வியாழன், 22 நவம்பர், 2012

பாப்கார்ன்




   பேரன்பு கொண்ட தாய்மார்களே,பெரியோர்களே... தமிழ் வலையுலக வரலாற்றுலேயே மொத முறையா  கண்டமானிக்கு,குண்டாங்குதிரையா ஏகப்பட்ட படங்களுக்கு ஒரே பதிவுலே விமர்சனம் சொல்றோம். இப்படிப்பட்ட அளப்பரிய காரியத்தை நான் செய்ய காரணமாக திகழ்ந்த தமிழ்நாடு மின்சாரத்துறை,பாக்கவே முடியாதபடி மட்டமா விளையாடிய கிரிக்கெட் அணி,போட்ட படத்தையே பொறையேருற அளவு போட்ட தொலைக்காட்சிகள்,மிஸ்டு கால் கொடுத்தும் திரும்பக்கூப்பிடாத கல்நெஞ்சுக்கார நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மானாவாரியாய் இந்த பதிவை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்குறேன்.

மிரட்டல் :  சொல்லிகிறமாதிரி ஒரு படம் கிடையாது தான். இப்போ தமிழ்நாடே சொல்ற அதே வாசகத்தை நானும் சொல்றேன் "சந்தனதுக்காக பாக்கலாம்". வசனம் தான் தமிழுல..மத்த படி அக்மார்க் தெலுங்கு படம். நைட்டு தூக்கம் வரலேன பாக்கலாம் .

அட்டக்கத்தி: பயங்கர ஹைப் ஏத்தி ரிலீஸ் ஆன படம்.படு சுமார் ரகம். பாட் டெல்லாம் நல்லா இருக்கும் . ஆனா அதத்தான் டி.வில போட்டுரானே..நந்திதா சிரிக்கும்போது கன்னத்துல விழுற குளிக்காக கிளைமேக்ஸ் வரைக்கும் உட்காந்திருந்தேன்.

சுந்தரபாண்டியன்: கைப்புள்ள மாதிரி அடி மேல அடி வாங்குனதுக்கு பிறகு  கொஞ்சம் நிம்மதி தந்த படம். அதே சசிகுமாரிசம். பரோட்டா சூரி காமெடி செம்ம கலக்கல்.ஏற்கனவே வந்த படங்கள மிக்சில போட்டு அடிச்சு எடுத்த மாதிரி இருக்கு ,ஆனா ரசிக்கிற மாதிரி இருக்கு.

நான் : எதோ இங்க்லீஷ் படத்தோட உல்டானு ஒரு பதிவுல படிச்சேன். "Identity Theft" வச்சு இங்க்லீஷ்ல  ஒரு நூறு படம் வந்திருக்கும் ,அதுனால அத  ஏத்துக்க முடியாது. புத்திசாலித்தனமான த்ரில்லர். குடு குடு திரைக்கதை (எத்துன நாள் "விறு விறு " னு சொல்றது ..மாத்துவோம் ). நல்ல படம். விஜய் ஆண்டனி இன்னும் ஒரு டீ ஸ்பூன் நடிச்சிருக்கலாம்.


முகமூடி : இந்த படத்துக்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருக்க தேவையில்லை. இது சூப்பர் ஹீரோ படமாம். குங்க்பூ ,அது இதுனு ஒரு மாதிரி முயற்சி பண்ணாங்க. பாவம் மிஸ்கினுக்கு செட் ஆகல.முந்தய படங்களுக்காக மன்னிசிரலாம்.


மாற்றான்: இந்த வருசத்தோட மகா மோசமான படம். ரெட்டைத் தலைவலி. நம்பி ரெண்டாவுது நாள் புக் பண்ணி சில நண்பர்களை வேற கூட்டிட்டு போனேன். அதில் பலர் இன்னைக்கு வரைக்கும் என்கூட பேசுரதில்லை.ஹாரிஸ் பாஸ்..எங்கயாச்சும் காப்பி அடிச்சாவுது நல்ல பாட்டா போடுங்க...




பீசா : டக்கர் படம். சும்மா புகுந்து விளயாடிட்டாங்க. அம்பது கோடிக்கு படம் எடுக்கும் புத்திசாலிகளெல்லாம் இந்த படம் பாத்தா தேவல.முழுக்க இருட்டு ,ஒரு டார்ச்,கொஞ்சம் இசை இத வச்சி நம்மள ஒரு நாப்பது நிமிஷம் உலுக்கி எடுத்திடுறாங்க...அடுத்த படத்துல "கார்த்திக் சுப்புராஜ்"னு பேர் போடும் போது கை தட்டுவேன். எல்லாரும் தியேட்டர்ல போய் அவசியம் பாக்க வேண்டிய படம்.

துப்பாக்கி: ஏழெட்டு விமர்சனம் படிச்சிட்டு, நாலஞ்சு தடவ கால் பண்ணி கேட்டுட்டு "சேதாரம் இருக்காது" னு நம்பகமான  தகவல் கெடச்சப்றம்  தான் போனேன்.ஒரு தரமான படம். கடைசி வரைக்கும் விஜயானு நம்பவே முடில.முருகதாஸ் எப்படியும் இதவே நாலஞ்சு வருசத்துக்கு எல்லா மொழிலேயும் ரீமேக் பண்ணிட்டு இருப்பார்.இதல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் சில படங்கள நா எதிர் பாத்திட்டு இருக்கேன்..விஜய் பாணில சொல்லணும்னா I am W(h)aiting....அதெல்லாம் எதுன் னா ..




1) பாலாவின் "பரதேசி" (சொதப்ப சான்சே இல்ல...என்ன.. க்ளைமாக்ஸ்ல  யாரு சாகப்போறாங்கன்னு பதறிப்போய் உக்காந்திருக்கணும்)

2) நீ தானே என் பொன் வசந்தம்.(பாட்டெல்லாம் சுமாரா தான் தெரியுது..சமந்த்தாவுக்காக மஸ்ட் வாட்ச் )

3) கமலின் "விஸ்வரூபம்" (நாங்கெல்லாம் கமல் போஸ்டரவே நூறு நாள் பாப்போம்..இத விடுவோமா..)

4) தங்க மீன்கள் ( "கற்றது தமிழ்" ராமோட படம். வேற காரணம் வேணுமா??)

5) கௌரவம் (ராதாமோகன் படம் கண்டிப்பா டீசன்ட்டா இருக்கும் )

6)   ஆதிபகவன் (அமீர் )

7)  கடல் (ஒன்னு மணிரத்னம்..ரெண்டு ராஜீவ் மேனன்..எல்லாத்துக்கும் மேல ஏ.ஆர் .ஆர்.. ) 

8) நடவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (புது டீம்...நல்லா இருக்கும்னு அரசல் புரசலா ஒரு பேச்சு இருக்கு..)





கொஞ்சம் நல்லா  கவனிச்சோம்னா இந்த வருஷம் வெளியான பட பெரிய படங்கள், நம்ம ரசனைய ரொம்ப மலிவா எடை போட்டுட்டாங்க. அதுக்கு முக்கிய காரணம் நல்ல படங்கள நாம கண்டுக்கல. "அழகர்சாமியின் குதிரை" ஓடிருந்துச்சுனா " ராஜபாட்டை"னு ஒரு படம் வந்திருக்காது. ஒன்னும் வேணாம் "ஆரண்ய காண்டம்" னு ஒரு படம் பாஸ்...எப்படியாவுது தேடி பிடிச்சு பாருங்க... இதப்போயா பாக்காம விட்டோம்னு கண்டிப்பா வருந்துவோம். நல்ல படங்கள ஆதரிச்சோம்னா தமிழிழும் பியானிஸ்ட், ப்ரஸ்டீஜ், மில்லியன்  டாலர் பேபி போன்ற படங்களை எதிர்பாக்கலாம் (அதையே எடுத்திராதீங்கப்பா..)








 

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பிர(ற)தோசம்





 அன்று திங்கட்கிழமை. இருக்குற எல்லா எரிச்சலையும் பேக்கில் போட்டுக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பிவந்தேன். ஒரு பய இல்ல. அவள் மட்டும் அவளோட இருக்கையில் அமர்ந்திருந்தாள்.சேலை கட்டி இருந்தாள்.நெற்றி முழுக்க வெள்ளை,சிகப்பு என திருநீரும், குங்குமமும் கோட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் இருந்த சாமி படங்களுக்கு பூ போட்டிருந்தாள். கையில் சூலாயுதம் இல்லையே தவிர கிட்டத்தட்ட ஒரு அம்மன் போலவே காட்சி அளித்தாள். இவளோட கொஞ்சம் பேச்சப்போட்டோம்னா பொழுதுபோகுமேனு பக்கத்தில போனேன்.

"ஹாய்..குட்மார்னிங்...என்னங்க சாயங்காலம் பூ மிதிக்கிறீங்களா..கெட்டப்பே பயங்கரமா இருக்கே.."

"ஹலோ கேலி பேசாதீங்க..இன்னைக்கு பிரதோஷம்...அதான் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்....நாளைக்கு குணாவுக்கு யூ.எஸ் விசா இண்டர்வ்யூ.." 

