ஞாயிறு, 31 மே, 2015

திருப்பூர் குமரன்



தலையில் கையை வைத்துக்கொண்டார். எனக்கு வயிறு வைப்ரேசன் மோடில் இருந்தது. என் முகத்தில் வியர்வை இருந்ததை சுற்றியிருந்தவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பத்துவயதில் எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாதென்று எண்ணிக்கொண்டேன். இன்னொருமுறை சொதப்பினால் பரமசிவம் சாரின் எருமைமாட்டுக்கையால் எனக்கு அடி உறுதி. ஒருமுறை யோசித்துப்பார்த்துவிட்டு மீண்டுமொருமுறை நடந்து வந்து உரக்கப்பேசினேன்."இந்த உடம்புக்கு கையிரண்டு காலிரண்டு எனக்குடுத்த இறைவன்... அந்த உயிரை மட்டும் இரண்டாக கொடுத்திருந்தால் நாட்டுக்காக அடுத்தடுத்து கொடுத்திருப்போம்..........." சொல்லிவிட்டு மிரட்சியாய் அவரை பார்த்தேன். வேகமாய் பக்கத்தில் வந்தார்.

"அப்பிடியே தான். ஒன்னே ஒன்ன மட்டும் சேதத்துடு... "உயிரை மட்டும்"னு சொல்றப்ப ஒரு ஏக்கம் தெரியணும்... அதோடு சொல்லிரு.. இன்னைக்கு வீட்டுக்குக்கிளம்பிறலாம்.."

கன்னம் தப்பித்த சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.அந்த "உயிரை மட்டும்" அடுத்த அரைமணி நேரம் என் உயிரை வாங்கியது. ஆண்டு விழாவில் "திருப்பூர் குமரன்" நாடகம் தான் போடுவேன் என பரமசிவம் சார் அடம்பிடித்திருந்தார். ஐந்தாம் வகுப்பில் திருப்பூர் குமரனைத் தேடினார். தலையை சொறிந்துகொண்டே நிமிர்ந்து பார்த்த என்னை எப்படி அந்த வேஷத்திற்கு தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. அன்னைக்கு நான் லீவில் இருந்திருக்கக் கூடாதாவென பலமுறை யோசித்திருக்கிறேன். ராஜபார்ட் ரங்கதுரை படத்தின் இறுதி காட்சி தான் எங்கள் நாடகத்தின் முக்கியமான பகுதி. அதை சார் நிறைய தடவை வி.சி.ஆரில் போட்டுக்காட்டி உயிரை வாங்குவார். பெரும்பாலான நாடகத்தின் வசனங்கள் அவ்விடமிருந்தே உருவப்பட்டன. அவர் அந்த வருடம் வெறியாய் இருந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் பள்ளியில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்த ஆசிரியைகள் ஒரு காமெடி நாடகம் தயார் செய்து கொண்டிருந்தார்கள். அது தான் அந்த வருடத்தின் "ஹைலைட்" என்று ஹெட்மாஸ்டர் பீற்றி வருவதாக ஒரு வதந்தி இருந்தது. அச்செய்தி வேப்ப மரத்தின் பின்னால் நின்று பரமசிவம் சாரை நிறைய சிகரெட் புகைக்க வைத்தது.

பரமசிவம் சாரின் தொப்பையும் வழுக்கையும் அவரது நாற்பது வயதை நியாயப்படுத்தும். அடிக்கடி கர்சீப்பை வைத்து முகத்தை துடைத்துக்கொள்வார். தினமும் சாயங்கால ரிகர்சலுக்கு முன் சொந்த செலவில் எங்களுக்கு பஜ்ஜியும் பலாச்சுளைகளும் வாங்கித்தருவார். நாடகத்தின் முதல் காட்சியில் திருப்பூர் குமரன் தன் அம்மாவிடம் சென்று போராட்டத்துக்காக ஆசி வாங்குவார். அம்மாவோ வருத்ததுடன் வழியனுப்புவார். அதில் அம்மா ஒரு வசனம் சொல்லுவார் ,"குமரா..பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போயிருக்கும் உன் மனைவி திரும்ப வந்தால் நான் என்ன பதிலப்பா சொல்லுவேன்..". அம்மாவாக நடித்தவள் சி கிளாஸ் அஜந்தா. அவள் ஒருமுறை "பிரசவத்திற்கு" என்று சொல்வதற்கு பதிலாய் "பிரதோசத்திற்கு" என சொல்லிவிட்டாள். பரமசிவம் சார் பக்கத்தில் வந்து "லூசுக்கழுத" என சொல்லி அவள் தலையில் ஒரு "யார்க்கர்" போட்டார்.அஜந்தா ஏங்கி ஏங்கி அழுதாள். அதன் பிற்பாடு அவளுக்கு எப்போதும் டங்க் ஸ்லிப் ஆகவேயில்லை. வீட்டுக்கு கிளம்பும் போது அஜந்தா என்னிடம் வந்து "அவரு எது வாங்கி கொடுத்தாலும் நா இனிமே திங்க மாட்டேன்..இன்னிக்கு தின்னதையே இப்ப வாந்தி எடுக்கப் போறேன்.." எனச்சொல்லி வாய்க்குள் விரலை விட்டாள். நான் பீதியானேன். நல்ல காலம் செரிமானமாகிவிட்டது போல அவளது இரைப்பை ஒத்துழைக்கவில்லை.

அம்மாவின் கதியே அப்படியென்றால் திருப்பூர் குமரனை விட்டிருப்பாரா?? வெளுத்து வாங்கினார். எனக்கு உளறல் பிரச்சனையில்லை ஆனால் வசனங்கள் மறந்து போய்விடும். குமரன்  பிரிட்டிஷாரிடம் போராட்டத்தில் பேசும் வசனம் மிகப்பெரியது. திருப்பூர் குமரன் இவ்வளவு நீளமாய் எப்படித்தான் பேசினாரோ என நினைத்துக்கொள்வேன். ஆக்ரோஷமாய் பேசிக்கொண்டிருக்கும் போதே அடுத்த வரி மறந்து போகும், முகத்தைக்குறுக்கி ஓரக்கண்ணால் சாரை பார்ப்பேன். அவர் மதம் கொண்ட யானை போல ஓடி வந்து கொண்டிருப்பார். அடைமழையாய் அடித்து நொறுக்குவார். உண்மையில் ரெண்டாவது மூன்றாவது அடியிலேயே எல்லாம் ஞாபகம் வந்து விடும். அவர் அடிக்கென்றே ஒரு மகத்துவம் இருந்தது.

"இருபத்தொரு வயசுல நாட்டுக்காக செத்தவெண்டா...எவஞ்சாவான்?? அப்டியே சிங்கம் மாதிரி உருமிட்டு சாஞ்சுட்டான்...எப்பேர் பட்ட வைராக்கியம் இருந்தா சாகுற போது கூட கொடிய விடாம இருந்திருப்பான்... அப்படியாப்பட்டவன் குரல் எப்டியிருக்கும்... நீ கஞ்சிக்கு செத்தவன் கெனக்கா மொனங்குற..."


'வைராக்கியம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அப்போது தெரிந்திருக்கவில்லை. அர்த்தம் கேட்க அது சரியான நேரமில்லை என்பதால் அமைதி காத்தேன். பரமசிவம் சார் எல்லா வசனத்தையும் நடித்துக் காண்பிப்பார்.வாட்ச்சை மேஜையில் கழட்டி வைத்து விட்டு, தொண்டையை உருமி ஆரம்பிப்பார். மொத்த வசனத்தையும் தங்கு தடையின்றி கணீரென்று பேசுவார். அவர் கண்களெல்லாம் கலங்கியிருக்கும். முகம் ஆக்ரோஷமாய் இருக்கும். நடித்து முடித்து விட்டு "இப்டி பண்ணனும்"பார். நான் குல தெய்வத்தை ஒரு முறை கும்பிட்டுக்கொள்வேன்.

ஒரு வாரத்தில் எல்லாம் இலகுவானது. வசனங்கள் பதிந்து போனது. நெஞ்சை நிமிர்த்தி, குரலை உயர்த்தி நேராய் கண்களை வைத்துக்கொண்டு பேசுவது பிடிபட்டது. சார் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "அவ்ளோ தான்..அருமே..அருமே.." என்பார். வீட்டில் கூட சட்னியில் உப்பு அதிகமாய் இருந்தால் "ஓவர் ஆக்டிங்" செய்ய ஆரம்பித்தேன். இந்த "ஆண்டுவிழாப் பேய்" எப்ப எறங்குமோ?? என நொந்து கொண்டாள் அம்மா. முன்பு எருமை மாடாய் தெரிந்த பரமசிவம் சார் இப்போது பசு மாடாய் தெரிய ஆரம்பித்தார். மிக அழுத்தமாய் திருப்பூர் குமரன் எனக்குள் பதிந்து போனார். தனியாய் இருக்கும் வேளையில் குமரன் பிரிட்டிஷ் போலீசிடம் பேசும் காட்சி என் மனக்கண்ணில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். இந்தியக்கொடியை மானசீகமாக கையில் ஏந்திக்கொண்டு "இறுக்கமாய்" பிடித்துக்கொள்வேன். பரமசிவம் சார் சொல்வது போல "லட்சிய உடும்புப் பிடி.."

