பிரதி புதன் பேசலாம் -6

யக்கமெனப்படுவது ஒரு உன்னத நிலை. நம் உடலின் மேல் மூளை செலுத்தும் ஆதிக்கம் விடுவிக்கப்படும். புவியீர்ப்பு விசையையெல்லாம் புறந்தள்ளி, நம் மனது ஒரு முடிவிலியை நோக்கிப்பயணம் செய்யும். கால்கள் இருப்பதாய் எனக்கு உணர்வில்லை.  பரணி ஏதோ சொல்லி கத்துகிறாள். எனக்கேதும் சரியாய் கேட்கவில்லை. "சுந்....பார்த்  ..கீ .."  ஏதோ கிணற்றுக்கடியிலிருந்து  பேசுவது போல இருந்தது.  நிறைய அழுக்கடைந்த ஃபேன், சுவற்றின் வலது ஓரத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சாமி படம் என என் வீட்டில் நானே கவனித்து பார்க்காதவையெல்லாம் கண்ணுக்குத்தெரிந்தது.  அதற்கப்புறம் ஓரிரு நொடியில் முழுமையாய்  மயங்கி கீழே விழுந்தேன். ஆனால் "விழு" விற்கும்  "ந்தேன்" னிற்கும்  நடுவே பழைய காட்சிகள் எனக்குள் ஓடியது. 

                           --------------------------------------------------- 




வெங்கடேசன் என சுவற்றின் ஓரத்தில் ஒரு  போர்ட்டில்  எழுதியிருந்தது. கீழே " M.B.B.S  M.D (Psychiatry)" என சின்ன எழுத்தில் போடப்பட்டிருந்தது. நானும் பரணியும் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம். முதல் வரிசையில் ஒரு பதினாலுவயது பையன் குடும்பத்துடன் உட்கார்ந்திருந்தான். தலையில் கட்டுப்போட்டிருந்தான். லேசாய் திரும்பி என்னைப்பார்த்து சிரித்தான். நான் திரும்பிக்கொண்டேன். எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எல்லோரும் என்னையே பார்த்து சிரிப்பது போல இருந்தது. நான் பார்த்தவுடன் சிரிப்பை மறைத்துக்கொள்கிறார்கள்.
பரணி என் கையை அழுத்தி  "என்ன?" என்றாள். இல்லையென தலையசைத்தேன். என்னை சந்தேகமாய் பார்த்தாள். வாரத்துக்கு ஒரு முறை இந்த ஏ.சி போட்ட நரகத்துக்கு நான் வரக்காரணம் இவள் தான். ஒரு பெல் சத்தம் கேட்டது.  ரிசப்ஷனில் இருந்த பெண்  என்னைப் பார்த்து  "உள்ளே" என்பது போல விரலைக்காட்டினாள். அவள் சிரிப்பது போல இருந்தது ,திரும்ப பார்த்தேன். சிரிக்கவில்லை. நானும்  பரணியும்  உள்ளே போனோம் .

"சுந்தர்..அதற்குள்ளாட்டியும் ஒரு வாரம் போயிட்டதா.."

வெங்கட் சாருக்கு தாடி மட்டும் வெள்ளையாய் இருந்தது. சேரில் அவர் முன் உட்கார்ந்தோம்.அவர் டிகிரியையெல்லாம் காட்டத்தேவையில்லை, முகத்தை வைத்தே டாக்டர் என சொல்லிவிடலாம். நம் கண்களுக்குள் ஊடுருவுவது போல பார்ப்பார். எப்போதும் போல யதார்த்தமாய் அம்பை எய்தார்.

" கடைசியா எத்தினி  நாளா ப்ரோலாக்சின் சாப்பிடல.. ரெண்டு மூனு நாளா தூங்கல போலையே.."  

சொல்லிவிட்டு என்னையே பார்த்தார். அந்த கண்களை ஏமாற்ற முடியாது. முழியாங்கண்கள்.

"இல்ல சார்..வாமிட் வர மாதிரி இருந்தது..அதான் ரெண்டு நாள் மட்டும் ..."

பரணி என்னை அல்கொய்தா தீவிரவாதி போல முறைத்துப்பார்த்தாள். வெளியே போனபின் ஒரு மணி நேரம் பேசப்போகிறாள். இடையிடையே அழுவாள். அதுக்கு கசந்து கிடக்கும் ப்ரோலாக்சின் எவ்வளவோ பரவாயில்லை.