குணா அவளோட அடிமை.அதாவுது காதலன். வழக்கம்போல அவள வீட்ல இருந்து ஆபிஸ்க்கு ட்ராப் செய்றது, மொபைலுக்கு ரீசார்ஜ் செய்றது, வாராவாரம் ஒரு இங்கிலீஷ் படத்துக்கு டிக்கெட் புக் பண்றது, இவ அசிங்கசிங்கமா திட்டினாலும் "ஈ" யென சிரிப்பது போன்ற அளப்பெரிய காரியங்கள் செய்பவன். சில நேரங்களில் இவன் போன ஜென்மத்தில் அடிமாடா பொறந்திருப்பானோவென நான் நெனச்சிருக்கேன்.

"ஓ அப்டியா..குணாவுக்கு விசா இண்டர்வ்யூவா...கங்ராட்ஸ்..கண்டிப்பா யூ.எஸ் போயிடுவான்..கவலைய விடுங்க..."

"ஏங்க..வாய கழுவுங்க.. அவன் யூ.எஸ் போகக்கூடாதுனு தான் இத்தன வேண்டுதல் போட்ருக்கேன்...நீங்க வேற.."

"என்னங்க சொல்றீங்க...ஏங்க??"

"அவன்லாம் இங்கயே இந்த சீன் போடுறான். அங்கெல்லாம் போனா என்னைய மதிக்க மாட்டான். தவிர இங்க நமக்கு ஹெல்ப்லாம் யாரு பண்றது..ஒரு பொண்ணா இருந்து யோசிச்சு பாருங்க புரியும்.."

"இதுக்காக நா அந்த ஆப்பரேசன்லாம் பண்ணிட்டு யோசிக்க முடியாது..ஏங்க இப்டி...பய ரொம்ப நல்லவனுங்க...உண்மைய சொல்லணும்னா உங்க நாய விட உங்ககிட்ட அதிக விசுவாசமா இருக்கிறது அவன் தான்.."

"கிழிச்சான்...போன பெர்த்டேவுக்கு பிளாட்டினம் ரிங் வாங்கித்தரேன்னு சொல்லிட்டு, டெடிபீர் வாங்கித்தந்து ஏமாத்திட்டான். இந்த பசங்களே இப்டித்தான். நாம ஓகே சொல்றவரைக்கும் தான் கண்ட்ரோல்ல இருப்பானுங்க.அப்றம் அவ்ளோ தான்.."

"என்னங்க கண்ட்ரோல்,கிண்ட்ரோல்னு மிலிட்டரி கர்னல் மாதிரி பேசுறீங்க. எல்லாம் புடிச்சுபோய் தானே லவ் பண்ணீங்க..இப்பப்புடிச்சி எளிமிண்டரி ஸ்கூல் டீச்சர் மாதிரி அவன டார்ச்சர் பண்றீங்க.."





"பின்ன....முன்னெல்லாம் நிலா,வானவில்,ரோஜானு எனக்கு கவிதை எழுதி அனுப்புவான்...அடிக்கடி போன் பண்ணுவான்...எனக்கென்ன பிடிக்கும்னு தெரிஞ்சு தேடித்தேடி வாங்கித்தருவான்...இப்போல்லாம் ஒரு நாளைக்கு நாலு காலுக்கு மேல பண்ண மாட்றான்...போன வாரம் படத்துக்குகூட கூட்டுப் போல தெரியுமா...இப்ப என்ன சொல்றீங்க.."

"ஒரு வேள மூளை திரும்பவும் அவனுக்கு கரெக்டா வேல செய்ய ஆரம்பிச்சிருச்சோ என்னவோ.."

அவள் என்னை எரிப்பது போல் முறைத்தாள். உடனே பயப்பட நாம என்ன குணாவா... இவளை இன்னும் கொஞ்சம் வெறியேற்றினால் அன்றைய நாள் இனிய நாளாக அமையும்னு ஒரு பச்சி எனக்குள் கூவியது.

"குணா உங்கள ரொம்ப டீப்பா லவ் பண்றான்ங்க..சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அவன் உங்க பின்னாடி சுத்த ஆரம்பிக்கிறப்பவே நம்ம சுரேஷ் கூட "அது ரொம்ப சுமார் பிகர் மச்சி...லூசு மாதிரி அடிக்கடி சிரிக்கும்...வேற நல்ல பொண்ணா ட்ரை பண்ணுடா" னு சொன்னான். ஆனா குணா தான் "காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு" சொல்லிட்டான்...அத கூட விடுங்க...நீங்க நான்வெஜ் சாப்ட மாட்டீங்கன்றது தெரிஞ்சதும் அவனும் நிறுத்திட்டான் தெரியுமா...நீங்க காந்திய காதலிச்சிருந்தாக்கூட அவர் இந்த மாதிரி தியாகம்லாம் பண்ணிருக்க மாட்டார்..."

"ஸ்டாப்...நா ஒன்னும் அவன் என்ன லவ் பண்ணலேன்னு சொல்லல..இப்போ மொத மாதிரி இல்ல மாறிட்டான்னு சொல்றேன்.."

"கரெக்ட்தான..மாற்றம் ஒன்று தான் மாறாததுனு மாற்றான் பட டைரக்டர் கே.வி. ஆனந்தே சொல்லிருக்காரே.."

"ஹலோ என்ன ரைமிங்கா பேசுறதா நினைப்பா...அது எப்டிங்க எல்லா பசங்களும் கொஞ்சங்கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்குறீங்க...பெருசா ஜோக் அடிக்கிறோம்னு நெனப்பு...அன்னைக்கு குணா எங்கிட்ட  "உங்கப்பா "தார்-டின்" என்ன சொல்றாரு" ங்கிறான். எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா.."

"முன்னாடி "விடாது கருப்பு" னு சொல்லுவான்..இப்ப மாத்திட்டானா..வெரி ஹுமரஸ் Guy..."

"உங்ககிட்ட போய் பேசிட்டு இருந்தேன் பாருங்க..என்ன சொல்லணும்...."

"சும்மா ஜாலிக்குங்க..சரி கடைசியா ஒரே கேள்வி...அதோட நம்ம உரையாடல முடிச்சிக்கிறலாம்.இப்டி வெறித்தனமா சாமி கும்புடுரீங்களே அப்டி என்னதான் வேண்டுவீங்க..." அவள் "ம்ம்ம்.." னு சொல்லிக்கிட்டே மேலே விட்டத்தை பார்த்தாள். பொண்ணுங்க எல்லாம் சேவாக் மாதிரி... ஸ்டெம்ப்கு வெளியே ஒரு பால் போட்டாலும் டமால்னு அடிச்சிருவாங்க. அவள் தன் திருவாயை திறந்தாள்.


"ம்...மொத மொத குணா ஸ்கெட்ச்ல படம்லாம் வரைஞ்சு லவ் லெட்டர் குடுத்தானே அது மாதிரி வாரம் ஒன்னு குடுக்கணும். தினமும் என்னை ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு ட்ராப் பண்ணனும். அடிக்கடி அம்மா,அப்பாவ  பாக்குறேன்னு ஊருக்கு போகக்கூடாது. தேவையில்லாம உக்காந்து கிரிக்கெட் பாத்திட்டு இருக்க கூடாது. சுடி,சல்வார் மாசம் ஒன்னாவுது வாங்கித்தரனும். ஆபிஸ்ல இருக்கிறாளுகளே அனிதா,பவித்ரா..அவளுங்க கூட பேசவே கூடாது. இந்த கொரங்கு மாறி அங்க இங்கன்னு தாடி வளக்காம "க்ளீன் ஷேவ்" பண்ணனும். எங்க அப்பா அம்மா கிட்ட மரியாதையா நடக்கணும்..."

அவள் கல்யாண வீட்டு மளிகை லிஸ்ட் மாதிரி சொல்லிக்கிட்டே போனாள். எனக்கு தலை கிறுகிறுவென சுத்தியது. அடிமைகள் பிறப்பதில்லை,உருவாக்கப்படுகிறார்கள்.


வியாழன், 12 ஜூலை, 2012

குவாண்ட்டம் (ஆச்சர்ய குவாண்ட்டம்) (பகுதி 3)





அருண் என்னை பாவமாய் பார்த்தான். அவனால் என்னிடம் முடியாதென்று சொல்ல முடியாது. எனக்குத்தெரியும். என் தோளில் கை வைத்து " புரிஞ்சிக்கோ ரவி... அவ அங்க இருக்க வாய்ப்பு ரொம்ப குறைவுடா.....உனக்கு எப்டி புரிய வைக்குறதுனே தெரிலடா" நொந்து போய் சொன்னான்.

"ஒரு பெர்சென்ட் வாய்ப்பு இருக்குமா...அது போதும்டா... போட்டோவுக்கு மாலை போடுறதுக்கு அது எவ்வளவோ மேல்..."




