கண்ட படி பேசு


கை
யில் டி.வி ரிமோட் கிடைத்தவுடன் விரல்கள் படபடத்து அதுவாகவே செய்தி சேனல்களை தேடத்தொடங்கும். புதியதலைமுறை, தந்தி என கிடைத்ததற்குள் உட்புகுந்து விடுவேன்.  பெரும்பாலும் அவர்கள் அண்ணாச்சி கடை விளம்பரங்களையோ அல்லது "சற்று முன் வந்த செய்தி" யாக தங்கம் கிராமுக்கு 600 ரூபாய் கூடியதையோ காட்டிக்கொண்டிருப்பார்கள்.  யாராவது கோமாவில் இருந்தவர்கள் திடீரென மீண்டெழுந்து தங்கத்தின் விலையை கேட்டார்களேயானால் திரும்பவும் கோமாவுக்கே போய்விடுவார்கள். அப்படியே கீழே வரும் "மூன்று கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை".."டிரம்ப் ஈரானிய டீ குடித்தபடி ஆலோசனை ".."அதிமுக பொதுக்குழுவில் அமித்ஷா பேச்சு" போன்ற துணுக்கு செய்திகளை படித்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தால் தமிழகத்தின் விடிவெள்ளியான அரசியல் விவாத நிகழ்ச்சி தொடங்கும். இதை பார்க்காவிடில் காலைக்கடனை முடிக்காதவரின் வயிறு போல மனம் பதறிக்கொண்டிருக்கும். மூன்று நாலு மாதமாகவே இது தான் நிலைமை. புதுப்பட பாடல்கள், நகைச்சுவைகள், ரீல்ஸ்களுக்கெல்லாம் என் டிவியில் இடமில்லை. ஒரே நேரத்தில் மூன்று நாலு பேர் கத்திக்கொண்டிருப்பது எனக்கு சங்கீதம் போல இருந்தது. வீட்டில் இருப்பவர்களின் "ம்ம்க்கும்" என் காதுகளை வந்தடையாது.

எல்லா விவாத நிகழ்ச்சியிலும் வரும் விருந்தினர்கள் அனைவரையுமே "பத்திரிக்கையாளர்" என்று தான் போடுகிறார்கள். அவர்கள் அனைவருமே எதாவுது ஒரு கட்சியின் "சொம்பாகவே" இருப்பார்கள். ஒன்று ரெண்டு கேஸுகள் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் நெறியாளர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் முரட்டு சொம்பாக உருமாறி வந்து அறச்சீற்றம்  செய்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் அங்கிள்களின் ஆதரவு இருக்கும் ஆனால் இந்தமுறை இளைஞர்களும் இதற்குள் இறங்கி விட்டார்கள். "குறுக்கே இந்த கௌஷிக் வந்தா" என விஜய் அரசியலில் இறங்கியதே இதற்கு காரணம். 

இதில் தி.மு.க மும்பை இந்தியன்ஸ் போல ஒரு கடப்பாரை "பத்திரிக்கையாளர்" டீமை இறக்கியிருந்தது . அவர்கள் என்ன தலைப்பிருந்தாலும் கீழ்கண்ட சில பஞ்ச் லைன்களை கக்குவார்கள்.

"இது பெரியார் மண்.. இங்கே எந்த காலத்திலும் மதவாத சக்திகளுக்கு இடமில்லை.."

"மாநில உரிமையை பெற்றுத்தர நமக்கிங்கே வலுவான தலைமை தேவை..அடிமை கூட்டத்திடம் ஆட்சியை மக்கள் கொடுத்துவிட மாட்டார்கள் "

"விஜய் ஒரு பத்து பன்னெண்டு சதவீதம் வாங்குவார். அவர் ஸ்ட்ரா போட்டு உரியும் அந்த ஓட்டும் அதிமுகவிற்கு  போகவேண்டியது..அப்படி பாத்தா திமுக 200 முதல் 210 வரை சாலிடா அடிப்பாங்க"

"இங்கே ஆன்டி இன்குபன்சி..அங்கிள் இன்குபன்சி எதுவும் இல்ல. இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் தமிழகம் ஜொலிச்சு..எல்லாருடைய கண்ணையும் கூச வச்சிட்டுருக்கு..நீங்க வேற.. என்னைக்கேட்டா தேர்தலே தேவையில்ல தெண்ட செலவு.."


முடிவும் ஏறத்தாழ மும்பை இந்தியன்ஸ் போலவே ஆகிப்போனது தான் சின்ன சங்கடம். "திமுகவ எதிர்கட்சியா பார்த்ததில்லையே.."  என இன்றைக்குவரை சிலர் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். "டேய் போதும்டா" என இரும்புக்கரம் கொண்டு இவர்கள் வாயைப்பொத்தினால் தேவலாம். நகைச்சுவையாக இருந்தாலும் லென்த்தாய் போனால் சலிப்பு தட்டி விடுகிறது.

