ஆரஞ்சுக்காவியம் -பகுதி 7

 இதுவரை 

-------------------

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 1

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 2

ஆரஞ்சுக்காவியம்-பகுதி 3

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 4

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 5

ஆரஞ்சுக்காவியம் -பகுதி 6







ந்த பெண்மணியின் முகம் கொஞ்சம் பரிட்சியமாய் இருந்தது. எவ்வளவு யோசித்தும் யாரென பிடிபடவில்லை. ஏதோ தமிழ்ப்பாடலின் நடுவரியை கேட்டுவிட்டு அது எந்தப்பாடல்னு தேடுவது போல இருந்தது. "நாளைக்கு சாயங்காலம் சரியா ஆறரை மணிக்கு கோஸிக்கு வந்திரு..உன்ன மாதிரி மடையன நம்புனா அவ்வளவு தான்..நீ பாட்டுக்கு தியானம் பன்றேன்னு ரூம்ல உட்காந்துராத" என அந்தம்மா சொல்லிவிட்டுப்போனதை பல முறை திரும்ப மனதிற்குள் ஓடவிட்டேன். புதிர் போல இருந்தது. கோஸி எனப்படுவது என்ஸ்கடேவின் முக்கிய ரெஸ்டாரண்ட். அங்கே  போவதற்கு  முதலில்   தயக்கமாய்த்தான் இருந்தது. கிழவியின் முகமும், அந்த திட்டும், "அவள் என்ன சொல்வாள்?" என்ற ஆர்வத்தை எனக்குத் தூண்டியிருந்தது. கோஸிக்கு உள்ளே போய் கடைசி சீட் தேடி உட்கார்ந்து கொண்டேன். கூட்டம் குறைவாகவே இருந்தது. கொஞ்ச நேரத்தில் அவளும் வந்தாள். 

ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தாள்.மேலே கொஞ்சம் பெட்ஷீட் வகையிலான ஒரு பெரிய டாப். தொப்பி போட்டுக்கொண்டிருந்தாள். நேற்று குப்பைக்காரி போல தெரிந்தவள், இன்று வயதான இங்கிலாந்து அரசி போல இருந்தாள். ஆனால் அந்த முடி மட்டும் இன்னமும் தேங்கா நார் போல தான் இருந்தது. கையிலிருந்த தன் பேக்கை கீழே வைத்து விட்டு எனக்கு எதிர் சீட்டில் அமர்ந்தாள். அவள் மீது  பன்னீர் வாடை வந்தது.

"அவ கிட்ட பேசுனியா..பேசலையா.. இல்ல இந்த மெசேஜ்ஜாவது போட்டியா.." 

"மேடம்..நீங்க முதல்ல யாரு...உங்களுக்கு என்ன வேணும்?  இப்போ தான் இந்த சட்டையை பார்த்தோனே நியாபகம் வருது..நீங்க அன்னைக்கு பார்லயும் இருந்தீங்கள்ல?"

"டேய்..மூனு மாசமா உன் பின்னாடி தாண்டா சுத்திட்டு இருக்கேன்..  பக்கத்துல இருந்து பார்த்தா தானே உன்ன பத்தி தெரியுது..உன்னைப்போய் லவ் பண்ணேன் பாரு.. என்னை சொல்லனும்?"

காதலிப்போருக்கு ஒரு முதிர்ச்சி வேணும்தான் அதுக்காக இவ்வளவு வயசான ப்ரபோசலை நான் எதிர்பார்க்கவில்லை. என் நிலையை நினைத்து எனக்கே பரிதாபமாய் இருந்தது. என் அதிர்ச்சியை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய ஆட்காட்டி விரலை தன் நெஞ்சுக்கு முன் வைத்து "இந்த நான்" இல்ல . கைப்பைக்குள் இருந்து எடுத்து ஒரு போட்டோவை காட்டி "இந்த நான்" என்றாள். அதில் ஒரு இளம்பெண் ஆறடியில் ப்ளூ ஜீன்ஸ் வெள்ளை டீ ஷர்ட் போட்டிருந்தாள். சிரித்தபடி கையில் "V" காட்டியபடி நின்றிருந்தாள். 

"ஈவா" என கொஞ்சம் குரலை உயர்த்தி சொன்னேன். அவள் ஆமாம் என்பது போல சிரித்து தலையாட்டினாள். ஈவா ,ரெபெக்காவின் தோழி.நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

"உங்களுக்கு ஈவா எப்படி தெரியும்??"

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு "நான் தான் ஈவா" என்றாள் 

"ஓ..உங்க பேரும் ஈவா வா??"