"உனக்கு அது மேடையா தெரியக்கூடாதுடா..திருப்பூர் வீதியா தான் தெரியனும்..நீ தான் குமரன்..எதுக்கும் பயப்படாத குமரன்...தேசபக்தியால் தோலெல்லாம் இரும்பாப் போனவன்..உயிற துச்சமுனு இருந்தவன்...தமிழ்நாட்ல பிற்பாடு ஏற்படப்போற புரட்சிக்கு விதை நீ..முக்கியமா தேசியக்கொடிய விட்டுவிடாமல் உயிர்மாய்த்த கொடிகாத்த குமரன்..."  பரமசிவம் சார் மகுடி ஊத நான் பாம்பானேன். ஆனால் மொத்த ஸ்கூலும் எங்கள் மீது வெறியாய் இருந்தது. நாடகத்துக்கு கூடுதலாய் பதினைந்து நிமிடம் வேண்டுமென்றார் சார். "ரங்கீலா" பாடலை தூக்கிவிட்டால் நமக்கு அந்த பதினைந்து நிமிடம் கிடைக்குமென தலைமைக்கு மேற்கொண்டு யோசனையும் சொன்னார். பள்ளியின் கலைக்காதலர்கள் கொதித்தார்கள். எல்லோரும் சாருக்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தார்கள்.தலைமையாசிரியர் பரமசிவ சாரிடம் பேசினார்.

"ஒரு மணி நேரம் நாடகம் பாத்தா எல்லாருக்கும் போர் அடிச்சிரும் சார்..ஒரு பாட்டு ..ஒரு நாடகம் அது தான நம்ம ஐடியா.."

"ஏங்க திருப்பூர் குமரன விட, தெரியாத மொழிப்பாட்டு பெருசா போச்சா.."

"எல்லாம் சேர்ந்தது தான் கலை நிகழ்ச்சி...நீங்.."

"செரி விடுங்க..அப்போ "நேத்து ராத்திரியம்மா" வையும் போட்டு கலைய வளருங்க..."

கடைசியில் "ரங்கீலா" தப்பித்தாள். அந்த மிகப்பெரிய நாள் வந்தது. வேட்டி சட்டை மற்றும் முழு மேக்கப்புடன் சாயங்காலமே தயார் செய்யப்பட்டேன். அம்மா அஜந்தாவுக்கு தலையெல்லாம் பவுடர் கொட்டப்பட்டு இன்ஸ்டன்ட் கிளவியானாள். கடைசிக்காட்சியில் வரும் ரத்தத்திற்காக சிவப்பு மை பாட்டில் தயாராய் இருந்தது. வசனத்தை ஆரம்பித்திலிருந்து ஒருமுறை சொல்லிப்பார்த்தேன். திருப்தியாய் இருந்தது. மறந்து விட வாய்ப்பேயில்லை என தைரியம் வரும் வரை சொல்லிப்பார்த்தேன். பரமசிவம் சார் திடீரென வந்து திருநீர் பூசி விட்டார். 



"அதிகமா தண்ணி குடிக்காத...அப்புறம் மேடைல ஏறுனதுக்குப்புறம் ஒன்னுக்கு வரும்..."

"சரி சார்"

"நிமிந்து நின்னு பேசணும்..கூன் போட்டுட்டு கெளவி மாதிரி நிக்கக் கூடாது"

"சரி சார்"

மேடை ஏறினோம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. திருப்பூர் குமரன் சாகும்போது மக்கள் கூட்டம் அமைதி காத்தது. கடைசியில் கொஞ்சமாய் கைத்தட்டல் கேட்டது. முடிந்து மேடையிலிருந்து பின்பக்கமாய் கீழிறங்கினோம். பரமசிவம் சார் ஓடி வந்து கட்டிக்கொண்டார். தன் தொப்பையை வைத்து அமுக்கி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினார். சரியாக மேடைக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தோம். எனக்கு வியர்த்துக் கொட்டியிருந்தது. தண்ணீர் குடித்தேன். பெரிதாய் கைத்தட்டல் சத்தம் கேட்டது.

"ரங்கீலா ஆரம்பிச்சிட்டாங்க போல...சரி கெளம்புறேன்" என பரமசிவன் சார் தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு சைக்கிள் சாவி தேடினார்.

நான் அவரை கொஞ்சம் குழப்பமாய் பார்த்தேன்.

"மூணாவது பரிசோ..ஆறுதல் பரிசோ தருவாங்க..அதுக்கெதுக்கு நா தேவுடு காக்கணும்...ம்ம்ம் ஒரு மாசமா குமரன் புண்ணியத்துல சந்தோசமா இருந்தேன்.."

அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"மத்த விஷயத்தலெல்லாம் ஜெயிச்சா தான் வெற்றி..பிடிச்ச விஷயத்தை பண்ணினாலே வெற்றி...அடுத்தவனுக்கு எது பிடிக்கும்? எது பண்ணினா கைத்தட்டுவாங்கனு தேடிட்டே அலையக்கூடாது... " சைக்கிளை மிதித்து கிளம்பினார். இருளை கிழித்து அந்த சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. வேகமாய் ஓடிப்போய் சாரின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

எழுத்தாளன் - பகுதி3 (நிறைவுப் பகுதி )

   



                                         எழுத்தாளன்- பகுதி 1

                                        எழுத்தாளன் - பகுதி 2

ஹைதராபாத்தின் "ஜூப்ளி ஹில்ஸ்" பணக்காரர்கள் வாழும் பகுதி. பாறைகளைக்குடைந்து மாளிகைகள் கட்டியிருப்பார்கள். பளபளக்கும் வெளிநாட்டு இறக்குமதி கார்கள் வீடுகளின் முன் நின்று சிரிக்கும். குமரேசன் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். காலை குளிர்க்காற்று முகத்தில் அடித்து அவனின் வியர்வையை துடைத்தது. அப்பல்லோ மருத்துவமனை வளாகம் அந்த அதிகாலை நேரத்திலேயே சுறுசுறுப்பாய் இருந்தது. குமரேசன் கையில் வைத்திருந்த ஃப்ளாஸ்க்கை தூக்கிக்கொண்டு நாலாவது மாடிக்கு ஏறினான். சுகுணாம்மா முன்னால் போய் நின்றான். அவள் லேசாய் சிரித்து அவனது கையிலிருந்த காபியை குடித்தாள். 


ஜேக்கப் மூன்று நாளாய் ஐ.சி.யுவில் இருந்து முதல் நாள் தான் பொது வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். யாரிடமும் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை.சுகுணாம்மா வழக்கம் போல வீட்டில் போய் குளித்து வர கிளம்பினாள். 

ஜேக்கப் கண் முழித்துப் பார்த்தார். தலையை லேசாய் தூக்கி சுகுணாம்மாவைத் தேடினார். குமரேசன் அவரைப் பார்த்து "அம்மா..குளிச்சிட்டு வர போயிருக்காங்க..வந்திருவாங்க.." என்றான். பெட் பேனை எடுத்து வைத்தான். ஜேக்கப் கூச்சமாய் அவனைப் பார்த்தார். "சும்மா போங்க..நான் வேணா திரும்பிக்கிறேன்..". போனார். கொஞ்ச நேரம் குமரேசன் அமைதியாய் இருந்தான். அவர் மெல்லமாய் கட்டிலில் எழுந்து இருந்து உட்கார்ந்தார்.

"ஜேக்..பாத்து..பாத்து...இப்போ பரவாயில்லையா.."

அவர் தலையாட்டினார். கொஞ்ச நேரம் கண் இமைக்காமல் அவரைப்பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்சமாய் கனைத்து விட்டு பேசத்தொடங்கினான்.  "அடுத்த நாள் காலைலேயே அம்மா அவன கெளம்ப சொல்லிட்டாங்க...எனக்குத் தெரியும் அன்னிக்கு அவ்ளோ குடிச்சதுக்கு காரணம் அவனாத்தான் இருக்கும்... லூசு நாய்.."

அவர் குமரேசனையே பார்த்துக்கொண்டிருந்தார். "சரியான கிறுக்கன்..யார்கூட எப்பிடி பழகணும்னு தெரியாது..நல்ல வேள ஒழிஞ்சான்.. சுகுணம்மா மண்ணைத் தூத்தி அவன் மேல எறிஞ்சி திட்டுனப்போ மட்டும் கொஞ்சம் சங்கடமா இருந்துச்சு..அடுத்த நாள் காலைலேயே வீட்ட விட்டு கிளம்பிட்டான்.ஆபிஸ்ல வேற அவன பாக்கவேயில்ல. டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டான்னு சொல்றாங்க.."

ஜேக்கப்புக்கு லேசாய் வியர்த்தது. நடந்ததெல்லாம் ஒரு முறை மனதிற்குள் ஓடியது. குமரேசனிடம் அது பற்றி பேசலாமாவென தெரியவில்லை. அமைதியாய் இருந்தார். குமரேசன் தொடர்ந்தான்."போறப்போ..உங்க கிட்ட கொடுக்கச் சொன்னான்..." குமரேசன் ஒரு கவரை நீட்டினான்.  ஜேக்கப்புக்கு பதட்டம் அதிகமானது. அவர் பயந்தபடியே அதை வாங்கினார். கையில் நடுக்கம் தெரிந்தது. குமரேசன் சத்தமாய் "என்னாச்சு ஜேக்...நர்சை கூப்பிடவா" என்றான். வேணாம் என கையசைத்தார். அந்த கவரை வாங்கி இடது பக்கம் இருந்த டேபிளில் வைத்தார்.





