ஆரஞ்சுக்காவியம் -பகுதி 10




ரு பருந்து போல ஏர் டாக்சி கட்டிடங்களுக்கு ஊடே தயக்கமின்றி பறந்து கொண்டிருந்தது. மரங்கள் எந்த பகுதியிலும் தென்படவில்லை. வெகுசிலரே ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருந்தனர். கண்களில் பெரிய சைஸ்  கண்ணாடிபோல ஒன்றை  மாட்டியபடி இருந்தனர். எனக்கு இந்த ஆச்சர்யங்களை கவனிக்கிற சிந்தனை  இல்லை. எது சரி? எது தவறு ?  என்பதை ஆராய்வது கடினமாய் இருந்தது. ஈவா என் மனநிலை புரிந்தவள் போல என்னை சிநேகமாய் தோளில் தட்டினாள்.

"ஏங்க ஒரு வேளை பியூஸும் மானஸ்வியும் உண்மையா..தீர்க்கமா காதலிச்சாங்கன்னா..அதை பிரிக்கிறதும் கொலை மாதிரி தானே.."

"இது பொது விஷயம்..இரண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல .. அந்த  உறவை  தொடரவிடுவது ..தடுப்பது  எதில் நன்மை இருக்கிறதென்று நீயே யோசித்துக்கொள் .. "

மெதுவாய் பேசினாள். வீட்டை நெருங்கியவுடன் "யூ ஆர் க்ளோஸ் டூ யுவர் டெஸ்டினேஷன்" என ஒரு எந்திரபெண் குரல் ஒலித்தது.மெதுவாக பால்கனியை ஒட்டி இறங்கியது. ஈவா கையிலிருந்த ரிமோட்டை அழுத்தினாள். படி போல ஒன்று விரிந்தது. இறங்கினோம். 

"மிஸ்டர்..நாம திரும்பனும்.. ரொம்ப யோசிக்க வேண்டாம்..சில நேரம் துடுப்பு போடத்தேவையில்லை..படகு அதுவே போகும்.."

அவள் பேசிக்கொண்டே அந்த உருண்டைப்பந்தை எடுத்தாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

"யோவ் சிவா..."

தொட்டு உலுக்கியவுடன் பதறி எழுந்தேன். தல்பீர் அலுவலகத்துக்கு கிளம்பி தயாராய் பேக்குடன் நின்றிருந்தான்.

"நைட் எப்போயா வந்த..எங்கய்யா போற...  நீ பாட்டுக்கு ஸ்பிரிட்டுவல் எக்ஸ்பிரிமெண்ட் பணறேன்னு எங்கயாவது போய் ஜீவ சமாதி அடைஞ்சுறாத..உங்க வீட்டுக்கு பதில் சொல்ல முடியாது...நா ஆபிஸ் போறேன் ..சீக்கிரம் வந்து சேரு.."

என் பதிலுக்கு காத்திராமல் அவன் நடக்கத்தொடங்கினான். புத்துணர்ச்சியாய் இருந்தது. தூக்கம் எதை செய்கிறதோ இல்லையோ தெளிவு கிடைத்தது போல ஒரு மாயையை மனதுக்கு கொடுத்து விடுகிறது. எழுந்து அலுவலகத்துக்கு கிளம்பத்தயாரானேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்துக்குளித்தேன். மிகக்கடுமையான குளிரில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ராஜசுகம். என்ன செய்யவேண்டுமென தெளிவாய் இருந்தேன். "சைமனிடம் பேசிப்பார்ப்போம்... ஏதாவது துப்பு கிடைத்தாலொழிய வேறு செயல்களில் ஈடுபடக்கூடாது..நடப்பது நடேசன் செயல் என பொத்திக்கொண்டு இருத்தல் வேண்டும்.." எனக்கு மிகவும் பிடித்த ப்ளூ சட்டையை எடுத்து போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் என் இடத்தில் பேக்கை வைத்து விட்டு நேராய் இரண்டாவது மாடிக்கு நடந்தேன். அங்கே தான் இன்வென்ட்டரி டீம் இருந்தது. படிகளில் ஏறும்போது லேசாய்  முட்டி வலித்து,காலையில் சாப்பிடவில்லை என்பதை ஞாபகப்படுத்தியது. சைமன் வலது ஓரத்தில் அமர்ந்திருந்தான். 