"டேய்..தத்தீ..நான் தான்டா அந்த ஈவாவே"  என கொஞ்சம் சத்தமாய் சொன்னாள். சிலர் எங்கள் டேபிளை திரும்பி பார்த்தார்கள்.நான் ஒரு முறை மூச்சை இழுத்து விட்டேன். நடந்ததையெல்லாம் யோசித்துப்பார்த்தேன். போனவாரம் கூட ஈவாவை  பார்த்தேன். தல்பீர் கூட அவள் கண் மையை காட்டி "சூனியக்காரி" என கேலி செய்தான். கிழவியின் பேச்சு..நடவடிக்கைகள் வைத்து அவளின் மனநலம் குறித்த என் சந்தேகம் உறுதியானது.

"பாட்டி..நீங்க ஏன் தனியா வெளில வ..." என சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் சப்பென அறைந்தாள். அதிர்ந்து போனேன். கோபம் தலைக்கேறி என்ன கேட்பதென தெரியாமல் பதட்டத்தில் "பைத்தியம்னா என்ன வேணா செய்யலாமா?" . அவள் இடது கையை வைத்து இன்னொரு அறை அறைந்தாள்.இந்த முறை காதுக்குள் "கொய்ங்"கென சத்தம் வந்தது. 

------------------------------------------------------------------------------------------------------------------

 என் உடல் பாதி நடுக்கத்தில் இருந்தது. கிறிஸ்டோபர் நோலன் படங்களை விடுங்கள்..எனக்கு பழைய பாலசந்தர் படங்களே புரியாது. கிழவி கூறியவைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யவே கஷ்டமாக இருந்தது. யாரோ சம்ஸ்கிருத மந்திரங்களை வேகமாய் சொல்வது போல இருந்தது. நாலாவது முறையாக அவள் சொன்னதையே திரும்ப சொன்னாள். இந்த முறை குரலில் ஒரு எரிச்சல் இருந்தது.

"சிவ்.. மிஸ்டர் சிவ்.. நான் தான் ஈவா..அல்லது நானும் ஈவா தான்.. "

ஆரம்பிச்சிட்டு குழப்புனா பரவால்ல. ஆரம்பமே குழப்பமா இருந்தா என்ன பண்றது?. நான் எதுவும் சொல்லவில்லை. இன்னொரு அறையை தாங்க எனக்கும் என் கன்னத்துக்கும் சக்தியில்லை. தொடர்ந்தாள்.

"நான் அம்பத்தி ஆறு வயசு ஈவா..இங்க இருக்கிறது இருபத்து ஆறு வயசு ஈவா ..இதுவும் நான் தான் .."பழைய நான்" "

"உஃப்" என்றேன். 

 "சிவ்..கவனமா கேளு..கடந்தகாலம்..நிகழ்காலம்..எதிர்காலம் எனப்படுவது அடுத்தடுத்து நடக்கும் வரிசையான  நிகழ்வல்ல. தொடர்ச்சியாய்  முடிவிலி போல நிகழும் தொடர் நிகழ்வு ... நமக்கு நடக்கும் நிகழ்கால சம்பவங்கள் வேறு காலங்களையும் பாதிக்கலாம் ..உதாரணமாய்  ஒரு டீவி திரையின்  நடுவில் கோடு போட்டுக்கொண்டு இடது பக்கம் 2005 என்றும் வலதில் 2015 என்றும் எழுதிக்கொள். ஒரே நேரத்தில் அந்தந்த வருட காட்சிகள் ஓடுகின்றன. 2015 ஜனவரியில்  உன்னுடைய  நெருங்கிய நண்பன்  கனகுவும் நீயும் கோவா பீச்சில் உட்கார்ந்து கொண்டு தண்ணியடித்து சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படியே அதே நேரம் 2005 ஜனவரியில்  முதல் நாள் கல்லூரிக்கு கனகு வருகிறான்..தெரியாத முகங்கள்...எல்லோரயும் பார்க்கிறான்...உன்னை பார்த்தவுடன்  லேசாய் சிரித்து பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறான் . "ஐ'ம் கனகராஜ் " என கை குலுக்குகிறான்....நீங்கள் அறிமுகமாகுகிறீர்கள் "

நான் கண்ணிமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"நீயே சொல் இதில் எது முதலில் நடந்தது?? கனகு அத்தனை பேர் இருந்தும் எப்படி உன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். அது எதிர்காலத்து பாதிப்பின் நீட்சி..நான் எதிர்காலத்திலிருந்து வந்திருக்கிறேன்...நான் செய்த ஒரு தவறால் நிறைய பேர் பாதிக்கப்பட போகிறார்கள்..அதைத்தடுக்கவே வந்திருக்கிறேன்.."