அதிமுக தரப்பு ஆரம்பம் முதலே பரிதாபமாய் தான் இருந்தது. அவர்களுக்கென்று பேச நல்ல பீசுகளே இல்லை. தவிர பேச பாயிண்டும் இல்ல. இடியாப்பம் விக்க வந்தவனை இம்பாக்ட் சப்பாய் இறக்கியது போல முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். இவர்களை எழுப்பி நெறியாளர்கள் பேச சொல்லும் போது 

"மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மாநில நிதியை பெற இந்த அரசுக்கு வக்கில்லை..எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருப்பதா.."

"எடப்பாடியார் டெல்லி போனது மரியாதை நிமித்தமாக..நாட்டின் உள்துறை அமைச்சர் எல்லா விஷயத்திற்கும் இங்க வர முடியுமா.."

"சட்ட ஒழுங்கு சீரழிஞ்சு கிடக்கு..கள்ள சாராய ஆறு ஓடுது.. போதை தலை விரிச்சு ஆடுது.."

இப்படியாக டெம்பிளேட் குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்துவிட்டு மீட்டர் ஆட்டோ போல நின்று விடுவார்கள். இந்தக்கூட்டத்தை நாம் பாராட்ட வேண்டும். தோற்று போவோம் என்று முன்னமே தெரிந்து ரெண்டாவது இடத்திற்கு தான் மோதினார்கள். விவாதம் கொஞ்சம் சூடாய் போனால் கூட "மே நாலாந்தேதி பாத்துக்குவோம்" என வடிவேல் போல பம்மினார்கள். பொதுவாய் கூட்டணி வைக்கும் கட்சியை பா.ஜ.க  விழுங்கும். "அதெல்லாம் இங்க நடக்காது ..எங்களை நாங்களே அடிச்சு பொளந்துக்குவோம் "  என அதிமுக இறங்கியதாக தெரிகிறது. எந்த அதிமுக டீமை சப்போர்ட் செய்ய என "பத்திரிக்கையாளர்கள்" குழம்பி இருப்பதாக ஒரு தகவல் உள்ளது.





உண்மையில் த.வெ.க வை யாரும் ஆரம்பித்தில் சட்டை செய்யவேயில்லை. வீட்டில் பொழுது போகாத நேரத்தில் வெளியே வந்து விஜய் பிரச்சாரம் செய்ய தொடங்கினார். கூட்டம் அம்மியது. கொஞ்சம் கொஞ்சமாய் விஜயின் ஸ்லீப்பர் செல்கள் இந்த விவாதங்களில் வெளியே வந்தார்கள்.

"எழுபது வருஷமா மக்கள் இந்த திராவிட..கங்குலி.. மாடல்களில் சிக்கி சீரழிந்து வருகின்றனர். நாடே ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கிறது..அந்த மாற்றம் ஏன் விஜயாக இருக்கக்கூடாது.."

"அவர் நெனச்சா வருஷத்துக்கு ரெண்டு படம் நடிச்சு ஐநூறு கோடி சம்பாரிக்க முடியும்..அதை விட்டுட்டு வருகிறதை மக்கள் உற்று நோக்கிறாங்க.."

"வீட்டுக்கு ஒரு ஓட்டாவுது விஜய்க்கு இருக்கு..அப்படி பாத்தா ஒரு கோடி ஓட்டு அவர் பட அட்வான்ஸ் புக்கிங் போல உறுதியாய் இருக்கு..எம்ஜிஆர் போல ஒரு கரிஷ்மா..கரீனா..எல்லாமே அவருக்கு இருக்கு

யாருமே சத்தியமாய் விஜய் இப்படி ஜெயிப்பாரென கணிக்கவேயில்லை.  ஆனால் ஒரு பெரும் ஆதரவு அவருக்கு இருந்ததை உரக்க சொல்ல எல்லா செய்தி சேனல்களுக்கும் ஒரு பயம் இருந்தது.  அறம் -விருப்பம்-யதார்த்தம்  என்கிற மூன்றும் வெவ்வேறாக இருக்க வாய்ப்புண்டு. உண்மையான ஊடகங்கள் இதையுணர்ந்து செயல்படும். தங்களின் விருப்பத்தையும், அறத்தையும் யதார்த்ததுடன் குழப்பிக்கொண்டார்கள். சரியோ தப்போ விஜய்க்கு ஒரு பெருங்கூட்டம்  இருக்கிறதென்பதை வடநாட்டுக்காரர்கள் சொல்லவேண்டிய நிலையில் தமிழ் ஊடக லட்சணம் இருந்திருக்கிறது. இவர்களெல்லாம் சேட்டிலைட் டிவி என்பதால் எங்கயோ வானத்தை பார்த்து ஜோசியம்சொல்லியிருக்கிறார்கள். இவர்களை நம்பி க்ரூப்களில் விஜய் ரசிகர்களிடம் "தம்பிகளே தோல்விகளுக்கு துவண்டுவிட கூடாது..தவறான முடிவுகளுக்கு சென்று விடக்கூடாது" என்றெல்லாம் பொதுநலக்கருத்துக்கள் எல்லாம் சொன்னோம் . இப்போ அந்த மெசேஜ்லாம் படிச்சு பாத்தா எங்களுக்கே அசிங்கமா இருக்கு. ஆனா இந்த டீவி  காரனுங்க கொஞ்சம் கூட சொரணை கிரணை இல்லாம "முதல்வர் விஜய் முன் இருக்கும் சவால்கள்" னு  அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க. 