"ஹே..சைம்... கேர் பாஃர்  எ  ஸ்மோக் "

"ஷிவ்.. கண்டிப்பா போலாம்"

அவன் லேப்டாப்பை மூடி விட்டு விருட்டென கிளம்பி வந்தான். தம்மடிப்பவர்கள்  சக தம்மர்கள் கூப்பிடுகையில் மறுக்க மாட்டார்கள். அது ஒரு பாரம்பர்யம். தவிர அந்நேரத்தில் மனது  விட்டு பேசலாம். ஆகையால் தான் நிப்பாட்டிய பழக்கத்தை திரும்பவும் கையிலெடுத்திருந்தேன். நடந்து மரத்துக்கு அடியிலிருந்த எங்கள் தம் ஸ்பாட்டிற்கு போனோம். நான் மார்ல்ப்ரோவை எடுக்க அவன் லைட்டரை எடுத்தான். பற்ற வைத்தோம்.பல வாரங்கள் கழித்து இழுப்பதால் ஜிவ்வென இருந்தது. நிக்கோடின் உள்ளுக்குள்  நுழைந்து "பாஸ் மறந்துடீங்களா..சௌக்கியமா" என்றது. கொஞ்ச நேரம் உலக விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். விஷயத்துக்கு வந்தேன். 

"சைம்..அடுத்த சன்டே நம்ம மான்ஸ் பியூஸ் நிச்சியத்துக்கு வருவேல்ல..சாயங்காலம் டி.ஜே இருக்கு..."

சொல்லிவிட்டு அவன் முகத்தை உன்னிப்பாய் பார்த்தேன். ஒரு சிறு மாற்றம். என்னால் உறுதியாய் சொல்ல முடியவில்லை. அவன் எப்போதும்   உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டமாட்டான். அலுவகத்தில் பெரிய போனஸ் தொகை வந்தாலும்..ஸ்டாக்கில் பணம் போனாலும் "அதுக்கென்ன ப்போ"  என்பது போலவே இருப்பான். உண்மைகள் உணர்வுகளுக்கு நடுவே சில நேரம் சிக்கிக்கொள்ளும். அதற்கு அடைப்பெடுத்தல் அவசியம். 

"தெரில..டவுட் தான்" . விடாமல் கொக்கி போட்டேன்.

"எதுவும் வேற பிளான் இருக்கா..கேர்ள் ஃபிரெண்ட் கூட சுத்தப்போறியா.."

பெரும்பாலும் ஐரோப்பியர்கள் தங்கள் சொந்த விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. என்னைப்போல இந்தியர்கள் அதை நோண்டி தெரிந்துகொள்ளாமல் விடுவதில்லை. அவன் அசௌகர்யமாய் முகத்தை வைத்துக்கொண்டு தன் வலது கை சுண்டு விரல் மோதிரத்தை காட்டினான். எனக்கு புரியாததை உணர்ந்து "இது ஒரு குறியீடு..நான் ஒரு கே..." என்றான்.

அந்த பதிலுக்கு  எப்படி  ரியாக்சன் கொடுக்க வேண்டுமென எனக்குத்தெரியவில்லை. உண்மையில் அவனை கட்டிப்பிடித்து தூக்கி சுத்தவேண்டும் போல இருந்தது.அமைதி காத்து "" வென சொன்னேன்.


"என்ன ஒரு மாதிரியா அதிர்ச்சியாகிற சிவா..ஏன் கேங்கிறது கேவலமா..அது ஏன் உங்க ஊர் ஆட்களுக்கு புரிய மாட்டிங்குது..சமுதாய சந்தோஷத்துக்கு எதிர்பாலரோட கல்யாணம் பண்ணியே ஆகனும்..உணர்வுகள ஏமாத்தி நம்மள கல்யாணம் பண்ணிக்கிறவுங்கள ஏமாத்துறது தான் கேவலம்"

அவன் கண்கலங்கியபடி பேசிக்கொண்டிருந்தான்.

"இங்கெல்லாம் இது உங்க ஊர் போல பாவச்செயல் கிடையாது. ஆப்பிள் சி.ஈ.ஓ டிம் குக் கூட கே தான்..மாவீரன் அலெக்சாண்டர்..டாவின்சி..எத்தனையோ பேர் எங்கள் இனம் தான். இனம்,நிறம், வயது,பொருளாதாரம் தாண்டி காதல் செய்வது போல..இதுவும் ஒரு காதல் ..அவ்வளவே.."  

அவன் என்னைப்பார்க்காமல் கீழே பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் "யாரு பியூஸா??" என்றேன். அவன் என்னை ஆழமாய் பார்த்தான்.

"வீட்ல ஒத்துக்க மாட்டாங்களாம்..அவ.. அந்த குட்டச்சிய கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் எல்லாரும் விரும்புறாங்களாம்..நாங்க சிரித்து சேர்ந்திருந்த தருணங்கள் எல்லாத்தையும் மறந்திரனுமாம்..எல்லாம் பேசிவிட்டு ஏன் அழுதான்.." 