ரண்டு வாரத்தில் ஜேக்கப் நல்லமுறையில் தேறி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஊரிலிருந்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். எப்போதும் போலில்லாமல் அவரது வீடு இரைச்சல்களாலும், கீச்சுக்குரல்களாலும் களை கட்டியிருந்தது. வீட்டு வாசலில் எந்நேரமும் நிறைய செருப்புகள் கிடந்தன. வீட்டுக்குள்ளேயே கொஞ்சமாய் நடக்க ஆரம்பித்திருந்தார், எனினும் படிகள் ஏற அனுமதியில்லை. அப்படியொரு நாள் தான் குமரேசன் கொடுத்த அந்த கவர் அவர் கண்ணில் பட்டது. அதை நினைக்கும் போதெல்லாம் அவருக்குள் ஒருவித அசௌகர்ய உணர்வு வந்து போனது. என்னதான் எழுதியிருக்கிறான்னு பார்ப்போமென்ற வைராக்கியத்தில் அந்த கவரை பிரித்தார். ஒரு பெரிய வெள்ளைத்தாள் அதில் நீல நிற மையில் குண்டு குண்டாய் தமிழ் எழுத்துக்கள். நீல நிற நோட்டில் படித்த அதே கையெழுத்து. படிக்க தொடங்கினார்.

"ஜேக், வணக்கம். நீங்கள் இந்த கடிதத்தை ஒரு வேளை படிக்கும் படி அமைந்தால் மிகவும் சந்தோசம். தலை நரை போல மாரடைப்பு ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இப்போதெல்லாம் வந்து விடுகிறது. அதுகுறித்து பயம் தேவையில்லை. உங்கள் மேல் சுகுணாம்மாவிற்கு எவ்வளவு பாசமென்று என்னை அவர் திட்டிய போதுணர்ந்தேன். தெருவில் மானம் போனாலும் அந்த வகையில் எனக்கு சந்தோசம். அம்மாவுக்கு என்னைவிட நிறைய கெட்ட வார்த்தைகள் தெரிந்திருப்பது ஒரு உபரித்தகவல். இத்தனை நாள் அம்மாவிடம் திட்டு வாங்கி அதுவரை உங்களுக்கு "அட்டாக்" வராதது வியப்பே...."

லேசாய் சிரித்தார். மீண்டும் வாசிக்கலானார். "அதிருக்கட்டும். நாம் போன புது வருடத்துக்கு இரண்டு பாட்டில் ரம்மை காலி செய்த போது கூட டேங்கர் லாரி போல கம்பீரமாயல்லவா வீட்டிற்கு போனீர்கள். வெறும் நாலு ரவுண்டில் கீழே விழுந்ததேன்?? அதுவும் நிலைப் படி தடுக்கி.. கொஞ்சம் குழப்பமாய் இருந்தது". ஜேக்கப் எச்சிலை விழுங்கினார்."என்னுடைய நோட் டேபிளில் இருந்த போதே எனக்குப் புரிந்தது. நீங்கள் கண்டிப்பாய் அதை படித்திருப்பீர்கள். ஆமாம் அதிலென்ன அவ்வளவு பயம். எழுதிய எழுத்தெல்லாம் எழுதியவனுடைய கருத்து மட்டும் தானா?? கதாபாத்திரங்கள் அதன் மன ஓட்டத்தை நேராக பேசக்கூடாதா?? அதையெல்லாம் விடுங்கள் போகட்டும். நானெல்லாம் கதையெழுதக்கூடாதா?? டால்ஸ்டாய், மார்க் ட்வைன் போல காலத்தால் கரைக்க முடியாத காவியங்கள் படைக்கக் கூடாதா?? ..ஸ்ஸ்..எத்தனை "கூடாதா"...என் கதைகளில் ஒரே வார்த்தை இத்துனை முறை "கூடாது". கடிதம் என்பதால் அடித்தெழுத முடியவில்லை.

நீங்கள் எத்தனை பக்கம் படித்தீர்ளெனத் தெரியவில்லை. முழுமையாய் படித்திருந்தால் அது என் கதாநாயகன் ஷ்யாமின் டைரி எனத் தெரிந்திருக்கும். நூறு சதவீத உண்மையுடன் ஒரு சம்பவத்தை ஒருவரால் விளக்கமுடியாது. கற்பனை இல்லாத விவரிப்பு நீங்கள் சாப்பிடும் "கேப்ப ரொட்டி" போல..யாருக்கும் பிடிக்காது..நான் உண்மையிலேயே கோல்கொண்டா போனதில்லை..கஞ்சா இழுத்ததில்லை..உள் நீச்சல் அடித்ததில்லை..உண்மையில் எனக்கு நீச்சலே தெரியாது.. நீங்கள் பயப்படும் அளவுக்கு வில்லத்தனங்கள் செய்ய எனக்கு வாய்ப்பில்லை.இதில் ஒரே ஒரு சந்தோசம். ஒருவருக்கு பயத்தைக்கொடுத்து மரணத்தின் வாசல் வரை தள்ளும் வீரியம் என் எழுத்துக்கு இருந்ததென்பது தான். கற்பனையும் உண்மையும் , தங்கமும் செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்.சரி..நேரமாயிற்று விடைகொடுங்கள். இனி நான் குடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களை
நினைத்துக்கொள்வேன்.வாய்ப்புக்கிடைத்தால் சிந்திப்போம். நன்றி."

ஜேக்கப்புக்கு பாரம் குறைந்தது போல இருந்தது. அவன் மேல் இரக்கம் பிறந்தது.சேரில் சாய்ந்து கொண்டே அவனைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அவன் அடங்காத மாடாகவே வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றிய எந்தவொரு தகவலும் யாருக்கும் முழுமையாக தெரிந்திருக்கவில்லை. தன்னுடைய சொந்த விஷயங்களை அவன் யாரிடமும் ஒரு முறை கூட பேசியதில்லை. திடீரென அவர் மூளையில் சில குழப்பங்கள் உருவானது போல இருந்தது. மீண்டும் மீண்டும் "கற்பனை..உண்மை..தங்கம்..செம்பு.." என்கிற வார்த்தைகளை உச்சரித்தார். எழுந்தார். வீட்டில் எல்லாரும் மொட்டை மாடியில் இருந்தார்கள். கிளம்பி வெளியேறினார். சிரமப்பட்டு வேகமாய் நடந்தார். 14-C ப்ளாக்கை அடைந்தார். காற்று பலமாய் வீசியது. யோசிக்காமல் இடது புறமாய் வீட்டின் பின் பக்கம் போனார். 




அங்கே எதுவும் மரமேயில்லை. கீழே காங்க்ரீட் தரை. மண் எதுவும் இல்லை. குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமானால் பத்து பேர் கூட நிற்க முடியாத ஒரு கொள்ளைப்புறம். சிரித்தார். அவன் முகம் ஒரு முறை வந்து போனது. வெளியே வந்தார். காலணி செகரட்டரி கண்ணில் தென் பட்டார்.

"என்ன ஜேக்கப் சார் அதுக்குள்ளேயும் வாக்கிங் ஆரம்பிச்சாச்சா...உடம்ப பாத்துக்கோங்க..."

"சரி சார்.."

"ஒரு மாசமாவே இங்க ஒன்னும் சரியில்ல..உங்களுக்கு இப்படி ஆகியிருச்சி.. போன மாசம் செக்யூரிட்டி ஒராள நைட்ல இருந்து காணோம். போலிஸ் கீலிஸ்னு இன்னும் அலஞ்சிகிட்டு இருக்கோம்.."

"செக்யூரிட்டிய காணோமா.."

"ஆமா சார்..ஷிவ்லால் யாதவ்னு...யூ.பி காரன்..சிரிச்ச முகமா இருப்பானே..."

ஜேக்கப் தலையில் ஒரு குரல் கேட்டது "கற்பனையும் உண்மையும் ...தங்கமும்செம்பும் போல... அதன் சதவீதங்களை எழுத்தாளனே அறிவான்". அவருக்கு லேசாய் நெஞ்சு வலிப்பது போல இருந்தது.

                                                                                                               ----முற்றும் 



                                                    

வெள்ளி, 26 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி2

                                         



                                                           எழுத்தாளன்- பகுதி 1

இளையராஜா வெண்கல குரலில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தார். அவன் கிங்க்ஸ் சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டான்.ஒரு பெரிய பெக்கை நிரப்பி அளவு பார்த்து ஜேக்கப்புக்கு கொடுத்தான். அவர் பாட்டை ரசித்துக்கொண்டே கிளாசை கையில் வாங்கினார். பாடலின் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். "ஏன்டா...மூனாவதா...நாலாவதா...வீட்டுக்கு போகனும்டா...கூடிப்போச்சுனா சிக்கலாகிடும்" என்றார்.

