ஒரு ஆரஞ்சுக்காவியம் -6


இதுவரை 

-------------------

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 2

ஆரஞ்சுக்காவியம்-பகுதி 3

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 4

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 5





முழித்து பார்க்கும் போது ஹாலிலிருந்த ஷோபாவில் படுத்திருந்தேன்.  தல்பீரும்,யோரிஸ்ஸும் என்னை பார்த்தபடி பக்கத்து சேரில் உட்கார்ந்திருந்தனர். என்ன தான் நெருங்கிய நண்பர்களானாலும் எழுந்தவுடன் அவர்கள் முகம் பார்ப்பதில் எனக்கு பெரிய உடன்பாடில்லை. முகத்தை அஷ்ட கோணலாக்கி ,இரு கைகளையும் நெட்டி முறித்தேன். முந்தைய நாள் சம்பவங்கள் எனக்கு பெரிய எரிச்சலையும் அவமானத்தையும் கொடுத்தன.   "கோபமான,சோகமான,பதட்டமான சூழ்நிலைகளின் போதுதான்  'நிஜமான நீ'  உனக்கே தென்படுவாய் . அவனை மேம்படுத்து..அவனை உற்சாகப்படுத்து..."  என்ற சுவாமிஜியின் வரிகள் ஞாபகம் வந்து  எனக்கு மேலும் துக்கத்தை கொடுத்தது. 'இனி குடிப்பதில்லை" என ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக முடிவெடுத்தேன். தல்பீர் பக்கத்தில் போய் " ரொம்ப சாரி டா " என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு மொபைலை எடுத்து  என்னிடம் நீட்டினான். வாங்கினேன். "நானும் ரொம்ப சாரி" என்றான். படித்துப்பார்த்தேன். "ஐ  லவ் யு .. ட்ரூலி.. டீப்ளி..மேட்லி " என மானஸ்விக்கு அனுப்பப்பட்டிருந்தது.

என் ரத்த நாளங்கள் கொதிக்கத் தொடங்கின. யோரீஸ் வேகமாய் என் பக்கத்தில் வந்து கீழிருந்த  ஆஷ்ட்ரே..கண்ணாடி க்ளாஸ்கள்... தட்டுகள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடினான். அங்கு வன்முறை நடந்தால் சேதாரங்ளை குறைக்க வேண்டுமென எண்ணியிருப்பான். கன்னத்தில் அறைய கையை ஓங்கிய போது தான் சுவாமிஜி நல்ல வேளையாக ஞாபகம் வந்தார்.அமைதியானேன். தலையில் கைவைத்து ஷோபாவில் உட்கார்ந்தேன்.

"யோவ் சிவா..அடிக்கனும்னா கூட அடிச்சுக்கோ..ஆனா திட்டாத..காலங்காத்தால என்னால அத கேக்க முடியாது.." என்ற படி பக்கத்தில் வந்து தோளைத் தொட்டான். எழுந்து அவனை ஒரு முறை கட்டி அணைத்துக்கொண்டேன். "எல்லாம் கர்மா..அனுபவித்தே ஆக வேண்டும்" . எழுந்து நடக்கத்தொடங்கினேன். 

"டேய்..காஃபி குடிச்சிட்டு போடா..." என காபி டம்ளருடன் ரெபெக்கா ஓடி வந்தாள். இல்லை என கை காண்பித்தபடி யோரீஸின் பழைய சைக்கிளை எடுத்தேன். காபி ரொம்ப சுமாராய்த்தான் இருக்கும். 

------------------------------------------------------------------------------------------------------------------------

ங்களின் குடியிருப்பை அடைந்தேன். லேசாய் பனி விழுந்து கொண்டிருந்தது. சைக்கிள் கொஞ்சம் வழுக்கியது. வாசலில் வண்டியை நிப்பாட்டிப்பூட்டினேன். வரும் வழியில் மானஸ்விக்கு   மூன்று முறை போன் செய்தேன்,எடுக்கவில்லை. நேராய் எங்களின் அறைக்குப் போனேன். மனது படபடப்பாய் இருந்தது. என்ன நினைத்திருப்பாள்.அருவருப்பாய் இருந்தது. பாத்ரூமிற்கு போய் சூடு தண்ணீர் ஷவரில் குளித்தேன். இதமாய் இருந்தது. "பயப்படாதே.. மன்னிப்புக்கோரு..நீ சனிக்கிழமை இரவில் எந்த நிலையில் இருப்பாயென அவளுக்குத் தெரியும்.."  

