ஒரு ஆரஞ்சுக்காவியம் -3




கண்களை திறந்தவுடன் தல்பீர் மங்களாய்த் தெரிந்தான். கொஞ்சம் கண்ணைக்கசக்கி பார்வையை சரி செய்தேன். ஹாலில் இருக்கும் ஷோபாவில் உட்கார்ந்துகொண்டு  "ஸ்க்ராம்பிள்டு எக்"கை தக்காளி சாஸ் உதவியுடன் மேய்ந்து கொண்டிருந்தான். என்னை பார்த்தவுடன் தட்டை கீழே வைத்துவிட்டு குறும்பாய் சிரித்து அருகில் வந்தான். பெட்டில் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். அவனது தாடியை இரண்டு கைகளை வைத்து தடவினான். அவன் குஷியாய் இருக்கிறானென்று பொருள். 

"என்ன ஜி..கடுமையான உழைப்பு போல ..நைட்டு எத்தனை மணிக்கு வந்தீங்க.."

"மூனு ஆகிடுச்சு டா.."

"இப்படிலாம் கூட நடக்குமா..நீங்க நைட்டு மூனு மணி வரைக்கும் வேல பாத்துருக்கீங்க ...அதுவும் வேற டீமுக்கு ... பேசாம இவனுங்க எல்லா டீம்லயும்  ஒரு அழகான பொண்ண ரெக்ரூட் பண்ணி வச்சானுங்கன்னா கம்பெனி எங்கேயோ போயிருக்கும்..."

சிரித்தேன். அந்த ரம்யமான இரவில் நடந்த அத்தனை சம்பவங்களும் என் மனக்கண்களில் ஓடிக்கொண்டிருந்தன. நினைத்தது போலவே அது ஓ.எஸ் அப்டேட்டுகளால் வந்த பிரச்சனை தான். சி.எம்.எஸ் அணியில் எல்லோரும் அதை வெற்றி போலவே கொண்டாடினர். சம்பந்தப்பட்ட  சர்வர்களின் பராமரிப்பு "க்ளைன்ட்" பக்கம் இருந்தது. ரோஹன் போன்ற திறமைமிகு மேலாளர்கள் எல்லாம் சேர்ந்து "பிரச்சனை உங்கள் பக்கம் தான். இருந்தும் நாங்கள் உதவி செய்கிறோம்" என க்ளைன்ட்டுகளிடம் பேசி  பயங்கரமாய் ஸ்கோர் செய்தார்கள்.  நள்ளிரவு நடந்த முக்கியமான மீட்டிங்கில் ரோஹன் ஆற்றிய உரை பற்றி அலுவலகத்தில் எல்லோரும் சிலாகித்துப்  பேசினர். எனக்கு ஆச்சர்யமில்லை. வாய்ப்பு கிடைக்கும் இடத்திலெல்லாம் சிக்ஸ் பறக்க விட்டு மேலிடங்களை சிலிர்க்க வைப்பது என் தலைவனுக்கு புதிதல்ல.

"பாஸ்..நீங்க நம்பர்லாம் வாங்கிருப்பீங்களே இந்நேரம் ..கேடியாச்சே நீங்க.."

போனை எடுத்து வாட்ஸாப்பைத்திறந்து அவனிடம் நீட்டினேன். "மானஸ்" என்ற பெயரில் இருந்த காண்டக்ட்டை காட்டினேன். அவள் அதில் பேண்ட் ,டீ ஷர்ட் அணிந்திருந்த போட்டோ வைத்திருந்தாள். ஆம்ஸ்டர்டாம் பூக்களுக்கு நடுவே நின்றிருந்தாள். கண்கள் விரிந்து போனை பக்கத்தில் வைத்துப்பார்த்தான்.

"சிவ்..ஒரு நாள் நைட்டுக்குள்ள என்னல்லாம் நடந்திருது..சும்மா ஹீரோயினி மாதிரி இருக்காள்ல.."

"பாத்து மரியாதையா பேசு.. நாளைக்கு அவள நீ அண்ணினு கூப்பிட வேண்டிய சூழ்நிலை கூட வரலாம்.."

"அப்போ பியூச லாரி ஏத்தி கொல்லப்போறீங்களா??.. மூஞ்சு ஃப்புல்லா சிரிப்பா  இருக்கே...நீங்க எதுக்கும் நேத்து என்னெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லிருங்க..."

