ஆரஞ்சுக்காவியம் -பகுதி 8

 


நான் அந்த மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு விழுந்துகிடந்த பூக்களை பார்த்தபடியிருந்தேன்.மூளையால் அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.நம் முன் நடக்கும் சில சம்பவங்களுக்கு பதிலேதும் கிடைப்பதில்லை . கண்மூடித்தனமான நம்பிக்கை இருக்க வேண்டும் அல்லது அவற்றிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லை. நான் ஈவாவின் பக்கம் எந்த நேரமும் சாய்ந்துவிடும் மனநிலையில் இருந்தேன். இருந்தும் அவளின் பேச்சை முழுமையாக நம்புவதிலும் சங்கடங்கள் இருக்கத்தான் செய்தது. அவள் மரத்தின் இடது ஓரத்தில் அமர்ந்திருந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"ஷி..சிவா.. கடந்த காலமும் நிகழ் காலமும் எதிர் காலமும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டே இருக்கின்றன..திரும்ப.. திரும்ப.. அதாவது இன்று ரெஸ்டாரண்ட்டில் நடந்த சம்பவம் பல முறை நடந்து விட்டது.."

நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் குச்சியால் மண்ணை நோண்டியபடி பேசிக்கொண்டிருந்தாள். முகம் சுருக்கங்களுடன் இருந்தது. நன்றாய் உற்றுப்பார்த்தேன்,கண்டிப்பாய் அது ஈவா தான். ஒற்றை நாடி. ஒடிந்த புருவம்.

"இந்த சங்கிலி நிகழ்வுகளில் ஏதோ ஒன்றை மாற்றிவிட்டால் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்..அந்த தவறை நான் செய்து விட்டேன்.."

நான் அவளை குறுக்கிட்டேன். "மேடம்..நீங்க எப்படி இங்கே வந்தீங்க..அப்பிடி என்ன தப்பு பண்ணீங்க.."

அவள் என்னைப்பார்த்து சிரித்தாள். 

"நீ..எண்ணங்கள் முழுக்க நீ தான் இருந்தாய்..இதோ என் காதல் நிராகரிக்கப்பட்டவுடன் பவுதீக படிப்பில் நேரத்தை செலவிட்டேன். எத்தனையோ ஆண் நண்பர்கள் வந்து போனாலும் யாரும் என்னை ஈர்க்கவில்லை. ஆராய்ச்சிகளும் பட்டங்களும் விருதுகளும் வந்து கொண்டே இருந்தன. நீ உன் காதலில் அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினாய். திருமணம் செய்தாய்..பிள்ளைகள் பெற்றாய்...என்னையே உன் சொந்த விழாக்களுக்கு அழைத்தாய். அப்படி ஒரு கோபமான நாளில் தான் நான் ராபெர்ட்டை திருமணம் செய்ய முடிவு செய்தேன். அவன் நல்லவன் தான்.ஆனால் என் புகழையும் உயரத்தையும் அவனால் சகித்து கொள்ளமுடியவில்லை. டிபிக்கல் ஆம்பள..நிறைய ஆண்கள் ,பெண்களின் வெற்றியை ரசிக்கிறார்கள் அது அவர்களுக்கு கீழே இருக்கும் வரை.."

அவள் கையில் வச்சிருந்து குச்சியை தூக்கி தூர எறிந்தாள்.

"எனக்குக்கிடைத்த  மிகப்பெரிய ஆசிர்வாதம் "சியா". ராபெர்ட்டுக்கும் அவள் நா உயிர் தான்.எனக்கும் ராபெர்ட்டுக்கும்  மிகப்பெரிய இடைவெளி வந்திருச்சு. சியாவுக்காக தான் விவாகரத்தை தள்ளி வச்சிருந்தோம்..அது ரொம்ப மன அழுத்தம் நிறைந்த நாட்கள்.. அப்போ தான் எனக்கு நோபல் கூட  கிடைச்சது..முனிச் லேப்லயே கிடப்பேன்.. நானும் கேரியும் ஒரு நாள் வார்ம் ஹோல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்... எப்படி எங்களால் அணுக்கழிவிலிருந்து பிளாக் ஹோல் செய்ய முடிந்ததோ ஏன் அதை வைத்து வார்ம் ஹோல் செய்ய முடியாது என்று பேச்சு போனது..எனக்கு அது  அறிவுத்தேடலின் பல வாசல்களை திறந்தது...வார்ம் ஹோல்  எனப்படுவது  ஒரு டணல் போல..இரண்டு காலத்தையும் இணைக்கும் ஒரு சப்வே.. அதாவது ஒரு பேப்பரை இரண்டாக மடித்து இணைப்பது போல ...ரிலேட்டிவிட்டி தியரி படி  .."