குலுங்கி குலுங்கி அழுதான். என் கைகளை இருக்க பற்றிக்கொண்டான். அவனுக்கு நான் ஏதாவது ஆறுதலாய் சொல்லியே ஆகவேண்டும். என் ஆறுதல்கள் எந்தக்காலத்திலும் ஒர்க்கவுட் ஆனதில்லை. அழுதுகொண்டிருப்பவர்கள் அடுத்த கியரில் அழுகையை உயர்த்துவார்கள்.இருந்தும் முயன்றேன்.

"நீ அந்த குட்டச்சியிடமே பேசலாமே..ஒரு வேளை உங்கள் காதலின் உயரம் அவளுக்கு புரியலாம்.." 

அவனது ஆறரை அடிக்கு பக்கத்தில் எல்லாருமே குட்டையர்கள் தான். அவன் கன்னத்தை துடைத்துக்கொண்டு ஏதோ சொல்ல வந்தான். அதற்குள் "பாபாஜி" என சத்தம் கேட்டது. இருவரும் திரும்பிப்பார்த்தோம். தல்பீர் சிரித்துக்கொண்டே கையாட்டிய படி வந்து கொண்டிருந்தான். சைமன் "நான் கிளம்புறேன்" என வேகமாய் நடந்தான். இன்னும் கொஞ்ச நேரம் கிடைத்திருந்தால் சைமனை சார்ஜ் ஏற்றி அனுப்பியிருப்பேன். அதற்குள் இந்த டர்பன் அணிந்த வேதாளம் வந்து விட்டது.

"ஜி..என்ன தம்மா...ஒரு மாசத்துல எத்தனை தடவயா நிப்பாட்டுவ..ஆரம்பிப்ப.. சரி அடிக்க போறேன்னு தெரியும்ல..என்னைய கூப்பிடலாம்ல..உங்களுக்கு ஒப்பாரி வைக்குறதுக்கு..பேண்ட்லயே ஒன்னுக்கு போறதுக்கு மட்டும் நாங்க..மத்ததுக்கெல்லாம் அந்த வளந்தாம் பாண்டியனா.."

நான் ஏற்கனவே இருந்த வெறியை அடக்கிக்கொண்டு அமைதியாய் நின்றேன்.இவனிடம் அது பற்றி கேட்டாலென்னவென்று தோன்றியது.

"டேய் தல்பீர்..இந்த கே லவ் பத்தி என்ன நினைக்குற.."

முகத்தை கோணலாக்கி மேலே பார்த்து விட்டு திரும்பி "அதெப்படி சிக்கன் 65 ஐ சிக்கனே திங்கும்.." என்றான். அதற்கு மேல் அவனை பேச விடாமல் சிகரெட் ஒன்றை எடுத்து அவன் வாயில் வைத்து பற்ற வைத்தேன். இருமினான்.

--------------------------------------------------------------------------------------------------------

முன்னமே நானும்  ஈவாவும்  பேசிக்கொண்ட படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த சவுக்கு காட்டிற்கு வந்து மரத்தின் அடியில் தோண்டி எதுவும் கடிதம் இருந்தால் எடுத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். இங்கே ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களையும் அவளுக்கு பதில் கடிதம் எழுதி வந்தேன். ஈவா அதிகம் எழுத மாட்டாள். விடாமல் போராடு..தோய்ந்துவிடாதே.. போன்ற ரீதியில் இருக்கும்.அன்றும் இரவில் அங்கு சென்று கடிதத்தை எடுத்து வந்தேன். இருட்டில் படிக்க முடியாதென்பதால்,ரூமுக்கு வந்து சாவகாசமாய் படிப்பேன்.  ரூமை நெருங்கிய போது சத்தம் அதிகமாக இருந்தது.

கதவைத்திறந்தேன். உள்ளே பெரிய கூட்டம் இருந்தது. யோரீஸும் ரெபெக்காவும் எல்லோருக்கும் ஒயினை சின்ன கிளாஸ்களில் கொடுத்துக்கொண்டிருந்தனர். ரெபெக்கா  என்னை பார்த்தவுடன் "சீக்கிரம் வா..அந்த பார்பிக்யூ அடுப்புகளுக்கு பக்கத்தில் நின்று கொள்..கருகாமல் பார்த்துக்கொள்.."  என்றாள். எனக்கு சில மைக்ரோ நொடிகளில் இது தல்பீர் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஞாபகம் வந்தது. அடுத்த நாளைய பிறந்தநாளுக்கு முந்தைய இரவு பார்ட்டி. தல்பீரைத்தேடினேன். எங்களது கொல்லைப்புறத்தில் பியர் பாட்டில்களுடன் குழுக்கள் குழுக்களாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.எல்லோரும் யோரீஸ்-ரெபெக்காவின் நண்பர்கள். அடிக்கடி பார்த்திருக்கிறேன். சிலர் "ஷிவ்" என கை காட்டினர். சிரித்து வரவேற்றேன். தல்பீர் ஓரமாய் சில பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தான். "சிங் இஸ் கிங்"  பாடல் உச்ச சத்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.

