பிரதி புதன் பேசலாம் -5

"அந்த நொடியில் அவளுக்கு அவளின் அப்பா தினமும் காலையில் நெற்றியில் கொடுக்கும் முத்தம் ஞாபகம் வந்திருக்கலாம் அல்லது தாங்கமுடியாத வலி எல்லாவற்றையும் கீழமுக்கி கருணையில்லாமல் அவளை இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். அந்தக்கொடிக்கம்பம் இரண்டு நொடி தள்ளி விழுந்திருந்தால் ஜெயஸ்ரீ இந்நேரம் யூடூபில் தான் மேற்படிப்புக்கு போகப்போகிற டொராண்டோ பற்றி பார்த்துக்கொண்டிருப்பாள். ஒரு லாரி தன்  மேலேறி தன்னை சிதைத்து உயிரைப்பறிக்கும் அளவுக்கு அவள் என்ன செய்தாள். மாதாமாதம் கொடுக்கிற சம்பளத்தில் வரி பிடித்துக்கொண்டார்கள். வரிசையில் நின்று ஆதார் கார்டு வாங்க  சொன்னார்கள். செய்தாள். லைசன்ஸ் வாங்கினாள். சாலை வரி கட்டினாள்.ஹெல்மெட் போட்டாள். அவள் வேறேதும் செய்திருக்க முடியாது. கழுவியபின் துடைக்கக் கூட வக்கில்லாத இந்த கட்சிக்கொடிகளை  ரோட்டின் நடுவில் வைக்காமல் இருந்திருக்கலாம். ரோடெல்லாம் விரவிக்கிடக்கும் பள்ளங்களில் அமைச்சர்களின் தலையிலிருக்கும் களிமண்களைப்போட்டு நொப்பியிருக்கலாம். குறிக்கோளில்லாமல் கட்டப்படும் பாலங்களை  நேரத்துக்கு கட்டி முடிந்திருக்கலாம். ஆக்கிரமிப்புகளை அகற்றும் நேர்மையும் ,துணிவும் ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்கலாம். ரிஸார்ட்டுகளில் ஆட்சியை தீர்மானிப்பவர்களையும், பரம்பரை பரம்பரையாய் கொள்ளை அடிப்பவர்களையும்  காரி துப்ப முடியாவிட்டாலும்   குறைந்த பட்சம் ஓட்டாவது போடாமல் நாம் இருந்திருக்கலாம். அந்த லாரி மட்டும் அவள் உயிரை பறிக்கவில்லை . நம் எல்லாருடைய மொத்த ஒழுங்கீனம் தான் அவளைக்கொன்றிருக்கிறது. செய்தியை படித்தவுடன் அரை மணி நேர கோபம், ரெண்டு நாள் அதன் தாக்கம், அதன் பின்  தல தளபதி சண்டை, டிவி சிறப்பு நிகழ்ச்சிகள், பேஸ்புக் கேலிகள்,  கிரிக்கெட் ..கடைசியாய் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய். அவர்களை மெரினாவில் புதைக்க ... நாம்  தினமும் சாவோம்."






இரண்டாவது முறையாய்  படித்துப்பார்த்துக்கொண்டேன். வடபழனி ஸ்டேஷனில் எனக்குத் தனியாய் ஒரு சேர் கொடுத்து உட்கார வைத்திருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் சினிமாவில் காட்டுவது போலில்லை. பெயிண்ட் புதிதாய் அடித்திருந்தார்கள். எல்லோரும் மரியாதையாய்  பேசினார்கள். அடிக்கடி "டீ" கொடுத்தார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் பேனாவின் நுனிக்கு துப்பாக்கியை விட வலு அதிகம் என எண்ணிக்கொண்டேன்.

"ஒரு டேஷும் கிடையாது..இந்நேரம் பாலா டிவிக்கு நியூஸ் கொடுத்திருப்பான்..  தமிழ்நாடு முழுக்க உன்னோட அந்த சுமாரான மூஞ்சி டிவியில் ஓடிட்டு இருக்கும்...தலை முடி கலஞ்சிருந்தாலும்  அத வச்சு மூனு மணி நேரம் கிழிப்பானுங்க.."


அவ்வளவு சத்தத்திலும் இவர் கனீரென காதுக்குள் ஒளித்தார்.