கொஞ்ச நேரத்தில் உடை மாற்றிக்கொண்டு அவளின் அறைக்குப்போக  தீர்மானித்தேன். குழப்பமாய்த்தான் இருந்தது .எனக்கு அவளிடம் பேசியாக வேண்டும். அவள் வலது ஓரமாய் இருந்த பிளாக்கில் இரண்டாவது தளத்தில் இருந்தாள். ஞாயிற்றுகிழமை ரூமில் தான் இருப்பாள். நடக்கத்தொடங்கினேன். அவள் அறையின் கதவில் "ஒண்டெர் வுமன்" ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.அவளுக்கு டி.சி காமிக்ஸுகள் பிடிக்கும். பெல் அடித்தேன். பதினைந்து  நொடிகள் கடந்திருக்கும். சத்தமேதும் கேட்கவில்லை. திரும்பவும் பெல் அடிக்க கையை தூக்கினேன், சரியாய் கதவை திறந்தாள். ஒரு மஞ்சள் டீ ஷர்ட்டும்..ட்ராக்  பேண்ட்டும்  அணிந்திருந்தாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் என்னை வெறுமையாய் பார்த்தாள். அவள் அதுவரை ஒருமுறை கூட என்னை அப்படி பார்த்ததில்லை. குற்ற உணர்ச்சி என் கண்ணில் தெரிந்திருக்க வேண்டும். எதுவும் சொல்லாமல் உள்ளே போனாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வாக்கிங் போகும் போது காணாமல் போன நாய் போல சில நொடிகள் விழித்தேன்.  பின் தயங்கி உள்ளே சென்றேன்.

பிரியாவும் அவளும் ரூம் மேட்ஸ். பிரியா கடுமையான மேக் அப் சகிதம் ஷோபாவில் உட்கார்ந்திருந்தாள். எங்கோ போகத்தயாராய் இருந்தாள். என்னைப் பார்த்தவுடன் "டேய்..நீ எங்க இங்க.. சன்டே னா சாயங்காலம் தானடா எழுந்திருப்பீங்க..என்ன நூடில்ஸ் கடன் வாங்க வந்தியா?.."  எதிரில் இருப்பவர்கள் நிறைய பேசினால் நமக்கு சாதகமாய் இரண்டொரு பாயிண்டுகள் கிடைக்கும். ஆமாமென தலையாட்டினேன். 

"நான் துருவ் பேமிலி கூட ஆம்ஸ்டர்டாம் போறேன்..ஊர் சுத்திட்டு மதியம் அசோகாவுல  ஃபுல்  கட்டுகட்டிட்டு வரப்போறோம்.."

நான் திரும்பி மானஸ்வியை பார்த்தேன். அவள் ஃப்ரிட்ஜ்ஜில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். "மான்ஸ் வரல.. டயர்டா இருக்காம்.."


அவளுக்கு போன் வர.. எடுத்து பேசிவிட்டு "சரி நா கிளம்புறேன்"னு எழுந்து ஓடினாள். இப்போது அறையில் நெடிய நிசப்தம் குடிகொண்டது. மானஸ்வி கிச்சனில் இருந்தாள்.அந்த அறை மிக  சுத்தமாக இருந்தது. மற்ற தருணமாய் இருந்திருந்தால் "க்ளீனிங்கு எதுவும் ஆயா  வராங்களா " என கேலி  செய்திருப்பேன். இப்போது என் நிலைமையே கேலிக்கூத்தாய் இருப்பதால் அமைதி காத்தேன். கொஞ்ச நேரத்தில் மானஸ்வி காபி கப்புடன் வந்து எதிரில் அமர்ந்தாள். என்னை பார்க்காமல் கீழே பார்த்த படி காபி குடிக்கத்  தொடங்கினாள். 

 "மான்ஸ்..நேத்து நாங்க வேற நிலைமைல இருந்தோம்..தல்பீர் விளையாட்டுத்தனமா அப்பிடி பண்ணிட்டான்.."

அவள் என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் காபியை தொடர்ந்தாள்.ரத்த வெறியில் இருக்கிறாள் எனத்தோன்றியது.

"இனிமே இந்த மாதிரி எதுவும் நடக்காது..நா ஊரு.."

கப்பை பொத்தென நடுவிலிருந்த டீப்பாயில் வைத்தாள்.