"டேய் ரம்மில ஒரு தடவ வந்த பதிமூனு கார்ட்ஸ்...அதே பதிமூனு கார்ட்ஸும் திரும்பவும் அதே ஆளுக்கே வர எவ்வளவு வாய்ப்பு இருக்கோ..அவ்வளவு தான்டா இருக்கு...கொஞ்சம் யோசிச்சுபாரு.கோடிக்கான உயிரணுல நீ தான் அம்மாவோட கருமுட்டைல போய் வளர்ந்தே...கொஞ்சம் மாறியிருந்தா வேற யாரோ பிறந்திருப்பாங்க...அந்த மாதிரி அங்க அவ ஒரு வேள பிறக்காமலே போயிருக்கலாம்.அவ இல்லேனா அப்றம் திரும்பவும் வந்து அங்க அழுதுவடிஞ்சு என் பொழப்பப்பக் கெடுப்ப. திரும்பி வர்றதுக்கு நாம ஒன்னும் திருப்பதி ட்ரிப் போல டா கண்ணா...இது திரும்பவே முடியாத நீண்ட பயணம்.."

அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் விடாமல் தொடர்ந்தான்.

"டேய் அங்க என்னவேனா நடந்திருக்கலாம். மரபணுகோளாறுல தான் மனுசனே பொறந்தான். அங்க இருக்கவனுக்கு நெத்தில ஆணுறுப்பு இருக்கலாம்."

 எனக்கு குழப்பமே இல்லை. அறிவியல் என் நம்பிக்கையை நையாண்டி செய்யலாம், ஆனால் நான் தீர்க்கமாய் நின்றேன். அருண் என் பக்கத்தில் வந்தான்.

"அங்க அவ இல்லேனா..என் பேச்சக் கேக்கணும்....சோக மியூசிக் வாசிக்காம என்னோட வந்திடனும்...முக்கியமா வேறேதும் வெளிய உளறக்கூடாது.." 

"தேங்க்ஸ் டா"

எனக்கு சந்தோசத்தில் கண்ணில் நீர் கொட்டியது. அன்று இரவே இருவரும் லேப்க்கு போனோம். அந்த மிகப்பெரிய கட்டிடத்தின் நெற்றியில் ஆல்பாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. எனக்கு உள்ளே அனுமதி இல்லை என்பதால் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு பெண் வந்தாள். "ஐ'ம் ரூபா..நீங்க தான ரவி..வாங்க உள்ள போலாம் அருண் கூப்பிடுறார்..". அவளுடன் நடந்தேன்.மேக்ஸி வாசனை அவள் மீது தூக்கலாய் வந்தது. ஒரு முக்கால் ஸ்கேர்ட்டும், சட்டையும் அணிந்திருந்தாள். அருண் உள்ளே மைக்ரோஸ்கோப்பில் பார்த்துக்கொண்டிருந்தான். என்னைப்பார்த்ததும் "டேய் டிரெஸ்ஸை கழட்டு...நேராகுது...நெறையா டீட்டைளிங் பதியனும்..." என்றான்.நிறைய டெஸ்ட்கள் எடுத்தார்கள். கணினியில் என்னென்னமோ செய்தார்கள். வேகமாய் செயல்பட்டார்கள்.விமானத்தில் பயணிக்க போகும் சின்ன குழந்தை மனநிலையில் இருந்தேன். நான்கு மணி நேரம் ஓடிப்போனது.

"அந்த பொண்ணும் வராலாடா..உன் அசிஸ்டன்டா" என்றேன். ஆம் என்பதாய் தலையசைத்தான். "சரி ரவி...எல்லாம் ரெடியாகிடும்.... நம்மள அன்ஜிப் பண்றப்போ அதாவுது மீண்டும் பழைய நிலைக்கு வரப்போ மரபணுல சின்னதா சேஞ்சஸ் பண்ணலாம். நரைச்சமுடி,தொப்பை,உடல் கொழுப்பு,டையபடீஸ் இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் சரிபண்ணிடலாம். நம்ம ரூபா கூடா கொஞ்சம் பெரிய மார் வேணும்னு கேட்டா.." என சொல்லிவிட்டு அருண் ரூபாவை பார்த்து சிரித்தான். அவளும் சிரித்தபடி அவன் மீது டேபிள் பொம்மையை தூக்கி எறிந்தாள்.

சரியாய் காலை அஞ்சு மணிக்கு என்னையும் ரூபாவையும் ஒரு ராட்சஸ மிஷின் பக்கத்தில் நிறுத்தினான். எனக்கு ரொம்பவும் படபடப்பாய் இருந்தது.ரூபா சிரித்துக்கொண்டே நின்றாள். அருணை பார்த்து ரெடி என்றாள். அருண் ஒரு பட்டனை தட்டிவிட்டு அவனும் வந்து சேர்ந்து கொண்டான். எங்கள் மீது மஞ்சள் நிறத்தில் ஒரு கதிர் பட்டது. எனக்கு லேசாய் ஒன்னுக்கு வருவது போல் இருந்தது.சொன்னால் அருண் கடுப்பாவான் என்பதால் சொல்லவில்லை.சுருக்கென இருந்தது,வலியெல்லாம் இல்லை. சிறிது நேரத்தில் மூவரும் ஒரு அறைக்குள் இருந்தோம். ரூபாவும்,அருணும் சந்தோசத்தில் குதித்தார்கள்.ரூபா "வீ டிட் இட்" என கத்திகொண்டு அருணை கட்டிப்பிடித்தாள். 

"ப்ரஸ்ஸர்..டெம்ப்ரேச்சர் செக் பண்ணு..ஆறு நிமிஷத்துல கெளம்பணும்" என்றான். அவளும் வேலையில் மூழ்கினாள். சிறுது நேரத்தில் அந்த அறை நகர்வதுபோல் இருந்தது. அருண் கணினியவே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான். "சூப்பெர்ப்..கெளம்பியாச்சு...எஸ் 12 வீ ஆர் கமிங்.." ரூபா மீண்டும் ஒருமுறை அவனை கட்டிப்பிடித்தாள். அருண் என்னை பார்த்து "என்னடா" என்றான்.



"இல்ல நானும் பேசாம சயிண்டிஸ்ட் ஆகியிருக்கலாம்..". என்றேன். சிரித்தான். உடல் பரிசோதனையை மீண்டும் செய்தார்கள். சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு எதுவும் வேலையில்லை. படங்கள் பார்த்தேன். ஜன்னல் வழியே நட்சத்திரங்களை வெறித்தேன்.நாட்கள் ஓடியது. ஆறுமாத பயணமென முன்னாலே சொல்லியிருந்தான். எப்படியும் போன கொஞ்சகாலத்தில் அருண் பெரியாளாகி விடுவான்.அந்த கொடுக்கும் அவனை ஒட்டிக்கிட்டே வளர்ந்திருவா. நான் நிம்மியை தேட வேண்டும். மலைப்பாய் இருந்தது.

அந்த நாள் கடைசியாய் வந்தது. எஸ் 12 தூரமாய் தெரிந்தது. பூமி மாதிரியே இருந்தது. நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகமானது. அருண் இறங்கவேண்டிய இடத்தையும்,செயல் பட வேண்டிய முறை பற்றியும் விளக்கிக்கொண்டிருந்தான். எனக்கு இளையராஜாவின் காதல் பாட்டுக்கள் கேட்டுக்கொண்டே இருந்தது.ஒரு பெரிய மலையின் ஓரத்தில் இறங்கினோம்.

"டேய் செல்லம்..சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ சரியா பத்து மணி நேரம் கழிச்சி இங்க வந்து சேருவோம்..அப்றம் பேசிப்போம்". இருவரும் ஊர் சுற்றினோம். எல்லோரும் வித்யாசமான தமிழில் பேசினார்கள். புரிந்துகொள்ள கஷ்டமாய் இருந்தது. எங்கு பார்த்தாலும் புதிதுபுதிதாய் பிரபலங்கள். புதிய முகங்கள், வித்யாசமான சாலைகள்,விசித்திரமான சட்டங்கள். மீண்டும் எல்லோரும் சந்தித்தோம்.

அருணும்,ரூபாவும் அவர்கள் திட்டம் பற்றி பேசினார்கள். அடிக்கடி ஊருக்குள் போனோம். பதினைந்து நாட்கள் ஓடியது.ஆர்யநகர்ல எதோ அரசியல் பிரச்சனை என்றான். நம் சென்னை தான் ஆர்யநகராம்.நான் மட்டும் ஒரு நாள் ஊருக்குள் போனேன். அந்த நாள் காலையில் ரூபா இங்கு எல்லோருடைய விபரங்களும் கணினியில் அரசு சேமித்திருக்கிறது என்றாள். 

அந்த நாள் தான் எஸ் 12ல் கடவுள் இருக்கிறான் என என்னை நம்பவைத்தது. ஒரு தரகரின் வழியாய் என் கையிலிருந்த நிம்மியின் போட்டோவை கொடுத்து தேடினேன். கணினியின் திரையில் என் எதிர்காலம் தெரிந்தது. நிம்மி சிரித்தபடி நின்றிருந்தாள். துள்ளிக்குதித்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் "லூசு" என திட்டும் அளவு கத்தினேன். மீண்டும் ஒருமுறை அவள் முகவரியை சொல்லிக்கொண்டேன்.

