திங்கள், 27 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 4

                                         CHRONCILES OF AYYAMMA




தொண்ணூறுகளில் சைக்கிள் ஓட்டத்தெரிந்து  கொள்வதென்பது ஒரு கௌரவ மைல்கல். பாலகனிலிருந்து பருவத்திற்குள் பயணிக்கும் முதற்படிக்கட்டு. பல அடிகளையும், விழுப்புண்களையும் பெற்று ஒரு வழியாய் நான் என்னுடைய எட்டாவது வயதில் அந்த சிறப்பிற்குரிய வித்தையை கற்றிருந்தேன். வாடகை சைக்கிளை எடுத்து மணிக்கணக்கில் தேனியின் எல்லா சந்துகளையும் சுத்தத்துவங்கியிருந்தோம். ரெண்டு கைகளையும் விட்டு சைக்கிள் ஓட்டுகிற பையன்கள் எங்கள் உலகத்தில்  மிகப்பெரிய ஹீரோக்களாய் பார்க்கப்பட்டனர்.  "முக்கா ரூவா" கொடுத்தால் லட்சுமி சைக்கிள் கடையில் ஒரு மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கிடைக்கும். அதிலும் சிறுவர்கள் ஓட்டும் "அரை வண்டி" நாளோ ஐந்தோ தான் இருக்கும். சனி,ஞாயிறுகளில் காலையில் வேகமாய் போகவில்லையென்றால் ஏதாவது மொக்கை வண்டி தான் மிச்சமிருக்கும். அவைகளில் பெல் வேலை செய்யாது, பிரேக் பேருக்கென்று இருக்கும், செயின் எந்த நேரமும் அறுந்துவிடும். எங்கள் எல்லோருக்கும் "மெஜென்டா" கலரில் இருக்கும்  ஒரு சைக்கிள் தான் டாப் டார்கெட். காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிள் கடையின் முன் "FERRARI" க்கு காத்திருக்கும் மைக்கில் ஷூமேக்கர் போல உட்கார்ந்திருப்போம். யாரோ ஒரு அதிர்ஷ்டசாலிக்கு "மெஜன்டா" கிடைப்பாள். மற்றவர்கள் கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுவார்கள். 

பல வாரங்களுக்குப்பின் அன்றைக்கெனக்கு "மெஜென்டா" கிடைத்தாள். நேரான ஹேண்ட் பார்,கனீரென்ற பெல். அழுத்திப்பறந்தேன். பங்களா மேடு, மதுரை ரோடு, என்.ஆர்.டி ரோடு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மணியை பார்த்தேன். இன்னும் கால் மணி நேரம் தான் இருந்தது. இன்னொரு "ஒரு மணி நேரத்திற்கு" நீட்டிப்பு செய்து வண்டியை வைத்துக்கொள்ள மனது ஏங்கியது. வீட்டில் போய் காசு கேட்டால் அம்மா தோசைக்கரண்டியால் வெளுத்து வாங்க வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஏற்கனவே "சட்டையில் இன்க் கொட்டியது", "கையெழுத்து கேவலமாய் இருப்பது" போன்ற பெண்டிங் கேஸுகள் என் மேல் இருந்ததால் அம்மாவிடம் போகும் முடிவை கைவிட்டேன். இந்த நேரங்களில் எல்லாம் எனக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது அய்யம்மா தான். அப்பாவின் அம்மாவை நாங்கள் "அய்யம்மா" என கூப்பிடுவோம். அய்யம்மாவின் வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

அய்யம்மா வீட்டில் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. தரைகள் பேர்ந்து கிடந்தால் சிமெண்ட் கலந்து அவளே பூசுவாள். சுண்ணாம்பு கலந்து சுவற்றிற்கு வெள்ளையடித்துக்கொண்டிருப்பாள். வெளியே திடீரென செடிகள் வைத்து பதியம் போடுவாள். வாத்துப்படம்  போட்ட கூடை பின்னுவாள். ரொம்ப டயர்ட் ஆன நேரங்களில் வித விதமாய் சாமி கும்பிட துவங்கிவிடுவாள். கண்களை மூடிக்கொண்டு உதடுகள் நடுங்க சாமிப்படங்களின் முன் நின்றிருப்பாள். சில நேரங்களில் நானும் அய்யம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொள்வேன். அய்யம்மாவின் முகத்தை உற்றுப்பார்த்து என் முகத்தை அதே போல பக்தி டோனில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். இடையிடையே கண்களை திறந்து அய்யம்மா ஆன்மீக உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து விட்டாளா என பார்த்துக்கொள்வேன். கண் விழித்தவுடன் அய்யம்மா எனக்கு  திருநீர் பூசிவிட்டு  "கால் ரூபா" கொடுப்பார். அந்த கால் ரூபாயை பாக்கெட்டில் போட்டுவிட்டு நான் பக்தியில் நெகிழ்வேன். 

அந்தக்காலங்களில் அய்யம்மாவிற்கு மாரியம்மா என்ற ஆன்மீக தோழியிருந்தார்.  மாரியம்மா எப்போதும் மஞ்சள் அல்லது சிகப்பு சேலை தான் கட்டியிருப்பார். எனக்கு மாரியம்மாவை பார்த்தாலே பயம். குரல் ஒரு மாதிரி கீச்சு கீச்சு என்றிருந்தாலும் ,பேசும் போது கண்கள்   திடீரென பெரிதாகும். லாரி பிரேக் அடித்தாற்போல்  "உஸ்" என சத்தம் கொடுத்து  வித்தியாசமாய் ஒலியெழுப்பி  முன்னறிவிப்பின்றி அருள் இறங்கி சாமியாடுவார்.

"பங்குனிக்கப்புறம்  எல்லா விசேஷமா இருக்குமுத்தா..கலங்காதடி .. எம்பிள்ளைகள அப்பிடி விட்ருவேனா..வீரபாண்டிக்கு  நடந்து போய் ஆறு செவ்வாய்க்கு  தீபம் போடு  அப்புறம் பாரு   "

இப்படியாக கொஞ்ச நேரத்தில் பேச்சுவார்த்தை முற்றுப்பெற்று அய்யம்மா மாரியம்மாவிற்கு டீ போட்டுக்கொடுத்து வழியனுப்பி வைப்பாள். மாரியம்மா வந்துவிட்டு போன சில நாட்கள் அய்யம்மாவின் வீட்டில் ஆன்மீக நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். கோயில்களுக்கு நேர்த்திக்கடன்கள் போடப்படும். எலுமிச்சைப்பழங்கள் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் குங்குமம் தடவி வைக்கப்படும். கையில்  கலர் கயிறுகள் கட்டப்படும். 

நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அய்யம்மாவின் வீட்டிற்குள் போனேன். வீட்டில் இருக்கும் மர டேபிளில்  எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் அய்யம்மா. நான் உள்ளே வரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். 

"என்ன சிவராஸ்..சும்மா வந்தியா.." 

"ம்ம்.."

என்னை ஒருமுறை கவனமாய் பார்த்துவிட்டு 

"லேய் ..என்னடா கரிச்சட்டிகனக்கா  போய்க்கிட்டிருக்க... வெயில்லயே ஆடுவியோ..  "

அது அன்பின் வெளிப்பாடு. பாடி சேமிங் எல்லாம் எங்கள் சிலபஸ்ஸில் இல்லை. 

"அய்யம்மா..சைக்கிள் ஓட்டனும்..காசு வேணும் "  

"ஓ... அதான் கோளாறா இங்க வந்தியா..எம்புட்டு"

"முக்கா ரூவா "

"ஏய்..கொள்ளக்காசா இருக்கு..நீ சின்னப்பயனு ஏமாத்துறானுக போலுக்க.."

"ம்ஹீம் .. எல்லாருக்கும் அதான் ..."

கொஞ்ச நேரம் யோசித்து பார்த்துவிட்டு தன் சுருக்குப்பையை எடுத்தாள். அதற்குள் சில்லறைகள் சத்தம் போட்டது. எச்சில் முழுங்கிக்கொண்டேன். ஒரு ரூபாய் எடுத்து கையில் கொடுத்தாள். 

"சூதானமா ஓட்டு..மெயின் ரோடு போகக்கூடாது.." 

இது போன்ற நேரங்களில் சொல்லப்படும் எல்லா அறிவுரைக்கும் நல்ல பிள்ளை போல தலையாட்டி விடுவது மரபு.

"தேங்க்ஸ் அய்யம்மா "

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானேன்.


"டேய் நில்லு..உனக்கு இங்கிலிஷ் தெரியுமா " .வீட்டின் வாசலுக்கு பக்கத்தில் வந்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் அய்யம்மா கேட்டாள். கொஞ்சம் யோசித்தேன். எப்படியும் இங்கிலீஷிஸில் அய்யம்மா கேள்வி கேட்பதற்கு வாய்ப்பில்லை எனபதை உறுதி செய்துகொண்டு "ம்ம் ..தெரியுமே "  என்றேன்.

"சைக்கிளுக்கு காச கொடுத்திட்டு ஒரு எட்டு இங்க மறுபடியும் வந்திட்டுப்போ.." 

"ம்ம் "

போய் சைக்கிளுக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்கான காசை கொடுத்து விட்டு திரும்பவும் அய்யம்மா வீட்டுக்கு வந்தேன். வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு வீடே பாதி இருளில் இருந்தது. நான் முதலில் வழக்கம்போல அய்யம்மாவின் "வீட செம்மடுத்துறேன்" வேலையாய் தான் இருக்குமென நினைத்தேன். ஆனால் இது வேறு வில்லங்கம் என பின்னர்தான் தெரிந்தது. வீட்டின் ஹாலில் இருந்த மர டேபிளின்  முன் அய்யம்மா உட்கார்ந்திருந்தாள்.  ஆங்கில  ஆல்ஃபபெட்டுகள்,எழுத்துக்கள்  எழுதப்பட்ட போர்டு ஒன்று டேபிளின் மேல் இருந்தது. பக்கத்தில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருந்தது.

"என்னய்யம்மா தாயம் விளாடுறீங்களா.."


அய்யம்மா திரும்பி என்னைப்பார்த்தாள். அது ஒரு மாதிரியான சந்தேகப்பார்வை. எனக்கு அந்த வயதில் மிகவும் பரிட்சயமான பார்வையது. "இவன ஆட்டைல சேக்கலாமா வேணாமா" என பெரியவர்கள் எங்களை ஒரு மாதிரி குழப்பத்தில் எப்போதும் பார்ப்பார்கள்.

"இங்க வந்து உட்காரு.. உனக்கு இதெல்லாம் தெரியும்ல"

முன்னமே சொன்னது போல அந்த போர்டில் கட்டங்கள் போட்டு ஆங்கில ஆல்ஃபபெட்டுகள் எழுதப்பட்டிருந்தது. ஸ்கேர்ள்  வைத்து  அளந்து ஒரேயளவாய் எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன. சில கட்டங்களில் "யெஸ்" "நோ " வென இருந்தது.  நான்  "தெரியும்" என்பது போல தலையாட்டினேன்.

"சிவராஸ்.. இந்த ஒரு ரூவா காச நடுவில அந்த கட்டத்துல வைக்கணும். நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா அதுல வலது கை ஆட்காட்டி விரலை வைக்கணும். பெறகு அவுங்க கூட நாம பேசத்தொடங்கலாம். கேள்வி கேட்கலாம். அப்புறம் காசு நம்ம விரலோடு சேர்ந்து அதுவா நகந்து போகுமாம். காசு எந்தெந்த கட்டத்துக்கு போகுதோ அந்த எழுத்தும் வார்த்தையும் தான் அவங்க நமக்கு சொல்ற பதில்.." 

கேம் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. "எவுங்க? "

"ஆவிகள் ...நாம சித்தப்பாட்ட பேசப்போறோம்...பழனிசாமிட்ட"

பிற்காலத்தில் தான் அது ஆவிகளிடம் பேசுகிறவர்கள் பயன்படுத்தும் ஓஜா போர்டு என்பதை தெரிந்து கொண்டேன்.அப்போது தெரிந்திருக்கவில்லை. அய்யாமாவிற்கு பழனிசாமி என்கிற ஆண்குழந்தை இருந்ததாகவும் அவர் சிறுவயதிலேயே அம்மையில் இறந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தேன். அய்யம்மாவின் புத்திர சோகத்தையும் ,பிள்ளையிடம் பேச வேண்டும் என்கிற ஏக்கத்தையும் புரிந்து கொள்கிற அறிவும் ஆற்றலும் எனக்கு அப்போது வாய்க்கவில்லை. எனக்கு அது ஒரு போர்டுகேம். ஆவி என்கிற வார்த்தை ஒரு வித பயத்தையும்,கிளர்ச்சியையும் தந்தது.

மெழுகுவர்த்தியின் நிழல் அந்த வெள்ளை நிற போர்டில் கோணலாய் தெரிந்தது. அய்யம்மாவின் சோகமான முகத்தை  அந்த மஞ்சள் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. கைகளை கூப்பி அய்யம்மா பேசத்தொடங்கினாள். யாரிடமோ கேட்டு மனப்பாடம் செய்து சொல்வது போல இருந்தது.

"பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம். உங்களின் அமைதிக்காக நாங்கள் பிராத்திக்கிறோம். எங்களின் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுடன் பேச உங்களுக்கு சம்மதமா"

கையிலிருந்த ஒரு ரூபா காசை "ஸ்டார்ட்" என்ற கட்டத்தில் வைத்தாள். என்னைப்பார்த்து கண்ஜாடை காட்டினாள். நான் எனது வலது கை ஆட்காட்டி விரலை காசின் ஒரு மூலையிலும் ,அய்யம்மா மறு  மூலையிலும் வைத்துக்கொண்டோம். எனக்கு கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. ரெண்டு, மூன்று நிமிடங்கள் ஆகியும் காயின் நகரவில்லை. எனக்கு வியர்க்கத் தொடங்கியது. கை வேற வலிக்கத்தொடங்கியது.

"அய்யம்மா..தண்ணி தவிக்குது..உள்ளபோய் குடிச்சிட்டு வந்திரவா"

"கிருத்துவம்  புடிச்சிவனே..செத்த நேரம் அமேதியா உட்கார முடியாதா "

அமைதியானேன். இந்த பாழாய்ப்போன ஆவிகளுக்கு ஒரு பங்க்சுவாலிட்டி இல்லையே என எனக்கு கோபமாய் இருந்தது.எனக்கு அந்த இருட்டில் ஆவிகளை விட அய்யம்மாவை பார்க்கத்தான் பயமாய் இருந்தது. போன மாதத்தில் பத்ரகாளியம்மனுக்கு வேண்டுதல், இந்த மாதத்தில் ஆவிகள் உலக தொடர்பு என அய்யம்மாவின் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் எல்லை மீறி போய்க்கொண்டிருந்தது.தவிர என் சைக்கிள் வேற ஏக்கத்துடன் வெளியே நின்றுகொண்டிருந்தது. அய்யம்மா ஏழாவது முறையாக  "பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம்.." என்று ஆரம்பித்தாள். எப்பேர்ப்பட்ட பேய் வந்தாலும் "தேங்க்ஸ் ஃபார் கமிங்" சொல்லும் மன நிலையில் இருந்தேன். "எங்களுடன் பேச சம்மதமா" என அய்யம்மா சொல்லி முடிக்கையில் காயின் நகரத்தொடங்கியது. எனக்கு குபீரென்று இருந்தது. ஒரு ரூபா காசு மெதுவாய் நகர்ந்தது. அய்யம்மா என்னையே  பார்த்தார்.   சத்தியமாய் நான் நகர்த்தவில்லை. நகர்ந்து வந்த காயின் சரியாய் "YES " என்ற கட்டத்தில் நின்றது. அதே நேரத்தில் ஜன்னல் கதவும் லேசாய் சத்தத்துடன் அடித்தது. வீல் என கத்தி வீட்டிலிருந்து தெறித்து ஓடி வெளியே வந்து நின்றேன். அழத்தொடங்கினேன். அய்யம்மாவும் வெளியில் வந்தார்.

" லேய்..ஊமக்குசும்பா..வெளாட்டுத்தனம் பண்றியா"

"அய்யம்மா சத்தியமா நான் நகட்டல..நீங்க தான நகுட்டினீங்க..பயமாருக்கு"


  இந்தமுறையெனக்கு அழுகை பீறிட்டு வந்தது. வீட்டிற்குள் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அய்யம்மாவின் முகத்திலும் கலவரம் தெரிந்தது.   நான் கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அய்யம்மாவும் நானும்  அதற்கப்புறம்  இந்த சம்பவம் பற்றி  பேசியதாய் நினைவில்லை.  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டது. பல ஆங்கிளில் யோசித்து பார்த்துவிட்டேன் ,இதுவரை  திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.  எனக்கு காசு அதுவாக நகர்ந்ததோ என்கிற  பயம், அய்யம்மாவிற்கு நான் நகட்டினேனோ என்கிற பயம். ஆவிகள் சிலருக்கு பயம்..சிலருக்கு நம்பிக்கை. 

ஞாயிறு, 12 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 3

                                     தியாக தீபம்  திலீபன் 




எல்லாக்காலத்திலேயும் விசித்திரமானது இந்த இலக்கிய உலகம். இலக்கியவாதிகள் கனவுலகில் இருந்து வந்த ஸ்லீப்பர் செல்கள்.  சமையல் எரிவாயு விலை கூடிவிட்டதென ஊரே அரசுகளைத் திட்டிக்கொண்டிருந்தால், எதையாவது படித்துவிட்டு ,இவர்கள் எங்கோ ரஷ்யக்கல்லறையில் உறங்கிக்கிகொண்டிருக்கும் "டால்ஸ்டாய்"க்கு அறைக்கூவல் விட்டுக்கொண்டிருப்பார்கள். அடுத்தவேளை சோறு உறுதி செய்யப்படாத நேரத்திலும் அத்தனை ஆனந்தமாய் சுற்றுவார்கள். ஒரு புத்தகமும், மரத்தடியும் கிடைத்தால் போதும் இந்த பாழாய்ப் போன உலகத்தில் இருந்து, "போர்டிங் பாஸ்" இல்லாமலே கனவுலகில் பறக்கத் துடங்கிவிடுவார்கள்.  அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் சகவாசம் எனக்கு 2008ம் ஆண்டின் புத்தக கண்காட்சியில் கிடைத்தது.

நான் ரொம்ப நேரம் யோசித்து விட்டு தி.ஜா வின் "மரப்பசு"வை கையில் எடுத்தேன். பில் போடுமிடத்தில் இருந்த பெரியவர் "மோகமுள் ஆச்சா"  என்றார். என் முகத்தை பார்க்கவில்லை. கேள்வியின் கோணத்தை புரிந்துகொண்டு "ஆங்..படிச்சிட்டேங்கைய்யா" என்றேன். பாக்கி ரூபாயும் ,பில்லையும் கையில் கொடுத்து விட்டு ஒரு விசிட்டிங் கார்டையும் கையில் கொடுத்தார். நான் வாங்கி வாசிக்கும் முன்பாகவே "சனிக்கிழமைகள்ல இலக்கிய கூட்டம் இங்க நடக்கும்..Do Come if you are free" என்றார்.  தட்டையாய் பார்த்தார். எந்த வித சலனமுமில்லை.  முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு "கல்யாணத்துக்கு வந்துருங்க" என பத்திரிக்கை நீட்டுவது போல இருந்தது. சரியென தலையாட்டிவிட்டு நடந்தேன். போகும்போது அவரை திரும்பிப்பார்த்தேன். அவரின் முகம் அந்த தாடிக்குள் ஒளிந்து கிடந்தது. நாய்க்குட்டியை தடவிக்கொடுப்பது போல தன் தாடியை தடவிக்கொண்டே இருந்தார். பின்னாளில் அவர் தான் எழுத்தாளர் விக்ரமாதித்தன் என அறிந்து கொண்டேன்.(சில வருடங்களுக்குப்பின் "நான் கடவுள்" படத்தில் நடித்தார்)