"சுந்தர்...நீ ஸ்கூல்  பையன் இல்லை..ஸ்கிட்ஸோஃபிர்னியா  பற்றி உன்கிட்ட நூறு தடவை சொல்லியாச்சு...அதுவும் மோசமான மெடிக்கல் டிஸிப்ளினும் சேர்ந்தா டெட்லி காம்பினேஷன்... "

வாத்தியார் திட்டும்போது ஸ்கூல் பையன் செய்வது போல குனிந்து கொண்டேன். பரணியின் கண்கள் அழுவதற்கு வார்ம் அப் ஆகிக்கொண்டிருந்தன. 

"சார்..இனிமே கரெக்ட்டா..."

சொல்லி முடிப்பதற்குள் "நம்ம ரொட்டீனுக்கு போவோம்.."

சரியென தலையாட்டினேன். "ரொட்டீன்"  என்றால் பிரச்சனையென சொல்லப்படுகிற விஷயத்திலிருந்து நான்  பேசத்தொடங்க வேண்டும்..இடையிடையே குறுக்கிட்டு வெங்கட் சார் பேசுவார். பேச பேசத்தான் எது உண்மை எது ஆடிட்டரி ஹெல்லோசினேஷன் என புரியவருமாம்.  எனக்கு மிகவும் சிரமம் கொடுக்கிற முப்பது நிமிடங்கள் அவை. வெங்கட் சார் என் மூளைக்குள் இறங்கி  சிவன் போல உடுக்கை அடித்து ருத்ர தாண்டவம் ஆடுவார். நான் ஆரம்பித்தேன்.



"வேர்ல்டு கப் ஜெயிச்ச  அன்னைக்கு  நைட்ல இருந்து தான் என் கூட பேச ஆரம்பிச்சார்.."

"குரல் கேட்க ஆரம்பிச்சது.."

"ம்..குரல் கேட்க ஆரம்பிச்சது...தோணி தான் அடுத்து வருவான்னு சொன்னார்..அப்படியே நடந்துச்சு..ஒரு அசரிரீ மாதிரி அப்போ தான் பேசத்தொடங்கினார்..நைட் தான் பேசுவார்...என்னால உறுதியா சொல்ல முடியும் அது சுஜாதா சார் தான்.."

"அதெப்படி சொல்றீங்க.."

"குரல்ல விடுங்க..பேசுற விஷயம் கேளுங்க..சயின்ஸ்..புத்தகங்கள் ..பத்திரிக்கை..அரசியல்..உளவியல்.."

"ஸ்லோ..ஸ்லோ..அவர எப்போலிருந்து இருந்து தெரியும்...ஐ மீன் எப்போலிருந்து படிச்சே.. " 

அதுவரை எல்லாம் யோசித்து பேசிக்கொண்டிருந்தேன். அந்த நொடி என் நாக்கும் ,மூளையும் சுதந்திரம் பெற்று சுயேட்சையாய் ஆகின.வெங்கட் சாரை கண்ணுக்கு நேராய் பார்த்தேன். அவருக்குத்தெரியும் அப்போது வாடி வாசல் திறக்கப்பட்டு விட்டதென்று. 

" 'கரையெல்லாம் செண்பகப்பூ' தான் முதல்ல படிச்சேன்..அப்போ எனக்கு பதினேழு வயசு..ஜிவ்வுனு இருந்துச்சு நேரேஷன்..ஏதோ நம்ம கண்ணு முன்னாடியே நடக்குற மாதிரி இருக்கும்...புக்க கீழ வைக்க முடில..அப்பிடியே என் இனிய இயந்திரா...கொலையுதிர் காலம்..பிரிவோம் சிந்திப்போம்..மீண்டும் ஜூனோ.. சொல்லிட்டே போகலாம் "

உதடு துடித்தது. நெஞ்சம் பட படவென இருந்தது. 

"லைப்ரரில இருந்து ரெண்டு புக்க எடுத்துட்டு வந்து வச்சுக்கிட்டா போதும் ,அந்த ஒரு நாள் எப்படி போகும்னே தெரியாது..சில நேரம் எப்படி ஒரு மனுஷ மூளை இப்படி யோசிக்க முடியுதுனு வியப்பா இருக்கும்.. "

"அவரோட புக்ஸ்  கிட்டத்தட்ட எல்லாம் படிச்சாச்சுல்ல.."

