ஆரஞ்சுக்காவியம் -பகுதி 9






தல்பீருடைய ஷூக்கள் கால்களுக்குள் சரியாய் பொருந்தவில்லை. கொஞ்சம் வேகமாய் நடந்தால் கழன்று விழுந்து விடும் போல இருந்தது. சாக்ஸை கீழே இறக்கிவிட்டு நிலைமையை சரி செய்ய முயன்றேன். ரோஹன் அதற்குள் அந்த பக்கம் வந்தார். யாரை எந்நேரங்களில் சந்திக்க கூடாதென நினைக்கிறோமோ அவர்களை கனகச்சிதமாய் அந்நேரத்தில் விதி அழைத்து வரும். ஒரு மஞ்சள் கலர் டிராக் பேண்ட்டில் சிரித்த படி என்னை மேலும் கீழும் பார்த்தார்.காதில் ஒரு ஹெட் போன். அது நாலைந்து இடங்களில் ஒட்டு போடப்பட்டு இருந்தது.

"ஷிவ்...யோகா..மெடிடேஷன்..இப்போ ஜாக்கிங்கா... வரீங்களா போலாம்.."

"இல்லங்க ..தல்பீருக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..நீங்க போங்க.."

"ஓ..அவரு வேறயா..இன்னைக்கு மழை..புயல்னு பிச்சுக்க போகுது.."

லேசாய் சிரித்தேன். மற்ற நேரங்களில் நிறைய சிரித்து அவரை மகிழ்வித்திருப்பேன்.இப்போது மூளை அவுட் ஆஃப் ஆர்டரில் இருக்கிறது. அவர் மெதுவாய் ஓடத்தொடங்கினார். மனதிற்குள் திட்டத்தை ஓடவிட்டேன் "அவள் ஆறு மணிக்கு கீழிறங்கி வருவாள்..தனியாகத்தான் வருவாள்..வர வேண்டும் .. நான் ஷூ லேஷை மாட்டுவது போல நடித்துக்கொண்டிருப்பேன்..என்னை பார்ப்பாள்..பேசுவாள்..அப்பிடியே சொருகிக்கொண்டு  கூடவே ஜாக்கிங்  போக  வேண்டும் " . எல்லாத்தையும் சமாளித்து விடலாம் ஆனால் அவள் வேகத்துக்கு ஓடுவது கஷ்டம். என்ன ஒரு மானக்கேடான சங்கடம். யாரோ படியிறங்கும் சத்தம் கேட்டது. அவளாய்த்தான் இருக்க வேண்டும். நான் என் ஷூ லேஸ்களை ஆராயத்தொடங்கினேன். "ஒரு வேளை அவ கண்டுக்கிடாம போய்ட்டா.. இல்ல ..வாய்ப்பில்ல ..கண்டிப்பா பேசுவா...ஆயிரந்தான் பழைய ஐடியாவா இருந்தாலும் இது ப்ரூவன் டெக்னிக் .." 

மானஸ்வி "சிவா" என கூப்பிட்டாள். மூன்று மணியிலிருந்து முழித்திருந்து வேலை செய்தது வீண்போகவில்லை. மெதுவாய் நிமிர்ந்து அவளை பார்த்தேன். ஒரு பொம்மை படம் போட்ட டீ ஷர்ட் ..டைட்டான கருப்பு ட்ராக் அணிந்திருந்தாள். தலை முதல் கால் வரை ஒரு அலை உருவாகி என்னை லேசாய் உலுக்கியது. "சே..அந்த கிழவி மட்டும் சேட்டை பண்ணாம இருந்திருந்தா இந்நேரம் நாங்க எப்படி இருந்திருப்போம்..".மனது பல காதல் காட்சிகளை அந்த பாதி வினாடியில் கற்பனை பண்ணி ரசித்து திரும்பியவுடன் நான் "ம்..சொல்லுங்க" என்றேன். முகத்தை விரைப்பாய் வைத்துக்கொண்டேன்.

"கொஞ்சம் பேசலாமா.."

"அதுக்கா ஷூ..பேண்ட்..டீ ஷர்ட்லாம் போட்டு வந்திருக்கீங்க.."