பெரும்பாலும் என்னுடைய எல்லா சனிக்கிழமைகளும் வேலையில்லாதவை என்பதால் அந்த இலக்கியக்கொட்டகைக்கு போகத்தொடங்கியிருந்தேன்.கே.கே நகரில் இருக்கும் ஒரு புத்தக கடையின் மொட்டை மாடியில் தான் அந்த கூட்டங்கள் நடக்கும். அதிகம் போனால் இருபது பேர் வருவார்கள். நான் நினைத்தது போல இல்லாமல் எல்லா வயதினரும் வந்துகொண்டிருந்தனர். ஒரு நாள் தாஸ்தோவாஸ்கியின் "வெண்ணிற இரவு" பற்றி பேசுவார்கள். முன்னறிவிப்பின்றி மாக்சிம் கார்க்கியின் "தாய்" யை சிலாகிப்பார்கள். உலக நாவல்கள் பற்றி பேசத்தொடங்கினால் கச்சேரி கேட்பது போல பல பச்சிகள் தலையாட்டி ரசித்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  பால்வாடி பையன் பன்னெண்டாம் வகுப்பு மேத்ஸ் க்ளாஸ் அட்டென்ட் செய்வது போல இருந்ததெனக்கு. கூட்டத்தில் கலந்து ஓரமாய் உட்கார்ந்து கொள்வேன். இப்படிக்கூட ஒரு நாவலையோ,சினிமாவையோ ரசித்து பார்க்க முடியுமா என்றிருக்கும். அவர்கள் சொன்ன அந்த கதைகளை என்னால் அதேயளவு ரசனையோடு படிக்க முடியவில்லை. "அவுங்க சொன்னதே இத விட நல்லாருந்துச்சு"  என்றிருக்கும். இந்தக்கூட்டங்களில் பெரும்பாலும் சண்டைகள் இல்லாமல் முடிந்ததில்லை. சில நேரங்களில் கை கலப்பில் கூட முடியும். அந்தச்சண்டைகள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.  

"என்ன பெரிய ஜேன் ஆஸ்டின்..சாண்டில்யனோட கடல்புறா படிச்சிருக்கியா.. அவன விட Period Fiction எவன்டா எழுத முடியும்..  வெள்ளைக்காரய்ங்க  மோண்டா கூட உங்களுக்கு தீர்த்தம்.."

"அய்யா தேசப்பிதா..எங்கிட்ட சொன்னதையெல்லாம் போய் உங்க சுஜாதா,மணிரத்னம்,கமலஹாசன் கிட்ட சொல்லுங்க.. நீ சத்தியம் பண்ணி சொல்லு கணேஷ் வசந்த ஒரிஜினல்னு... இவனுங்க "Bourne Identity" நாவல சுட்டு வெற்றி விழா னு ஒரு படத்த எடுத்தத கூட மன்னிச்சிடுவேன்..ஆனா ஹாலிவுட்டுக்கு சவால் விடுகிற படைப்புனு பேசுறப்போ காண்டாகுமா..ஆகாதா"

இது போன்ற சண்டைகளில் உணர்ச்சி வசப்பட்டு  ஏதோவொரு கூட்டணியை ஆதரித்தோ எதிர்த்தோ பேசிவிடக்கூடாது. அப்படி பேசினால் வண்டி நம்ம பக்கம் திரும்பி விடும். அமைதியாய் இந்த சண்டைகளில் கேட்கும் முக்கிய வார்த்தைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜேன் ஆஸ்டின், கடல் புறா, Bourne Identity  போன்றவைகள் பின்னாட்களில் புத்தக,திரைப்பட தேடல்களில் உதவக்கூடும். இந்தக்கூட்டங்களில் அதிகமாய் விக்கிரமாதித்தன் அய்யா உட்காரமாட்டார். தாடியை தடவிக்கொண்டே பேசுவதை குனிந்த படி கேட்டுக்கொண்டேயிருப்பார். திடீரென  எழுந்து கீழே போய்விடுவார். அப்படியொரு நாள் கூட்டத்தின் நடுவே அய்யா திடீரென குனிந்த அழுது கொண்டிருந்தார். சத்தம் கேட்காத படி அழுததால் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். சுந்தரம் தான் கவனித்து சுட்டிக்காட்டினார். 
எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் எழுந்து கீழே போய்விட்டார்.

சுந்தரம் எழுந்தார். இடது கையால் தன் கண்ணாடியை சரி செய்தார். உடைந்த குரலில் பேசினார். "நண்பர்களே..வீழ்ந்து விட்டோம்..முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாய் நம் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.. திகில் செய்திகளை சுமந்த வண்ணம் வங்கக்காற்று இங்கே வந்து நித்தம் நம்மை பயம் கொள்ளச்செய்கிறது". அழுது விடுவார் போலிருந்தார். ஈழ யுத்தத்தின் கடைசி நாட்கள் அவை. இலங்கை அரசு மொத்த நிலத்தையும் சுற்றி வளைத்து ஷெல் மழை பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அந்த மொட்டை மாடி கூட்டத்தில் அமைதி நிலவியது. எனக்குத்தெரியும் அது நீடிக்காதென்று. எதைப்பற்றி பேசவும் அவர்களுக்குத் தயக்கமே இருந்ததில்லை. சென்சிடிவ் விஷயங்கள் என்றென கடந்து செல்ல மாட்டார்கள். வெந்த புண்ணில் ஏறி உட்கார்ந்து விவாதம் செய்வார்கள். அப்படித்தான் அந்த பச்சை டீஷர்ட் ஆரம்பித்தார்.

"இத்தனை இழப்புகளுக்கும் என்னைப்பொறுத்தவரை புலிகளின் யுக்திகளும் ஒரு காரணம்..தற்கொலைப்படை தாக்குதல்கள் கொன்றது எதிரிகளை மட்டுமா..எத்தனை அப்பாவிகள் செத்தார்கள்.."

எல்லோரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டே குரல் வந்த திசை நோக்கி பார்த்தோம். சுந்தரம் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவருக்குத்தெரியும் இது "Just another day in that bloody terrace" . அது ஒரு கருத்துப்பெருவெளி. எக்கருத்தையும் களமாடலாம். பச்சை தொடர்ந்தார்.