சிரித்தேன். அவளின் முகம் ஞாபகம் வந்தது. கூடவே அந்த பெர்ஃபியூம்  வாசனை. இரவு இரண்டு மணிக்கு கூட அவளை விட்டு செல்லாமல் அடம்பிடித்து அவள் மேலேயே படர்ந்து கிடந்தது,அந்த மணம். பேசிக்கொண்டிருக்கும் போதே இடது கை ஆட்காட்டி விரலால் காதோர முடியை சுருட்டுவது. எல்லாமே கனநொடியில் எனக்குள் வந்து போயின. தல்பீர் என் வார்த்தைக்காக காத்திருந்தான்.

"சைமன்..துருவ்..ப்ரியா எல்லாரும் பன்னெண்டு மணிக்கே டெஸ்க்ல  மல்லாந்துட்டாங்க.. ஓ.எஸ் சரிபண்ணி  சர்வர் ரெடி ஆகிறதுக்கு  ஒரு மணி ஆகிடும்னு சொல்லிட்டாங்க..அப்பறம் தான மத்த வேலைலாம் பண்ண முடியும்...இவ என்னடான்னா பிரிட்ஜ்ல வச்ச ஆப்பிள் மாதிரி பக்கத்துல உட்காந்திருக்கா..அந்த  கண்ண நேருக்கு நேரா பக்கத்துல பாத்தா  ஒரு மாதிரி உடம்பு முழுக்க ஜிவ்வுனு  இருக்கு... இடையிடையே ரெண்டு விரலையும் அந்த உதட்டுக்கு பக்கத்துல வச்சி  "தம் " போலாமா என சைகை செய்வாள் "

"என்னது தம்மா..."

"ஏ ..ஏன்டா ... பொண்ணுங்கலாம்  ராக்கெட்டே விடுறாங்க ..இத்துனூண்டு தம்மை இழுக்க கூடாதா ..சரி அத அப்புறம் விலாவாரியா பேசலாம் ...இது ஹைலைட்ஸ் பேக்கேஜ்..மெயினானது மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ..."

"ரைட் ..ரைட் ..மேல சொல்லுங்க .."  என டிராஃபிக் போலீஸ் வண்டியை போகச்சொல்லி சிக்னல் செய்வது போல செய்தான்.


"நா ..உன்கிட்ட சொன்னேன்ல ..அவள  விட நான் ஒரு நாலு இஞ்ச் ஹைட் கூட இருப்பேன்னு ..அது கரெக்ட் தான் ...நின்னே பார்த்துட்டேன்..என்னம்மா ஜோக் அடிக்கிறா தெரியுமா ..செம்ம ஜோவியல் ... என்ன இங்கிலீஸ் தான் டாப் ரகமா இருக்கு ..கொஞ்சம் கூர்மையா கேட்க வேண்டியிருக்கு.. பெர்லின்ல போஸ்ட் க்ராஜுவேஷன் படிச்சாளாம் .."

தல்பீர் கொஞ்சம் சீரியஸாய் முகத்தை வைத்துக் கொண்டிருந்திருந்தான். நான் தொடர்ந்தேன்.

"ஒரு தம்பியாம்..அப்பா ரயில்வேஸ்ல வேல பண்ணினாராம்..அடிக்கடி ஸ்கூல் மாற வேண்டியிருந்ததாம்..அவ்ளோ பேச்சு நேத்து..அவ பேசுற பேச்சும் அதுக்கு தகுந்த மாதிரி அந்த முழி சிறியதாவும் பெரியதாவும் அட்ஜஸ்ட்  ஆகுறதிருக்கே...ப்பா...எஸ்.பி.பி  குரலும் இளையராஜா இசையும் மாதிரி ஒரு டிவைன் சிங்க்.."

டர்பன் வைத்திருந்த நம்ம சர்தார் தம்பிக்கு இளையராஜா, எஸ்.பி.பி பற்றியெல்லாம் எவ்வளவு தெரியும் என்பது பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என் உணர்ச்சிகளை காட்டாற்று வெள்ளம் போல வார்த்தைகளால் கடத்திக்கொண்டிருந்தேன். 

"ஒவ்வொரு தடவையும் அவ "சிவா..சிவா" னு கூப்பிடறப்போ..எனக்கு அவ்வளவு சந்தோசம்..நம்ம பேர் கூட கேட்க நல்லாருக்கேனு தோணிச்சு..."
  