"நாமளே எப்பயாச்சும் தான் சாப்பிடுறோம்..கணக்குப்பண்ணி சாப்டா நல்லாவே இருக்காது..நாமென்ன ஹோம்வொர்க்கா பண்றோம்..என்ஜாய் பண்ணி அடிங்க ஜேக்"

 "உங்க வீட்லலாம் உன்ன திட்ட மாட்டாங்களா... உங்கப்பா என்ன பண்றார்.."

பதிலேதும் அவன் சொல்லவில்லை. கொஞ்ச நேரத்தில் அறையில் சத்தமில்லை. அவன் தூங்கிப்போயிருந்தான். ஜேக்கப் இரண்டு தடவை அவனை கூப்பிட்டுப் பார்த்தார். மட்டையாகிவிட்டான். அறையை ஒரு நோட்டம் விட்டார்.  புகை ரூமை ஆக்கிரமித்திருந்தது. ஜன்னல்களில் ஜட்டிகள் தொங்கியது. "கழுதைக" என முனங்கினார்.குமரேசன் ஊருக்கு போயிருந்தான்.அப்படியே தடுமாறி எழுந்தார். அலமாரியில் நீல நிற நோட்டுப்புத்தகம் ஒன்று துறுத்திக்கொண்டு நின்றது. சாதாரண நாட்களில் அதை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. கவனமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களிலிருந்து அது மட்டும் ஒழுங்கில்லாமல் நின்றது. உள்ளுக்குள் பேனா ஒன்றும் இருந்தது. குமரேசன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன். முதலில் அவனது நோட்டாய் இருக்குமென தான் கையிலெடுத்தார். முதல் பக்கத்தைப் புரட்டினார்.

"எழுத்துக்களும் ஓவியங்களே... வாசிக்கையில் எல்லோர் மனத்திலும் காட்சிகளை வரைவதால்..." என எழுதி அவனது பெயர் போட்டிருந்தது.கையெழுத்து அவனது தான். ஒரு முறை கண்ணைக் குறுக்கிப் படித்துப்பார்த்தார். லேசாய் சிரித்தார். "படிக்கலாமா.." வென ஒரு முறை யோசித்தார். அடுத்தவர் விஷயங்களில் ஏற்படும் இயல்பான கிளர்ச்சியின் உந்துதலில் முதல் பக்கத்தைப் புரட்டினார். நன்றாய் குண்டு குண்டு தமிழ் எழுத்துக்கள். நீல நிற பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்தது. முதல் இரண்டு பக்கத்தில் அவன் கோல்கொண்டா மலையின் ரம்யத்தைப் பற்றியும், இரவு நேரத்தில் அங்கு வீசும் காற்றைப்பற்றியும் கவிதை போல எழுதி இருந்தான். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுத்தில் நேர்த்தியும், ரசனையும் தெரிந்தது. மூன்றாம் பக்கம் வந்தார்.



"சித்திக் கொடுத்துவிட்டுப் போன பின் நேராய் மாடிக்கு வந்து விட்டேன். வீட்டில் யாருமில்லை. வித்யாசமான பழுப்பு நிறத்தில் காய்ந்த இலைகள் போல அந்த காகிதத்தில் அது இருக்கிறது.உண்மையிலேயே மூவாயிரம் இதற்கு அதிகம் தானென தோன்றுகிறது.பெங்களூரில் வெறும் எண்ணூறுக்கு வாங்கியிருக்கிறேன்.ஆனால் இது லடாக் சரக்கு..வீரியம் ஜாஸ்தியென சித்திக் சொல்கிறான். இதோ பேப்பரை சுருட்டி வாயில் வைக்கிறேன்.லேசாய் உப்புக்கரிப்பது போல உணர்வு. லைட்டரை பத்த வைக்கிறேன். எத்தனை முறை இழுத்தாலும் முதல் இழுவை கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஹா...ஹா... என்ன சுகம் அடி வயிற்றை மயிலிறகு வைத்து யாரோ வருடுவது போல இருக்கிறது..மிதமாய் போதை ஏறிக்கொண்டே இருக்கிறது. தூக்கத்தில் எழுந்தது போல ஒரு நிதானமின்மை என்னை ஆட்கொள்ள தயாராகிறது. ஏதேதோ நினைவுகள் வந்து போகிறது... மூன்றாவது படிக்கும் போது அப்பாவின் ரம் பாட்டிலை திறந்து திருட்டுத்தனமாய் குடித்தது..முதன் முறையாய் சுயமைத்துனம் செய்தது... ம்ஹூம்..எழத முடியவில்லை..கை குழறுகிறது..."

எழுத்து கிறுக்கலாய் மாறி அந்த வரியுடன் நின்று போயிருந்தது. ஜேக்கப் ஒரு முறை அவனைப் பார்த்தார். அவன் குப்பற படுத்துக்கிடந்தான். அவருக்கு அதற்கு மேல் படிப்பதா வேண்டாமா என யோசனையாய் இருந்தது. குழப்பத்துடன் அடுத்த பக்கம் திருப்பினார். 

"காலணியில் எத்தனயோ பேர் இருக்கையில் ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறானென யோசனையாய் இருந்தது. செக்யூரிட்டி யூனிபார்மில் இருந்த விசிலை நான் வரும்போது வேண்டுமென்றே ஊதினான். மற்ற செக்யூரிட்டிகள் யாரும் அப்படியில்லை.ரெண்டு முறை கேட்ட போதும் பதில் சொல்லாமல் சிரித்தான். அப்போது தான் அடக்க முடியாத கோபம் வந்தது. நடக்கப்போவது அப்போதே எனக்குத் தெரிந்து போனது. அன்று இரவு 14-c ப்ளாக்கின் பின்புறம் இருந்த புளிய மரத்தின் பின் நின்று கிளையை பலமாய் அசைத்தேன். நினைத்தது போலவே வேகமாய் விசில் ஊதிக்கொண்டே வந்தான். அருகில் வந்தான். அங்கு யாருமேயில்லை. அந்த இருளும்,தனிமையும் எனக்கு அடக்க முடியாத வெறியை கொடுத்திருந்தது. மூன்று நாளாய் தொராசின் வேறு சாப்பிடவில்லை.




அருகில் வந்து "நீங்களா சார்" என சிரித்தான். அது போதும். அதற்கு மேல் அங்கு நடந்த எல்லா விஷயங்களுக்கும் அது போதுமானதாய் இருந்தது. முகத்தில் மூன்று முறை குத்தினேன். வாயிற்குள் கர்சீப்பை அடைத்து கொச்சைக் கயிறால் அவனது கழுத்தை நெறித்தேன். அவனிற்கு போராடத்தெம்பில்லை. எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. எதோ எறும்பை நசுக்குவது போல இருந்தது. "தாவு..குதி..திமிறு.." என கத்திப் பார்த்தேன். ம்ஹீம்...சாவதற்கென்றே காத்திருந்து அந்த உடம்பு என்னை நோக்கி வந்ததாய் தோன்றியது. கழுத்தை இத்தனைக்கும் மிதமாய் தான் அழுத்தினேன்...துடித்துகொண்டிருந்த கால்களும் அடங்கியது...உடம்பு ஜில்லென குளிர்ந்தது. அது ஏன் உயிர் போனவுடன் உடல்கள் ஒரு சில வினாடிகள் அதிர்கிறதென தெரியவில்லை.... இதை எவனும் ஆராய்ச்சி கீராய்ச்சு பண்ணீருக்கானோ என்னவோ...ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவனைப்போட்டேன். மண்ணைப் போட ஆரம்பித்தேன்..மாலையில் பெய்த மழை காரணமாக மண் இறுகிப் போய்விட்டது..கொஞ்சம் கஷ்டப்பட்டு தோண்ட வேண்டியிருந்தது..ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டே மண்வெட்டியில் அள்ளிப் போட்டேன். நாளை இவனை யாரும் தேடுவார்களா....என்ன ஆகும் என யோசித்துப் பார்க்கையில் எனக்கு ரொம்பவும் த்ரில்லாக இருந்தது.."

ஜேக்கப்புக்கு ரத்த அழுத்தம் அதிகமானது போல இருந்தது. மூச்சு வாங்கினார். நடுங்கிய கைகளில் இருந்த நோட்டை டேபிளில் வைத்தார். சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தது. வீட்டை விட்டு முதலில் வெளியேறி விடுவதென்று முடிவெடுத்து வேகமாய் வாசலுக்கு நடந்தார். நிலை படி தடுக்கி கீழே விழுந்தார். அவன் சத்தம் கேட்டு தலை தூக்கிப்பார்த்தான்.