"15, முல்லை தெரு, ஆனந்தபாளையம், ஆர்யநகர்"





சொல்லவே தேவையில்லை அடுத்த இரண்டாவது மணிநேரத்தில் நான் அங்கே இருந்தேன். மீண்டும் அவளை பார்த்த அந்த நொடியை என்னால் மறக்க முடியாது. கண்ணைமூடி கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது கண்ணை திறக்கையில் கடவுள் அருகே வந்து நம்மை கட்டிப்பிடித்தால் எப்டி இருக்கும் அப்டி இருந்துச்சு. சின்ன நெத்தி, சீரான மூக்கு, ஸ்ட்ராபெர்ரி உதடு என்னோட அதே நிம்மி. ஒரே வருத்தம் இங்க அவள எல்லாம் சுஜானு கூப்பிடுறாங்க. அவளை விரட்ட தொடங்கினேன். என்னை பார்த்து பயந்தாள். நிம்மி என்னை பார்த்து பயந்து ஓடுவது உண்மையில் எனக்கு வேடிக்கையாய் இருந்தது. கடிதம் எழுதினேன்,கல்லூரிக்கு வெளியில் காவல் காத்தேன்,அவள் அண்ணனிடம் அடி வாங்கினேன். ஆறு மாதம் இப்படியே ஓடியது. இதற்கிடையில் ஒரு வேலையிலும் சேர்ந்துவிட்டேன். அருணும்,ரூபாவும் அதற்குள் டீவியில் எல்லாம் பேட்டிகள் கொடுக்குமளவு வளர்ந்து போனார்கள்.


நிம்மி இந்த சிஜோயா 12ம் தேதி..அதாவது உங்க ஜனவரி 12ம் தேதி... "மீ டூ" சொன்னா..அடிக்கடி ரயில் நிலையத்தில தான் ரகசியமா சந்திச்சிக்கிட்டோம். செத்துப்போன பொண்டாட்டி கூட திரும்பவும் வாழ்ற சந்தோசம் எவனுக்கு கிடைக்கும். ஒரு நாள் என்னை பார்த்து "ரவி..உன்ன நினைக்காம இருக்கவே முடில..மண்டைக்குள்ள நீ தாண்டா  இருக்க " என சிணுங்கினாள்.

"இங்கனாப்ல..அதே தான் ..நீ எங்க போனாலும் நா வருவேன்.."

"செத்துப்போனா..??"

"அப்பவும் வெரட்டி வருவேன்.."

சத்தமாய் சிரித்தாள். பாவம் விளையாட்டாய் சொல்கிறேன் என நினைத்திருப்பாள். அவள் தலையில் கை வைத்து என் பக்கமாய் இழுத்து உதட்டில் முத்தமிட்டேன். ஆரஞ்சு பழத்தில் தேன் ஊற்றியது போல் இனிப்பு. உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. கொஞ்சமாய் கண்ணை திறந்து என்னை பார்த்தாள். அந்த பார்வை முத்தத்தை விட போதையாய் இருந்தது. என்னை முழுவதுமாய் கட்டிக்கொண்டாள். எனக்கெல்லாமே நீ தான் என்பது போல் ஒரு ஸ்திரம் அந்த தழுவலில் இருந்தது. என் உடல் முழுக்க அவளது
அணைப்பால்,வெதுவெதுவென இருக்கிறது."

                                                                                       -- முற்றும் 


செவ்வாய், 3 ஜூலை, 2012

குவாண்ட்டம் - (ஆல்பா குவாண்ட்டம்) - (பகுதி-2)








காலம் எப்போதும் நம் கவலைகளையும்,சந்தோசங்களையும் தின்று செரித்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு நம்மை இழுத்துக்கொண்டு ஓடும். மாதங்கள் ஓடியது. இப்போதெல்லாம் நான் அழுவதில்லை. நிம்மியின் ஆடைகளை கட்டிக்கொண்டு இரவு தூங்குவதில்லை. ரெண்டு நாளுக்கு ஒருமுறை ஷேவ் செய்து கொள்கிறேன். தப்பு தப்பாய் தமிழில் கவிதைகள் எழுத முயற்சி செய்கிறேன். பெரிய கஷ்டங்களை கடந்து வந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையின் சித்தாந்தங்கள் தனக்கு பிடிபட்டு விட்டதாய் நினைத்துக்கொள்கிறார்கள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல.அதன் பின் அருணிடம் அதிகம் பேசவில்லை,அந்த நாள் வரை. என் செல்பேசி பாடியது. எடுத்தேன்.




"மிஸ்டர் ரவி சௌக்கியமா.... இந்திய பிரதமருக்கப்றம் நீ தான் ரொம்ப பிசி போல.."


"டேய் குண்டா மிதி வாங்கப்போற..நீ தான் ஊர் சுத்திட்டே இருக்கிற ..என்ன கண்டுக்கில.."

"மும்பைல இருக்கேண்டா... ஆல்பால எனக்கு இங்க ஒரு பெரிய ரிசார்ச் போய்ட்டு இருக்கு..நான் தான் சென்ட்டர் ஹெட்....ரொம்ப டைட் ..பேசாம கெளம்பி வாயேன்...கோவா போய் ஜாலியா தண்ணியடிச்சிகிட்டு வெள்ளக்காரிகள கரெக்ட் பண்ணுவோம்"


"வெள்ளகாரவங்களா..."


"ஓ..நீ அந்த கோஷ்டியா..காண்டம கூட கதர்ல செய்யணும்னு சொல்லிக்கிட்டு அலைவாங்களே..."


"ஹஹஹா..சரிடா...லீவ பாத்திட்டு யோசிச்சி சொல்றேன்.."




அடுத்த சனிக்கிழமை கிளம்பி மும்பை போனேன். அருணுக்கு சந்தோசம் தாங்கலை. ரெண்டு பேரும் சேர்ந்து கண்டபடி ஊர் சுற்றினோம். எல்லா சாலைகளும் ரோமையே அடைகின்றன என்பது போல கடைசியில் நாங்கள் "ஓல்ட் மாங்க்"கை அடைந்தோம். நாளை உலகம் அழியப்போகிறது என்பது போல குடித்தோம். அருண் கண்கலங்கி என்னையே பார்த்தான். கொஞ்ச நேரத்தில் "எல்லாம் போச்சுடா ரவி " என்றான். நான் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தேன். அவனே திரும்பவும் பேசினான். "என்னோட லட்சியத்த, எதிர்காலத்த அழிச்சிட்டானுங்கடா...".

 
"அருண் என்னாச்சுடா...லவ் பெய்லியிரா..."



"மயிரு... இது வேறட.... என்னோட ரிசேர்ச்ல சொத்தை இருக்காம்...கான்சர் வந்திருமாம்.... நோபல் பரிசே வாங்க வேண்டிய கண்டுபிடிப்புடா..."



"என்னடா சொல்ற.."




" அது "குவாண்டம் ஜிப்" ரிசெர்ச்...எந்தப் பொருளையும் ப்ரோட்டான(Proton) விட சிரிசா ஆக்க முடியும். திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்."



"எதையுமா.."



"ஆமா..மனுசனக்கூட.."



"டேய்...நீ புத்திசாலி தான்..அதுக்காக என்னைய கேனயன் ஆக்காத...விட்டலாச்சார்யா படத்த விட மோசமாயிருக்கேடா..."





"கொபெர்நிகஸ் "பூமீ தான்டா சூரியன சுத்துதுனு" சொன்னப்போ சிரிச்சாங்க..அடிச்சாங்க...இன்னைக்கு நீ அன்றாடம் உபயோகப்படுத்திற அறிவியல் பொருட்கள் எல்லாம் ஒரு காலத்தில கோமாளித்தனம்னு
ஒதுக்கப்பட்ட சிந்தனைகள் தான். உலகம் இவ்வளவு சுருங்கிப் போனதுக்கு அறிவியல் சிந்தனை விரிஞ்சது தான்டா காரணம். உண்மையா ஆச்சர்யம் தான் அறிவியலோட தாய்மொழி. ஒண்ணுமில்ல ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி க்ளோனிங் பத்தி பேசிருந்தேன்னா உன்ன சங்கிலிய போட்டு கட்டி வச்சிருப்பாங்க.."




"சரிடா ஒத்துக்கிறேன்..எப்டிடா இது சாத்தியம்.."



"குவாண்டம் கம்ப்யூட்டிங்.."




"அதுல"


"நீங்க சீரோவையும் ,ஒன்னையும்(0,1) வச்சிக்கிட்டு பைனரில சூப்பர் கம்ப்யூட்டரே பில்ட் பண்ணுவீங்க...இது குவாண்டம்டா...மொத்தம் முப்பத்திரண்டு பார்டிக்கள் இருக்கு..யோசிச்சுப்பார்..அதோட வேகத்தையும் வீரியத்தையும்...அதாவுது ஒரு மனுசனோட மொத்த விவரத்தையும் ரொம்ப ஈசியா சேமிச்சு வச்சு அதை திரும்பவும் உபயோகிக்க முடியும்"



"அதாவுது ஒரு மனுஷன மாதிரி இன்னொருத்தன உருவாக்கிறது..அப்படி பார்த்தாலும் அது காப்பி தான.."




"இல்ல..அதில்ல...காஸ்மிக் கதிரையும், சோமா பார்ட்டிகள்ள இருந்து வெளிவரும் ஸோமா கதிரையும் பாயும் போது அணுக்கள் சுருங்கும். மனிதனோட திசுக்கள் சுருங்கும். எந்த அளவுனா 2.4 * (10 ^ -50)m சைசுக்கு.. எவ்வளவு சிரிசுனு புரியுதா.."




