ஒரு ஆரஞ்சுக்காவியம் -2

ம்பளைண்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் எனப்படும் சி.ம்.எஸ்ஸில் தான்  அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை  பதிவு செய்வார்கள். அந்த விவரங்கள்  சம்பந்தபட்டவர்களுக்கு சேர்க்கப்படும். இருவழித்தொடர்பு ஏற்பட்டு வாடிக்கையாளர்களின் எல்லாக்குறைகளையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக அந்த வலைப்பக்கம் செயல்பட்டு வந்தது. அப்படியாப்பட்ட பிரசித்திப்பெற்ற மாட்யூலைத் தான் நம்மாட்கள் கபளீகரம் செய்திருக்கிறார்கள். கிளைண்ட் சைடில் அக்கவுண்ட் மேனேஜர் எரிக் பயங்கர கோபத்தில் இருப்பதாய் பேசிக்கொண்டார்கள். முந்தைய நாள் மீட்டிங்கில் பேசிக்கொண்டிருக்கும் போதே டேபிளில் குத்திவிட்டு எழுந்து போய்விட்டாராம்.

அந்த அறையில் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது.சுற்றி இருந்த வட்ட  டேபிளில் சுமார் ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்காங்கே சில லேப்டாப்கள் அனாதையாய் கிடந்தன. சுவற்றிலிருந்த வெள்ளை நிற போர்டில் ஏதேதோ கண்டபடி எழுதப்பட்டிருந்தது. ஸ்காட்லாந்து யார்டே வந்தாலும் அந்த போர்டை பார்த்து  என்ன விவாதம் செய்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முடியாது. நானும் ரோஹனும்  ஓரமாய் இருந்த ரெண்டு சேர்களில் அமர்ந்தோம். துருவ் பேனாவில் ஏதேதோ எழுதி பிரியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவள் பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிக்கொண்டிருந்தாள். தலையை சுற்றிப்பார்த்தேன்,அந்த அறையில் மானஸ்வியை காணவில்லை. "என்னடாயிது..திருப்பதிக்கு வந்து இன்னும் வெங்கடாசலபதி கண்ணுல படல" என எண்ணிக்கொண்டேன். சுதீப் எங்களை ஒரு மாதிரி ஆச்சர்யமாய் பார்த்து, 'வாங்க' என்பது போல தலையசைத்தார். சுதீப் தான் சி.ம்.எஸ்ஸின் மேனேஜர். கடந்த மூன்று நாட்களில் கடுமையான மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது கண்களில் தெரிந்தது.

சுதீப் நளினமாய் கைதட்டி "கை(ய் )ஸ் ..ஒன்  மொமெண்ட்" என்றார்.எல்லோரும் சேர்களை சரிப்படுத்தி நேராக உட்கார்ந்து கொண்டார்கள். அறையிலிருந்த எல்லோரும் தலையை உயர்த்தி அவரைப்  பார்த்தோம்.

"இங்க ..சி.எம் எஸ்ஸுக்கு உதவிக்கு வந்திருக்கிற நம்ம ப்ராஜெக்ட் நண்பர்களுக்கு நன்றி.உண்மையிலேயே இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை.."

பேசும்போது இடையிடையே கைகளை தேய்த்துக்கொண்டே பேசினார்.கொஞ்சம் தாழ்ந்த குரலில் "தேவையில்லாமல் இதை பெருசு செய்கிறார்கள் " என்றார்.

ரோஹன் என் காது பக்கத்தில் வந்து "எரிக்..தப்பு பண்ணிட்டார்..இவன் மூஞ்சுல அந்த குத்த விட்டுருக்கணும்.." என்றார். லேசாய் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.ரோஹன் கொஞ்சம் ஷார்ப்பான மனிதர் .கள நிலவரம் தெரியாமல் கலவர பூமிக்குள் இறங்கமாட்டார்.ஐரோப்பா முழுவதுமே வாடிக்கையாளர்கள் அந்த வலைப்பக்கத்தை உபயோகப்படுத்துவதால் மூன்று நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் யூரோ வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணக்கிட்டுருக்கிறார்கள்.இது தவிர பிரச்சனை சார்ந்த பல புள்ளிவிவரங்களை கைக்குள் ரோஹன் வைத்திருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஸ்வெட்டர் ஆசாமியிடம் பேசியிருந்தால் அவரின் ஏ.டி .எம்  பின்னையும் வாங்கியிருப்பார்.சுதீப் தொடர்ந்து பேசினார். 