ஐரோப்பியர்களுக்கு இந்த டைம் டிராவல் கதைகள் மேல் கொள்ளை பிரியம். "அவுட்லேண்டர்" கதைகளெல்லாம் பல மொழிகளில் பிரதியெடுத்து இன்றும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. கிழவி புத்தகம் படித்து கிறுக்காகியிருக்க வேண்டும். அவள் என் மனத்தை புரிந்தவள் போல என்னை முறைத்துப்பார்த்தாள்.

"சரி..போனவாரம் ரெபெக்கா வீட்டில் வச்சு ஈவாவும் நீயும் பேசுனது நியாபகம் இருக்கா.. குறிப்பா அந்த சோபாவில உட்கார்ந்து பேசுனது.."

யோசித்தேன்.ரொம்ப நிறையவெல்லாம் நாங்கள் பேசவில்லை. நியாபகம் வந்தது.

" 'இப்படியே இருக்கியே..உன்னோட லட்சியம் என்ன' னு கேட்டா..நான் சுவாமிஜி கூட பயணப்பட்டு எப்படியாவது குண்டலினி சக்திய  எழுப்பிரணும்னு சொன்னேன். சிரித்தாள். நான் சீரியஸாய் தான் சொன்னேன். நீ என்ன செய்யப்போறே எனக்கேட்டேன்..அதுக்கு அவ பிசிக்ஸ்ல நோபல் பரிசு வாங்கணும்னு சொன்னா.. நான் சிரிச்சேன் ..அவ கொஞ்சம் அப்செட் ஆனா மாதிரி இருந்துச்சு "


பேச்சைக்கேட்டுக்கொண்டே கிழவி பேக்கிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து என் முன் நீட்டினாள். அதில் "Black Hole Scientists Win Nobel Prize in Physics" எனப்போட்டிருந்தது. மூன்று பேர் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். அதில் நம் கிழவியும் ஒன்று. பெயரை நன்றாய் படித்தேன் "ஈவா கோன்சலஸ்". அதே தேங்காய் நார் முடி. எனக்கு இப்போது அவள் பேசும் விஷயமெல்லாம் புரியுமென்ற நம்பிக்கை விட்டுப்போயிருந்தது.  அவளிடம் தாழ்ந்த குரலில் சொன்னேன்.

"கொஞ்சம் ஓப்பனாவே சொல்றேன்..நீங்க சொல்றத புரிஞ்சிக்கிறதுக்கோ ..மறுக்குறதுக்கோ  நல்ல அறிவு தேவை..என்கிட்ட அது சத்தியமா இல்ல..நேரா விஷயத்துக்கு வாங்க..உங்களுக்கு என்னோட எதிர்காலம் தெரியும்..கொஞ்சம் காசு கொடுத்தா சொல்வீங்க.. அதான .."

"டேய்..மட சாம்பிராணி ..நிறைய பேரோட உயிரும் வாழ்க்கையும் உன் கையில இருக்கு..நீ நிலைமை புரியாம இருக்க..சரி உன்னோட லெவலுக்கே வரேன்..நீ எனக்கு முன்னாடியே இங்க வந்திட்ட ..ஒன்னோட ஷூ லேஸ நான் இப்போ பார்த்திருக்க வாய்ப்பிருக்கா?? குறிப்பா என்னோட கண்ணையும் கண்ணாடியும் மனசுல வச்சுக்கோ.." 

முதலில் புரியவில்லை. குனிந்து பார்த்துவிட்டு "இல்லை" என்றேன்.

"வலது பக்கத்தில் கருப்பு லேஸும் இடது பக்கம் மெரூன் லேஸூம் போட்டிருப்பாய். நான் இதை முன்னமே பார்த்திருக்கிறேன்." 

குனிந்து பார்த்தேன். உண்மை தான். நானே அப்போது தான் கவனிக்கிறேன். எனக்கு அவகாசம் கொடுக்காமல் கிழவி தொடர்ந்தாள்.

"உனக்கு அப்புறம் புரியட்டும்..இன்னைக்கு கிங்ஸ் டே.. ஊரே குஷி மூடுல இருக்கு.. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல ஈவா வருவா..உன்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லுவா..முகத்தை சீரியஸா வச்சி கிட்டு "நோ" னு சொல்லிரு..இது உலகத்துக்கு நீ செய்யுற கைமாறு...தயவுசெஞ்சு சொதப்பிடாத.." 