                                                                                                                     --தொடரும் 

செவ்வாய், 23 டிசம்பர், 2014

எழுத்தாளன் - பகுதி 1


வேறு யாராவதாய் இருந்தால் அந்த சத்தத்துக்கு உடனே எழுந்திருப்பார்கள். அது அவன்.அறைக்கதவை தட்டி சரியாய் ஒன்றரை நிமிடத்துக்கு அப்புறம் தான் திறந்தான். வெளியே குமரேசன் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.ஜேக்கப் எரிச்சலை அடக்கிக்கொண்டு ஹாலில் ஹிந்துவை நோட்டமிட்டபடி உட்காந்திருந்தார். குமரேசனையும், ஜேக்கப்பையும் கண்ணைச்சுருக்கி பார்த்துவிட்டு நேராய் டாய்லெட்டுக்கு போனான். கதவைக் கொஞ்சம் வேகமாய் சாத்தினான்.சட்டென குழாய் திறக்கும் சத்தம் அந்த அதிகாலை அமைதியை சலனப்படுத்தியது. குமரேசன் முனங்கிக்கொண்டே வேகமாய் ஜேக்கப்புக்கு எதிரில் வந்து அமர்ந்தான். அவனைப் பார்த்து அவர் சிரித்தார். "நீ கோபப்படக்கூடாது ராஜா..உங்களுக்கு வீடு கொடுத்தனே...நான் தான் பழைய செருப்பெடுத்து...எம்மூஞ்சிலயே அடிச்சிக்கனும்..". சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டார். குமரேசன் குனிந்திருந்தான். எதுவும் பேசவில்லை. ஒரு நிமிடம் அமைதியாகவே கழிந்தது. 

ஜேக்கப் அறுபதை கடந்த பெரியவர். சொந்த ஊர் சென்னையாக இருந்தாலும் ஹைதராபாத்தில் செட்டில் ஆனவர். சுங்கத்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் அமெரிக்காவில் வேலை செய்துகொண்டிருக்க, ஹைதராபாத்தில் உள்ள நீலிமா கிரீன்ஸ் குடியிருப்பில் ஒரு பெரிய வீட்டில் குடியிருந்து கொண்டிருக்கிறார். பக்கத்து வீடுகளுக்கு கேட்கும்படி மனைவியிடம் திட்டு வாங்குவது இவருக்கு நீண்டநாள் பொழுது போக்கு. சுகருக்கும் மனைவிக்கும் பயந்து தினமும் வாக்கிங் போகும் வயசாளி. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் இரண்டு தமிழ் பசங்க தான் குமரேசனும் அவனும். குமரேசன்,எந்த நேரமும் கல்யாணம் ஆகலாம் என்கிற நிலையில் வாழும் மேட்ரிமோனி இளைஞன். வாரம் ஒருமுறை ஃபேசியல், தினமும் ஜிம் என ஸ்கெட்ச் போட்டு  சுத்திக்கொண்டு இருப்பவன். மிச்சமிருப்பவன் அவன் மட்டும் தான். உண்மையில் அவனை பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. சோம்பேறி,குழப்பவாதி, சித்தாந்தங்கள் எதுவில்லாமல் எல்லாரையும் வெறுப்பேற்றுபவன். குமரேசனின் கம்பெனியில் கூடவே வேலை செய்கிறவன். குடிகாரன். அவனை பற்றி பேசி பத்தியை விரயம் செய்யாமல் நிகழ்காலத்துக்கு போவோம்.

வெளியே வந்தான். குமரேசன் அவனைப்பார்த்து "ஏழு மணிக்கு கம்யூனிட்டி செக்ரட்ரிய பாக்கப்போகணும்...இல்லேனா சாயங்காலம் வீட்டைக்காலி பண்ணனும்டா.. தெரியும்ல.." அவன் ஒரு முறை நிமிரிந்து பாத்துட்டு "ஓ பஞ்சாயத்து காலைலயா..." என லேசாய் சிரித்தான். உண்மையிலேயே அவனுக்கு இது போன்ற பிரச்சனைகள் பிடித்திருந்தது. எதுவுமே நடக்காத சாதாரண நாட்களை அவன் வெறுத்தான். ஜேக்கப் பக்கம் திரும்பி " ஓ... அதான் நம்ம ஜேக் காலைலேயே அனல் கக்கிக்கிட்டு உட்காந்திருக்கார்..பாத்து பாஸ் சூடு பிடிச்சுக்க போகுது.." யாருமே சிரிக்கவில்லை. ஜேக்கப் அவன் பக்கம் வந்தார். " நல்லா சிரிச்சிக்கோ..எது எப்படியோ நீ இந்த வீட்ல இனிமே இருக்க முடியாது...செக்ரட்ரி வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி எனக்கு நடந்தது என்னான்னு தெரிஞ்சாகனும்...போலிஸ் கம்ப்ளைன்ட் அது இதுன்னு போகாம உங்கள நான் காப்பத்தனும்னா..."

"பாஸ்..ரொம்ப பயப்படாதீங்க..அவ்ளோ பெரிய மேட்டர் இல்ல.. இது சப்ப மேட்டர் தான்..."

"தூ நாயே..நான் ஏன்டா பயப்படனும்...நடந்தத சொல்லித் தொலைடா..என்னைய பேச வைக்காத..."

"சொல்றேன்..சொல்றேன்..கூல்... இந்த கம்யூனிட்டி வீக்லி மீட்டிங் நேத்து நடந்துச்சு.. நீங்க ஊர்ல இல்லாதனால நானும் குமரேசனும் அட்டென்ட் பண்ண போனோம்." கேட்டுக்கொண்டிருந்தவர் தலையில் கை வைத்தார். அவன் தொடர்ந்தான்.



"எல்லாரும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம்,வீட்டுக்கு ஐநூறு ரூபா பணம் கொடுக்கணும்னு சொன்னாங்க... அதுக்கு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து..."

குமரேசன் வேகமாய் நிறுத்தினான். "நான் சொல்லவே இல்ல..நா எதுவுமே பேசல"

"சரிடா,,நாந்தா பேசுனேன்.. இந்த தடவ முருகனோட பிறந்தநாளான கார்த்திகை தீபத்த கொண்டாடுவோம். அதுக்கு வேணும்னா காசு தருவோம்னு சொன்னேன்.அப்டியே..கொஞ்ச நேரம் வாக்குவாதம் போச்சு... இந்த அஞ்சு பி ஹிதேஷ் இருக்கான்ல கோவத்துல என்ன பாத்து "ச்சூத்தியா.."னு சொல்லிட்டான்.நானும் பதிலுக்கு திட்டிட்டேன்.."

"என்னான்னு..."

"தேவிடியா பயலேன்னு.." கொஞ்சம் கூட நிறுத்தாமல் சொன்னான்.

"நீங்கள்லாம் படிச்ச பசங்க தான..இப்பிடியா பேசுவீங்க..."

"சிலபஸ்ல இதெல்லாம் கவர் ஆகல.."

குமரேசன் வாயை மூடிக்கொண்டு சிரித்தான். "அறிவுகெட்ட முண்டங்களா...சரி..காலைல தான வாக்குவாதம்..சாயங்காலம் திரும்பவும் எப்படி கைகலப்பு ஆச்சு.."அவன் திரும்பவும் முகத்தை சீரியசாய் வைத்துக்கொண்டு ஆரம்பித்தான். "சாயங்காலம்...நம்ம வீட்டுக்கு வாசலுக்கு வந்து..ஏன்டா எங்கம்மாவை திட்டுனேன்னு சட்டைய புடிச்சிட்டான்...நான் திரும்ப உனக்கு ஏன்டா இவ்ளோ லேட்டா அம்மா பாசம் பொத்துக்கிட்டு வருதுன்னு சொல்லி டஸ்ட்பின் வச்சு அடிச்சேன்...கொஞ்ச நேரத்துல பெருசுக வந்து வெளக்கி விட்டுட்டாங்க.. ஒரு பத்து மினிட்ல முடிஞ்சிருச்சு..வேணும்னா நீங்க ஆண்டிட்ட கூட கேட்டுப்பாருங்க..".




மூன்று பேரும் நடந்து செக்ரட்ரி வீட்டுக்கு போயினர். சொன்னது போல் பெருசாய் எதுவும் நடக்கவில்லை. இருவரும் இனி மீட்டீங்குகளில் பங்கு பெற தடை விதிக்கப்பட்டது. அவன் வெளியே வரும் போது குமரேசனிடம் "வேமா முடிஞ்சிருச்சு..அவனுக சரியாவே விசாரிக்கல கும்ஸ்.." என சொல்லிக்கொண்டு வந்தான்.ஜேக்கப் அவன் முன்னாடி வந்து நின்றார்.

"சரி..வீட்ட எப்ப காலி பண்ணப் போற..."

"விடுங்க ஜேக்...இன்னைக்கு ஓல்ட் மாங்க் போட்டுக்கிட்டே இத அனாலைஸ் பண்றோம்..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"தந்தூரி ஒன்னு வாங்குறோம்... ரெண்டு பாக்கெட் கிங்க்ஸ்...லேப்டாப்ல இளையராஜா..."

"வீட்ட எப்போ காலி பண்ண போற.."

"மிக்ஸிங் பெப்சியா சோடாவா..."