 "நாங்கள் ஞாயிறன்று  ஃபைல்களில்  சில மாற்றங்கள் செய்தோம் தான்..ஆனால் திங்கள்.. செவ்வாய்..வரை சிஸ்டம் நல்லாத்தானே வேலை செய்தது..டேட்டா ஸ்டோரேஜ்..நோட்டிஃபிகேசன் என எல்லாமே சரியாகத்தானே இருந்தது..இப்போதும் கூட பிரச்சனை சில ப்ரௌஷர்களில் தான் வருகிறது.."

"ஆனால் அந்த ப்ரௌசர்களைத்தானே தொண்ணூறு சதவீத வாடிக்கையாளர்கள் உபயோகிக்கிறார்களாம் .." என்றார் ரோஹன்.சட்டென அந்த இடம் சூடானது. எஜமான் படத்தில் ரேக்ளா ரேஸுக்கு முன்னாடி வானவராயனும் வல்லவராயனும் முறைத்துப்பார்த்துக்கொள்வது போல  சில வினாடிகள் சுதீப்பும் ரோஹனும் பார்த்துக்கொண்டார்கள். நான் ஏதேதோ கற்பனையில் வந்திருந்தேன். கடைசியில் இந்த அங்கிள்களின் ஆக்சன் காட்சிகளை பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று நொந்து கொண். தவிர அது என்னுடைய தம் டைம்..முந்தைய நாள் அதே நேர கணக்கின்படி  இரண்டு சிகரெட்கள்  பின் தங்கியிருந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஸ்வெட்டர் ஆசாமி எனப்படும் சௌப்ஜித் சர்க்கார் உள்ளே வந்தார். பின்னாலேயே மானஸ்வியும் வந்தாள். எனக்கு இதயம் வேகமாய் துடித்தது.

 மானஸ்வி முகத்தில் சிரிப்பேதும் கொஞ்சமும் தெரியவில்லை. தேவதைகள் எப்படி முகத்தை வைத்துக்கொண்டாலும் அழகாகவே தெரிகிறார்கள்.அவள்  துருவுக்கும் பிரியாவுக்கும் அடுத்துப்போய் உட்கார்ந்து கொண்டாள். ஸ்வெட்டர் சுதீப்பையும் ரோஹனையும் கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார். அவர்கள் சில நிமிடங்கள் குசுகுசுவென பேசிவிட்டு "இதோ வந்திடுறோம்." என சொல்லிவிட்டு அந்த ரூமில் இருந்த பெரிய தலைகளையெல்லாம் ஓட்டிக்கொண்டு போயினர். பெரும்பாலும் ஏதாவது மீட்டிங்காக இருக்கும்.ஐ.டி யில் பெரும் பிரச்சனையின் போது வேலை செய்வதை விட அதை பற்றி பேசவே அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். இப்போது ரூமில் துருவ்,பிரியா,சைமன்,நான்  மற்றும் மானஸ்வி மட்டுமே மிஞ்சியிருந்தோம். 

சைமன் ஒரு டச்சுக்காரன். எங்கள் அலுவலகத்தின் ஆம்ஸ்டர்டாம் கிளையில் வேலை செய்து வந்தவன். இப்போது ஒரு வருடமாய் எங்களுடன் இந்த ப்ராஜெக்ட்டில் பயணிக்கிறான். "இன்வென்ட்டரி" டீமில் இருப்பவன். ஏற்கனவே அவனுடன் சில பிரச்சனைகளில் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். "ஹாய் சிவ்" என்றான். துருவும் பிரியாவும் அவரவர் லேப்டாப்பை வெறிக்க தொடங்கியிருந்தார்கள். மானஸ்வி பிரியாவின் தோளில் சாய்ந்திருந்தாள். ஒரு ரம்மியமான பெர்ஃப்யூம் வாசனை காற்றில் வந்ததை அப்போது தான் கவனித்தேன். எல்லோரும் மிக அருகாமையில் தான் உட்கார்ந்திருந்தோம். எப்படி பேச்சை தொடங்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். ஆரம்பம் மிக முக்கியம். அது தான் நம்மைப்பற்றிய எண்ணங்களின் அச்சாணி.  

"சிவ்.." 

சைமன் கூப்பிட்டான். நிமிர்ந்து பார்த்தேன்.

"சிகரெட் இருக்கா..ஒன்னு போதும்.."

இந்த கடன்காரனுக்கு கடன் கேட்க நேரகாலம் இல்லையா என மனம் கொதித்தது.அவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள் என மனம் பதறியது. "புகை நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என ஏன் சொல்கிறார்கள் என புரிந்தது. பேண்ட் பாக்கெட்டில் "மார்ல்ப்ரோ"வை தேடினேன்.