"டேய் அவ்வளவு சிரிசா...எதாவுது கருவில தான பாக்கவே முடியும்..வாய்ப்பேயில்ல..."




"இருக்கு..அதத்தானே நான் இங்க ஏழு வருஷம் பண்ணிட்டு இருக்கேன்...ஆல்பால இருந்து இதுக்கு அப்ரூவல் வேற இருந்தது...நேத்து கடைசி நேரத்துல அகர்வால்னு ஒரு கெளட்டு சயன்டிஸ்ட் திரும்பவும்
வந்து "உடல் பழைய நிலைக்கு வர்றப்போ செல்களுக்கு நடுவுல ரத்தம் உறைஞ்சு இருப்பதாகவும்...ஒரு வகை கேன்சர்" இதுனு சொல்லி கெடுத்துட்டான்..என்னோட மொத்த உழைப்பும் வீணா போச்சு..இத்தனைக்கும் அது ஆயிரத்துல எவனோ ஒருத்தனுக்குத்தான் நடக்கும்..பிச்சைகாரப் பசங்க..நீங்க அப்டியே கை சூப்பிட்டே இருங்கடா பாஸ்டர்ட்ஸ்..நான் போறேன்..போறேன்"




"ரிசைன் பண்ணப்போறியா.."

 
"நேத்து எல்லாபேரையும் அசிங்கமா திட்டிட்டேன்...அகர்வால தேவி&* பயலேனு திட்டிட்டேன்...கெழவன் மெரண்டுட்டான்..இன்னைக்கு எப்படியும் டிசிபிலனரி கூட்டம் போட்டு..என்னை தூக்கிருவாங்க..அதுக்குள்ள நா போயிருவேன்.."

"எங்கடா"


"எஸ் 12...அன்னைக்கு சொன்னனே அடுத்த பிரபஞ்சம்,இன்னொரு பூமீ... அங்க இப்போத்தான் 2002 வது வருஷம். நம்மளவிட இருவது வருஷம் பின்னாடி இருக்காங்க. நம்மளோட ரீசன்ட்டான கண்டுபிடிப்பெல்லாம் டாகுமென்ட் பண்ணிட்டேன். அதை அங்க போய் நானே கண்டுபிடிப்பதை போல் நடிப்பேன். அப்ரமென்ன..பேரு,புகழ்...நான் தான் அங்க ஐன்ஸ்டீன்,நியூட்டன்...எல்லோரும் கொண்டாடுவாங்க..."


அருண் வெறி வந்தவன் மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பேசினான். எனக்கு அடிச்ச போதை எல்லாம் இறங்கியது. "அது சரி..அது இங்க இருந்து எவ்வளவு தூரம்..""ரொம்ப தூரம் தான்.. 10^10^118 meters...ஒளி வேகத்துல போனாலும் பல நூற்றாண்டு ஆகும்..."



"அப்றம்.."



"எஸ்-20 ல இருந்து ஒருத்தன் இங்க வந்து ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கான்.."

"என்னடா எஸ்20யா ..குழப்புரே..."



 
" இன்னொரு பூமி..அவுங்க நம்மள விட அம்பது வருஷம் முன்னாடி இருக்காங்க..அங்க ஜீ(Z) கதிர்கள்னு ஒன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..அது ஒளிய விட இருநூறு மடங்கு வேகமா போகும்..அது மூலமா தான் அந்த முல்லர் இங்க வந்தான். இன்னைக்கு பாரு அவன நவீன அறிவியலின் தந்தைங்கிறீங்க...போன தடவ ஜெர்மனி போனப்போ என்கிட்ட உளறிட்டான்..நான் அந்த ஜீ கதிர்கள் பத்தின நோட்ஸ சுட்டுட்டேன்...ஐ காட் மை ப்ளேன்..."


" வாட்..ஜேம்ஸ் முல்லரா...அடக்கடவுளே...ஸோ நீயும் அவன் ஸ்டைல்ல எஸ்12 போய் அங்க பெரியாளாகப் போற...சரி எப்போ"



"இன்னைக்கு நைட் கெளம்புறேன். அதான் உன்னை கடைசியா பாத்துடலாம்னு வர சொன்னேன்..."நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென அந்த ஆசை வந்தது. "டேய் நிம்மி அங்க இருப்பாள்ளடா.."




"டேய் லூசு திரும்பவும் சொல்றேன். அவ அங்க பிறந்திருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம்...இங்க நடந்த எல்லா நிகழ்வுகளும் அங்க நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.."



"ஒரு வாய்ப்பு இருக்குல....அது போதும் டா... நானும் வரேண்டா ..."




அவன் குழப்பமாய் என்னைப் பார்த்தான். நான் அவன் காலில் விழுந்தேன்.









---குவாண்டம் இன்னும் விரியும்

செவ்வாய், 26 ஜூன், 2012

குவாண்டம் -(பால குவாண்டம்)




"ஊதா கலர் நைலான் சேலை கட்டியிருந்தாள். கொஞ்சம் வியர்வை வாடையுடன் பாண்ட்ஸ் பவுடர் வாசமும் அவள் மீதிருந்து வந்தது. நான் பின்னே நிற்பது தெரிந்ததும் அலமாரியை துடைப்பதை நிறுத்தி விட்டு திரும்பி நின்று "என்ன??" என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை கிள்ளினேன். "அர்ஜுன் எங்க??" என்றேன். அவள் உள்ளறையை பார்த்தாள். நான் அந்த திசையை நோக்கி பார்த்தேன். அர்ஜுன் உள்ளே கை சூப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவளை வளைத்து பிடித்துக்கொண்டேன். என் மூக்கை பிடித்து திருகினாள். நான் அவள் தலையை கையால் பிடித்து உதட்டில் முத்தமிட்டேன். ஆரஞ்சு பழத்தில் தேன் ஊற்றியது போல் இனிப்பு. உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. கொஞ்சமாய் கண்ணை திறந்து என்னை பார்த்தாள். அந்த பார்வை முத்தத்தை விட போதையாய் இருந்தது. என்னை முழுவதுமாய் கட்டிக்கொண்டாள். எனக்கெல்லாமே நீ தான் என்பது போல் ஒரு ஸ்திரம் அந்த தழுவலில் இருந்தது. என் உடல் முழுக்க அவளது அணைப்பால், வெதுவெதுவென இருக்கிறது."   

  எழுந்துவிட்டேன். அது கனவு. ஏமாற்றமாய் இருந்தது. விளக்கை போட்டேன். மேலே நிர்மலாவும், அர்ஜுனும் மாலை போட்ட புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படத்தில் அர்ஜுனின் நெற்றியில் சந்தனம் இருந்தது. கண்ணீர என் கன்னம் தாண்டி இறங்கியது. ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது. சத்தம் கேட்டு அப்பா வந்துவிடுவாரென உணர்ந்து சத்தத்தை அடக்கிக்கொண்டேன். ரொம்ப அழுததால் வீசிங் வந்து மூச்சி வாங்கியது. என்னுடைய இன்ஹலிங் மிசின் தேடினேன். எடுத்து உறிஞ்சினேன். கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டிராயரில் அர்ஜுனின் கரடி பொம்மை இருந்தது. எடுத்து கட்டிக்கொண்டு படுத்தேன். தலை கொஞ்சம் வலித்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போனேன். "ரவி..ரவி" என அம்மா என் தோளை உலுக்கினாள். எழுந்தேன்.

"மணி ஒன்பதரைப்பா.. இன்னைக்கு ஆபிஸ் போலையா" என்றாள். பக்கத்தில் அப்பா சோகமாய் நின்றிருந்தார். அம்மாவின் கையிலிருந்த காபியை வாங்கிக்கொண்டு நடந்து பால்கேணி போனேன். "அருண்..கால் பண்ணாண்டா...நேத்து தான் ஹங்கேரில இருந்து வந்தானாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கான்.." என அப்பா என்னைப் பார்க்காமல் அந்த ரூமை நோட்டம் விட்டபடியே சொன்னார். சரி என்பது போல் தலையாட்டினேன். அம்மா அப்பாவை பொறுத்தவரை நான் இந்த துயரத்துல இருந்து வெளிய வந்திரனும். எதோ சுவிட்ச் போட்டமாறி நாளைக்கே ஈன்னு சிரிச்சுகிட்டு நிக்கணும். அதுசரி அவுங்கள சொல்லியும் குத்தமில்லை. அபார்ட்மென்ட்ல  இருக்குற பல பேரு என்னை பாவம் போல பார்க்கிறார்கள். "நாசமா போ" வை விட "ஐயோ பாவம்" நமக்கு மிக வலியை தரும்னு பலருக்கு புரிவதில்லை.