பரவால்ல.. இதுபோல குழம்பிப்போன மக்களின் சார்பாக சில கோரிக்கைகளை முதல்வர் விஜய்க்கு வைக்கிறோம். (தமிழராய் இருந்தால் ஷேர் செய்யவும். அண்டை மாநிலத்தவரும் ஷேர் செய்யலாம் தவறொன்றுமில்லை)


1.முதல்வரய்யா..தமிழக அரசு தயாரிப்பில் நீங்கள் திரும்பவும் படங்கள் நடிக்கணும். நம்ம நிதி நிலைமை அப்பிடி. குறைந்த பட்சம்  தூய்மை பணியாளர்கள்..போக்குவரத்து ஊழியர்கள் பென்ஷன்..போன்ற பிரச்சனைகளுக்காவது அந்த வருமானம் உதவும். தவிர வசனங்களிலும் திராவிட பக்கிகளை ஊமைக்குத்து குத்திவிடலாம்.

2.நண்பர் அஜித்திடம் பேசி திருச்சி கிழக்கில் அவரை களமிறக்குங்கள். பிரச்சாரம் எல்லாம் தேவை இல்லை..காரில் "ரோடு ஷோ" போனால் போதும் என்று சொன்னால் அவரே வந்து விடுவார். தளபதிக்கே மக்கள் இந்த ஆதரவென்றால்..தலையும் சேர்ந்தால் ஓட்டு எந்திரத்தின் பட்டன்கள் பிச்சுக்கும். பின்னாளில் இரட்டைத்தலைமை பிரச்சனை வராமலிருக்க ,கேவிகே (கேரள வெற்றி கழகம்) என்கிற கட்சியை ஆரம்பித்து அவரை பக்கத்து ஸ்டேட் பக்கம் தள்ளி விட்டு விடலாம். 

3. சட்டசபையில் சின்னவர் பேசும்போது, பேச்சுப்போட்டியை வேடிக்கை பார்க்கும் முதல் ரோ ஆடியன்ஸ் போல உட்கார்ந்திருக்க கூடாது. குறைந்த பட்சம் ராஜ்மோகனையோ ஆதவயோ ஏவி விடுங்கள். எப்போதுமே சட்டசபையில் கடைசி கத்து நம்ம கத்தாக இருக்க வேண்டும். அது தான் அரசியல் சூட்சமம்.

4. ரிசப்ஷன் மாப்பிள்ளை போல தினமும் கோர்ட் சூட்டில் வராதீர்கள். அடிக்கிற வெயிலில் பார்க்கிற எங்களுக்கே வேகுது. ஜீன்ஸ்..டீ ஷர்ட்..வேட்டி..கைலி என ஜனரஞ்சகமாய் மாறுங்கள்.

5. இப்போதைய காங்கிரஸ்காரர்களால் அவர்கள் கட்சிக்கோ.. தமிழ்நாட்டுக்கோ எந்த நன்மையும் நடந்ததில்லை. அதனால் அவர்களால் உங்களுக்கும் எந்த பலனும் இருக்கப்போவதில்லை. லாரிக்கு அடியில் கட்டின எலுமிச்சை போல ஒரு "மூட்" செட் பண்ண மட்டுமே உதவுவார்கள். மத்தபடி அவர்களுக்கும் சேர்த்து நீங்கள் தான் உழைச்சு கொட்டணும்.

6.அதிமுகவுடன் பழக்க வழக்கம் வைக்காதீர். எப்படியும் சண்டை போட்டு அவர்களே செதறு தேங்காய் ஆவார்கள். எவ்வளவு தள்ளி இருக்குறீர்களோ அவ்வளவு நல்லது இல்லையேல் சில்லுகள் கண்ணில் பட்டுவிடும்.

7. எந்த காரணத்தை கொண்டும் தேமுதிகவை சேர்த்து கொள்ளாதீர்கள். அவர்கள் ஒரு துரந்தர் கட்சி. அக்கா சொந்தக்கூட்டணியை காலி செய்வதில் கில்லாடி. முடிந்தவரை அக்காவை திமுக கூட்டணியில் இருக்க வைங்கள்.





கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Super 😃