குறும்பாய் முறைத்து பார்த்துவிட்டு "அப்போ வாங்க..ஜாக் பண்ணிட்டே பேசலாம்" என்றாள்.சரியென்றபடி தலையாட்டினேன். அவள் ஓடினாள். என் கால்கள் அவளை தொடர்ந்தன. குளிர் கொஞ்சம் அதிகமாய் இருந்தது. பேசும் போது இருவரது வாய்களிலும் புகை வந்தது.முதலில் கொஞ்ச தூரம் பேசாமல் ஓடிக்கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போல அவளே ஆரம்பித்தாள். 

"நீங்க என் மேல கோபமா இருப்பீங்க..ஆனா என் நிலைமையும் புரிஞ்சிருக்கும்..எனக்கு கல்யாணம் ஆகப்போகுது..தப்பா ரூமர் ஏதாவது 
கிளம்பி பிரச்சனை ஆகிடுமோனு பயம்..அதான் யோசிக்காம அப்பிடி பேசிட்டேன்..பியூஸுக்கு ஷார்ட் டெம்பர்..பார்த்தா தெரியாது..அன்னைக்கு நான் சைமன்ட்ட பேசிட்டு இருந்தப்போ கூட அப்செட் ஆகிட்டான்..சில நேரம்  ஜாலியா பண்றது வேற மாதிரி சங்கடத்த கொடுத்திடும்.."

நான் அமைதியாய் ஓடி வந்துகொண்டிருந்தேன். எதுவும் பேசவில்லை. அவள் என்னை திரும்பி பார்த்த படி ஓடி வந்தாள். ஏ.டி.எம்மில் பின் நம்பர் அடித்து விட்டு காசுக்கு காத்திருக்கும் நபர் போல என்னையே பார்த்தாள். நான் நின்றேன். அவளும் நின்றாள். நான் எதுவும் பேசுவதற்கு யோசித்து வைக்கவில்லை. மனதிலிருப்பதையே சொல்லிவிடுதல் சாலச்சிறந்தது.

"மானஸ்..அது தப்பு தான்..மாற்றுக்கருத்தில்லை..சில நேரம் திருடி மாட்டிக்கிட்டவன்ட்ட கூட "ஏன்டா பண்ணினே" னு கேப்பாங்க...அவன் சொல்ற காரணம் அவன் வாங்கப்போகும் சில உதைகளை குறைக்கும் தகுதியையாவது பெற்றிருக்கும்.."

"ஜி..என்னங்க இவ்வளோ சீரியஸா போறீங்க..நானே உங்கள கூல் பண்ணி பழைய ஜாலி வெர்சனுக்கு கொண்டு வரலாம்னு வந்தா.."

அந்த நிமிடத்தில் டபிள்யூ.டபிள்யூ.எஃப்பில் எதிராளியை அண்டர்டேக்கர் கழுத்தை பிடித்து தூக்கி போடுவது போல அவளை  தூக்கிப் போடவேண்டும் போல இருந்தது. நான் கோர்வையாய் போய்க்கொண்டிருக்கையில் குறுக்கே புகுந்து ட்ராக் மாத்துகிறாள். அந்த ஜெர்ரிப்பழ  உதடுகளை பார்த்து சாந்தமானேன்.தொடர்ந்தேன். அவள் கண்களை குறுக்கி கேட்க தயாரானாள்.

"எப்படி சொல்றது..நா உங்கள தூரமா இருந்தே சைட் அடிச்சிட்டு..இது ஹீரோயின் கணக்கா இருக்கு நமக்கெல்லாம் வாய்ப்பே இல்லனு தள்ளிதா இருந்தேன்... பக்கத்துல பாக்குறப்போ வேற மாதிரி தெரிஞ்சீங்க..அழகா இல்லேன்னாலும் புடிச்சிருக்கும்னு தோணுச்சு.. அன்னைக்கு நைட் மூனு மணி நேரம் தம்மடிச்சிட்டே பேசிட்டிருந்தோம்ல..அப்போயே விழுந்துட்டேன்..யாரோ சொன்னது மாதிரி காதல் ஒரு பாழும் கிணறு..அங்கே யாருக்கும் கண் 
தெரிவதில்லை .. எனக்கு பியூஸ்..நிச்சியதார்த்தம் ..எதுவும் தெரில ... "

அவள் செயற்கையாய் முறைத்தாள். "சீரியஸாவா பேசுறீங்க ..."  