அவள் நிப்பாட்டிவிட்டு  என்னையே பார்த்தாள். இந்த அறிவியல் தாழிப்பு எனக்கு தேவையில்லை என நினைத்திருக்கலாம். கொஞ்சம் கன்னத்தை தொட்டு உதட்டை சுளித்து "ஐன்ஸ்டீன் சொன்னாருல்ல..இந்த அண்டம் ஒழித்து வைத்திருக்கும் ஆயிரமாயிரம் அதிசயங்களில் ஒரு சதவீதத்தை கூட நாம் பார்க்கவில்லைனு ..இந்த வார்ம் ஹோல் அந்த மிச்ச சொச்சத்துல சேர்ந்தது.." .

தலையாட்டினேன்.ஐன்ஸ்டீன் என்னிடம் தனிப்பட்ட முறையில் எதுவும் சொல்லவில்லை. பொதுவெளியில் சொல்லியிருக்கலாம்.

"நானே யாருக்கும் தெரியாமல் வார்ம்ஹோல் ஆராய்ச்சியை தொடர்ந்தேன்..முதலில் வாய்ப்பில்லைனு தான் நினைச்சேன்..ஆனா விட மனசில்லை.. ஒரு தடவ கதிர்வீச்சு கையில பட்டு..பாரு " என கையை காட்டினாள். வலது கை மணிக்கட்டுக்கு கீழே வெட்டுக்காயம் போல இருந்தது. கையே சூம்பிப்போய் ஒல்லியாய் இருப்பது போல இருந்தது.


"நாலு வருசத்துக்கு முன்னாடி முதல் முறையா 2016க்கு வந்தேன்..என்னால் நம்பவே முடியல..முனிச்ல இருந்து ட்ரெயின்ல இங்க வந்து தூரமாய் நின்று ரெபெக்காவை பார்த்தேன்.. இறந்து போன எங்க அப்பாவை பாத்தேன் ..ஏன் என்னையே ஏக்கமாய் பார்த்தேன்..அந்த இருபத்து ரெண்டு வயது ஈவா எத்தனை வெகுளியாய் இருக்கிறாள் என பார்த்துக்கொண்டிருப்பேன்..அப்படித்தான் உன்னைத்தேடினேன்.. என் மனதில் அந்த திட்டம் உருவானது..நீயும் அவளும் பெர்லின் யுனிவர்சிட்டியில் தான் படித்து காதலில் விழுந்தீர்கள்..ஒருவேளை அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தினால் என் காதல் கை கூட வாய்ப்பிருக்கும் என தோன்றியது..அதனால் நீ எம்.ஸ் படிக்க பெர்லின் யூனிவெர்சிட்டிக்கு அப்பிளை செய்த பார்ம்ஐயே அங்கு சேர விடாமல் தடுத்தேன்...அவள் மட்டும் அங்கே சேர்ந்தாள்..நல்ல வேளையாய் இந்த முறை போட்டி இல்லை என நினைத்து கொண்டிருக்கையில் இங்கயே ஒன்னோட வேலைக்கு வந்துட்டா..நீயும் நாய் மாதிரி..."  

அவளை நிப்பாட்டினேன். சில நேரங்களில் என் மூளைக்கும் விஷயங்கள் சரியான நேரத்தில் புரியும்.

"இருங்க..நீங்க மானஸ்விய பத்தியா பேசுறீங்க.."