"நீங்கெல்லாம் ஜாலி கேங். விளையாட்டுக்குனு என்ன வேணும்னா பண்ணலாம். அதுவும் போதைல இருந்தா கேக்கவே வேணாம்..நாங்கெல்லாம் கெக்கெ பேக்கே னு சிரிச்சிட்டு  போயிடனும்..தெரியாம தான் கேக்குறேன் உன் வீட்டு பொண்ணுகளுக்கு யாராவது இப்பிடி அனுப்புனா சும்மா இருப்பியா? நீங்கெல்லாம் சினிமா பாத்து லூசா ஆயிட்டீங்க டா..அங்க தான பொறுக்கி பசங்கள ஹீரோவா காட்டுறானுங்க

அவள் எறும்பை கூட அடிக்க யோசிப்பாள். என்னை சோபாவில் எதிரே உட்கார வைத்து இப்பொது "கொத்துக்கறி" போடுகிறாள்.

"நானும் பியூஷும் லவ் பண்றோம்னு தெரிஞ்சும்..இன்னும் ஒரு மாசத்துல நிச்சியம்னு தெரிஞ்சும்... இதைப்பண்றேனா  நீ பொறுக்கிபய தான .."

நான் அவளை அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பக்கம் நியாயம் இருக்கலாம் தான். வீட்டுப்பாடம் செய்யாதவனை துப்பாக்கி வைத்து சுடுவது போல இருந்தது அவளது தண்டனை. அவள் தொடர்ந்து வசை மாரி பொழிந்து கொண்டிருக்க எழுந்து நடக்கத்தொடங்கினேன். கதவிற்கு பக்கத்தில் போன பின்  திரும்பி "சாரி" எனச்சொல்லி விட்டு தொடர்ந்து நடந்தேன். 

-------------------------------------------------------------------------------------------------------------------------

ரே மாதத்தில் ஆன்மிகத்தில் முத்தெடுத்தவன் போல உணர்ந்தேன்.ஆகாஷ் சுவாமிஜியின் சொற்பொழிவுகளும் வாழ்க்கை பாடங்களும் எனக்கு புது உலகத்தை காட்டியது. காலை ஐந்து மணிக்கு எழுந்து "யோகா-மூச்சுப்பயிற்சி-தியானம்". ஆறு மணிக்கு குளியல். ஆறரைக்கு பழங்கள்..வேக வைத்த காய்கறிகளுடனான காலைச்சாப்பாடு. ஏழு மணிக்கு சைக்கிளில் தனியாய் ஆபிஸ் பயணம். போகும் போது  சுவாமிஜி பரிந்துரைத்த கவிதைகளை பாடிக்கொண்டே போவதில் எத்தனை ஆனந்தம். அதுவும் டக்ளஸ் மலொக்கின் "குட் டிம்பர்" படிப்பதில் எனக்கு பேரார்வம்.


Good timber does not grow with ease,

  The stronger wind, the stronger trees,

The further sky, the greater length,

     The more the storm, the more the strength.

By sun and cold, by rain and snow,

     In trees and men good timbers grow

அன்றும் அப்படி தியானத்தை முடித்து விட்டு குளிக்க எழுகையில்  தல்பீர் கூப்பிட்டான். அவனுடன் முகம் கொடுத்து பேசியே பல நாட்கள் ஆகிவிட்டது. ஊருக்கு திரும்புவதற்கு மெயில் அனுப்பியிருந்தேன். ரெண்டு மாதம் பொறுக்குமாறு சொல்லியிருந்தார்கள்.

"சிவ்..நீ வேற ஆளா மாறிட்ட..பேசக்கூட மாட்டிங்குற..இப்பெல்லாம் உன்கூட இருக்கிறது ஏதோ ஆசிரமத்தில் இருக்கிற மாதிரி இருக்குயா ..காலங்காத்தால என்னய்யா சாப்பிடுற.. இத பாத்திட்டு காபி குடிக்க கூட குற்ற உணர்ச்சியா இருக்கு.."  

சிரித்தேன்.

"பாபா மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிட்டான்யா ..பாஸ் ரூம்ல தம்மாவது அடிக்க விடுங்க.. டார்ச்சர் பண்ணாதீங்க.."

"முன்னமே சொன்னது தான். நீ  தம் அடிச்சா..நான் காலி பண்ணிட்டு வேற ரூம் போயிடுவேன்.."