நான் அவளையே பார்த்தேன். "வேணும்னா உங்க நிச்சய பத்திரிக்கை ஒரு காப்பி  கொடுங்க...திங்குறேன்...செரிக்கட்டும்.. அப்புறமாச்சும் மனசுக்கு புரியுதா பாக்கலாம்.. ஒன்னும் சொல் பேச்சு கேட்க மாட்டிங்குது.."
  
"ஆர்.யூ நட்ஸ்??"

"ரொம்ப இழுக்க வேணாம்..எனக்கு உங்கள பிடிச்சிருக்கு..அவளோ தான்..மத்த படி நடக்குறது நடக்கட்டும்.. "

சொல்லி விட்டு பின்னால் திரும்பி வேகமாய் நடக்கத்தொடங்கினேன். அவள் என்னையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

வாவிடம் நடந்ததை ஒப்பித்தேன். அவள் அமைதியாய் கேட்டுக்கொண்டே இருந்தாள். பெரும்பாலும் அவள் மரங்களையும் வானத்தையும் வெறித்தபடியே தான் இருப்பாள். கையில் ஒரு க்ரீம் போல வைத்திருந்தாள் அதை அடிக்கடி முகத்தில் போட்டுக்கொண்டாள். அதை போட்டவுடன் முகத்தின் சுருக்கங்கள் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது.

"பரவால்ல ..விடாம முயற்சி பண்ணனும்..நமக்கு டைம் வேற இல்ல..அந்த டைரி ஏதாவது உபயோகப்படுமா..."

"ம்ம்ஹீம்..கவிதையா எழுதி கொன்றுக்கா.. "

லேசாய் சிரித்தாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே "கோஸி" ரெஸ்டாரண்ட் வரை வந்தோம். அவளுக்கு ரொஸ்டேட் ஸ்டீக் சாப்பிட வேண்டும்  போல இருப்பதாய் சொன்னாள். 

"ஈவா..அவளுக்கு பிடிக்குதா பிடிக்கலையாங்கிறதே பாயிண்டுக்கே இப்போ வரல..அதாவது அவ ஏற்கனவே கமிட் ஆன பையன் கூட கல்யாணம் ஆகப்போகுது..அவளை பொறுத்தவரை அந்த கேள்வி தேவையில்லை..ஐ ம்  இரெலெவன்ட்..."

அவள் நான் பேசுவதை கேட்கிறாளா தெரியவில்லை. அவள் கவனமெல்லாம் ஸ்டீக்கை தின்பதிலேயே இருந்தது. மாடு மேய்ந்து பார்த்திருக்கிறேன். மாடையே இப்படி மேய்ந்து அன்று தான் பார்த்தேன். "இந்த டேஸ்ட் அங்க வரல " என்றாள்.  ஏதோ பக்கத்து ஊரை சொல்வது போல சொன்னாள். மனதிற்குள் அப்போது தான் அது தோன்றியது. கேட்டும் விட்டேன்.

"ஏன் ஈவா.. நா வேணும்னா ஒரு தடவ அங்க வந்து பாக்கவா...அதாவது 2050க்கு..பார்த்தா ஒரு ஐடியா கிடைக்கும்ல...வேற ஏதாவது கீ பாயிண்ட் கிடைக்கலாம்.. ஒரு தடவ அந்த மானஸ்வியயும் குடும்பத்தையும் பார்த்தா நல்லா இருக்கும்னு தோணுது.."

"ஒனக்கு இன்னும் நம்பிக்கை வரல??"

"சே சே.. அதுக்கில்ல... ஒரு மோட்டிவேஷனுக்குத்தான்... சாதாரணமா ஓடுறதுக்கும் நாய் துரத்தும்போது ஓடுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல.."

அவள் கொஞ்சம் யோசித்தபடி  என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். "ஆனா நீ அங்க த்ரீ அவர்ஸுக்கு மேல இருக்க முடியாது..ஐ.டி செக் ரேண்டமா நடக்கும் ..மாட்டுனா வெளிலயே வர முடியாது.. மரண தண்டனை கூட கிடைக்கலாம்.." 

"மூனு மணி நேரம் போதும்.."