அருண் வருவான் என்பதால் ஆபிசில் இருந்து வேகமாய் வந்தேன். மேலே ரூமுக்கு படியேறினேன். அருண் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. என்னோட க்ளோஸ் பிரெண்ட் அவன். பிசிக்ஸ்ல பி.எச்.டி பண்ணினவன். அமெரிக்க நிறுவனமான ஆல்பால ஆய்வு விஞ்ஞானியா வேல பண்றான்.ஒரு வருஷமா ஹங்கேரில வேலையா இருந்திட்டு அப்போ தான் சென்னை வந்திருக்கான். நான் உள்ளே நுழைந்ததும் ஓடி வந்து கட்டி பிடித்தான். நானும் அணைத்துக்கொண்டு அழுதேன். இப்போதெல்லாம் அழுகை எனக்கு நினைத்த நேரத்தில் வருகிறது. சோகத்தை பாக்கெட்டில் வைத்தே திரிகிறதாய் தோன்றுகிறது. "அப்பா பேசிட்டு இருங்க" என சொல்லி நகர்ந்தார். நானும் அருணும் ஓல்ட் மாங்க் ரம்மை எடுத்து கிளாசுடன் உட்கார்ந்தோம். நிறைய பேசினோம். மூன்று ரவுண்ட் முடிந்தது. நிறைய புலம்பினேன். நிறைய பேச வேண்டும் போல இருந்தது.




"ந்தா..இவ்ளோ தண்டி..கருப்பா கரிக்கட்டை மாதிரி ரெண்டு பொட்டணம் கொண்டு வந்து இது தான் நிம்மியும்,அர்ஜுனும்னு சொல்றானுங்க டா..  தாங்கள டா.. அர்ஜுன் எங்கூட வரேன்னு அழுதான்..நான்தான் நீயும் அம்மாவும் பிளைட்ல போங்கன்னு அனுப்பினேன்...மைசூர் ஏர்போர்ட்ல இறங்கிரப்போ....." மீண்டும் அழுகை. ஐந்தாவது ரவுண்ட்டுக்கு தயாரானேன். நிம்மி இருந்திருந்தா காதை பிடிச்சு திருகிருப்பா.. அருண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"நோஸ் லேன்டிங்கா..."

"ஆமா"

"ஸ்கௌண்ட்ரல்ஸ்..."

"தினமும் ஆயிரம் விபத்துல ஆயிரம் பேரு சாகுறான். எல்லாரையும் போய் திட்ட முடியுமா...எல்லா என் விதி.." சொல்லி விட்டு அருணை பார்த்தேன். அவன் அர்ஜுன் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து "சாகாம இருந்திருக்கலாம்.." என்றான், நான் "ம்ம்.." என்றேன். அவன் கொஞ்சமாய் சிரித்து "இல்லடா அவுங்க உயிரோட இருக்கலாம்..இப்போ இந்த நொடில...". 

"என்னடா அருண்..அஞ்சு ரவுண்ட்ல தூக்கிருச்சா.." சத்தமாய் சிரித்தேன். குடித்து விட்டு சிரிப்பது சுகமானது. அருண் பேசாமல் உட்கார்ந்திருந்தான். "சயின்டிஸ்னா அமைதியா இருக்கனுமாடா குண்டா.." னு அவனை நானே பல முறை கேலி பண்ணியிருக்கேன். என் சேரை அவன் பக்கம் திருப்பினான். என் தலையை தூக்கினான்.

"சொல்லுடா ரவி...பூமி எப்டி உருவாச்சு..." 

யோசிச்சேன். எங்கோ படிச்சது ஞாபகம் வந்தது. "பிக் பேங்..." இழுத்தேன்.

"கரக்ட்..அப்டினா.."

"மறந்து போச்சுடா.."

" அதாவுது ஒரு பெருவெடிப்பு. அதுல உருவான ஒரு சின்ன தூசு மண்டலம் தான் பூமி. சூரியன்,சந்திரன், நம்ம பக்கத்து கோள்கள் எல்லாம் அந்த வகைல உருவானது தான். இந்த மாதிரி லட்சமோ, கோடியோ இல்ல எண்ணவே முடியாத அளவு உருவாக்கங்களை இந்த பெருவெடிப்பு பண்ணிருக்கு. நிறைய யுனிவர்ஸ்கள்,நிறைய கேலக்சிகள்... "

"சரி இப்போ அதுக்கென்ன..."


"இப்போ நீ பேப்பர்ல பேனா வச்சி கண்டா மாதிரி கிருக்கிறேன்னு வை. உன்னையே அறியாம அதுல ஒரு பேட்டர்ன் இருக்கும். அதாவுது வளைவுகளில், கோடுகளில் சில ஒற்றுமை வந்திரும். இத மாத்ஸ்காரன் ப்ரூவ்லாம் பண்ணிட்டான்.அத விடு. அப்போ இந்த பெருவெடிப்புல உருவான அமைப்புலேயும் ஒரு பேட்டர்ன் இருக்கும். எங்கயாவுது லட்சம் கோள்கள் தள்ளி பூமீ மாதிரி ஒரு கோள் திரும்பவும் உருவாகியிருக்கும்.."

"ஸோ ??"

"ஸோ வா... அதுக்கும் அதே புவிஈர்ப்பு விசை..அதே சுழற்சி...அதே மாதிரி கடல்கள்...பக்கத்தில் நிலா..அதே ஓஸோன்...ஆக்சிஜன்..சூரிய ஒளி...போட்டோசின்தசிஸ்..."

"அதுனால.... புரில மச்சி எனக்கு.." குழப்பமாய் இருந்தது.



"சரி உனக்கு புரிற மாதிரி சொல்றேன். எல்லாம் பூமியை மாதிரியே இருந்துச்சுன்னா என்ன நடந்திருக்கும். இங்க மாதிரியே அமீபா தோன்றிருக்கும்.அப்புறம் நிறைய உயிர்கள். பரிணாமம். டினோசர்கள், குரங்குகள்,மனிதர்கள்.." கொஞ்சம் இடைவெளிவிட்டு  "ஆதாம்-ஏவாள்...உன் கொள்ளு தாத்தன்..உன் அப்பன்...நீ,நிம்மி,அர்ஜுன்....." என்றான்.

எனக்கு கொஞ்சம் கோபமாய் இருந்தது. என் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றியது. "அப்போ இங்க மாதிரியே ஆளுங்க அங்க பிறந்திருப்பாங்கன்னு சொல்றியா.."

"ஆமா கண்டிப்பா. ஆனா நடந்த விஷயங்கள் மாறி நடக்கலாம். ஹிட்லர் கடைசி போர்ல ஜெய்ச்சிருக்கலாம். காந்தி அமைதியா குடும்பஸ்தனா அவருண்டு அவர் வேலையுண்டுன்னு இருந்திருக்கலாம். தோனி வேல்டு கப் பைனல்ல மொத பால்லையே அவுட் ஆகி இருக்கலாம்...அதே மாதிரி..."

"அதே மாதிரி.."

"அன்னைக்கு விமானம் மைசூர்ல நோஸ் லேன்டிங் ஆகாமவோ...இல்ல நிம்மியும் அர்ஜுனும் அதுல போகமாவோ இருந்திருக்கலாம். இப்போ இந்த நொடில ரவி, நிர்மலா, அர்ஜுன் மூனு பேரும் பெசென்ட் நகர் பீச்ல ஜாலியா கடலைப்பொறி வாங்கி சாப்டுகிட்டு இருக்கலாம்......."

இப்போது அழுகை வரலை.அவன் சொன்ன காட்சியை மன கண்ணில் ஓட விட்டு ரசித்தேன். ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன். ஆங்காங்கே சின்ன வெள்ளை புள்ளிகளுடன் வானப் பெருவெளி தெரிந்தது. 

                                                                                                                          





                                                                                                         -----குவாண்டம் தொடரும் 

திங்கள், 19 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-2)







நானும் பிரபுவும் தண்ணி குடிக்க,மூச்சா போக என ஒன்றாகவே போனோம். வேணியக்கா எங்கள் நட்பை பலப்படுத்தியிருந்தாள். "மச்சி...கவனிச்சியா ஆம்பள பேய்களெல்லாம் ரொம்ப கம்மிடா..இவளுக தான்டா செத்தும் நம்மள டார்ச்சர் கொடுக்குராளுக...". நான் தலையாட்டினேன். "ஏன்டா இந்த விஜய் டீவில காமிக்குறானுகளே ஆவி,தீயசக்தி, அதெல்லாம் உண்மை தான் போலடா.." . பிரபு கொஞ்சம் அதிகமாய் பேசிக்கொண்டிருந்தான். பயமாய் இருக்கலாம்.நான் அமைதியாய் இருந்தேன். எனக்கும் கூட பயம் தான். எனக்கு இந்த முட்டை கண்ணுள்ள பெண்களை க்ளோஸ் அப்-ல் பார்த்தாலே கொஞ்சம் பதறும். இந்த லச்சனத்தில் பேயை,அதுவும் முகம் முழுக்க முடியுள்ள பேயை...அய்யோ நினைத்து பார்க்கவே கொடூரமாய் இருந்தது. இது தவிர காற்று வேற தீவிரமாய் அடித்து பீதியை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. இன்னும் நைட் சாப்பாடு வேற சாப்பிடவில்லை என்பதால் பேயை பார்த்தால் பயப்படக்கூட தெம்பில்லாமல் இருந்தேன்.

" டேய்...ரொம்ப பசிக்குது.பாத்துக்கோ...நா பக்கத்துல போய் எதாவுது சாப்டு வந்திடுறேன். ஒரு மாதிரி கிறுகிறுனு வருது.." என்றேன்.

"ரொம்பத் தெளிவுடா நீ..எதாவுது பிகர் கூட பேசுறப்ப கூடவே ஒட்டிக்கிட்டே இருந்து உயிர வாங்கிறது. இந்த மாதிரி சிக்கல்ல இருக்கிறப்போ தனியா விட்டுட்டு ஓடுறது..."