"இங்க ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தாக்குதலில் செத்தது எத்தனை உயிர்கள். Fatal Injury எத்தனை பேருக்கு... புலிகள் செய்த மிகப்பெரிய ஸ்ட்ராட்டஜிக் ப்ளன்டர் அது..ஒரு கொலை மற்றொரு கொலையை  பிரசவித்தே தீரும்... "

மொட்டைமாடி கொஞ்சம் வெப்பமானது. சுந்தரம் கையை தூக்கி எழுந்தார். அவர் எப்போதும் காவி வேஷ்டி தான் அணிந்திருப்பார். என்ன வேலை செய்தார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. செருமிக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"தமிழரின் ஆதிப்பிரச்சினை இது தான். வரலாறு தெரியாமல் வாயாடுவது.."




வாலிபால் போல, சில நேரங்களில் எவ்வளவு வேகமாய் சர்வீஸ் போடுகிறோமோ அவ்வளவு வேகமாய் பந்து திரும்ப வரும். அதை பெர்சனலாய் எடுத்துக்கொள்ளக்கூடாதென்பது விதி. சுந்தரம் தொடர்ந்தார்.

"இலங்கையில்  நடந்த கருப்பு ஜூலை பற்றி கேள்வி பற்றிருப்பீர்கள்..ஒரு யுகத்தில்  நடக்கக்கூடாத அட்டூழியங்கள் இலங்கையில் அந்த ஒரு வாரத்தில் நடந்தது. கும்பல் கும்பலாய் வந்து தமிழர்களை சிங்கள அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்று குவித்தார்கள். இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். குங்குமம் அணிந்திருந்த பெண்கள் எல்லாம் சூறையாடப்பட்டார்கள். போலீஸாரெல்லாம் அரணாய் நின்றார்கள் சிங்களருக்கு. பிணங்களின் நடுவே புத்த பிட்சுக்கள் சிரித்தபடி நடந்தார்கள்.. இதையெல்லாம் நான் சொல்லவில்லை. நேரில் பார்த்த நார்வே டூரிஸ்ட் ஸ்கார்ஸ்டீன் சொல்கிறார். குஜராத் கலவரம் போல பத்து மடங்கு வன்முறை அது. பிணக்குவியல் மேலே எந்த உலக நியாயங்களும் எடுபடாது.  "

பச்சை உட்கார்ந்த படி பேசினார். "மறுக்கல சார்..அறவழிபோராட்டம் தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.."

சுந்தரம் தீ பிளம்பானார். "மடையா..கிறுக்கா.." மாடி அதிரும்படி கத்தினார். ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டுவாரென எதிர்பார்த்திருந்தேன். நடக்கவில்லை. சுந்தரம் முகமெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்தனர். தண்ணீர் குடித்தார். திரும்பவும் எழுந்தார். எல்லாரையும் பார்த்து கேட்டார் "எந்த மயிராண்டிக்காச்சும் திலீபன தெரியுமா...அப்பறமென்ன அறம்,அஹிம்சை "




எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்தோம். அந்தப்பேரை சத்தியமாய் அதற்குமுன் நான் கேள்விப்பட்டதில்லை. அவர் கையிலிருந்த ஒரு புத்தகத்தை திருப்பி மாவீரன் திலீபனின் உருவத்தை எங்களுக்கு காட்டினார். கண்ணாடி போட்டுகொண்டு அந்த சரித்திர நாயகன் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான். அவனைப்பற்றி எதுவுமே தெரியாமலே உடல் ஒரு மாதிரி சிலிர்த்தது.





"திலீபன் இருபத்து மூன்று வயதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரானார். ஈழப்போரில்  இந்திய தலையீடுகள் அதிகமிருந்த காலமது. அஹிம்சை தானே இந்தியா பேச நினைக்கும் மொழி. அதிலேயே பேசுகிறேன் என்று இறங்கினார்.  1987 செப்டெம்பர் 15ல் இந்தியாவிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் தொடங்கினார். அவைகள் மிகவும் எளிமையானவை மட்டுமல்ல நியாயமானவையும் கூட.  பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்பது பிரதானமானது. இந்த அரசியில் கோமாளிகள் செய்கிற உண்ணாவிரதமில்லையது, உரிமை மீட்கும் வெறி கொண்ட புலியின் உண்ணாவிரதம். அன்றைய தினம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், உண்ணாவிரதம் நடந்த  நல்லூர் கந்தசாமி கோயிலில் கூடினார்கள்.  தாய்மார்கள் பயத்துடன் திலீபனுக்கு திருநீரிட்டு வாழ்த்தினார்கள்."

எனக்கு அந்த காட்சிகள் மனக்கண்ணில் படம் போல ஓடிக்கொண்டிருந்தது. காற்றின் மெல்லிய சத்தத்தை தவிர வேறேதும் சத்தம் அங்கே கேட்கவில்லை.

" மேதகுவிடம் கூட திலீபன் 'அண்ணா..நா எதோ மிரட்றதுக்காக இத செய்யல..கடேசி வர பின் வாங்க மாட்டேன்' என சொல்லித்தான் சென்றிருக்கிறார். இந்தியாவும் இலங்கையும் இந்த சம்பவங்களை பொருட்படுத்தவில்லை. காந்தி அதே மொழியில் பேசியபோது உற்று நோக்கிய உலகம், திலீபனை கண்டுகொள்ளவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது. நீரைக்கூட தவிர்த்து திலீபன் காலனையும் கலங்க வைத்துக்கொண்டிருந்தான். உடல் உருகிபோய்க் கொண்டிருந்தான். அறம்,நீதி,அமைதி எல்லாமே திலீபனுடன் சேர்ந்து செத்துக்கொண்டிருந்தன."

"நாட்கள் போய்க்கொண்டே இருந்தன.யாருமே எதுவும் செய்யவில்லை. பத்தாவது நாளில் அபாயக்கட்டம் அடைந்தான் அந்த மாவீரன். அப்போதும் மருத்துவ உதவியை தவிர்த்தான். வேண்டாமென வீம்புகொண்டான். அவன் துப்பாக்கி முனையில் பேராசை கோரிக்கைகள் வைக்கவில்லை. அறத்தின் வழி நின்று சில நியாயங்களை கேட்டான். உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. இது உலகின் வேறேதோ இனத்தில் நடந்திருந்தால் குறைந்த பட்சம் அதைப்பற்றிய பதிவாவது இருந்திருக்கும்."


"கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையிலேயே திலீபன் செப்டம்பர் 26ல் இறைவனடி சேர்ந்தான் . இல்லை இறைவனானான். நல்லூர் உண்ணாவிரத திடலில் பெரிய மரண ஓலம் கேட்டது.  அவன் ஆயுதத்தால் வீழவில்லை அஹிம்சையால் வீழ்ந்தான். அஹிம்சையும் அறமும் ஈழத்தை காப்பாற்றவில்லை. வெறும் இருபத்து மூன்று வயதில் அத்தனை வைராக்கியத்துடன் உயிர் விட எவனுக்கு தைரியம் வரும். அவன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தவன். நினைத்திருந்தால் "தானுண்டு தன் வேலையுண்டென" இருந்திருக்கலாம். இந்நேரம் ஏதோ ஒரு நாட்டில் பெரிய டாக்டராய் ,தன் குடும்பத்துடன்  வாழ்ந்திருக்க முடியும். அவனேன் இந்த இனத்திற்காக உயிர் நீத்தான்..இங்கே பாருங்கள் யாருக்குமே அவன் பெயர் நியாபகத்தில்  இல்லை. அவனுக்காக வைக்கப்பட்ட நினைவிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன.  எந்தத்தாய் நிலம் தம் இனம் காக்குமென நினைத்தானோ அது இன்று இனச்சாவு நடக்கையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது "

சுந்தரம் அமைதியாய் சாரில் உட்கார்ந்தார். பக்கத்துக்கு வீட்டு மாடியில் சில இளைஞர்கள் மஞ்சள் டீசர்டில் டி.வி முன் உட்கார்ந்து கொண்டு டி.வி  ஒலியை அதிகப்படுத்தினர். "எங்க தல தோனிக்கு பெரிய விசில அடிங்க.." என்ற சத்தம் விண்ணைப்பிளந்தது.



ஞாயிறு, 5 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 2

 

                                             மெமரீஸ் 

நான் கொஞ்சம் குரலை உயர்த்தி  "ப்ளீஸ் நிறுத்துங்க ..." என்று கத்திய பிறகு தான் வண்டியை நிப்பாட்டினான்.  "என்ன பிரச்சனை"  என்பது போல சலீம் அதிர்ச்சியாய்  என்னைப்பார்த்தான். நான் காரின் பின்சீட்டில்  தலையில் கையை வைத்து உட்கார்த்திருந்தேன். எனது உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. வெளியில் பெய்யும் பனிமழைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது பயத்தில் நடுங்கும் நடுக்கம்.  டிரைவர் சீட்டின் மேலே இருக்கும் கண்ணாடியை சரி செய்து அது வழியே  என்னைப்பார்த்து "என்னாச்சுங்க..தலை வலியா "  என்றான். வண்டியை ஓரங்கட்டி நிப்பாட்டினான்.

"என்னோட ஷோல்டர் பேக் கார்ல ஏத்தல..ட்ரன்க்க திறங்க.. செக் பண்ணனும்"

" சர்ஜி.. அதுல எதுவும் எக்ஸ்பென்சிவ்வா இருந்துச்சா"

உண்மையில் அதில்தான் எல்லாமுமே இருந்தது. ஒரு மனிதன் வெளிநாட்டில் வந்து எதையெல்லாம் தொலைத்து விடக்கூடாதோ அதெல்லாமும் அந்தப்பையில் இருந்தது. என்னுடைய பாஸ்போர்ட், சான்றிதழ்கள், பணப்பை , லேப்டாப் மற்றும் சில முக்கிய கோப்புகள். பாக்கெட்டில் இருந்த நூறு ஈரோவைத்தவிர அனைத்தையும் அந்தப்பையில் தான் வைத்திருந்தேன். சமீர், காரின் ட்ரங்க்கை திறந்தான். ரெண்டு குண்டு டிராலிகள் மட்டும்  இருந்தது. "எங்களை வச்சு நீ என்ன பண்ணப்போற..மெய்ன் பீச விட்டுட்டியே" என்று அவைகள் சிரிப்பது போல இருந்தது. சமீருக்கு விஷயம் புரிந்தது. "வண்டில ஏறுங்க..திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் போய் பாக்கலாம்" என்று கூறி வண்டியில் ஏறினான். நானும் எதுவும் சொல்லாமல் மந்திரிச்சு விட்ட கோழி போல வண்டியில் ஏறினேன். 

மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. என்ஸ்கடேவின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தது.  மிக மெதுவாய் வெள்ளை மழை போல பனி பெய்து, ரோடு, மரங்கள், தெருவிளக்குகள் எல்லாவற்றின் மீதும் வெள்ளை பூசிக்கொண்டிருந்தது. இது நெதர்லாந்தின் கடைக்கோடி ஊர். இங்கே வந்து இறங்கி அரைமணிநேரத்தில் ஒரு திகில் அனுபவத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.

"ஜி..உங்க பேரு "

"சிவராஜ்"

"இந்தியாவா "

"ம்ம் "

"அந்த பேக்க  ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில வரும்போது கைல வச்சிருந்தீங்களா... யாருன்னா உங்க கூட பேச்சு கொடுத்தாங்களா.."

இது போன்ற சூழ்நிலையில்,  கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அந்த பொருளைத் தொலைத்ததை விட அதிக வலியைக்கொடுக்கும். திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தோம். கிட்டத்தட்ட காலியாக இருந்தது. என் மண்டைக்குள் கடைசி ரெண்டு மூன்று மணி நேரத்தில் நடந்ததெல்லாம்  "ஹைலைட்ஸ்" ஓடியது. அதில் கூட அந்த பேக் சம்பந்தப் பட்டவை  ரப்பர் வைத்து அழிக்கப்பட்டிருக்கிறது.  எல்லா இடத்திலும் தேடினோம் . நான் நின்று தண்ணீர் குடித்த இடம், காருக்காக காத்திருந்த இடம்,தலையை சொரிந்த இடம்..ம்ஹீம் எதிலும் இல்லை. நெதர்லாந்து மண்ணில் கால் வைத்து நாலு மணி நேரம் தான் ஆகிறது. தற்சமயம் "நான் இன்னார்" என நிரூபிக்க என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. என்னை நினைத்தால் எனக்கே பரிதாபமாய் இருந்தது. இந்த பாவ உடலை விட்டு தப்பித்து எங்கேயாவது ஓடி விட வேண்டுமென்பது போல இதயம் கன்னாபின்னாவென துடித்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் பத்தாதென நினைத்த விதி, அந்த கணத்தில்  இன்னொரு டீ ஸ்பூன் காரத்தை சேர்த்தது.