"சோடா"

                                                                             ---------தொடரும் -----------



ஞாயிறு, 14 டிசம்பர், 2014

லிங்கா - விமர்சனம்

 

லிங்கா பார்க்கவில்லையென்றால் ஆதார் அட்டை கிடையாது என்ற செய்தி வேறு வந்து கொண்டிருந்தது. "காட் தி டிக்கெட்ஸ்" என டிக்கெட்டுகளுடன் வெற்றிப்பெருமித ஃபேஸ் புக் போட்டோக்கள் எனக்குள் வெறியை கிளப்பின. படத்தை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தேன்.சனிக்கிழமைகளில் தனியாய் படத்திற்குப்போனால்,வீட்டிலிருப்பவர்கள் வரும் வாரத்தில் "உப்புமா,கோதுமைதோசை" என தாக்குதல் நடத்துவார்கள் என்பதால் குடும்ப சகிதம் போவதென ஒரு மனதாய் தீர்மானம் நிறைவேற்றினோம். குரோம்பேட்டை வெற்றித் தியேட்டரில் மக்கள் கூட்டம் கொய கொயவென இருந்தது. தலைவனின் தரிசனத்தை காண அத்துனை மக்களும் தேவுடு காத்துக்கொண்டிருந்தனர். எல்லோரும் தலைப்பாக்கட்டி விளம்பரத்தில் வரும் சரத்குமார் அண்ணாச்சி போல குஷியுடன் காணப்பட்டனர். ஒரு நபர் "சிட்டில வீக்கென்ட் டிக்கெட் கிடையாது.. நம்ம பசங்கெல்லாம் வேன் எடுத்திட்டு செங்கல்பட்டு போறானுங்கோ.." என போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.


"சூப்பர் ஸ்டார் ரஜினி" என திரையில் வந்ததும், திரையரங்கமே அதிர்ந்தது. சில ரசிக சிகாமணிகள் அடி வயிற்றிலிருந்து அதிக டெசிபல்களில் ஊளையிட்டு தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ரஜினி பட பாரம்பரியத்திற்கு உட்பட்டு சிலபல பில்டப்புகள் தரப்பட்டு "சூப்பர் ஸ்டார்" தோன்றினார். முந்தைய வரி இங்கே திரும்பவும் காப்பி & பேஸ்ட். வெள்ளைக்கார புள்ளைகளுடன் தலைவர் முதல் பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். எங்கே கீழே விழுந்து விடுவாரோ என கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. எவ்வளவு மேக்கப் போட்டாலும் வயது துறுத்திக்கொண்டு தெரிவதை தடுக்க முடியவில்லை. கே.எஸ்.ரவிக்குமாருக்கு  சூப்பர் ஸ்டார் மேல என்ன கோபமோ தெரியவில்லை, படத்தை அணை கட்டி அடித்திருக்கிறார். தலைவரின் கழுத்தைப்போல கதையையும் கடைசி வரை நமக்குக்காட்டவில்லை. படத்தின் எல்லாக்காட்சியிலும் ஒரு துண்டைப் போட்டு கழுத்தை மறைத்திருக்கிறார்கள். வயதை மறைக்க ஏன் இவ்வளவு மெனக்கெடல்? வயதுக்கேற்ற கதை தயார் செய்வது இதை விட எளிது என்று தான் தோன்றுகிறது. இந்த விசயத்தில் தலைவர், அமிதாப்பை இப்போதும் காப்பியடிக்கலாம்.



அனுஷ்காவும் இல்லையென்றால் கே.எஸ்.ஆர்  வீட்டின் முன் நிறைய பேர் உண்ணாவிரதம் இருந்திருப்பார்கள்.  டான்ஸ் ஆடுவது, தலைவரை பார்த்து ஜொள்ளு விடுவது, வில்லனிடம் பிடி படுவது,கடைசியில் விடுபடுவது என ஹீரோயின் டியூட்டிகளை திறம்பட செய்திருக்கிறார். சந்தானம் வழக்கமான நண்பேன்டா வகையறா காமெடிகளை போட்டு இண்டர்வெல்லுக்காக ஏங்க வைக்கிறார். பென்னி குவிக் கதையை ரஜினியை வைத்து பின்னியிருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் படங்களுக்கு யாரும் உலக சினிமா எதிர்பார்ப்புகளுடன் வருவதில்லை தான் , அதற்காக இப்படியா தமிழ் ரசிகர்களை அசிங்கப்படுத்துவது?? அதுவும் அந்த கொடூரமான க்ளைமேக்ஸ் காட்சி யூடுயூப்களில் ஹிட் அடிக்கப்போகிறது. பவர்ஸ்டார்களுக்கும் பாலகிரிஷ்ணாக்களுக்கும் சூப்பர் ஸ்டார் விட்ட பகிரங்க சவால் அந்த காட்சி. ஏ.ஆர்.ரகுமான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடது கையில் இசை அமைத்திருப்பார் போல, டைட்டில் தவிர எங்குமே அவரைக் காணோம்.

ப்ளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை. கலெக்டர் கம் மகராஜா ரஜினி ஊருக்கு டேம் கட்ட போராடுகிறார். வருகிற பிரச்சனையெல்லாம் பன்ச் டயலாக் பேசியே சமாளிக்கிறார்.சோனாக்சி கிராமத்துத் தமிழ்ப்பொண்ணாம். ப்ளாஷ்பேக் என்பதாலோ எழுபது எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய கதையை காட்டியிருக்கிறார்கள். இயற்பியல் விதிகளை இக்கட்டில் தள்ளும் சூப்பர்ஸ்டார் சண்டைக்காட்சிகள் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்றாலும், அந்த க்ளைமேக்ஸ் பைக் காட்சியையும் பலூன் சண்டை காட்சியையும் தமிழன் ஜீரணிக்க நிறைய நாட்கள் ஆகும். 



தலைவர் இந்தப் படத்திலும் ஊருக்கு சொத்தெழுதி வைக்கிறார். ஹீரோயின்கள் "கட்டியே தீருவேன்" என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். அல்லக்கைகள் அரசியல் பூடக வசனங்கள் பேசுகிறார்கள். "இவர மாதிரி உண்டா" என குணச்சித்திரங்கள் படமுழுக்க குமுறுகிறார்கள். அடி வாங்கியவர்கள் எல்லாம் அந்திரத்தில் பறந்து கிளைமேக்ஸில் தான் கீழே விழுகிறார்கள். கேட்டால் கமர்சியல் படம் என்பார்கள். அதுக்காக மூளையெல்லாம் மூலைல வச்சிட்டு வந்திரனுமா?? சூது கவ்வும் விஜய் சேதுபதி, ஜிகர்தண்டா சிம்ஹா கேரக்டர்களையெல்லாம் ரஜினியை வைத்து யோசித்துப்பாருங்கள். உண்மையிலேயே தியேட்டர்கள் அலறும். தலைவா "நா யானே இல்லே குதிரே" னு பொசுக்குனு லிங்கா மாதிரி இன்னொரு படம் நடிச்சு விட்ராதீங்க... நாடு தாங்காது. பொறுமையா "ப்ளான்" பண்ணி பண்ணுங்க. 

"எம்பொண்ணு வயசுள்ள பொண்ணுங்களோட டூயட் ஆட வைப்பது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை" னு தலைவரு சொல்லிருக்காரு. இப்படி  டூயட் ஆடியே ஆகணும்னு அவர யாரு மிரட்டுறாங்கன்னு தெரியல...உண்மையிலேயே அந்த காட்சிகளை பார்க்க வைத்து கடவுள் நமக்குத்தான் தண்டனை கொடுத்திருக்கிறார்.. ஆக இந்த முறை கே.எஸ் ரவிக்குமார் "கத்து கிட்ட மொத்த வித்தையையும்" இறக்கியிருக்கிறார்.


வெள்ளி, 21 நவம்பர், 2014

ஐ.டி ஆன்மாக்களின் குரல் (Ver 1.0)

                             


1. நீங்கள் நினைப்பது போல் நாங்கள் நவநாகரீக உடைகள் அணிந்து கொண்டு அலுவலகம் போய், ஆட்டம்,பாட்டம் என கூத்தடித்து, மாலை வரை சரக்கடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே வீட்டுக்கு வருவதில்லை. எங்களுக்கும் வேலை என்ற ஒரு வஸ்துவை குடுத்து ,டவுசர் என்ற வஸ்துவை கழட்டத்தான் செய்கிறார்கள்.

2.நாங்கள் தமிழ் நன்றாக பேசுவோம். கோவம் வந்தால் கூட வண்டை வண்டையாய் தமிழில் தான் திட்டுவோம். இன்று பேப்பரில் எழுதப்படும் தமிழை விட இணையத்தில் தான் அதிக தமிழ் எழுதப்படுகிறது. எழுதுறதுல முக்கவாசிப்பய நம்ம பய தான்..நம்ம பய தான்.

3."சென்னையில் தினமும் மழை பெய்யும்" , "இந்தியாவில் எல்லா பெண்களுக்கும் இரட்டைக்குழந்தைகள் பிறக்கின்றன", "ராமேஸ்வரத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் நாட்டின் ஜனாதிபதி ஆவார்கள்" போன்றவைகளெல்லாம் எவ்வளவு அபத்தமான புரளியோ அதே போல தான் "ஐ.டியில் இருக்குற எல்லாரும் லட்சத்தில் சம்பாதிக்கிறான்" என்பதுவும். எங்கள் மாசத்திலும் கடைசி நாட்கள் இருக்கின்றன.