"சர்தார்ஜி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்". அவனை கட்டி அணைத்தேன்.

"சிவா ஜி.. வாங்க நீங்க வராம போய்ருவீங்களோனு பயந்தேன்..நீங்க குடிச்சிட்டு வாந்தியெடுக்காத பிறந்த நாளெல்லாம்..ஒரு பிறந்த நாளா.." 

குஷி மூடில் இருந்தான். பக்கத்தில் போனேன். "த்தா..டே..தள்ளி நின்னு ஆடு.. அப்புறம் காலைல எந்திருச்சு 'வ்வாய்குரு..என்னை மன்னியுங்கள்' னு சாமி போட்டோ முன்னாடி ஒப்பாரி வைக்காத..போன பாக்சிங் டே ஞாபகம் இருக்கா.." 

"ஹா(ன்)ஜி..கண்டிப்பா ஜி..உங்கள மாதிரி ஒருத்தர் எல்லா பார்ட்டிக்கும் தேவ.."

சிரித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பி பார்பிக்யூ அடுப்புக்கு அருகில் போனேன். வெந்த சிக்கனையெல்லாம் தட்டில் போட்டுவிட்டு, புதிய ஸ்டிக்குகளை சொருகினேன். குளிருக்கு இதமாய் இருந்தது. ஈவா யாரோ ஒரு பையனுடன் வந்திருந்தாள். அதாவது ஈவா ஜூனியர்.அவர்கள் மிக நெருக்கமாக இருந்தனர். சந்தோசமாய் இருந்து விட்டு போகட்டும் என நினைத்துக்கொண்டேன். சட்டென சீனியர் ஈவா எழுதிய கடிதத்தை படிக்கவில்லை என ஞாபகம் வந்தது. அருகில் யாருமில்லாததால் பாக்கெட்டிலிருந்து மெல்லமாய் எடுத்தேன்.

"ஷிவ்... நமக்கு ஒரு சங்கடம்..என் லேபில் வேலை செய்து வந்த லூகாஸை போன மாதம் வேலையை விட்டு நீக்கியிருந்தேன். அவனுக்கு அதீத போதைப்பழக்கம் இருந்தது. என் கம்ப்யூட்டரை வேறு ஹேக் செய்திருந்தான். என் மீது கோபத்தில் தான் போனான். சுமார் நாலு வாரமாய் அவனை இங்கே காணோம்.என்னிடமும் வந்து விசாரித்தார்கள். அவன் தத்தி தான்.. இருந்தும் நான் உருவாக்கிய டாக்குமென்டுகள் கொஞ்சம் விவரணையாய் இருக்கும். ஒரு வேளை அவன் அங்கு பயணப்பட்டுருப்பானோவென கவலையாய் இருக்கிறது..அவன் ஒரு சைக்கோ..எந்நேரமும் போதை மருந்துகளால் போடப்பட்ட டாட்டூவின் மயக்கத்திலேயே சுற்றுவான். அவன்  பழமைவாத கூட்டமான "ரெட்" டை சேர்ந்தவன் என்கிற புரளியும் உண்டு. பயப்படவேண்டாம்.. எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு..நான் நாளை வருகிறேன்.."


பயப்பட வேண்டாமென்ற பதத்திற்கு முன்னும் பின்னும் சொல்லப்படுபவை பெரும்பாலும் பயப்படும்படியானதாகவே இருக்கும். எங்கள் பிரச்சனைகள் குட்டிபோட்டபடி இருந்தன. இவைகளுக்கு கடவுள் கருத்தடை செய்தாலென்ன என்றிருந்தது. கடிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தேன்.ஜூனியர் ஈவா முத்தத்தில் முன்னேறிக்கொண்டிருந்தாள். இருவரின் நெருக்கத்தில் அந்த இடம் கொஞ்சம் சூடானது. பக்கத்தில் இருப்பவர்கள் சிரித்துக்கொண்டார்கள். நான் கூட அவளிடம் "ஏம்மா..அவன வாய் வழியா முழுங்கப்போறியா.. பொறும..பொறும.." என கத்தலாமென நினைத்தேன். அப்போது தான் அவளது ஜோடியை பார்த்தேன். அவன் ஆளே வித்தியாசமாய் இருந்தான். தலை முடி சிவப்பாய் இருந்தது. நான் அதுவரை அவனை எங்கள் கூட்டத்தில் பார்த்ததில்லை. அவன் கை...கழுத்துகளில் நிறைய டாட்டூக்கள் இருந்தது..அவன் லேசாய் என்பக்கம் திரும்பி சிரித்தான்.  

                                                                                                                   ----தொடரும் 

கருத்துகள்