"ம்ம்.."

ஒரு பேப்பரை கையில் எடுத்து திருப்பி, எதையோ தேடினார்.பரணியையும் ஒரு முறை பார்த்துக்கொண்டார்.

" 'ஏன் எதற்கு எப்படி'ல ஒரு கேள்வி சொல்றேன்..ஞாபகம் வருதா பார்..'திருக்குறளில் காமத்துப்பால் பகுதியை பத்தாவதுக்கு மேலாவது பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே?'..இதுக்கு அவர் சொன்ன பதில் ஞாபகம் இருக்கா.. " 
 
சிரித்தேன். அவர் சொன்ன பதிலை நினைக்கையில் சிரிப்பு வந்தது. சொன்னேன்.

"சேர்க்கலாம் தான் . ஆனால்  'விளக்கற்றம் பார்க்கும் இருளே போல் ,கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு' போன்ற குறள்களை சொல்லிக்கொடுக்க டீச்சர் என்ன செய்வார்?..விளக்கை அனைத்து விட்டு இருளுக்கு காத்திருப்பது போல ..கணவனின் அணைப்புக்கு காத்திருக்கிறது பசலை..என்றால் வகுப்பு  சற்று டென்ஷன் ஆகிவிடாதா?.."

அவரும் சிரித்தார். கண்ணாடியை சுழற்றி டேபிள் மேலே வைத்தார்.

"சுந்தர்...இப்போ சிலது  யோசிப்போம்..உனக்கு கேக்குற சுஜாதா  சொல்ற விஷயம் ஏதும் உனக்கு ஏற்கனவே தெரியாததா இருக்கா...  உதாரணமா நீ அவர் சொன்னதா சொன்ன கர்னல் கதாபத்திரமும்..ஒன் ஹண்ட்ரேடு இயர்ஸ் ஆஃப் ஸால்டிடூட் புத்தகமும்..உனக்கு ஏற்கனவே பரிட்சயம் ஆனவை..உனக்கு தெரிந்தவையை  தான் அந்த குரல் உனக்கு சொல்லுது..இன் அதர் வேர்ட்ஸ் அந்த குரல் உன்னோடது...வீட்ல பெரியவுங்க யாரும் இல்லை..சின்ன வயசுலயே நிறைய சோகம்..உனக்கு ஒரு ஆதர்ச நாயகன் கிடைக்கிறார்..அவரே உன்னோட வாழ்க்கையோட மையப்புள்ளியா நினைக்கிற..அவர் இல்லாதத உன்னால ஏத்துக்க  முடில..நிறைய தனிமை..சோகம் .. தூக்கமின்மை..கிளாசிக் கேஸ் ஆஃப் ஸ்கிட்ஸோஃபிர்னியா..சிலருக்கு உருவம் தெரியும்..உனக்குக்குரல்...ஜஸ்ட் மேக் பீஸ் வித் ஹிஸ் ஆப்சென்ஸ் "



அந்த நொடியில் வெங்கட் சாரை தலையில் நாலு குத்து விட்டு, அண்டர்டேக்கர் தூக்கிப்போடுவது போல தூக்கிப்போட வேண்டும் போல இருந்தது. அதற்கு மேல் எதுவும் பேச எனக்குத் தோன்றவில்லை.நல்லவேளை அதை  சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன். சுஜாதா சீரியஸாய் ஆஸ்பத்திரியில் இருந்த போது  அவரை பார்க்க ஒரு வாரம் லீவ் போட்டேன். வாசலிலேயே நின்று கொள்வேன். உள்ளே விட மாட்டார்கள் .கடைசியாய் ஐ.சி.யூ வில் பார்த்துக்கொள்ளும் ஒரு நர்ஸ் கிடைத்தாள். அவள் தினமும் அவரைப்பற்றி சொல்லுவாள். நான் கொடுக்கும் பிரசாதங்களை தலை மாட்டில் வைக்கச்சொல்லுவேன். டெய்லி அவர் புக்ல சொன்ன ஆழ்வார் பாசுரம் கூட சொல்லுவேன்..ம்ஹும்..ஒன்னும் காப்பாத்தல..பெசன்ட் நகர் சுடுகாடு வரைக்கும் போனேன்..தொண்டையெல்லாம் அடைக்குது..பைக்க எடுக்குறப்பவே கொஞ்சம் வெயிட்டா இருந்துச்சு..யாரோ பின்னாடி உட்கார்ந்த மாதிரி தான் இருந்தது.. அப்புறம் ஒரு வருஷம் இடையிடையே பேசுற மாதிரி கேக்கும்..நான் பெருசா எடுத்துக்கலை. எல்லாவற்றையும் சொல்லியிருந்தால் வெங்கட் சாரும் ,பரணியும் எனக்கு பச்சை சட்டை கொடுத்து பாண்டி மடத்தில் சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் ஒன்று நிஜம் அவர் இறந்த அந்த நொடியில் என் உடலில் ஒரு அதிர்விருந்தது..யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்கு கவலையில்லை..