இரண்டு போலீஸ்காரர்கள் வாக்கி டாக்கி ,துப்பாக்கி சகிதம் எங்களை நோக்கி வந்தார்கள். எனக்கு அவ்வளவு பதட்டம் இல்லை. நீச்சல் தெரியாதவனுக்கு அம்பது அடி ஆழமோ, நூறடி ஆழமோ  எல்லாம் ஒன்று தான். சமீர் தான் பயந்து போனான். அந்த மாதத்தில் தான் பாரீஸ் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. ஐரோப்பா முழுவதுமே ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார்கள்.

"ஜென்டில்மென்..கைகளை மேலே தெரியும் படி தூக்கி ..சுவற்றை நோக்கி திரும்பி நில்லுங்கள்..நகராதீர்கள்.."


போலீஸ் இருவரும் ஆறடியில் மல்லுயுத்த வீரர்கள் போல இருந்தார்கள். நானும் சமீரும் அவர்கள் சொன்னதை செய்தோம். சமீர் கொஞ்சம் தெளிவான பவ்யமான குரலில் "ஆபிசர்.. நா கேப் ட்ரைவர்..என்னோட கஸ்டமர் அவரு ..பேக்க மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாரு.. அதா(ன்)தேடிட்டு இருந்தோம்.." .  அதில் ஒரு போலீஸ்கார் சமீரின் முகத்திற்கு பக்கத்தில் வந்து "உஸ்ஸ்ஸ்" என்றார். அமைதியானான். எங்களை பரிசோதித்தார்கள். பிற்பாடு ரயில் நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு கூப்பிட்டு போனார்கள். சமீரை பார்க்க சங்கடமாய் இருந்தது. எனக்கும் அவனுக்கும் வெறும் அரைமணிநேர சகவாசம் தான். அதுக்கே அல்லல் படுகிறான்.நான் நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் அவர்கள் முன் கொட்டினேன். அதில் ஒருவர் என்னை ஆழமாய் பார்த்தார். திரும்பவும் பேசத்தொடங்கினார். எல்லா டச்சுக்காரர் களையும் போலவே இலக்கணத்தை துறந்த ஆங்கிலம் பேசினார். 

' இந்தியால இருந்து இன்னைக்கு நைட் ஏழு மணிக்கு ஆம்ஸ்டெர்டாம் வந்தீங்க.. அங்கிருந்து ட்ரெயின் ஏறி என்ஸ்கடே வந்தீங்க..அப்புறம் கேப்ல ஏறி ஹோட்டல் கிளம்புனீங்க..திடீர்னு தான் பேக் காணோம்னு தோணிருக்கு '

நானும் சமீரும் கோரஸாய் தலையாட்டினோம். " ஒரு வேல பேக் இங்க இருக்குமோனு திரும்பவும் ஸ்டேஷன் வந்து தேடிருக்கிறீங்க..". திரும்பவும் தலையாட்டல். அவர் நாங்கள் சொல்வதையெல்லாம் போனில் யாருக்கோ டச்சில் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் எழுந்து போய் தனியே பேசிக்கொண்டார்கள். என்னிடம் வந்து என்னுடைய பாஸ்போர்ட் நம்பரையும்..நான் வந்த பயண டிக்கெட்டயும் கேட்டார்கள். கொடுத்தேன். 

"ஆம்ஸ்டெர்டாம் ஏர்போர்ட் அத்தாரிட்ட பேசிட்டு வர்றோம்..உண்மை பேசுனா பயப்படத்  தேவையில்லை..ஒரு அரை மணி நேரம் இங்க வெயிட் பண்ண வேண்டி வரும்..அந்த மெஷின்ல காஃபி குடிக்கணும்னா குடிச்சிக்கோங்க... "  ஒரு ஓரத்தில் இருந்த காஃபி மெஷினை கை காட்டிவிட்டு வெளியே போனார். கொஞ்ச நேரம் நானும் சமீரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. எழுந்து போய் காஃபி எடுத்துக்கொண்டு வந்தேன். சமீர் என்னைப்பார்த்து "கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும் நீங்க.."என்றான். இதே வார்த்தையை முப்பத்திரெண்டு வருடமாய் எத்தனை குரல்களில்  கேட்டிருக்கிறேன். இப்போது ஒரு ஆப்கானி கேப்  டிரைவரிடம் கேட்கிறேன். நாடு விட்டு நாடு வந்து பிழைத்துக்கொண்டிருப்பவனின்  அன்றாடத்தில் வந்து குழப்பம் விளைவித்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் சொல்வதையே அவனுக்கும் சொன்னேன் "சாரி "  . அவன் எதுவும் சொல்லவில்லை. சுடச்சுட காஃபி வயிற்றுக்குள் இறங்கியது. உடல் கொஞ்சம் இலகுவானது. மூச்சை இழுத்து விட்டேன். நடந்தவற்றை நூறாவது முறையாக மனதிற்குள் ஓடவிட்டேன். இந்த முறை காட்சிகள்  பதட்டமில்லாமல்  ஓடியது..

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                    இரவு  7.40 மணி 

ஆம்ஸ்டர்டாம் ஏர்ப்போட்டில் இருந்து இரண்டு பெரிய டிராலிகள், கையில் ஒரு ட்ராவல் பேக் , தோளில் ஒரு கருப்பு பேக் சகிதம் வெளியே வருகிறேன். ஆம் அந்த பேக் இப்போது தோளில் தான் இருக்கிறது.  அத்தனை உருப்படிகளையும் வைத்துக்கொண்டு மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்கிறேன். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கிறேன். எனக்குப்பின்னால் ஒரு வயதான ஆண் நிற்கிறார். அவரை எந்த கோணத்தில் பார்த்தாலும் திருடராய் தெரியவில்லை. டிக்கெட் கவுண்டரை அடைந்தேன். ஒரு பெண் கம்பியூட்டர் முன் அமர்ந்திருந்தாள்.

"என்ஸ்கடே டிக்கெட் வேணும் "

"முப்பது ஒன்பது ஈரோ..கார்ட் ஆர் கேஷ் ?"

அவள் புருவங்கள் அடர்த்தியாய் இருந்தன.கண்களின் கருவிழி நீல விழியாய் இருந்தது. லிப்ஸ்டிக் போட்டிருந்தாளா இல்லையா என சொல்வது கடினம். வலது கையில் ஒரு விரலில் மோதிரம் அணிந்திருக்கிறாள். நிச்சயம் திருமணமானவள். இவையெல்லாம் தேவையில்லாத தகவல்கள். எடிட்டில் தூக்கியிருக்க வேண்டும். கதைக்குள் புகு.