"சத்தியமா பசிக்குதுடா..ஷிப்ட்ல யாராச்சும் ஒராளாவுது இருக்கனும்ல...பத்து நிமிஷம்தான்டா வந்திருவேன்...அப்டி இல்லேன்னா நீ வேணும்னா வண்டி எடுத்திட்டு போய் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா..."

 சில நேரத்துல நம்ம நாக்குல சனி உக்காந்து நமக்கு பதிலா டப்பிங் கொடுக்கும். அந்த மாதிரி தேவையில்லாம நா வாய விட்டேன். ஸ்லிப் கேட்ச்க்கு காத்திருந்த ராகுல் டிராவிட் மாதிரி பிரபு அந்த பாயிண்ட்டை கபக்கென கவ்வினான்.அவன் முகம் ஏதோ ஜெயிலில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை கைதி போல மிக பிரகாசமானது. "சரி..ஓகே மச்சி...நா வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நான் சுதாரிப்பதுக்குள் ஆள் கேட்டுக்கு பக்கத்தில் போய் விட்டான். 

"டேய் நில்லுரா...."

"மச்சி..உங்கக்காவுக்கும் சேத்து சாப்பாடு வாங்கிட்டு வரவா..ஹிஹி.."

போய்விட்டான். இருந்த ஒரே துணையும் ஓடிருச்சு. எப்படியும் அவன் வர முப்பது நிமிஷம் ஆகும். அது வரைக்கும் பேசாம போன்ல ரத்தினம் அண்ணனோட பேசிட்டு இருப்போம்னு அவருக்கு கால் பண்ணினேன். ஒரு ஹிந்திக்காரன் எடுத்தான். ரத்தினம் ஒடம்பு சரி இல்லேன்னு சொல்லிட்டு ரூம்ல தூங்கிட்டு இருக்காரு என்றான். எனக்கு நடுராத்திரியில் எமகண்டம் ஆரம்பமாகிருச்சுனு புரிந்தது.போனை வைத்துவிட்டு ஆபிஸை ஒரு நிமிடம் நோட்டம் விட்டேன். எவனும் இல்லை. நான் உட்காந்திருக்கும் ஏரியால மட்டும் தான் லைட் எரியுது. மத்த பக்கம்லாம் இருட்டா இருக்கு. ஏன்டா லைட்லாம் ஆப் பண்ணீங்கன்னு கேட்டா "காஸ்ட் கட்டிங்" னு சொல்வாய்ங்க. இந்த பட்ஜெட் போடுறவனையெல்லாம் நைட் ஷிப்ட்ல வேல பாக்கவிடனும்னு நெனச்சுகிட்டேன். ஒரு முறை இருமினேன். ரெண்டு மூணு தடவை எதிரொலித்தது. காண்டாமிருகம் கர்ஜித்தது மாதிரி இருந்தது. நம்ம இவ்வளவு கொடூரமாவா இருமிறோம்னு கொஞ்சம் வியப்பாய் இருந்தது.

சத்தமே இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை என்று தோன்றியது. என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் இருந்த ஐயப்பன் பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு விட்டேன்.கொஞ்சம் நிலைமை கட்டுக்குள் வந்தது போல் இருந்தது.எங்கும் ஒரு தெய்வீக வாசனை வருவது போல் பட்டது. கொஞ்சம் தெம்பு வந்தது. நேராய் என் கணினி முன் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தேன். திடீரென "தொப்ப்....." பென ஒரு சத்தம். இதயம் பட படவென அடித்தது.யாருமே இல்லாத இடத்தில் இதென்ன சத்தம். ஒருவேளை எலி எதையும் உருட்டுதோ...இல்லை வாய்ப்பில்லை...எழுந்து போகலாமா.... என் மூளைக்குள் பலவாறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும் எழுந்து நடந்தேன். எவனோ முழு வாட்டர் கேனில் தண்ணியை நிரப்பி வைத்திருக்கிறான், அது காத்துக்கு கீழே விழுந்திருக்கிறது.கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. என் இடத்துக்கு திரும்ப நடந்த போது தான், எனக்கு அந்த சத்தம் கேட்டது.


முதலில் பூனை கத்துவது போல் தான் இருந்தது. கவனித்து கேட்ட போது தான் அழுகும் குரல் என்று தெரிந்தது. என் முதுகு தண்டு முழுதும் குளிர் பரவியது.கொஞ்சம் யோசித்து பார்த்தால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை. வெறும் பயத்தால் தேவையில்லாமல் குழம்புகிறேனோ என்று தான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அழுகை சத்தம் எந்த திசையில் இருந்து வருகிறதென தெரியவில்லை. அடி வயிற்றில் இருந்து பீறி அழுகும் அழுகை சத்தம். எனக்கு நடுக்கம் அதிகமானது. வேகமாக நடந்து செக்யூரிட்டி இருக்கும் இடம் வந்து விட்டேன். இதயம் கண்டபடி வேகமாக துடித்தது. கண்ணாடி வழியாய் உள்ளே பார்த்தேன். அந்த ஹிந்திக்கார செக்யூரிட்டி என்னை வித்யாசமாய் பார்த்தான்.

"என்ன சார் லேடீஸ் யாரும் இன்னும் வேல பாக்குராங்களா...நைட் பத்து மணிக்கு மேல நாட் அளவுட்னு தெரியாதா..."

"இல்....இல்லையே...நீங்க யாரையும் பாத்தீங்களா..."

"அட என்னங்க..இப்பத்தானே மமதா மேடம் டேபிள்ள இருந்து அந்த பொம்மைய எடுத்துட்டு ஒரு மேடம் உள்ள போனாங்க..போறப்பகூட வாட்டர் கேன தள்ளிவிட்டுகூட போனாங்களே...நீங்க பாக்கலீங்களா..."

எனக்கு புரிந்து போனது. அந்த செக்யூரிட்டியிடம் நான் எதுவும் சொல்லவில்லை. நிம்மதியாய் இருப்பவர்களை பேய் கதை சொல்லி சங்கடபடுத்த வேண்டாமென நினைத்தேன். பிரபு சரியாய் வந்து சேர்ந்தான். "டேய் தோசைக்கு தேங்கா சட்னி தர மாட்டேன்னாய்ங்க..சண்ட போட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்... என்ன இங்க நிக்குற,வா உள்ள போவோம்" என்றான். 

உள்ளே வந்தோம். "ஆமா...அப்பிடி இப்டி எதுனா பாத்தியா..இந்த ரத்தினம் சரியான டுபாக்கூர்டா..இப்பிடித்தான் ஒரு நா என்கிட்ட பதினஞ்சு அடில ஒரு பாம்ப ரோட்ல பாத்தேன்னு கத விடுராறு..அவரு நம்ம ஆபிஸ் பிகர் எதையாச்சும் மேக்அப் இல்லாம பாத்திருப்பாராயிருக்கும்... "


கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். பிரபு ரொம்ப இயல்பாய்,கலகலப்பாய் இருந்தான்.அவனே தனியாய் போய் பிஸ் அடித்துவிட்டு வந்தான். இவன்கிட்ட எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்  என நினைத்துக்கொண்டேன். ஒருவழியாய் விடிந்தது. கீழே இறங்கி வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். ரத்தினம் அண்ணனும் கிளம்பி நடந்தார். நான் அவர் பக்கத்துலே போனேன். எதுவும் பேச வில்லை. அவர் சொன்னார்.

"ஒவ்வொரு பெரிய கட்டடம் முடியறதுக்குள்ளேயே எப்பிடியும் ஒருத்தராவுது அங்க செத்துருவாய்ங்க...அப்டியே அவுக அங்குட்டுத் தான் சுத்துவாகளாம்..பாவம் எம்புட்டு ஆசைக..பாசங்க...."  சொல்லிவிட்டு நடந்து போக ஆரம்பித்தார். நான் ஒருமுறை அந்த பிரமாண்ட கட்டிடத்தை திரும்பி பார்த்தேன்.ஆகாயத்தை நோக்கி வளர்ந்து ஆணவமாய் சிரித்துக்கொண்டிருப்பது போல் இருந்தது.இதெல்லாம் நடந்து 
இரண்டு.மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் பெரிய கட்டிடங்களை பார்த்தால் வேணியக்கா ஞாபகம் வருகிறாள்.