"சார் இப்போலாம் மைண்ட் வாய்ஸுக்கே பதில் பேசுறீங்க...விஷயம் வாஸ்தவம்னாலும்  எழுத்துல கொஞ்சம் வன்முறை ஒரு பாயிண்ட் கூடின மாதிரி இருக்குல்ல..நீங்களே யோசிச்சு பாருங்க.."

"இருக்கலாம்..நானே எழுதிருந்தா இப்படி எழுதியிருக்க மாட்டேனோ என்னவோ..ஆனா கண்டிப்பா தோணிருக்கும்..இப்போ நீ தான..அதான் ஃப்ரீ  ஹிட்ல அடிக்கிற மாதிரி இஷ்டத்துக்கு ஆடறேன்..தேங்க்ஸ்  டூ ரெங்கன்..


எனக்கு பெரிதாய் எதுவும் பயமாய் இல்லை. நேற்று வரை பரதேசியாய் சுத்திக்கொண்டிருந்தேன், இன்று என் போட்டோவை காட்டினால் நிறைய பேர் என்  பெயர் சொல்வார்கள். மக்களை கவனிக்க வைக்க ஒரு பப்ளிசிட்டி தேவைப்படுகிறது. இனிமேல் ரெண்டு நாளுக்கு ஒருக்க ஷேவ் செய்யனும்..வேண்டாம்..தாடி வச்சுக்கிட்டு..கண்டபடி முடிய வச்சுக்கிட்டாத்தான் ஒரு "போராளி" லுக் வரும். சென்ராயனை என் பெயரில் ஒரு ஃபேஸ்புக் க்ரூப் ஆரம்பிக்க சொல்லணும். மனம் காட்டாறு போல ஓடிக்கொண்டிருந்தது. 


இன்ஸ்பெக்டர் தன் மொபைலை இடது கையில் பிடித்துக்கொண்டு அதன் வாயை பொத்தியவாறே என்னை நோக்கி வந்தார். அவ்வளவு உயரம் இல்லை.ஷூவின் நிறத்தை கணிக்க முடியாத படி அழுக்காய் இருந்தது. சட்டையில் நாலாவது பட்டன் திறந்திருந்தது ,அதன் வழி வெள்ளைப்பனியன் தெரிந்தது."சார் ..பேசுறார்.." என்றார்.

"எந்த சார்ங்க.."

"ஸ்டேட் அட்டர்னி.."

"..ன்னாது..மார்க் ஆன்டனியா..அது யாரு.."

"சார் விளையாடாதீங்க..அரசு வக்கீல்..."

முதலில் சொன்னதே கேட்டது தான். எப்படியும் பாலா சார் வந்து விடுவார் என்று தோணியதாலோ என்னவோ கொஞ்சம் திண்ணக்கமாய் இருந்தேன். நானேதும் சொல்லாததால் இன்ஸ்பெக்டர் மீண்டும் பேசினார். 

"கோபத்துல இருக்கீங்க புரியுது.. அவர்ட்ட பேசி சால்வ் ஆவுங்க..சார் பக்கவா எல்லா சைடுக்கும் தோதா முடிப்பார்..பேசுங்க" 

"வாங்காதே..ஏதோ சிக்கல் இருக்கு...பாலாவும்  ..என் வக்கீலும் வந்தப்புறம் பேசுறேன்ன்னு சொல்லு.." 
  
அதற்குள் போனை கையில் திணித்தார். ஸ்டேட் அட்டார்னி சுப்ரமணிக்கு ஒரு பீங்கான்  வாய்ஸ்.  கவுதம் மேனன் பேசுவது போல இருந்தது. பாதி இங்கிலிஷ் பாதி தமிழ். தமிழும் இங்கிலிஷ் போலத்தான்  இருந்தது.




"மார்னிங்  ர..ரங்கன்.. உங்க பேரு வேற ஏதோ சொன்னாங்க ..ஐ கம்ப்ளீட்லி பஃர்காட்..  லெட்ஸ்  டாக் அபௌட்  த இஸ்ஸு இன் ஹேண்ட்..படிச்சேன்..உங்களுக்கே தெரியும் நீங்க அவுட் ஆஃப் லைன்ல எழுதிட்டீங்க..செடிஸன் லா 124 -ஏ  வ புடிச்சோம்னா உங்கள ஒன் இயர் வரைக்கும் உள்ள வைக்கலாம்...அஃரெஸ்ஸிவ் லாங்க்வேஜ்..Reputation ஐ டேமேஜ்  பண்ணினதுனு ..பெயிலே கொடுக்க முடியாத படி பண்ணலாம் .. இது ட்ரயலுக்கு போச்சுன்னா உங்களுக்கு தான் தலைவலி...ஆர் யூ வித் மி.."