"என்னாது ஈவா வந்து என்கிட்ட ப்ரபோஸ் பண்ணுவாளா?? அவ ஆறடில ஏஞ்சலினா ஜோலி மாதிரில இருப்பா.." .என சொல்லி சிரித்தேன்.

"காதல் ஒரு பாழுங்கிணறு அதற்குள் யாருக்கும் கண் தெரியாது" என்றாள்.

"இங்கேயே உட்கார்ந்து கொள். நான் இடது வரிசையில் கடைசியில் உட்கார்ந்து கொள்கிறேன்" என எழுந்து போனாள். நிறைய குழப்பமாய் இருந்தாலும் எனக்கு திடீரென அவள் பேச்சில் ஒரு ஆர்வம் பிறந்திருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------

சரியாய் ஏழரை மணிக்கு அந்த கார் வந்து நின்றது. என் இதயம் எந்த நேரமும் என் வாய் வழியாய் வெளியே விழுந்து விடலாம் என்கிற அளவு துடித்தது. ஈவா உள்ளிருந்து இறங்கி நேராய் என்னை நோக்கி வந்தாள்.ஆரஞ்சு நிற சட்டை மற்றும் ஒரு ப்ளூ ஜீன் டவுசர் அணிந்திருந்தாள். அது வரை அவளை பார்த்து கண்டுகொள்ளாத என் ஹார்மோன்கள் தற்சமயம் உள்ளுக்குள் க்ரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது. அவள் கையில் வைத்திருந்த பூவை தெரியாமல் கீழே விட்டாள். பிறகு குனிந்து எடுத்தாள். என் ஷூவை கவனித்தாள். எனக்கு மூளைக்குள் மின்னல் வெட்டியது.

"ஷிவா.."

"முதல்ல உட்காரு". என் பெயரை "ஷிவா" என்றே கூப்பிடுவாள்.அவள் ரொம்பவெல்லாம் தயங்கவில்லை.

"எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு..நீங்க எங்கெல்லாம் போறீங்களோ அங்கெல்லாம் வரணும் போல இருக்கு..எந்நேரமும் உங்க சிந்தனையாவே இருக்கு..ம்.ம்..நா என்னெல்லாமோ பேசணும்னு யோசிச்சிருந்தேன்..உங்கள பாத்தோன்னே மறந்திடுச்சு"

சொல்லி பூ கொடுத்தாள். ஆரஞ்சு நிற பூக்கள்.இதை மட்டும் எங்க தாத்தா ஆத்தூர் சுப்ரமணியின் ஆத்மா கேட்டிருந்தால், இந்நேரம் முக்தி அடைந்திருக்கும். எப்பேர்ப்பட்ட சம்பவம். ஒரு தரமான வெள்ளைக்கார பெண் இந்த கரூர்க்காரனுக்கு பூ கொடுக்கிறாள். ஆனால் பாட்டியம்மா சொன்னவை எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


"சிவா..இது முக்கியமான தருணம்..நம் சந்ததிகளின் வாழ்க்கையே இதில் தான் முடிவாகிறது..உன்னோட வினோவையும் பிரபாவையும் நீ தான் காப்பாத்தணும்..வேண்டாமென சொல்லிவிடு " 

அவள் அழுவது போல சொன்னதோ ..இல்லை அந்தப்பெயர்களின் அதிர்வோ..எனக்குள் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மானஸ்வியின் முகம் அடிக்கடி வந்து போனது. நான் ஈவாவை பார்த்தேன்.

"மன்னிக்கணும் ஈவா ..நான் வேற ஒருத்தவுங்கள லவ் பண்றேன்..சாரி " என சொல்லி அந்த பூக்களை திருப்பிக்கொடுத்தேன்.அவள் கண்கள் கலங்கியிருந்தது. எதுவும் பேசாமல் பூக்களை வாங்கிக்கொண்டு வேகமாய் திரும்பி நடந்தாள்.  அவள் போனவுடன் கிழவி என் பக்கத்தில் வந்து தோளில் தட்டினாள்."வருத்தப்படாத.. நீ செஞ்சது மிகச்சரி"  என்றாள். அவள் பேக்கிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்துக்காட்டினாள். அதில் பழைய பூக்கள் ஒரு பக்கத்தில் லேமினேட் செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. கவனித்துப்பார்த்தேன் அவைகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தது.

                                                                                                       ---தொடரும் 



கருத்துகள்