"கார்ட் "

"வேகமா கொடுங்க..ட்ரைனுக்கு பத்து நிமிஷம் தான் இருக்கு "

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஓடுகிறேன். வண்டி வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு என் அனைத்து பொதிகளையும் ட்ரைனுக்குள் ஏற்றி நானும் ஏறிக்கொண்டேன்.இன்னமும் அந்த பாசக்கார பேக் என்  தோள்களை தழுவியிருக்கிறது.


                                           

                                                                   இரவு  09:00

ட்ரெயின் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.  நான் கையில் வைத்திருந்த "Fault in our stars" நாவல் படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் சில மணி நேரத்தில் நடக்கவிருக்கும் கிரக பலன்கள் தெரியாமல் சந்தோசமாய் இருக்கிறேன். எதிரில் இருப்பவர்கள் நெட்டி முறிப்பதும் , எழுந்து நடப்பதுமாக இருந்தார்கள். மிக முக்கியமாய் அந்த பிரசித்தி பெற்ற பேக் என் இடது பக்கம் இன்னமும் இருக்கிறது. அது அழகாய் ஒரு நாய்க்குட்டி போல என்  மேல் சாய்ந்திருக்கிறது.

 ஒரு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள். ஒரு பெரியவர் தன் மனைவியுடன் எங்கள் பெட்டியில் ஏறினார்.என்னைப்பார்த்து லேசாய் சிரித்தார்.

"நீங்க ஆசியனா"

"ஆமா..இந்தியன் "

"ஓ..வெரி நைஸ் கன்றி அண்ட்  பீப்பிள்..என்னோட கசின் ரெண்டு முறை டெல்லி போயிருக்கிறான்.." 

"அப்பிடியா நல்லது "

"தாஜ்மஹால் பார்த்திருப்பீங்களே  ..எப்பிடி இருக்கும்  அந்த உலக அதிசயம்?"

'ஒரே ஒட்டக வீச்சம். போற வழியெல்லாம் குப்பை,சாக்கடை,ஏமாத்துக்காரர்கள். சம்மர்ல போனா அடிக்கிற வெயிலுக்கும் அந்த சூழலுக்கும்  காதல் மேலேயே ஒரு வெறுப்பு வந்திரும்'னு சொல்ல நினைத்து தேச நலன் கருதி "நல்லாருக்கும்"மென முடித்துக்கொண்டேன்.


                                                   இரவு 09:30

ட்ரைன் என்ஸ்கடேவை அடைந்திருந்தது. அது தான் கடைசி ஸ்டேஷன். எல்லோருமே இறங்கினார்கள். நானும் இறங்கும் உத்வேகத்தில் இருந்தேன். இந்தியாவில் அப்போது இரண்டரை மணி ஆகிக்கொண்டிருந்திருக்கும். எனக்கு தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டிருந்தது. என்னுடைய தோளில் பேக்கை போட்டுக்கொண்டு மற்ற லக்கேஜுகளை எடுத்துக்கொண்டிருந்தேன். தோளில் இருக்கும் பை, புடைப்பாய் இருப்பதால் இறங்கிக்கொண்டிருப்பவர்கள் மேலே இடிக்கிறது. சிலர் முறைக்கிறார்கள். சிலர் முனங்கிவிட்டு செல்கிறார்கள். அந்த பெரியவர்  இறங்கும்முன் "நீங்க  அந்தப்பையை கீழே வச்சிட்டு..உங்க லக்கேஜையெல்லாம் எடுங்க..அது பெட்டர் ". அவசரமாய் பையை சீட்டில் வைத்து விட்டு எல்லாவற்றையும் எடுக்கிறேன். பின்னால் ஒருத்தர் தள்ளுகிறார். அப்பிடியே நடக்கத்தொடங்குகிறேன். ட்ரெயினில் இருந்து இறங்குகிறேன். நடக்கத்தொடங்குகிறேன். பை அனாதையாய் பயத்துடன் அந்த சீட்டில் உட்கார்ந்திருக்கிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் காபி குடித்து முடிப்பதற்கும் ,போலீஸ்காரர்கள் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

"நீங்க இந்தியன் எம்பசிக்கு ஒரு .."

அவர்களை பேசவிடாமல் நான் பேசினேன்.

"சார். என் பேக் ட்ரெயின்ல  தான்  இருக்கு. நா வந்தது தான் கடைசி ட்ரெயின்..இது தான் கடைசி ஸ்டாப்..யாருகிட்டயாச்சும் சொல்லி ட்ரெயின்ல செக் பண்ண முடியுமா..இப்போ உடனே பண்ண முடியுமா "

அவர் என்னை போய் பெஞ்சில்  உட்காரச்சொன்னார். திரும்பவும்  யாருக்கோ போன் பண்ணி டச்சில் பேசினார்.ஒரு அரைமணிநேர காத்திருப்பிற்கு பின் சில போலீஸ்காரர்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் கையில் என்னுடைய அழகு பெத்த பேக் இருந்தது. போன உயிர் எனக்கு இன்ஸ்டால்மென்ட்டில்  வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் உள்ளிருந்த ஆவணங்களை சரிபார்த்து , சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு என் உயிரினும் மேலான பையை என்னிடம் ஒப்படைத்தார்கள். வாங்கிக்கொண்டேன். போலீஸ்காரர் வெறுப்பாய் என்னைப்பார்த்து  "கொஞ்சம் பொறுப்போட இருக்கப்பாருங்க..எவனாவது இவ்வளவு முக்கியமான விஷயங்கள விட்டிட்டு போவானா..ட்ரெயின் அரைமணிநேரத்துல ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கும்..நீங்க வாரக்கணக்கா அலைய வேண்டி இருந்திருக்கும் "

முகம் சோகமாய் மாறிக்கொண்டது . "சாரி சார்..ஐ ல் பி கேர்ப்ஃபுள்..தேங்க்ஸ் எ லாட் ".  இனிமே இந்த யோகா கீகா செஞ்சாவுது இந்த ஞாபக மறதியை ஒழிச்சிக்கட்டணும்னு மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். காரை நோக்கி நடந்தோம். கார் வரை சமீர் எதுவும் பேசவில்லை. நான் பேக்குடன் பூனை போல அமைதியாய் பின்னால்  உட்கார்ந்து கொண்டேன். சமீருக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப்பேசினான். "ஓகே..ஓகே " என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் தலையில் அவனே அடித்துக்கொண்டான். நான் பதறிப்போனேன்.

"ஏம்ப்பா..என்னாச்சு"

திரும்பி  என்னைப்பார்த்து  "நீங்க உங்க போனை அந்த ரூம்லயே  வச்சிட்டு வந்திட்டிங்களாம்..போய் எடுத்துக்க சொல்லி அந்த ஆபிசர் கால் பண்ணாரு