"இன்னொன்னு இருக்குமா..எனக்கு " என சைடிலிருந்து சத்தம் வந்தது.மானஸ்வி அப்பாவியை முகத்தை வைத்து கையை நீட்டி என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஒரு அதிர்ச்சி அலை என்னுள் கிளம்பி தலை முதல் கால் வரை பயணித்தது. சுதாரித்து இயல்பாய் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு சிகரெட்டை அவளுக்கும் இன்னொன்றை இவனுக்கும் கொடுத்தேன்.அவளின் ஆங்கிலம் ஐரோப்பிய ரகத்தில் இருந்தது. கொஞ்சம் கவனித்து கேட்க வேண்டியிருந்தது. 

"வாங்க நாம ஸ்மோக் பண்ணிட்டு வந்து ஸ்டார்ட் பண்ணலாம்..இவுங்க ரெண்டு பேரும் எப்படியும் வர மாட்டாங்க..ஐ நீட் சம்  ப்ரெஷ் ஏர் " என்றான் சைமன்.

அவளும் சிரித்துக்கொண்டே "எனக்கும் தான்" என்றாள். நானும் சரி என்பது போல தலையாட்டினேன். மூவரும் வெளியே வந்து ஒரு சாலையை கடந்து ஒரு பெரிய மரத்தின் கீழிருக்கும் பெஞ்சில் அமர்ந்து கொண்டோம். போட்டிருந்த ஜெர்க்கினையும் தாண்டி உடல் குளிரில் நடுங்கியது. மூச்சு விடும்போதும் பேசும்போதும் புகைபோல காற்று வெளியேறியது. சைமன் லோக்கல் பீஸ் என்பதால் அலட்டாமல்  இருந்தான். மூவரும் பற்ற வைத்தோம். மானஸ்விக்கு கொஞ்சம் சுருட்டை முடி என்பதை அப்போது தான் கவனித்தேன்.அவள் பேசத்தொண்டங்கினாள்.

"நான் எப்பயும் ஆபீஸ் டைம்ல  ஸ்மோக்  பண்ண மாட்டேன்..இன்னைக்கு செம்ம கடுப்பு..எல்லாரும் வந்து எங்களவே திட்டுறாங்க..நாங்க அப்படி என்ன தப்பு பண்ணினோம்..ரெண்டு நாள் வேலை செஞ்சதே..அதெப்படி?..ஒரு கிளமும் அத பத்தி பேசாதுங்க.."

சொல்லிவிட்டு சிகரெட்டை ஒரு இழு இழுத்தாள். நானும் சைமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.  

"பெனால்ட்டி போட்டுட்டாங்கன்னா..வேலைக்கே பிரச்சனை வந்துடுமாம்...லேட்நைட் வேல பாத்தோமே அப்போல்லாம் இந்த நாய்ங்க எங்க போச்சுங்க.."

அவள் கண்கள் கலங்கியிருந்தது.

"துருவ்வெல்லாம் ரெண்டு நாள் தூங்கவேயில்லை..நேத்திக்கு மயங்கிட்டான். ப்ரியாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்... சே ..எவ்வளோ ஜாலியா இருந்தோம் போன வாரம் வரைக்கும் .."

சைமன் ஒரு மாதிரியான ஜென் மன நிலை கொண்டவன்.அதிகம் பேச மாட்டான். சூழ்நிலையை ஆராய்ந்து தேவையான போது மட்டுமே பேசுவான்.

"மான்ஸ்..எங்க பாட்டி அடிக்கடி ஒரு பழமொழி  சொல்லுவாங்க..'சரி செய்து விட்டால் அந்த தவறின் அடர்த்தி பாதியாய் குறைந்து போகும்'னு..எதிர்மறை எண்ணங்களை சுமக்காதே" என்றான்.

அவள் கொஞ்சமாய் யோசித்து விட்டு சிகரெட்டை அணைத்து குப்பையில் போட்டாள். சைமன் அருகில் வந்து "தேங்க்ஸ்..சைம்..ஐ ஃ பீல் பெட்டர்" என்று  சொல்லி அவனை தோளுடன் அனைத்து மறுபடியும் "தேங்க்ஸ்" என்றாள். நான் சாக்லேட் கிடைக்காத சின்ன குழந்தை போல பரிதாபமாய் அங்கே நின்றிருந்தேன். எங்க பாட்டிகள் எல்லாம் "வெயில்ல விளையாடாத...நல்லா அள்ளி சாப்பிடு.."தவிர வேறெதுவும் சொல்லவில்லையே என காண்டாக இருந்தது.மூவரும் திரும்பவும் எங்களின் அறை நோக்கி நடந்தோம். 