"சரி வா"  என்றபடி நடந்து போனாள். நான் அப்படியே பின்னால் நடக்கத்தொடங்கினேன். ரொம்ப தூரம் நடந்து ஒரு ஊசி மர காட்டை அடைந்தோம். எனக்கு வியர்க்கத்தொடங்கியது. "இப்படியே நடந்தேவா முப்பது வருஷம் பின்னால போகப்போறோம்". அவள் வேகமாக நடந்து ஒரு மரத்தின் அடியில் மண்ணை தோண்டினாள். நான் முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். உள்ளே புதைந்திருந்த ஒன்றை எடுத்தாள்.உருண்டையாய் தங்க நிறத்தில்  பந்து போல இருந்தது. பாக்கெட்டில் இருந்து ஒரு கண்ணாடிக்குடுவையை எடுத்து அதற்குள் சொருகினாள். 

"இதென்ன"

"சீசியம்"

அதை உள்ளே போட்டவுடன் அந்த தங்கப்பந்துக்குள் ஆங்காங்கே சின்ன விளக்குகள் எரிகிறது. ஏதோ இயந்திர சத்தங்கள் கேட்கிறது. அதில் ஒரு சின்ன பொத்தானை அமுக்கினாள்.உடனே பக்கத்து திரையில் எண்கள் வந்தது. அது முப்பது..இருபத்தி ஒன்பது என்று குறைந்து கொண்டிருந்தது..அந்த பந்தை அவள் கீழே வைத்து விட்டாள்.

"கைய பிடிச்சுக்கோ..நா போகுற திசைலேயே வா..உடம்பு அதிரும்..காது அடைக்கிற மாதிரி இருக்கும் பயப்படாத.."



சொன்னவுடன் பயம் வந்தது. திரையில் எண் பூஜ்ஜியம் என வந்ததும். "உஸ்.." என ஒரு சத்தம் வந்தது. பின் புகை போல ஒன்று பந்திலிருந்து கிளம்பி கருப்பாய் ஒரு வட்டத்தை உருவாக்கியது.பார்க்க அது பெரிய மர பொந்து போல இருந்தது. ஈவா என் கையை பிடித்த படி அதனுள் நடக்கத் தொடங்கினாள். முதலில் எதிர்காற்றில் நடப்பது போல தான் இருந்தது. ஆனால் பின்னர் தான் கவனித்தேன் எடையே இல்லாதது போல இருந்தது. முழுக்க இருட்டாய் இருந்தது. சில வினாடிகளில் திடீரென கீழே விழுந்தோம்.
எழுந்து பார்த்தால் ஏதோ வீட்டில் இருக்கிறோம். ஈவா யதேச்சையாய் எழுந்து நடந்து போனாள். அது ஈவாவின் வீடு. இது போன்ற நேரப்பயணங்களுக்கு பிரச்சனை வரக்கூடாதென வாங்கியிருக்கிறாள்.   

ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். வானளாவிய கட்டிடங்கள் இருந்தது. ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இருவர் உட்கார்ந்தபடி மிககுட்டி விமானம் போல ஒன்று பறந்து கொண்டிருந்தது. நான் வியந்து பார்ப்பதை பார்த்து ஈவா "அது ஏர் டேக்சி..நெதெர்லாந்துல மட்டும் பத்து மில்லியன் இருக்கு..ஸ்மால் அண்ட் ஸ்லீக்..நோ மோர் கார்ஸ் " என்றாள்.    

"ஏங்க அப்போ இந்தியா எப்படி இருக்குங்க..அது இன்னேரம் வல்லரசாயிருக்குமே..அப்பவே புதிய இந்தியா பிறந்திருச்சு.."

"அப்படிலாம் தெரில.. நியூஸ்ல இப்போ தான்  பாத்தேன்..இந்தியால யாரோ பழைய பிரதமருக்கு இருபதாயிரமடில சிலை வக்கிறாங்களாம்..அவரு வெள்ளை தாடி வச்சுக்கிட்டு..கைல தட்டு டம்ளர் வச்சுக்கிட்டு நிக்கிற மாதிரி சிலை இருந்திச்சு..கீழ "கொரோனாவை விரட்டிய நல் வேந்தே" ங்கிற ரீதில   ஏதோ எழுதியிருந்தது."