"ஆமாங்க சார்..அந்த மேடத்த  பத்தி தான் பேசுறேன்..நீயும் அவளும் காதலிச்சு கல்யாணம் பண்ணி..பிள்ளைகள் பெத்து..பேரன் பேத்தி பாத்துட்ட கெழடுகள்..அதாவது 2050ல "  என சொல்லிக்கொண்டே ஒரு போட்டோவைகாட்டினாள். நானும் மானஸ்வியும் தோட்டத்தில் உட்கார்ந்திருக்க ஒரு இளம்பெண் கையில் குழந்தையுடன் நின்றிந்தாள். பக்கத்தில் ஒரு  இளைஞன் டவுசருடன் என் தோளில் கைப்போட்டபடி சாய்ந்திருந்தான். எனக்கு தலையில் பாதி முடியில்லை.கூன் விழுந்திருந்தது. மானஸ் கொஞ்சம் குண்டாய் இருந்தாள். எனக்கு அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் கைகள் நடுங்கியது. விவரிக்க முடியாத ஒரு உணர்வு உடல் முழுக்க பரவியது.

 ஈவா என் தோளைத்தொட்டு அது "வினோதினி..இவன் பிரபாகர்.." என கை காட்டினாள். மேற்கொண்டு பையிலிருந்து தான் எடுத்து வந்த என் பெர்லின் யூனிவர்சிட்டி அப்ளிகேசனையும் காண்பித்தாள். நான் எப்போதோ ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பியது. என் வாழ்க்கையின் ஒரு பக்கத்தை கிழித்து மொத்தத்தையும் மாற்றி இருக்கிறாள்.

"விஷயத்துக்கு வர்றேன்...நான் பண்ணுன தப்பு இப்போ தான் புரிஞ்சது..அது தான் பேரடாக்ஸ்..அதாவது முரண்பாடு... ஒருவேளை இங்க நீயும் மான்ஸ்வியும் சேரலேனா.. வினோவும் பிரபாவும் அங்கே முரண்பாடுகள்..அவர்களின் இருப்பு இயற்கைக்கு எதிரானது.இயற்கை அவற்றை அதுவே சரி செய்ய பார்க்கும்..அவர்கள் ஏதோ ஒரு வழியில் மாண்டு போவார்கள்..அப்படியே தான் சியாவுக்கும்.. நிகழ்காலத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மற்ற காலங்களை பாதிக்கும்...பிறப்பு...இறப்பு..விபத்து என எல்லாமுமே தான்.. "

திடீரென முதலில் சந்திப்பவர்களை எங்கேயோ பார்த்தது போல இருப்பது அதனால் தானோ என்று தோன்றியது. மானஸ்வி மேலே திடீரென பேரன்பு ஒன்று உருவாகி அது என்னை பாதி கிறுக்காக்கியதும் கூட எதிர்காலத்தின் நீட்சியாய் இருக்கலாம்.

"ஷிவ்...நீயும் மானஸ்வியும் சேர்ந்தே ஆகணும்.. நமக்கு வேற வழியே இல்ல.." 

அதாவது நான் என் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டுமானால் என் பொண்டாட்டியை முதலில் காதலித்து கரெக்ட் செய்ய வேண்டும். இப்போது கொஞ்சம் தைரியமாய் இருந்தது. ஆக என்னது பொருந்தாக்காதலோ கள்ளக்காதலோ இல்லை. நடந்தேற வேண்டிய நியாயமான காதல். 

"எனக்கு டைம் ஆகுது நான் மூனு நாளுல திரும்ப வர்றேன்..இந்தா இது அவளோட பழைய டைரிகள்..எடுத்துட்டு வந்துட்டேன்..இத நல்லா  படி.. ஒர்க் பண்ணு..நீ அவளை காதலிக்க வச்சே ஆகணும்....ஒரு சயின்ட்டிஸ்ட்ட என்ன வேலை செய்ய வச்சிருக்கீங்க பாருங்க.. இன்னொரு தடவ சுவாமிஜி கீமிஜி னு போன அவ்ளோ தான்..  "

அவள் எழுந்து கிளம்பினாள். எங்கே போகிறாள். எப்படி போகிறாள் என்றெல்லாம் எனக்கு கேட்க தோன்றவில்லை. அவள் கையில் திணித்த புத்தக மூட்டையுடன் நானும் நடக்கத்தொடங்கினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

ரூமிற்குள் நுழைந்த போது உடல் ரொம்ப அசதியாய் இருந்தது. தல்பீர் என்னைப்பார்த்தவுடன் அதிர்ச்சியானான். கையில் வைத்திருந்த பீரை மறைக்க முயன்றான்.

