."

"ஓ நம்பர்லாம் டெலீட் பண்ணிட்டியா..குரலாவது ஞாபகம் இருக்கா.."



கொஞ்சம் சந்தோசமாய் இருந்தது. இருந்தாலும் அவள் கேலியாய் கேட்பது போலிருந்தது. அந்த மூதேவிக்கு என்னைப்பற்றி எல்லாமும் தெரிந்திருந்தது.இன்னும் பத்து நிமிடம் என்னிடம் பேசினால் என்னுடைய பி.பி எவ்வளவு..சுகர் எவ்வளவு என்று கூட சொல்லிவிடுவாள்.

"இல்லங்க மேடம் ..உங்களோட இடைவிடாத நிகழ்ச்சிநிரலுக்கு மத்தியில என்ன மாதிரி பரதேசிக்கெல்லாம் கால் பண்ணுவீங்களோனு நினைச்சேன்..தவிர நாலு வருஷமா காலே பண்ணாத காண்டாக்ட் போன்ல இருந்தா என்ன..இல்லாட்டி என்ன.."

சில வாய்ப்புகள் எப்போதாவது தான் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் எத்தனையோ நள்ளிரவில் அழுதுகொண்டே அடித்த சரக்குக்கும்,மறுநாள் காலைகளில் எடுத்த வாந்திக்கும் பரிகாரமாய் கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் அவள் அசராமல் விராட் கோலி போல நின்றாள்.

"பேசியாச்சா..எதுவும் பாக்கி இருக்கா..கோபத்தெல்லாம் இறக்கு.."

"ஆமா..உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்கலேல..அதான் கோபம்.."

"ஹாஹா..சுந்தர் ரொம்ப சந்தோசமா இருக்கு ...இப்போ தான் படிச்சேன்...Finally you are in a Place where you belong.. நிப்பாட்டாம ஏக் தம்ல படிச்சிட்டேன்...எனக்கென்னமோ படிக்கிறப்போ நீ பேசுற மாதிரியே இருந்தது.. "

கொஞ்சம் சிரிப்பாய் இருந்தது.இவளுக்கா  என்னைத்தெரியும்.  நானெதுவும் சொல்லாமல் இருந்தேன். தொடர்ந்தாள்.

"அவரும் படிச்சிட்டு ...சுஜாதா மாதிரி எழுதறார்னு சொன்னார் "

தூக்கி வாரிப்போட்டது. மேற்கொண்டு  "அவரும் " என சொன்ன அந்த நொடியில் மூளை சில ஃபேஸ்புக் போட்டோக்களை தேடி ,அந்த உருவத்தை கொண்டுவந்தது. யாரோ பெற்ற அந்த பிள்ளையின் மீது மனதிற்குள் சில கெட்ட வார்த்தைகளை பிரயோகித்தேன். அமைதியைத்தொடர்ந்தேன். அவள் விடுவதாயில்லை.

"அவருக்கு ஐ.டி வேல..ரொம்ப நல்ல டைப் ...படு பிசி..எப்பயும் ட்ராவெல்லயே தான் இருப்பார் .."

அப்போ பையனை என்ன பிளிப்கார்ட்ல வாங்குனீங்களானு கேட்க நினைத்தேன். அதற்குள் மூளை சூடாகி "அவள் புராணம் போதும்" என்றது. அவளை நிப்பாட்டினேன்.

"பரணி ..ஒரு நிமிஷம் ..எனக்கு இன்னொரு கால் வருது ..பேசிட்டு கூப்பிடட்டுமா .."

"ஓ..ஓகே ..நைஸ் டாக்கிங்  ட்டூ யூ .."


போனை ஓரமாய் வைத்துவிட்டு கட்டிலில் போய் விழுந்தேன். மனதிற்கு கவலைகள் மட்டும் அலுப்பதேயில்லை. இன்னமும் அவளுக்கு எப்போதும் அவளே பிரதானம். "நீ எப்படி இருக்க" னு கேக்க தோணல. இவ்வளவு நாளா  என்ன பண்ணினானு யோசிச்சிருப்பாளா தெரில. பத்து வார்த்த பேசுனா அதுல எட்டு வார்த்த அவளைப் பத்தி தான் இருக்கும். செல்ஃபிஸ் பிச்.
நாலு வருஷத்திற்கு முன் கடைசியாய்  என்ன பேசினாளென யோசித்தேன். அது  ஒரு சினிமா வசனம். "சுந்தர்...உனக்கு என்ன விட நல்ல பொண்ணு கிடைக்கும்". ஏன் அப்படி சொல்லியிருப்பாள்.