தல்பீர் எழுந்துவிட்டான். ஒரு வேளை ரொம்ப மொக்கை போடுறோம்போலனு நானும் பேசுவதை நிறுத்தினேன். அப்படியே படுக்கையிலிருந்து பாத்ரூமிற்கு சென்று காலை கடமைகளை முடித்தேன். குழாயில் சூடு தண்ணீர் பிடித்து ஹாலுக்கு வந்து உட்கார்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் குடித்துக்கொண்டிருந்தேன். தல்பீர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு அசௌகர்யமான அமைதி அங்கிருந்தது.அவன் என் மீது தீவிர பாசம் கொண்டவன். பல நேரங்களில் அவனே மூத்தவன் போல செயல்படுவான். எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் என்னை எல்லை மீறாமல்    பார்ததுக்கொள்பவன்.

"சிவ்..கொஞ்சம் சீரியஸா போறீங்களோனு தோணுது...ஜாலியா சைட் அடிச்சோமா.. முடிஞ்ச அளவு வேல பாத்தோமானு போயிட்டிருக்கோம்..கண்ண திறந்து பாத்துக்கிட்டே போய் குழில விழுந்திராதீங்க..தவிர இது எத்திக்கலா சரி கிடையாது.." 

அவன் சொல்வதில் நிறைய உண்மை இருந்தது. மான்ஸ்வியும் பியூஷும் காதலிக்கிறார்கள் என மொத்த அலுவலகத்துக்கும் தெரிந்திருந்தது. தவிர பியூஷ் லட்சணமான,அறிவான, வசதியான ஆசாமி. என் போட்டோவையும் பியூஷ் போட்டோவையும் காட்டி இதில் யார் மானஸ்விக்கு பொருத்தம் எனக்கேட்டால் நூற்றில் தொன்னூற்று  ஒன்பது பேர் பியூஷைத் தான் காட்டுவார்கள். அந்த ஒரு ஓட்டுக்கூட என் குடும்பத்தினர் போட்டாத்தான் உண்டு.

"அதெல்லாம் அவளோ சீரியஸா கிடையாதுடா ..என்னப்பத்தி உனக்குத்தெரியாதா..சும்மா கல்ல விட்டு எறிவோம்ல..அந்த மாதிரி கிடைச்சா பழம்..இல்லனாலும்  நோ ப்ராப்ளம்..."

"சில நேரம் எறிஞ்ச கல்லு நேரா திரும்பி  வந்து தலைலயே விழுகும் தெரியும்ல.."

சிரித்தேன். இந்த நெருங்கிய நண்பர்களெல்லாம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் போல..நமக்குள் ஊடுருவி எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள்.எனக்கு கொஞ்சம் கவலையாய் இருந்தது. திடீரென  மனது, பலூன் உடைந்தது போல ஆகிவிட்டது. நல்ல கனவின் போது திடீரென கண் முழித்தால் ஒரு உணர்வு வருமே அது போல இருந்தது. 
தல்பீர் பக்கத்தில் வந்து தோளில் சாய்ந்தான். 

"யோ..சிவா..நாமெல்லாம் எப்டி ஆளுங்க.. நாமெல்லாம் சீரியஸ் விசயத்துல இறங்குனா இந்த பூமி தாங்காது..உலக நலனுக்காக நா சொல்றத கேளு... இன்னைக்கு அயாக்ஸ்(Ajax)கூட மேட்ச் இருக்கு.. போன மாசம் பி.எஸ்.வி மேட்ச் போனோம்ல ஞாபகம் இருக்கா..பீர் அடிச்சிட்டு நடக்க முடியாம ரயில்வே ஸ்டேசன்லயே தூங்குனோமே..இன்னிக்கு அதகளம் பண்றோம்"  



தலையாட்டினேன். உற்சாகம் ஏற்படவில்லை. டச் ஃபுட் பால் லீக் எனப்படுவது நெதர்லாந்துக்குள் இருக்கும் கிளப்புகள் பங்கேற்கும்  உள்ளூர் லீக். நம்ம ஐ.பி.எல் போல. நாங்கள் இருக்கும் ஊரின் அணி எஃப்.சி டவெந்தே (F.C TWENTE). நாங்கள் இருவரும் சீசன் டிக்கெட் வைத்திருந்தோம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை போய் மேட்ச் பார்ப்போம். பெரும்பாலும் அதிகமாய் குடித்து விட்டு யாரிடமாவது சண்டை போடுவோம். ரெபெக்காவும் யோரிசும் எங்களுடன் சேர்ந்து கொள்வார்கள். இருவரும் சேர்ந்து வாழும் காதலர்கள். ஆறு மாதத்துக்கு முன்னால் மேட்ச் பார்க்க வந்த போது தான் பழக்கமானார்கள்.