                            
                                                         ---------  முற்றும் --------

புதன், 14 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-1)


                                       வேணியக்கா..(பகுதி-1)




கண்ணை திறந்து பார்த்தேன் ,மணி சாயங்காலம் ஆறு. கை,காலெல்லாம் எதோ ரக்பி விளையாண்டவன் மாதிரி ஒரே வலி. இன்னும் ஒரு வாரம் நைட் ஷிப்டில் வேலையா என மலைப்பாய் இருந்தது. டீ.வி யை போட்டேன். சன் மியூசிக்கில் பொம்மரேனியன் நாய் மாதிரி முடி வைத்திருந்த ஒருத்தன் ,"ஹை குட்டீஸ்..நீங்க பாட்டு பாடுரீங்களா, இல்ல ரைம்ஸ் சொல்றீங்களா" என பெனாத்திக் கொண்டிருந்தான். வயிறு பசித்தது. ஊரே தூங்கப்போகும் நேரத்தில் நான் ஆபிஸ் போனுமா என கோபமாய் இருந்தது.கடவுள் அசிடிட்டி பிரச்சனையில் இருக்கும் போது என் தலை எழுத்தை எழுதி இருப்பாரோ என நொந்து கொண்டேன்.வழக்கம் போல குளித்துக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு ஆபிஸை அடைந்தேன். சாந்தோமில் கடலை முத்தமிடும் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தில் தான் அலுவலகம் இருந்தது. பத்து அடுக்கு கட்டிடம் அது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கடல் அழகாய் தெரியும். ஒன்பது மணிக்கு தான் நம்ம டுயூட்டி ஆரம்பம் அதனால் நேராய் லிப்டில் என் பத்தை அழுத்தி கடலை சைட் அடிக்க மாடிக்கு கிளம்பினேன். வாகனங்கள்,மனிதர்கள் எல்லாம் பொடிப்பொடியாய் தெரிந்தனர். கடல் காற்று ரம்யமாக என் மூஞ்சில் வந்து அடித்துக்கொண்டிருந்தது. எவன் சொன்னது சென்னை அழகான ஊரில்லை என. .


"டே வெண்ணை கால் பண்ணா எடுக்க மாட்டியா.... ". பிரபு போனை காட்டிய படி வந்தான்.ஜீன்ஸ் பேண்டை இதற்குமேல் இறக்க முடியாது என்கிற நிலையில் அணிந்திருந்தான். என்னுடன் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் மற்றொரு பட்சி. நான் பதிலேதும் சொல்லாமல் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன். "கடல் கடவுளோட மாஸ்டர் பீஸ்" ல என்றேன் பிரபுவை பார்த்து. வாயில் சிகரெட்டை பத்த வைத்தவாரே என்னை பார்த்தான்.


"கடவுள் ஒரு மாவுருண்டை செஞ்சு வச்சாராம் அது பூமியாகிருச்சாம்...அப்புறம் அதுல ஒன்னுக்கடிச்சாராம் அது கடலாகிடுச்சாம்.. அப்டின்னு எங்க பாட்டி சொல்லும்.." என சொல்லி சிரித்தான்.


"உங்க பாட்டி இப்போ உயிரோட இருக்கா..???"


"இல்ல டா..போன வருஷம் டெங்கு காச்சல்ல போயிருச்சு"


"நல்லவேளை..எனக்கு முன்னாடி டெங்கு முந்திருச்சு". சிகரட்டை என்மேல் சூடு வைப்பது போல பாவனை காட்டினான். பேசிக்கொண்டே கீழே அலுவலகத்துக்கு போனோம். எல்லா பய புள்ளைகளும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார்கள். எங்களை பார்த்ததும் ஜெயராமன் மட்டும் சிரித்துக்கொண்டே "வந்துட்டாய்ங்கடா.. வாட்ச்மேனுக..." என்றார். மதுரைக்காரர். பேண்டை டக் இன் பண்ணாமல்,செருப்புப் போட்டுக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஐ.டி போராளி. பிரபு அவர் பக்கத்தில் போனான்.


"யோவ் ஜெயா... நல்லா Laughing புத்தா மாதிரி தொப்பையும் தொந்தியும் வச்சிக்கிட்டு ஒனக்கெல்லாம் குசும்பு ஜாஸ்தியா போச்சு" என்றான்.


."டேய் நாய் நக்குன மண்டையா.. உங்கள செக்குயூரிட்டி ரத்தினம் தேடுனாரு..அத சொல்லத்தான் கூப்டேன்.."


இரவு மூணு மணிக்கு மேல் எங்களுக்கு செக்கியூரட்டி ரத்தினம் அண்ணன் தான் தூக்கம் போக்கும் ரட்சகர்.அரசியல்,சினிமா என புகுந்து விளையாடுவார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எதற்காகக் கூப்பிட்டிருப்பாரு என யோசித்துக்கொண்டே அவருக்கு போன் செய்தேன். "நான் நேரா வரேன்" என சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் வந்தார்.சாம்பல் நிறத்தில் அந்த செக்யூரட்டி உடுப்பில் இருந்தார். முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லை, நெற்றியில் பெரிய திருநீர் கோடு. "என்னாச்சுண்ணா...எதாவுது பிரச்சனையா??" என்றேன். "நேத்து ராத்திரி சிக்கலாகிப்போச்சு பா" என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார். இப்போது அலுவலகம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது. 


"நேத்து ஒரு மணியிருக்கும் ரிசப்சன் ஷோபால பாட்டுக்கேட்டுக்கிட்டே படுத்துக்கிடந்தேன். ஜன்னலெல்லாம் தெறந்து கெடந்து இருந்ததால,கடல் காத்து ஜிலு ஜிலுனு அடிச்சிட்டு இருந்தது. என்னடா யாரோ பின்னாடி நிக்குராப்ல இருக்கேன்னு திரும்புறேன். கரு கருனு ஒரு உருவம். மூஞ்சு முழுசா முடி முளச்சிருக்கு. உதடு மட்டும் ரத்தச் செகப்பா துருத்திக்கிட்டே தெரியுது. எனக்கு தூக்கி வாரிப்போட்ருச்சி. நல்லா பின்னாடி நீளமான மயிர பாக்குறப்ப தான் பொம்பளனு தெரியுது. கத்தலாம்னு பாக்குறேன் வாய் வர மாட்டிங்குது. "நூறு ரூவாய கொடுரா..எம்டு நூறு ரூவாயா.." னு சொல்லிக்கிட்டே பக்கத்துல வர பாக்குது. திரும்பி ஓடிரலாம்னு திரும்புறேன். முதுகுல ஒரு அடி. எம்மா சவுக்க சொழட்டி அடிச்ச மாதிரி அந்த வலி. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரில.முழிக்குறப்ப விடிஞ்சிருச்சு."





"
   ஏங்க ஒங்க பொண்டாட்டிய நெனச்சிக்கிட்டு பயந்துகிட்டே தூங்கிருப்பீங்க. அதான் கெட்ட கனவா வந்திருக்கு.." ஜெயராமன் பையை தூக்கிகொண்டு கெளம்பும் போது கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றார்.நான் லேசாய் சிரித்தேன். பிரபு சிரிக்காமல் ரத்தினம் அண்ணனையே பார்த்தான். அவர் சட்டையை கழட்டி முதுகை காட்டினார்.முதுகில் பெரிய சிகப்பு கோடு தெரிந்தது. பயம் எனக்குள்  ஜிவ்வென பரவியது. கொஞ்சம் வேர்த்தது. காட்டிக்கொள்ளவில்லை. ரத்தினம் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் பேசினார்.


"நம்ம எலக்ட்ரீசியன் குமார கேட்டேன்..அவன் தான் சொன்னான். இந்த பில்டிங் கெட்டுரப்ப கிருஷ்ணவேணின்னு பக்கத்துல பட்டினபாக்கத்துல இருந்து ஒரு பொண்ணு வந்து வேல பாத்துச்சாம். கொழந்தை க்கு சாப்பாடு வாங்க வச்சிருந்த நூறு ரூபாய தொலைச்சுப்புட்டதாம். மாடில போய் தேடி பாக்குறப்ப,மேல இருந்து தவறி கீழ விழுந்து செத்து போச்சாம். அதுல இருந்து இந்தப்பக்கம் அலையுதாம். அவனுங்கூட பாத்திருக்கானாம். நீங்களும் தனியா சுத்தாம..ஒன்னு மண்ணா சூதானமா இருந்துக்கோங்க.."


சொல்லிவிட்டு போனார். இப்போது எங்கள் ப்ளோரில் என்னையும் பிரபுவையும் தவிர வேற யாரும் இல்லை. பிரபு சோகமாய் என்னையே பார்த்தான். "டேய்...ஐநூறா இருக்கு...அஞ்சு நூறு சேஞ்ச் இருக்கா.." என்றான். நான் சிரித்தேன். "ஏன்டா நீ நம்புறியா..." என்றேன்.


"நம்புறேனோ இல்லையோ...ஆனா இவய்ங்க சந்திரமுகி கதை மாதிரி சொன்னத கேக்குரப்ப தொடை ஷேக் ஆகுது. லைட்டா பாத்ரூம் வருது."


"ஆமாடா..அவரு முதுகுல அந்த காயத்த பாத்தப்போ...எங்காதுல ஓநாய் ஊளையிடுற சத்தம் கேட்டுச்சுடா.."


"டேய் எனக்கு துணையா ரெஸ்ட் ரூம் வரையும் வர்றியா... அர்ஜென்டா பாத்ரூம் வருது..."


"வேணியக்கா லேடீஸ் டா. ஜென்ஸ் பாத்ரூமுக்கெல்லாம் வராது..தைரியமா போ.."


"என்னடா அக்கானு முறை சொல்லி கூப்பிடுற..."


"அதுகள மரியாதையா பேசினோம்னா நம்மள அண்டாதாம்...."





ரெண்டு பேரும் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூம் போனோம். ஜன்னல் வழியே கடல் காத்து முகத்தில் அடித்தது. இந்த முறை பயமாய் இருந்தது.






                                                                                                                  தொடரும்...