'ம்...'எனக்கு உன்ன விட நல்ல பையன் கிடைச்சுட்டான்னு' இன்டைரக்ட்டா சொல்லிருக்கா'

"சார்..இப்போ பேச சரியான நேரம் இல்ல..நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்.."



'தம்பி ..எனக்கு இந்த காதல் பிஸினஸூல  சுத்தமா அக்கறையில்லை ..அன்ட்ரொஜென்..ஈஸ்ட்ரோஜென் லாம் அடங்குனதுக்கப்றம்  அத்திவரதர பார்க்க பத்து மணி நேரம் லயன்ல நிப்பீங்க...வாழ்க்கைல கடைசி காலத்துல  'கடவுளே இன்னைக்கு நானே யாருக்கும் தொல்ல கொடுக்காம பாத்ரூம் போய்ட்டு வந்திரனும்னு தோணும்'. எழுதுன காதல் கவித..முத்தம் லாம் அப்போ ஞாபகம் வராது..சினிமால காட்றதெல்லாம் சுத்த ஹம்பக் நம்பாத ...நாம நெக்ஸ்ட் எபிசோட ஆரம்பிக்கலாம் '


விடாமல் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார். தவிர தனியாய் இருப்பதைகாட்டிலும் வேறேதும் வேலை செய்வது நல்லதென தோன்றியது. லேப்டாப்பைஎடுத்து தமிழில் டைப் செய்யும் கூகிள் ட்ரான்ஸ்லேட்டரை திறந்தேன். 

'தேட்ஸ் மை பாய்..'

"ம் " 

'அய்ன்  ரேண்ட்டின்   'Fountain Head' ல்  ஹோவர்ட் ரோர்க்  தான்  பிரதான பாத்திரம் . இது ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூனில்  வெளிவந்த நாவல் . ரோர்க் ஒரு ஆர்க்கிடெக்ட் ,உலகின் சம்பிரதாய விதிகளை மதிக்க மாட்டான். எந்த காம்ப்ரமைஸுகளும் செய்து கொள்ளாமல் தன் வேலையை செய்கிறவன். அவன் கட்டும் கட்டிடங்கள் , புத்தகங்களில் சொல்லப்பட்ட கட்டுமான விதிகளை மீறும். நிபுணர்கள்  அவனை  "கோமாளி " என சிரிப்பார்கள் . அவனை  மட்டம் தட்டி கீழிறக்கி  தொழில் செய்ய விடாமல் தொல்லை கொடுப்பார்கள். எதற்கும் கலங்காமல்  கட்டிடத்துறையில்  புரட்சி செய்யக் காத்திருப்பான். ரேண்ட் இந்த பாத்திரத்தை  அந்த காலகட்டத்தில் அமெரிக்க கட்டிடத்துறையில்  அதிர்வலைகளை ஏற்படுத்திய  ஃ பிராங்க்  லாயிடை மனதில்  வைத்து எழுதியிருப்பதாய் சொல்வார்கள்.  நாவலில் வரும் எல்லாப்பாத்திரமுமே  யாரோ பிரபலமானவர்களை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டதாய்  ஒரு  புரளி உண்டு. ரேண்ட் எதற்கும்  பதில் சொன்னதில்லை. படித்து முடித்து விட்டு புத்தகத்தை மூடியவுடன் தோன்றியது ஒன்று தான் . கதாப்பாத்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு களத்தை மட்டும் மாற்றினாலும் கதை அப்படியே ஸ்திரமாய் நிற்கும் . ஒரு நல்ல கதைக்கு இதுவே ஆணிவேர் . காலம் கடந்து நிற்கும் கதாபாத்திரங்கள். முப்பது வருடத்திற்கு முன்னால்  இந்த நாவல் படித்திருந்தால் என் பையனுக்கு  "ரோர்க் " என பெயர் வைத்திருப்பேன் . இப்போது சொன்னால் மாற்றிப்பானா தெரியவில்லை...'