"யோரீஸ் மெசேஜ் பண்ணான்..இன்னைக்கு சுராஸ் இல்லையாம்..இஞ்சூரியாம்..அப்போ  அயாக்ஸ்ஸ ஜெயிக்க வாய்ப்பிருக்குல.. அவுங்க ஆறு மணிக்கு வந்திடுவாங்கலாம்.. "

சரியென்பது போல தலையாட்டினேன். ரூமிற்குள் வந்து போனை எடுத்துப்பார்த்தேன். மானஸியிடமிருந்து ஒரு வாட்சப் மெசேஜ் வந்திருந்தது. மனதில் திரும்பவும் ஒரு மின்காந்த அலை ஊடுருவியது.
ஒரு சூரியன்..நிறைய மரங்கள் எல்லாம் போட்டு ஒரு பொன்மொழி  எழுதிய குட்மார்னிங் மெசேஜ். எப்படியும் இதை நூறு பேருக்கு அனுப்பியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டேன். "டேய் அது தலைவர்கள் சொல்ற வாழ்த்து செய்தி மாதிரி..சந்தோசப்பட்டுறாத..கொஞ்சம் கூட சந்தோசப்பட்டுறாத" என என் மனத்திற்கு தெளிவுபடுத்திக்கொண்டிருந்தேன்.

ஸ்டேடியத்தின் வலது மூலையில் நின்றிருந்தோம். உள்ளுக்குள் ரசிகர்களை இன்னும் விடவில்லை. நானும் சர்தாரும் குளிருக்கு இதமாய் ரெண்டு பீரை இறக்கியிருந்தோம். ரெபெக்கா போனை நோண்டிக்கொண்டிருந்தாள். யோரீஸ் அவளை நோண்டிக்கொண்டிருந்தான். திடீரென ரெபெக்கா  எங்களை  கூப்பிட்டு "அங்கே பாருங்கள்" என்றாள். சில அயாக்ஸ் அணி ரசிகர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். "அந்த ஓரத்தில்..அவர்கள் தான் சரி " என்றாள். அந்த திசையை பார்த்தோம். மூன்று வயதான பெண்களும் ஒரு நடுத்தர வயது ஆணும் அயாக்ஸ்  கொடியுடன் நின்றிருந்தார்கள்.

"ரெடியா" என்றாள். தலையாட்டினோம். ரெபெக்கா அவர்களை நோக்கி "ஹேய்...." என கத்தி கை அசைத்தாள். அவர்கள் திரும்பினார்கள்.நாங்கள் எல்லோரும் சேர்ந்து "க்ளூட்சாக்" என கத்தினோம். அவர்கள் எங்களை குழப்பமாய் பார்த்தார்கள். பக்கத்தில் இருந்தவர்களெல்லாம்  சிரித்தார்கள். அவர்கள் நம்மைத்தான் சொல்கிறார்களா என யோசித்து பின்னாலெல்லாம் திரும்பி பார்த்தார்கள். அந்த ஆண் கோபத்தில் தல்பீரை நோக்கி "ஹே..யூ கண்ட் .  .யூ கோ பேக் டூ  யுவர் சைனா" .என்றான்.

தல்பீர் "அவனோட புவியியல் அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்குது" என்றான். எனக்கு அடக்க முடியாத அளவு சிரிப்பு வந்தது. எல்லோருமே கொஞ்சம் நேரம் சிரித்தோம். என் போனில் "டொயிங்" கென  சத்தம் வந்தது. வாட்சப் மேசேஜ். மானஸியிடமிருந்து வந்திருந்தது.

"தொப்பி நல்லாருக்கே.."

தலையை தொட்டுப்பார்த்தேன். இங்கு தான் எங்கோ இருக்கிறாளோவென தேடினேன். எனக்கு நேராய் நூறடியில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தாள். பியூஸ் பக்கத்தில் அவள் கையை பிடித்த படி நின்றிருந்தான்.  


                                                                                                                      --தொடரும் 
 

கருத்துகள்

Robert இவ்வாறு கூறியுள்ளார்…
தல அடுத்த பாகத்தை எழுதுங்க சீக்கிரம் ....
இவன் சிவன் இவ்வாறு கூறியுள்ளார்…
யாரும் படிக்கலையோனு ஸ்லோ ஆகிட்டேன் தல...வெகு விரைவில் அடுத்த பகுதிகள்..