4.நாங்கள் வெளிநாடுகளுக்கு சாக்லேட்கள் வாங்கவும், லேப்டாப்கள் வாங்கவும் மட்டும் போகவில்லை.அங்கே ஆபிசில் எங்களை வடிவேலுவைப்போல வச்சு அடிப்பார்கள்.வலி தெரியாமல் சிரித்துக்கொண்டே ஃபேஸ்புக்குகளில் போட்டோக்கள் போடுவோம்.

5. ஐ.டி கம்பெனிகளில் ஜாதி வாரியான இட ஒதுக்கீடுகள் கிடையாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக பட்ச தண்டனைகள் உண்டு. இதையே அரசாங்கம் நாட்டில் செய்து முடிக்க பல மாமாங்கம் ஆகும்.

6. ஐ.டி காரர்களை கேலி செய்து படம் எடுக்கும் எந்த சினிமாக்காரனுக்கும்,சமகால அரசியலில் இருக்கும் ஊழல் பற்றியோ, போலி சாமியார்கள் பற்றியோ, ஈழப் போராட்டம் பற்றியோ படம் எடுக்க வக்கில்லை. அதை விடுங்க பல பேர் மானங்கெட்டு உலகப்படங்களை உல்டா தானே அடிக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் திருட்டி டிவிடிக்கு எதிராக போராட்டம் வேற...ஹாலிவுட்காரர்கள் காப்பிரைட் கேசு போட்டால் இங்கே பல பேருக்கு ஜட்டி கூட மிஞ்சாது.

7. நாங்கள் டேக்ஸ் கட்டிவிடுகிறோம் அல்லது எங்களிடமிருந்து புடுங்கிவிடுவார்கள். ஆகையால் நாங்களும் நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாகத்தான் இருக்கிறோம் மக்களே..

8. நாங்கள் எந்த புண்ணியவானிடமும் போய் "நா வாடகையாய் பதினஞ்சாயிரம் கொடுத்தே தீருவேன்" னு மல்லுக்கு நிற்பதில்லை. பெட்ரோல் விலை கூடுகையில் எப்படி நீங்கள் ஒன்னும் செய்யமுடியாமல் பொறுமிக்கொண்டே கடந்து போகிறீர்களோ அதே மாதிரி தான் நாங்களும் வீட்டு வாடகையை நிர்ணயிக்க முடிவதில்லை. 

9.நாங்கள் வேலையில் எதையாவது கற்றுக்கொண்டே இருக்கே வேண்டும் இல்லையேல் எங்கள் சாப்பாட்டில் எந்த நேரமும் மண் விழலாம். தினமும் ஒன்பது மணி நேரம் வேலை பார்த்ததற்கு கணக்குக்காட்ட வேண்டும்.

10. "என்ன தம்பி டிகிரி முடிஞ்சிச்சா..அப்டியே ஜாலியா ஆபிஸ் வாங்களேன்.." னு எந்த ஐ.டி கம்பெனியும் கூப்பிடுவதில்லை. இந்த வேலை கிடைக்க நாய் படாத பாடு பட வேண்டும். கையில் ஃபைல்கள் வைத்துக்கொண்டு சென்னையில் பல பேண்டுகளும் சுடிதார்களும் தினமும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

11. நாட்டில் ஆயிரமாயிரம் பாலியல் குற்றங்களும், பெண்களுக்கு எதிராய் எண்ணிலடங்கா வன்முறைகளும் நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த லட்சணத்தில் நாங்கள் கலாச்சாரத்தை கெடுக்குறோமாம்...டேய் இல்லாத ஒரு விஷயத்த எப்பிடிடா கெடுக்கிறது..

12.நாங்கள் ஸ்ட்ரைக் அடிக்க முடியாது. எங்களுக்கென்று சங்கங்கள் கிடையாது. மூன்று அம்ச கோரிக்கை ,நாலு அம்ச கோரிக்கை என எதுவும் முன் வைக்க முடியாது. மீறினால் ஆப்பு பின் வைக்கப்படும்.

வேட்டியின் முக்கியத்துவத்தை கோட் போட்டுக்கொண்டே அலசுவாறே கோபிநாத், அவர் நடத்தும் நிகழ்ச்சி டி.வியில் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. ஐ.டி ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்குமான விவாதம். அதில் எதிர்க்கட்சிக்காரர் "ஐ.டி ல ரிசசன் வந்து நெறய பேர வேலைல இருந்து தூகுனப்போ வெடி போட்டு கொண்டாடினேன்..என்ன ஆட்டம் ஆடுனானுங்க.." என்றார். அவருக்கு ஆதரவாய் நிறைய பேர் கை தட்டினார்கள். அதிர்ச்சியாய் இருந்தது. அப்பிடியென்ன இவய்ங்களுக்கு கோபமென சுர்ரென்று இருந்தது. முடியை கலரிங் செய்து சுவிங்கம் மென்று கொண்டு சுத்தும் இளைஞர்களை பாதி பேருக்கு பிடிப்பதில்லை. ஒரு வேளை இது அது போன்று மாற்றத்தை எதிர் கொள்ள தயங்கும் கோபமா..இல்லை பொருளாதார காழ்ப்புணர்ச்சி தரும் கோபமா.. காரணங்கள் பிடிபடவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது. சமுதாயம் எப்போதும் ஒரு கூட்டத்தை கரிச்சுக்கொட்டிக் கொண்டே இருக்கிறது. அது அவர்கள் கையாலாகத்தனத்துக்கு வடிகால். மாடர்ன் உடை அணியும் பெண்கள், அரசு ஊழியர்கள், சினிமாக்காரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என எல்லாகூட்டமும் கல்லடிபட்டிருக்கிறது. யாரெல்லாம் திருப்பி அடிக்க மாட்டார்கள் என நினைக்கிறார்களோ அவர்கள் மீது காரி உமிழ்வார்கள். உதாரணமாய் வக்கீல்களை விமர்சித்து படத்திலோ பத்திரிக்கையிலோ எத்தனை முறை வந்திருக்கிறது. அவர்கள் திருப்பி அடிப்பார்கள். எதாவுது பொது இடத்தில் மாறி மாறி கூட்டணி வைக்கும் மானங்கெட்ட கட்சிகளை விமர்சித்து பாருங்களேன்...மாட்டீர்கள்..அவர்கள் ஆசிட் அடிக்கவே வாய்ப்பிருக்கிறது.பெருசாய் கருத்தெல்லாம் சொல்லவில்லை. நாங்க ஒங்க வீட்டுப்பிள்ளைகள் எங்கள எப்ப வேணா அடிச்சுக்கலாம். உங்க கோபத்தை எதாவுது உருப்படியான பிரச்சனையில் காட்டுங்கள். தெருவில் இறங்கி போராடுங்கள். நூற்று இருபது கோடி பேருக்கு மேல் இருக்கும் நாட்டை ஒரு சின்ன கூட்டத்தால் கெடுத்து விட முடியாது.

வியாழன், 23 அக்டோபர், 2014

அண்ணே (23-10-2014)


போன் கிச்சுகிச்சு மூட்டியது. யாரோ கால் செய்கிறார்கள்.ஜீன்ஸ் பாக்கெட்ல இருந்து போனை எடுப்பது அம்மாவை பெயிலில் எடுப்பதை விட கஷ்டமான காரியமாய் இருந்தது. நண்பர் தான் அழைக்கிறார். என்னை விட மூத்தவர் என்பதால் "அண்ணே" யென தான் எப்போதும் அழைப்பேன். அண்ணனும் நானும் நாயா பேயா பழகும் கொடூர நண்பர்கள். எனக்கும்அண்ணனுக்கும் உலக நடப்புகளை ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது அலசவில்லையெனில் அடுத்த நாள் காலையில் கக்கா வராது. திடீரென போன் செய்து "ஏந்தம்பி..இந்த விராட் கோலி கூட சுத்துற அனுஷ்கா வாய் கொஞ்சம் வித்யாசமா இருக்கேப்பா..ஆப்ரேசன் கீப்ரேசன் பண்ணீருப்பாளோ..."என்பார். நானும் அவள் போட்டோவை ஜூம் பண்ணி பார்த்து விட்டு "ஆமாண்ணே..அப்டித்தாண்ணே நினைக்குறேன்..ஆப்ரேசன் பண்றப்போ கரண்ட் வேற போயிருச்சுன்னு நினைக்குறேன்"னு சொல்லுவேன்.இவ்வாறாக எங்களது ஆராய்ச்சி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டு இருக்கும். இப்போது எதுக்கு கூப்பிடுறாரென யோசித்துக்கொண்டே போனை எடுத்தேன்.

"தம்புடு எங்க இருக்கே...வேலையா இருக்கியா..பேசலாமா"

"ண்ணே..ஆபிஸ்ல இருக்கேன்..."


"சரி அப்ப வெட்டியா தான் இருக்க..பேசலாம்... தம்பி பக்ரீத் விழா ஒன்னுல நம்ம கேப்டன் பேசுனத கேட்டியா..அம்மாவ அந்த வாறு வாறிருக்காரு...மனுஷனுக்கு எவ்வளவு கோபம்.."





"கேப்டன்லாம் இல்லேன்னா தமிழக மக்கள் என்னாவாங்களோ...சிலர் காமெடியா பேசுனா தான் சிரிப்பு வரும்..நம்மாளு எப்படி பேசினாலும் சிரிப்பு வருதுங்க..அவருக்கேண்ணே பாரத ரத்னா கொடுக்கக் கூடாது..."