"சுந்தர்..இன்னைக்கு போதும்..மாத்திரை டோஸ் விடக்கூடாது..ஐ சீ சம் இம்ப்ரரூவ்மென்ட்..இங்க சென்னைல ஸ்கிட்ஸோஃபிர்னியா காரங்களுக்கு ஒரு கவுன்சலிங் சென்டர் இருக்கு...செயின்ட் ஆண்டனிஸ் சர்ச்சுல ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலமும் நடக்கும் ..ஃப்ரீ தான்... அதுல குணமானவங்க கூட வந்து லெக்ச்சர் தராங்களாம்..பிரைவசி  இருக்காம்..நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க..நான் ஸ்டிபனுக்கு சொல்லிடுறேன்.."

கையில் ஒரு கார்டை கொடுத்தார். வெளியே வந்தோம். எனக்கு விடுதலை அடைந்தது போல இருந்தது. இருந்தும் முகத்தை சோகமாய் வைத்துக்கொண்டேன். பரணி என்னை பார்த்து விட்டு துப்பட்டாவின் நுனியை கையில் வைத்து சுத்திக்கொண்டே நடந்து வந்தாள். எந்த நேரமும் தாக்குதல் வரலாமென காத்திருந்தேன். லிஃப்டில் ஏறினோம். எண் பூஜ்யத்தை  அழுத்தினேன். கதவு மூடுவதற்கும்  பரணி என்னைக்கட்டிபிடிப்பதற்கும்  சரியாய் இருந்தது. அவளின் கண்களும் பருக்களும் மிகப்பக்கத்தில் இருந்தது. ஒரே நொடியில் உடலின் அத்தனை நரம்புகளும் "ப்ரெசென்ட் சார்" சொன்னது. மேக்சி பெர்ஃப்யூம் வாடை என்னை கிறங்கடித்தது.   இவள் எப்போது அழுவாள்..எப்போது அணைப்பாள் என்பது என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது. ஏற்கனவே வேகமாய் துடித்துக்கொண்டிருந்த இதயம் சில இடி பாடுகளால்  இன்னும் வேகம் பிடித்தது. பக்கத்தில் வந்து  உதட்டில் முத்தமிட்டாள்.  லிஃப்ட்  சத்தமிட்டது. சட்டென இருவரும் தனி தனியாய் பிரிந்து நின்றோம். தரைத்தளம் வந்து விட்டது.  ஆஸ்பத்திரி  இன்னும் பெரிய பில்டிங்கில் இருந்திருக்கலாம் என தோன்றியது.

பைக்கில் பின்னால் உட்காருகையில் பரணி "சுந்தர்...மறக்காம இந்த சனிக்கிழமை கவுன்சிலிங் போ..ப்ளீஸ் எனக்காக.." என்றாள். அப்புறமும் நான் போகவில்லையென்றால் ஆதாம் என் கனவில் வந்து காரி துப்பியிருப்பார்.

                       ******************************



ர்ச் மிகவும் பழைய கட்டிடமாய் இருந்தது. வெங்கட் சார் கொடுத்த கார்டை காண்பித்தேன். உள்ளே விட்டார்கள்.வாசலில் ஒரு குல்லா கொடுத்தார்கள். அதை போட்டுக்கொண்டால் கண்ணைத்தவிர வேறேதும் முகத்தில் தெரியவில்லை. பிரைவசி போல என எண்ணிக்கொண்டேன்.மொத்தமாய் ஒரு இருபது பேர் வந்திருப்போம். ஸ்டீபன்  இளமையாய் இருந்தார். கையில் ஜெப மாலையும் பைபிளும்  வைத்திருந்தார். வட்டமாய் சேர்கள் போடப்பட்டு அதில் உட்கார்ந்திருந்தோம். ஸ்டீபன்  கையில் வைத்திருந்த மைக்கில் பேசத்தொடங்கினார். 