தலையில் கை வைத்துக்கொண்டேன். ஜீயை அப்புறம் டீல் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து "எப்போ அவுங்கள பாக்கலாம்" என்றேன்.


கொஞ்ச நேரத்தில் டேக்சியில் ஏறினோம். வீட்டின் பால்கனியில் வந்து ஹார்ன் அடிக்கிறார்கள். எல்லார் வீட்டிலும் பால்கனிக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் இருக்கிறது. எளிதாய் ஏறி அமர்ந்து விடலாம். ஏறியவுடன் திரையில் அட்ரஸ் அடித்தால்,அதுவே பறக்கிறது. ட்ரைவரெல்லாம் கிடையாது. நாங்கள் அந்த வீட்டின் பக்கத்தில் இறங்கிக்கொண்டோம். முதல் முதலாய் என்னைப் பார்த்தேன். நானும் மானஸ்வியும் வாசலில் சேரில் உட்கார்ந்திருந்தோம். முடி முழுக்க நரைத்துப்போயிருந்தது. மானஸ்வி கொஞ்சம் குண்டாய் இருந்தாள். அவளுக்கு முடி குறைந்து போயிருந்தது.  "காலைல கரெக்ட்டா வாக்கிங் வரணும்... அப்புறம் ஏப்பமா வருதுன்னு புலம்பக்கூடாது" என என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். நான் எச்சிலை முழுங்கிக்கொண்டேன். ஒரு பெண் வந்து எங்களுக்கு க்ளாசில் ஏதோ கொடுத்தாள். அவளுக்கு முகம் என் ஜாடையில் இருந்தது. அவளைப்பார்த்ததும் எனக்கு உடல் சிலிர்த்தது. கொஞ்சமாய் நடந்து வீட்டின் மூலையில் உள்ள ரூம் ஜன்னலுக்கு பக்கத்தில் போனோம். ஈவா என் கையில் கிள்ளி "அங்க பார்" என்றாள். அந்த அறையின் சுவற்றில் அந்த படம் மாட்டப்பட்டிருந்தது. நானும் மான்ஸ்வியும் திருமண உடையில் ஒருவர்மீதொருவர் சாய்ந்து கொண்டு புகை பிடித்துக் கொண்டிருக்கிறோம்.மிக இயல்பாய் அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கண்ணீர் வந்தது. ஈவா தோளைத்தட்டினாள். "அப்போ பியூஷ் என்ன பண்றான்..நமக்கு அத வச்சு ஒரு ஐடியாகிடைச்சா.."  

"நமக்கு டைம் இல்ல.."

"ப்ளீஸ் "



கையிலிருந்த செவ்வக மெஷினில் தட்டி  பியூஷின் அட்ரெஸ்ஸை கண்டுபிடித்தாள். அடுத்த பத்தாவது நிமிஷத்தில் அங்கே இருந்தோம். பியூஸ் பெருசாய் மாறவில்லை. கொஞ்சம் கூன் போட்டிருந்தான். அவன் ஹாலில் கையில் கிளாஸுடன் பேசிக்கொண்டிருப்பது தெளிவாய் கேட்டது. பக்கத்தில் போய் காது கொடுத்தோம்.

"இந்த காதலின் வெற்றியை நாம கொண்டாடணும்..இன்னைக்கோட நாம கல்யாணம் பண்ணி இருபத்தியெட்டு வருஷம் ஆச்சு..எத்தனை சவால்கள்..எத்தனை வலிகள்.."

 அவன் மனைவி அந்த பக்கம் நின்றிருக்க வேண்டும். இவன் அவளை மறைத்த படி பேசிக்கொண்டிருக்கிறான்.வீட்டில் வேறு யாருமில்லை. அவன் யாரை மணந்திருக்கிறான்னு தெரிஞ்சா அது உபயோகமா இருக்கும்.

"எத்தனை வேதனைகள்..அப்போல்லாம் வீடு கூட கொடுக்க மாட்டானுங்க.. எங்க போனாலும் கேலி..இப்போ உலகமே மாறிடுச்சு.. "  என அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அந்த பக்கத்திலிருந்து சைமன் வந்து பியூஷை கட்டிப்பிடித்து "ஹாப்பி  28த் அனிவெர்சரி டியர் " என்றான்.

                                                                                                             - தொடரும் 

 

கருத்துகள்