"சிவ்வு ..ஒரிஜினல்  சாமி கூட அமைதியா இருக்கும்யா.. இந்த ஒன்ற மாச சுவாமிஜிக தொல்லை தாங்க முடிலயா ..கடந்து வந்த பாதைய மறந்திராத ..நீயெல்லாம் நீராவி எஞ்சின் மாதிரி புகை விட்டுட்டு இருந்த ..நேர காலம் பார் "

சிரித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பினேன் . இந்த என் புது அவதாரம் ரோஹனை திக்குமுக்காட வைத்தது. "தம்பி..என்ன ரெண்டு வார வேலையை மூனு நாளுல முடிச்சுடுற..கொஞ்சம் பிரேக் எடுத்து பண்ணு " எனச்சொல்ல ஆரம்பித்திருந்தார்.என்னை ஊருக்கு போவதிலிருந்து தடுத்து நிறுத்துவதில் குறியாய் இருந்தார். "ஈரோ..எம்பது போயிருச்சு கவனிச்சியா" என்பார். அன்று அலுவலகத்தில் எல்லோரும் மதியமே கிளம்பி பக்கத்திலிருந்த  டுலிப் மலர் தோட்டத்துக்கு  போவதாக ஏற்பாடாகியிருந்தது. நான் சாக்கு சொல்லி தப்பிக்க நினைக்கையில் தல்பீர் அடம்பிடித்து இழுத்துச்சென்றான்.

"பாஸ் செடி கொடிய பார்த்தா ஒன்னும் ஆகாது..நீங்க கன்னிப்பையனா பத்திரமா போயிட்டு வரதுக்கு நான் பொறுப்பு

என்னை நார்மலாக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். ஆனால் எனக்கிந்த நியூ நார்மல் தான் பிடித்திருந்தது. பஸ்ஸில் எல்லோரும் ஏறியிருந்தோம். கிளம்ப தொடங்கியது. பியூஸும் , மானஸ்வியும் இதை பயன்படுத்தி தங்களது நிச்சய பத்திரிக்கையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பியூஸ் வலது பக்கமும்..மானஸ்வி எங்கள் பக்கமும் கொடுத்து வந்தார்கள். 

"சிவ்..அவ பக்கத்துல வந்தோனே ஜன்னல் வழியா வெளிய தாவிராத..மனசுக்குள்ளேயே ஏதாவது யோகா..கீகா பண்ணிட்டு இரு .."   

எனக்கேதும் பதட்டமாய் இல்லை. அவள் தான் முழித்தபடி வந்தாள். என் முன் பத்திரிக்கை நீட்டினாள். நான் தல்பீரை காட்டி "அங்க கொடுத்திருங்க ஒன்னு போதும் " என்றேன் அவள் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கு கொடுத்தாள். தல்பீர் அவள்  பக்கத்தில் போய் என்னைக்காட்டி மெதுவாய் "நீங்க என்ன ட்யூன் பண்ணீங்கன்னு தெரில..இந்த டிவில அதுக்கப்புறம் காமெடி சேனல்..பாட்டு சேனல்..எதுவும் வரதுல்ல..முழுமுழுக்க ஆன்மீக சேனல் தான்.."  அவள் சிரிக்கவில்லை. என் தோளைத்தொட்டாள். நிமிர்ந்து பார்த்தேன். "சாரி" என்றாள். நான் தலையாட்டி விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டேன்.


கொஞ்ச நேரத்தில் டுலிப் தோட்டத்தை அடைந்திருந்தோம். அவ்வளவு அழகாய் நான் மலர்களை பார்த்ததில்லை.பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. மானஸ்வி  என் பக்கத்தில் வந்து ஒரு காகிதத்தை திணித்தாள். அதில் "சாரி..ட்ரூலி..டீப்ளி" என எழுதியிருந்தது. வாசித்து விட்டு கிழித்து தூக்கியெறிந்தேன். அவள் சிவந்த கண்களுடன் அங்கிருந்து நடந்து போனாள். "உன்னை அறத்திலிருந்து புறந்தள்ளும் எந்த சிறு செயலையும் செய்யாதே.. விழித்திரு..விழித்திரு.." சுவாமிஜியின் கனீர் குரல் என் தலை முழுக்க ஒலித்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். யாரோ சிவாவென கூப்பிடுவது போல இருந்தது. திரும்பினேன். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐரோப்பிய பெண்மணி நின்றுகொண்டிருந்தாள்.  "என்னங்க" வென நான் கேட்பதற்குள் என்னை பார்த்து கத்த தொடங்கினாள். "மாடு..எரும மாடு.. ..அறிவிருக்கா..நீயெல்லாம் மனுஷன் தான..அவ உன்னோட ஆளுடா..விடாத போ...சாணம் மாதிரி இங்கயே நிக்காத..அவ கூட பேசு..அதான் நாம எல்லாத்துக்கும் நல்லது..போ"  

எனக்கு உடல் நடுங்கத்தொடங்கியது. 




       --------தொடரும் 














கருத்துகள்