"ஸ்தோத்திரம் ஆண்டவரே..ஸ்தோத்திரம்..இறைவனின் ஜெபப்பாடலுடன் தொடங்குவோம்..."

ஸ்டீபனுடன் சேர்ந்து சில குல்லா போட்டவர்களும்  இயேசுவை துதித்து பாடினர். மதம் மாறினால் உங்களின் அத்துணை பிரச்சனைகளும் போய்விடும் என்று சொல்லிவிடுவார்களோ என பயந்தேன்.

"இறைவனின் இருப்பிடத்தில் நாமெல்லாம் பிள்ளைகளே..நோயாளிகள் இல்லை..நீங்கள் ஒவ்வொருவரும்  அதீத திறமைசாலிகள்..நல்ல கற்பனையாளனுக்கே காட்சிகள் புலப்படும் ...மென்மையான மனமே எளிதில் காயம் பெரும்..நீங்கள் ஒவ்வொருவரும் ரத்தினங்கள்.."

உண்மையோ பொய்யோ "ஒன்னும் பிரச்சனையில்லை" என யாராவது சொல்லவேண்டும் என மனம் ஏங்கித்தவிக்கிறது. மைக் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டு அவரவர் கதைகளைக்கூறினார்கள். ஒருத்தர் தன்னை சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பு கொள்ள முயல்வது போல இருந்ததாக கூறினார். ஒருத்தர் காக்காக்களெல்லாம் கூட்டம் சேர்ந்து தன்னை கொல்ல முயன்றது போல கற்பனை வந்தது பற்றி சொன்னார். எதற்கு முகத்தை மறைக்கும் குல்லாவென புரிந்தது. முகம் தெரியாத போது பேச தயக்கம் இல்லை. எனக்கு அடுத்திருந்த பெரியவரிடம் மைக் வந்தது.

"அம்மாளுக்கு தொண்ணூறு வயசு தான்..ஆனா தாங்க முடில..காலைல எழுந்த போது தான் பாத்தோம்..தூக்கத்துலயே உயிர் போயிருக்கு...தினமும் காலை தொட்டுக்கும்பிட்டு தான் ஆபீஸ்க்கு போவேன்..சின்னவனே..சின்னவனேனு கன்னத்த பிடிச்சு கொஞ்சுவா..சடங்குலாம் முடிச்சிட்டு ரெண்டு நாள் பொறுத்து மாடில ஒரு சத்தம்...போறேன்..அவ ரூம்ல அவ உட்கார்ந்திருக்கா..அச்சு அசலா அவளே தான்..சின்னவனே நேத்து ஏன்டா மேல வரலனு கேட்குறா... கார்ல கூட தெரிறா.."

பேச்சைத்தொடர முடியாமல் அழுதார். உடல் குலுங்கி குலுங்கி அழுதார். சேரில் இருந்து கீழே இறங்கி தரையில் உட்கார்ந்து அழுதார். நான் அவரை கைத்தாங்கலாய் பிடித்து வெளியே கூட்டி வந்தேன். வெளியே காற்று பலமாய் அடித்துக்கொண்டிருந்தது. இருவர் மட்டும் தான் அங்கிருந்தோம்.பேண்ட் பாக்கெட்டில் எதையோ  தேடினார். ஆஸ்த்மா இன்ஹலர் எடுத்தார். "வீஸிங் சார்" என்றார். தலையிலிருந்த குல்லாவை கழட்டி மிஷினை மூக்கில் வைத்து சுவாசித்தார். உயரமாய் இருந்தார். முன் வழுக்கை. முகத்தை அப்போது தான் பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். ம்ம்..அப்பல்லோ ஆஸ்பத்தரியில் ..அவரே தான்..பாலகுரு.  
 


கருத்துகள்

Gunaseelan.B இவ்வாறு கூறியுள்ளார்…
Intresting to read superp creativity mama
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent one... keep going
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks Guna
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
Thanks. Glad you liked it.