துருவ் லேப்டாப்பில் தலைவைத்து படுத்திருந்தான். பிரியா தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள். அவர்களை பார்க்க வேர்ல்டுகப்பில் ஜிம்பாப்வே டீமை பார்ப்பது போல இருந்தது. அரைமணி நேரமாய் என் மனதிற்குள் ஏதோவொன்று ஓடிக்கொண்டிருந்தது. "செவ்வாய்க்கிழமை..ரெண்டு நாள் வேலை செய்தது" போன்ற வரிகளெல்லாம்   என்னை அரித்துக்கொண்டிருந்தது. இது சம்பந்தமாய் ஏதோ ஒரு தகவல் மூளைக்குள் இருப்பதாய் தோன்றியது.  இந்த நேரத்தில் என்னைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. நான் ஒரு மிடில் பெஞ்ச் ஆள். படிப்பு, வேலை  எல்லாவற்றிலுமே. கமல் போல மயத்திலேயே பயணப்பட்டுக்கொண்டிருப்பேன். சைமன் போல ஐ.டியில் உள்ள  புது தொழிநுட்பங்களின் அடிவரை சென்று அலச எனக்கு முடியாது. கொடுத்த வேலையை முடித்து விட்டு மேனேஜர்களை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன். தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சனைகூட கொஞ்சம் முரட்டு ரகமாய் இருந்தால் "சைமன்களுக்கு" வழிவிட்டுக்கிளம்பியிருப்பேன். ஆனால் இது ஒன்றும் பெரிய பிரிச்சனையாய் இருக்காது என என் மனம் சொல்லியது.

அப்போது தான் அந்த விஷயம் சரியாய் ஞாபகம் வந்தது. 

"சைமன்..ஓ.எஸ் அப்டேட் நடந்தா..இந்த ஃபைல்களெல்லாம் இம்பாக்ட் ஆக வாய்ப்பிருக்குல்ல.."

கொஞ்சம் யோசித்தான். மானஸ்வி என்னையும் சைமனையும் மாறி மாறி பார்த்தாள்.

"அம்பது சதவீத வாய்ப்பிருக்கு..இவுங்க யூஸ் பண்ற ஜாவா வெர்சன் கொஞ்சம் பழசு தான்.."

எனக்கு எந்த சதவீத கட்டுப்பாடுகளின்றி சந்தோசம் மனம் முழுக்க பரவியது. "என்ன" என்பது போல கையாட்டி என்னிடம் மானஸ்வி கேட்டாள்.அவளிடம் பதில் சொல்லாமல் தல்பீருக்கு இன்டெர்காமில் போன் போட்டேன். 

"தல்பீர் ஒரு ஹெல்ப் டா.."

"அப்புறம் நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணவா கால் பண்ணுவீங்க..என்னானு சொல்லுங்க.."

"டேய்  இந்த வாரத்துல ஒரு நாள் நைட்டு... சர்வர் முழுக்க  ஏதோ ஓ.ஸ் அப்டேட் ஆகியிருச்சுன்னு ரெண்டு மணி வரைக்கும் வேல பாத்தேலே.."

"ஆமா..சர்வர் மெயின்டெனன்ஸ் பண்றப்போ..ரெண்டு பேட்ச்ச தெரியாம ஓட்டிட்டாங்க..அப்புறம் அதுனால எதுவும் பிரச்சனை வராதுன்னு விட்டுடுங்கனு கிளைண்ட் சைடுல சொல்லிட்டாங்க.."

"அது செவ்வாய்க்கிழமை நைட் தான.."

"அது ஞாபகம் இல்ல...ஆனா அன்னைக்கு தான் நாம போதைல கார்டனுக்குள்ள  போய் ஒன்னுக்கடிச்சோம்"

"ஓகே டா"

போனை வைத்து விட்டேன் .நல்லவேளை போனை ஸ்பீக்கரில் போடவில்லை. யோசித்துப்பார்க்கையில் உறுதியாய் அது செவ்வாய்க்கிழமை தான். 

சைமனும்,மானஸ்வியும்  என் பக்கத்தில் வந்தார்கள். "செவ்வாய்க்கிழமை ராத்திரி சர்வர்ல ஓ.ஸ் அப்டேட் நடந்திருக்கு.." என்றேன்.

சைமன் தாடையைத்தடவி "எனக்குத்தெரிந்து நாம் திருடனை பிடித்து விட்டோம் என்றே நினைக்குறேன்" என்றான். மானஸ்வி என்னை முதல் முறையாய் சினேகமாய் பார்த்தாள். "யாருடா நீ " என்பது போல இருந்தது. என் ஹார்மோன்கள் எல்லாம் மொத்தமாய் எழுந்து கோரஸ் பாடத்தொடங்கியது. 

                                                                                                                            --தொடரும் 

  

கருத்துகள்