'சார்..எழுதுறது நான்..அதாவது 'ரெங்கன்'...பிரம்மச்சாரி...ஆனா அப்படியே ஆண் பிள்ள பிறந்தாலும் கோர்க்..கீர்க் னு வைக்கப்போறதில்லை...பிரபாகரன்...வேலுத்தம்பி பிரபாகரன்.."

'ஓ ..நீனு நாம் தமிழர் கேங்கா..கோத்தப்பய  செய்ச்சிட்டாரு..போய் அங்க அவருக்கு ஒரு 'ஹாய்' சொல்லிட்டு வாங்களேன் ..'

'நீங்க அவாள் தான..தீர்ப்பு வந்திருச்சுல..போயி கோயில் கட்டுங்க..கோமியம் எத்தன லிட்டர் வேணும்.."

'ஹே..ஹோல்டான் டைகர்...பாலிடிக்ஸ் போதும் ..சரி அந்த லாஸ்ட் லயினை தூக்கிரு ..'

அவரிடம் மனதிலிருக்கும் அந்த விஷயத்தை சொல்லத்தீர்மானித்தேன். கேட்பதும் கேட்காததும் ரெண்டாவது. 

"சார் நானும் எழுதுறதுக்கு இன்புட் கொடுக்கலாம்னு நினைக்குறேன்..சும்மாவே பணம் வாங்குறது கில்ட்டியா இருக்கு.."

'ஓ ..ஹோட்டல்ல  ஆயிரத்து நாலு ரூவா பில்லு வந்தா ஒருத்தன் ஆயிரம் எடுப்பான்..பக்கத்துல இருக்கவன் நாலு ரூபாய வேகமா கொடுத்திட்டு வெளில வந்து "பில்ல ஷேர் பண்ணிக்கிட்டோம்" னு சொல்லுவானே..அது மாதிரியா... மொதல்ல பரணிக்கி ரெண்டு சுழி ன வா .மூனு சுழி  ணா  வான்னு  சொல்லு ..அப்புறம் வாங்குறேன் உன் இன்புட் '

"சார்..உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்..நீங்க ஒரு Intellectual..நீங்க நீங்களா எழுதாதீங்க..நான் எழுதறமாதிரி  எழுதுங்க..கமலத்துல மூனாவது பக்கத்தில அயன் ரேண்ட் பத்தி எழுதுனீங்கன்னு வைங்க..தெறிச்சு நடு பக்கத்துல படம் பாக்க ஓடிருவான்..."சுஜாதா" னு பேர் போட்டு கீழ ஏதாவது மளிகை லிஸ்ட் போட்டாக்கூட படிப்பாங்க..ஆனா நான்  அதாவது நம்ம...விக்ரம் லேண்டர் எங்க இருக்குன்னு எழுதினாக்கூட "போடா வெண்ண" னு சொல்லிருவானுங்க"

"யூ ஹவ் எ பாயிண்ட்.."






அதற்குள் போன் அடித்தது. பாலகுரு மறுபடி கூப்பிட்டார்.

"சுந்தர் எங்கிருக்க.."

"வீட்ல "

"பயப்படாம சொல்றத கேளு..போன வாரம் அந்த பொண்ணு ரோட் ஆக்சிடெண்ட்ல  இறந்ததுக்கு  கவர்ன்மென்ட்ட விமர்சனம் பண்ணி ஒரு பத்தி எழுதிருந்தேல்ல "

"நானா.."

"ஆமா..மிஸ்டர் ரெங்கன் "  .அவர் "ன்" னை அழுத்தி சொன்னார்.

"ம்"

"அதுக்கு  கவர்ன்மென்ட் கேஸ் ஃபைல் பண்ணிருக்காங்க..வேகமா கிளம்பி எங்கயாச்சும்  பிரெண்ட்டு வீட்டுக்கு போயிடு..பெயில் மூவ் பண்ணிட்டிருக்கோம்...ஒன் டே அட்ஜஸ்ட் பண்ணு .."


போனை வைத்து விட்டு ,என்ன செய்ய வேண்டுமென யோசித்துக்கொண்டிருந்தேன்.

'தம்பி ..நான் சொல்றத கேளு...அரெஸ்ட் ஆவோம்..ஜெயில்ல டிஸ்டராக்சன் இருக்காது..செகண்ட் எபிசோடு நல்லா பண்ணலாம்..' 


கருத்துகள்