"ஸோ.."

"ஒரு மன்னிப்பு கடிதம் முதல் பக்கத்துல போடச்சொல்லுங்க.."உணர்வுகளின் உந்துதலில்..." அப்படி..இப்படினு இன்டைரக்ட்டா மன்னிப்புக்கேட்டாலும் ஓகே தான்..இனி எந்த எபிசோடுலயும் கவர்மெண்ட்ட டார்கெட் பண்ணக்கூடாது...அவுட் ஆஃப் கோர்ட் முடிச்சிக்கலாம்..ஏன்னா இத பாத்திட்டு எல்லாதுக்கும் கொம்பு முளைச்சிடும்னு பெரியவர் யோசிக்கிறார்.."

"பேசாதே..பாலா வரட்டும்னு சொல்லு..இட்ஸ் எ  ட்ராப் "

"மன்னிக்கணும் உங்களுக்கு  இந்த வாரத்துலயே ஹை கோர்ட்ல இது மூனாவது கேசு தானே சுப்பு சார்.. ஸ்பெசல் பெஞ்ச்..ஜட்ஜ் ..யாருக்குமே உங்கள பிடிக்காது...ஊரே அந்த விஷயத்துல கோபமா இருக்கு..குற்றவாளிய பிடிக்க பத்து நாளாச்சு..எதிர்த்து எழுதுனவன உடனே பிடிச்சாச்சு...எனக்குத்தெரிஞ்சு உங்களுக்கு ஜட்ஜ் ஸ்பாட்லயே அவார்டு கொடுத்தாலும் கொடுப்பாரு ..குடும்பத்தோடு வந்துருங்க.."

போன் கட்டானது.  சுப்பிரமணிக்கு கண்டிப்பாய் என்னையேதும் செய்ய முடியாதென்று தெரியும். கமலம் ஏழு பத்திரிகைகள், ரெண்டு டி.வி சேனல்  என தமிழத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. பாலா இந்நேரம் கபில் சிபல், அபிஷேக் சிங்க்வி யுடன் பேசியிருப்பார். சுப்பிரமணி கவுதம் மேனனென்றால் , பாலா சாரிடம் கிறிஸ்டோபர் நோலன்கள் இருந்தார்கள்.

"புத்திசாலித்தனமா பேசினதா நினைக்காத..உள்ள போட்டு கக்கத்துல மிதிச்சா என்ன பண்ணுவ..மிஷன்ல இருந்து டீவியேட் ஆகாத...எழுதுறது நம்ம வேலை..அதுல எதுவும் தடைகள் வந்ததுனா..அதை பாத்துக்கிறது பாலா வேலை..நாம அவரவர் வேலய பாப்போம் .."

கொட்டாவி வருவது போல இருந்தது. ஆர்மபித்தால் நிப்பாட்ட மாட்டார். இதுக்கு ஒரு ம்யூட் பட்டன் இல்லாமல் போய்விட்டது.

"இரத்தம் ஒரே நிறம் எழுதறப்போ..ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காரங்க பிரச்சனை பண்றாங்க..நான் ஆவணங்கள வச்சு எழுதுறேன்னு சொல்றேன் ..யாரும் கேட்கத்தயாரால்ல ...குமுதம் ஆபிச சூறையாடுறாங்க..கடைசி ஈகோ பாக்காம சில விஷயங்கள விட்டுக்கொடுத்தேன்..அதுனால தான் சிப்பாய் கலகத்த பத்தி அந்த நாவல்ல பதிவு செய்ய முடிஞ்சது.."   


அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் பாலகுரு சார்  இரண்டு மூன்று  நபர்களுடன் வந்தார். இன்ஸ்பெக்டருடன் பேசினார்கள். ஏதேதோ ஆவணங்களை நீட்டினார்கள்,பார்த்தார்கள். பாலகுரு என்னைப்பார்த்து கையாட்டினார். நான் வேகமாய் அவர் பக்கத்தில் போனேன். இரண்டு பேப்பர்களில் கையெழுத்து போடச்சொன்னார்கள், படித்து பார்த்தேன். அதற்குள் பாலகுரு கையை அழுத்தினார். கையெழுத்துப்போட்டேன்.   சார் கூட வந்த வக்கீல்களில் ஒருத்தர் என்னைப்பார்த்து "ஸ்டேஷன்ல யாரும் FOUL லாங்குவேஜ் பேசுனாங்களா.." என்றார்.

தலையாட்டினேன். "தலையாட்டுனா..மேக் எ ஸ்டேட்மென்ட் ப்ளீஸ்"

"இல்ல.."

"அடிச்சாங்களா.."

"இல்ல..சூடா டீ கொடுத்தாங்க ரெண்டு தடவ.."

அவர் திரும்பி பாலா சாரை பார்த்தார்.  அவர் என்னை முறைத்தார். ஸ்டேஷனிலிருந்து  கொஞ்ச நேரத்தில் வெளியே வந்தோம். நிறைய பிரஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். என்னை வெளியே நிற்கும் மீடியாவிடம்  பேசக்கூடாதென்றிருந்தார்கள். காரில் ஏறும் முன் அவர்களை பார்த்து ஒரு முறை கையசைத்தேன். இனி இந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ.  போனை எடுத்துப்பார்த்தேன். நிறைய மிஸ்டு கால்கள் இருந்தது . சென்றாயன் வாட்ஸாப்பில் ஏதோ அனுப்பியிருந்தான்.

"ஜி..ஒரு வாரம்  என்கூட இல்லேன்னதும் உங்க வாழ்க்கைல எவ்வளவு நல்லது நடந்திருச்சுனு பாருங்க..சாயங்காலம் வந்து பாக்குறேன்..அதுக்குள்ள ப்ரைம் மினிஸ்டரா ஆகித்தொலைஞ்சிறாதீங்க .."

சிரித்தேன்.வீடு வந்தது. எனக்குத்தலை லேசாய் வலித்தது.காரிலிருந்து  இறங்கி நடந்து மாடிப்படி ஏறினேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் என்னை கைகாட்டி பேசிக்கொண்டிருந்தார்கள். பாக்கெட்டில் சாவியை தேடிய போது தான் கவனித்தேன், கதவு திறந்திருந்தது. உள்ளே பரணி உட்காந்திருந்தாள். இன்னமும் சாவியை வைத்திருக்கிறாள். பார்த்து சிரித்தாள்.கன்னம் கொஞ்சம் உப்பியிருந்தாலும் இந்த நாலு வருடங்களில் பெரிய மாற்றம் தெரியவில்லை. நான் நேராய் சேரில் போய் உட்கார்ந்தேன். கொஞ்சம் கிளர்ச்சியாய் இருந்தது. நாங்கள் சேர்ந்திருந்த சில அந்தரங்க நிமிடங்கள் ஞாபகம்  வந்தது.    தலையை அசைத்து வேகமாய் அதை போக்கினேன். அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். 



"மாத்திரை சாப்பிடுறாயா.."

"லேசாத்தான் தல வலிக்குது..மாத்திரைலாம் வேணாம்.."

அவள்  என்னையே ஆழமாய் பார்த்தாள், கண்கள் கலங்கியிருந்தது.

"தலை வலி மாத்திரைய சொல்லல சுந்தர்...உன்ன டி.வில 
பார்த்துட்டு வெங்கட் சார் கூப்பிட்டார்..நீ ரெண்டு வருஷமா ஆஸ்பிட்டல் போலையாமே.. டேபிளட்டாவது சாப்பிடுறயா.."

எனக்குத்தலை இப்போது சுற்றுவது போல இருந்தது. முகமெல்லாம் வேர்த்தது. அவள் பக்கத்தில் வந்தாள். அதே வாசனை. தலையை வருடினாள்.

"இன்னமும் குரல் கேக்குதா.."

இப்போது கண்கள் சொருகத்தொடங்கியது.

"அவ கிட்ட பேசாத...யூ வேர் ரைட்..ஷி ஐஸ் எ செல்ஃபிஸ் பிட்ச்.."   


கருத்துகள்