"ஜி..நீங்க லேட்டா வருவீங்கன்னு நினைச்சேன்..அதான் துணைக்கு இருக்கட்டும்னு ஒரு லேகர உள்ள விட்டேன்..நீங்க அறிவுரைய ஆரம்பிச்சீராதீங்க ப்ளீஸ்.."

நான் எதுவும் பேசாமல் போய் ஷோபாவில் உட்கார்ந்தேன்.

"யோவ் சிவா..ஏதாவது பேசுயா.. சில டைம் நீ இருக்கியா இல்ல நானே நீ இருக்குற மாதிரி கற்பனை பண்ணிக்கிறேனானு டவுட்டா இருக்குயா.."

"டேய் ..போய் தூங்குடா.."

"சூப்பர் ஜி..அப்போ இருக்கீங்க..நாளைல இருந்து நானும் உங்க ஸ்பிரிட்டுவல் ட்ராவெல்ல சேந்துக்குறேன்...இப்போதைக்கு மிச்சத்த முடிச்சுறேன்" னு சொல்லியபடி அவன் ரூமுக்குள் போனான்.

நான் கையிலிருந்த பைக்குள் கையை விட்டபடி டைரிகளைத்தேடினேன். மெரூன் கலர் தடிமன் அட்டையில் 2017 என்று போட்டிருக்கின்ற டைரியை எடுத்தேன்.  குத்து மதிப்பாய் திருப்பினேன்.



ஜனவரி -4 2017 நாக்பூரிலிருந்து இன்று பெர்லின் வந்திறங்கினேன். ஏர்போர்ட்டில் அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிய கஷ்டமாய் இருந்தது. நானும் அது போல தங்கு தடையின்றி அழகாய் ஆங்கிலம் பேச பழக வேண்டும். குளிர் அவ்வளவு அதிகம் இல்லை.ஜெர்மானியர்கள் அதிக உயரமாய் இருக்கிறார்கள். நாளை வகுப்புகள் தொடங்குகின்றன. விநாயகரை அடிக்கடி கும்பிட்டுக் கொள்கிறேன் .

பெரும்பாலும் தின நிகழ்வுகள்..கொடுமையான கவிதைகள் என்றபடியே அனேக பக்கங்கள் இருந்தன.அப்போது தான் அந்த பக்கம் கண்ணில் பட்டது.

ஏப்ரல்-14 2017 இன்றும் சிவாவுடன் டின்னருக்கு போனேன். எனக்கு அவன் கண்களை பார்த்தவுடன் தெரிந்து போனது, இன்று அவன்  சொல்லிவிடுவானென.  ஒரு மாதமாய் ஒன்றாகவே சுத்திக்கொண்டே இருக்கிறோம். முதலில் எனக்கு அவன் மீது ஈர்ப்பில்லை. பேச பேசத்தான் பிடித்தது. ஊர்வசி கூட "அவன் ரொம்ப சுமார் ..ஹிந்தி தெரியாது வேற.." என எதிர்மறையாய் சொன்னாள். எனக்கு அவனை ரொம்பவும் பிடித்திருக்கிறது. என் மிச்ச வாழ்க்கையை அவன் தோளில் சாய்ந்து கொண்டு..அந்த அரைவேக்காட்டு நகைச்சுவையை கேட்டுக்கொண்டே ஓட்ட முடிவெடுத்து விட்டேன்.  

                      தூக்கமில்லா என் இரவுகளில் 

                                                மெல்லிசைப்பாடல் நீ 

                      வெளிச்சமில்லா அத்தருணங்களின் 

                                                    விட்டில் பூச்சி நீ...

                       என் சிரிப்பின் சாவியை உன் 

                                                 உதட்டில் வைத்திருக்கிறாய்

                         நீ அருகில் இருக்கையில் மொத்த  

                                        உலகமும் வீணாய்த் தெரிகிறதேன்..


எனக்கு அதற்கு மேல் படிக்க தெம்பில்லை. மானஸ்வி பேசினாலே கவிதை போலத்தான் இருக்கும்.ஆனால் அவள் கவிதைகள் எதுவும் பேசும்படி இல்லை. நான் சில அதிசயங்களை நிகழ்த்தினாலொழிய அவளது வாழ்க்கைக்குள் நுழைய முடியாது என புரிந்து போனது.

                                                                    

                                                                                                           ---தொடரும் 

கருத்துகள்