"ம்க்கும்..பாவம்பா மனுஷன்.. ஏதாவது கூட்டத்தில பேசிட்டு அடுத்த நாள் காலைல பேப்பர பாத்து தான் என்ன பேசுனோம்னு அவரே தெரிஞ்சிக்கிறார்.. ஆமா இந்த  பேங் பேங் படம் மொக்கப்படம்னு ரிவ்யூ போட்ருக்காய்ங்க...ஆனா நூறு கோடி ,இருநூறு கோடி கலெக்ட் பண்ணுச்சுனு சொல்றாய்ங்க..அப்டியா.."


"அவய்ங்க அப்டித்தான்..மொக்கப்படம்னு ரிவ்யூ போடுவாய்ங்க..அடுத்த பக்கத்துல முன்னூறு கோடி கலெக்சன்னு செய்தியிருக்கும்..இங்க நாலு ஸ்டார் வாங்குன படமே ரெண்டாவுது வாரம் நாக்குத் தள்ளுது..."

"செரி..என்னப்பா கத்தி தேறுமா? நம்பி போலாமா..இல்ல சிதைச்சு அனுப்புருவாய்ங்களா....ரிஸ்க் எடுக்காம ஸ்ருதிஹாசன தரிசிச்சிட்டு வந்திறலாமா.."

"எப்டி இருக்குனு தெரில...ப்ளாக்ல ஒவ்வொருத்தன் ஒவ்வொரு மாதிரி எழுதுறான்..நான் கடவுள் மேல பாரத்த போட்டுட்டு டிக்கெட் புக் பண்ணிட்டேன்...பாத்துக்கலாம்...நம்ம சூப்பர் ஸ்டார் ஃபுட் பால் பாக்க வந்தார் பாத்தீங்களா? அவரு எதுனா டீம் கீம் வாங்கிருக்காரா.."

"யோவ் நீ வேற..அவரே எதோ பழக்கத்துக்காக போய் உக்காந்திருக்கார்... அது சென்னைக்கும் கேரளாக்கும் நடந்த ஐ.எஸ்.எல் ஃபுட்பால் மேட்ச்.பாவம் மனுஷன் எது சென்னை, எது கேரளானு குழம்பிப்போய் ரொம்ப நேரம் மேட்ச் பார்த்த மாதிரி தெரிஞ்சது.. கேரளா கோல் போட்டதுக்கு கைத்தட்னார்னா, இங்க எவனாவுது போராட்டம் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க....நம்ம ஊர்ல தான்யா தெருவுக்கு முப்பது போராளிகள் இருக்காய்ங்க.."




"அண்ணே..அந்த வெள்ளைப்புலி  ஒரு பையனை கொன்னுச்சே அந்த வீடியோ பாத்தீங்களா..ரொம்ப கொடூரமா இருந்துச்சுல்ல.."



"ஆமாய்யா..அத விட கொடூரம் இவய்ங்க எழுதறது..ஒருத்தன் அந்த புலி அது குட்டிய தூக்குற மாதிரி தான் தூக்குச்சுனு படத்த போட்டு விளக்குறான்.. மக்கள் கல்ல தூக்கி எரிஞ்சதுனாலதான் டென்ஷன் ஆச்சுனு ஒருத்தன் எழுதுறான்..இன்னொருத்தன் அந்த பையன் என்ன செஞ்சிருக்கணும்னுபெனாத்துறான்..கருத்து சொல்லலேன்னா இவனுங்களுக்கு அடில கட்டி வந்திரும்...அடப்போய்யா.."

"அண்ணே ஒய் திஸ் டென்சன்...வீட்ல காலைல உப்மா வா?"

"இல்ல தம்பி...ஃபேஸ்புக் பக்கம் போனாலே இவய்ங்க தொல்லை தாங்க முடில...காஸா குண்டுவீச்சுக்கு பொங்குறாய்ங்க,பக்கத்து தீவுல நம்ம சொந்தமெல்லாம் செத்தாய்ங்களே அப்போ உட்வாட்ஸ் குடுச்சிட்டு இருந்தானுங்களா... சச்சின் யாருன்னு ரஷ்யாக்காரி ஷரபோவாவுக்கு தெரிலயாம் அதுக்கு அவ்ளோ கரைச்சல்..இப்போ அமைதிக்கு நோபல் பரிசு வாங்குனார்ல நம்மூர்காரர் கைலாஷ் சத்யார்த்தி..அவர நம்மள்ள எத்தன பேருக்கு தெரியும்..வெக்கங்கெட்டவனுங்க..நெட்ல எழுதுறவன்லாம் அறைவேக்காடு..கழிசடைகள்.."

"ப்ரோ..திஸ் இஸ் டூ மச்... பக்கத்து வீட்ல கூட எவனும் பேச மாட்றான்..போன்ல பேசுனா பில் ஏறுது..தவிர எவனும் கருத்து சொல்ல விட மாட்றான்..இது ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் பஸ்டர்... கண்ட படி எதயாவுது எழுதி விட்டுட்டு லைக்ஸ் வாங்கிட்டு ஜாலியா இருக்கலாம்.. எதுக்கெடுத்தாலும் பொங்குறான், இவன் ஒரு போராளினு நம்ம நேம் ரீச் ஆகிடும்....ஆமா நீங்க ஏன் வர வர கௌதம் கம்பீர் மாதிரி செம்ம டென்ஷன் ஆகுறீங்க..நம்மெல்லாம் சி.எஸ்.கே பாஸ்"

"இத பத்தி பேசுனா எனக்கு செம்ம டென்ஷன் ஆகுது..வேற பேசுவோம்.."

"இந்த மழை என்னங்க பட்டைய கெளப்புது..நல்ல காலத்துலேயே ஆபிஸ் போக எரிச்சலா இருக்கும்..இதுல இது வேற...ரோட்லலாம் தண்ணி தேங்கி நிக்குது..ஒவ்வொரு தடவ வெளில போயிட்டு வர்றதும் ஒரு ஆக்சன் ப்ளாக் தான்.."

"நல்லவேளடா ஊருக்கு வந்துட்டேன்..இங்க ஜில்லுனு நல்லா இருக்கு..என்ன கரண்ட் மட்டும் அடிக்கடி போகுது..அதான் ஒரே தொல்லை" 




"அரசியல் பேசாதீங்க..இந்த குன்ஹானால தமிழகமே சோகமெனும் பேரிருள்ல மூழ்கி கெடக்குது...ஒங்களுக்கு கரண்ட் கேக்குதா..பதவி ஏற்பு விழால மினிஸ்டர்ஸ்லாம் அழுதத பாத்தீங்களா...பாக்றப்போ எனக்கே தொண்டைய அடைச்சிடுச்சு"     

"சத்தமா பேசாத... உடன்பிறப்புகள் அள்ளிட்டு போய் ஆறு நாள் வச்சு அடிப்பாய்ங்க..நம்ம சி.என்.என் ல சைரஸ் னு ஒருத்தன் வருவானே..அவன் செம்மயா கலாய்ச்சி விட்ருக்கான்..அவன் மேல ஏற்கனவே அம்மா ஒரு கேஸ் போட்ருக்காங்க தெரியுமா..ஒரு தடவ..."

திடீரென எதிர்முனை அமைதியானது. தூரமாய் நாளைந்து பேர் கத்துவது கேட்டது. நான் "ணே..ணே.." வென கத்தினேன். அண்ணன் "திரும்பவும் கூப்பிடுறேன்டா" என சொல்லி கட் செய்தார். கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. ஒரு மணி நேரம் கழிச்சு நானே கூப்பிட்டேன்.

"என்னாச்சுங்க..எதுவும் ப்ரிச்சனையா??"

"ஆமாடா..எம்பையன் லேப்டாப்ப கீழ போட்டுட்டான்..சுக்கு நூறாயிருச்சு..போய் நாலு சாத்து சாத்தினேன்...இத்துனூன்டு இருந்து கிட்டு அவனுக்கு எவ்ளோ கோவம் வருது தெரியுமா... "என் ஃபிரண்டு அபிநயா கூட போன மாசம் லாப்டாப்ப ஒடச்சிட்டா...அவுங்கப்பா அவள ஒன்னுமே சொல்லல தெரியுமா.." ங்கறான்.."

"ஆக்சுவ்லா நீங்க அடிக்க வேண்டியது அபிநயாவோட அப்பனை.. எதுக்கும் அபிநயா எதை எதை ஒடச்சிச்சுனு கேட்டு வச்சிக்கோங்க... நம்ம பைய எதோ லிஸ்ட் வச்சிருக்க மாதிரி தெரியுது..ஹஹஹா .."

"ஒனக்கு நக்கலா இருக்கு..ஹூம்..சரி போனை வைக்குறேன்..உங்கூட பேசிட்டே தான் கேர்லெஸ்ஸா விட்டுட்டேன்னு நம்ம ரெண்டு பேரையும் கேஸ்ல அக்யூஸ்ட்டா சேத்துட்டா எம்பொண்டாட்டி..அதுனால மூடிட்டு போனை வை..அப்புறம் கூப்பிடுறேன்.."