புதன், 18 ஆகஸ்ட், 2010

கவித... கவித...





ஒரு மொழியின் ஆளுமை பெரும்பாலும் கவிதைகளில் தான் வெளிக்கொணரும். அதுவும் அடி,தொடை,அணி,பா போன்றவை பற்றியெல்லாம் கவலைப்படாத புதுக்கவிதைகள் அழகுப்பெண்கள் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி ரசிக்கிறார்கள். எல்லா சாலைகளும் ரோமை அடைகின்றன என்று சொல்வது போல கிட்டத்தட்ட எல்லா கவிதைகளும் காதலுக்காகவே எழுதப்படுகின்றன.அதுவும் காதலியின் கிட்னி தவிர அனைத்தையும் வர்ணிப்பார்கள். நிலவு,வானம்,மேகம்,மின்னல்,பூ,தென்றல் என பெனாத்துவார்கள். ஆனால் சிலவற்றை ரசிக்காமலும் இருக்க முடியாது. எதோ நண்பனின் நோட்டில் படித்ததாய் ஞாபகம்.

ஆம் நிலவு மேடு பள்ளமானது தான்
என்னவள் முகத்தில் முகப்பருக்கள்!!!!

கண்டிப்பாய் இதை சம்பந்தப்பட்ட பெண் கேட்டிருந்தால் வெட்கப்பட்டிருப்பாள். கவிதை தரும் போதையில் இடையிடையே நானும் எழுத முயலுவேன். பன்னிரண்டாம் வகுப்பில் எழுதியதாய் ஞாபகம்.பொதுத்தேர்வில் மட்டமான மதிப்பெண் எடுத்ததால் ஒளித்து வைக்கும்படி ஆகியது.உரைநடையை உடைத்து எழுதி கவிதையாக்குவது இன்னொரு சூத்திரம்.

ஒருமுறை சொன்னதை மறுமுறை சொன்னால்
கவிதையாம்!!!
ஒரு முறை பார்த்தவுடன் மீண்டும் உன்னை பார்க்கத் தோன்றுதே
நீயும் கவிதை தானோ!!!





மறக்காமல் ஆச்சர்யகுறி போட்டு விடுதல் உத்தமம்.இல்லையேல் ஒரு கூட்டம் இதை கவிதை இல்லை என நம்ப மறுக்கும். ஆனால் மெல்லிய சோகங்களையும், தின நிகழ்வுகளையும் கவிதையில் சொல்லுகையில் அந்த பதிவு அழகாகிறது. கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாடி எதோ வார இதழில் படித்தது. ஹைக்கூ வகையிரா. இவ்வளவு குறைவான வார்த்தைகளில் வறுமையை பதிவு செய்ய வாய்ப்பே இல்லை.

வயிறு நிறைந்திருக்கிறது
மூன்று நாளாய் பட்டினி
ஏழை கர்ப்பிணி!!!


எதுகை மோனை தேவை இல்லாமல் அந்த நொடியின் வீரியத்தை பதிவு செய்யும் வல்லமை கவிதைகளுக்கு உண்டு. இதுவும் சில ஆண்டுகளுக்கு முன் எதோ வார இதழில் படித்தாய் ஞாபகம். ஒரு சோகமான நெடும்பயணத்தை இப்படி விவரிக்கிறார்.


அப்பாவின் மரணத்திற்கு ஊருக்கு செல்கிறான்.
பேருந்தில் முழுநீள நகைச்சுவை படம்!!!

இந்த கவிதையின் கனம் அதிகம். பூச்சில்லாத வார்த்தைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.யாராவுது பேனாக்காரர்கள் இதைவைத்து சிறுகதையோ,குறுநாவலோ எழுதி விட முடியும். எளிமையான விவரனை. இந்த கவிதையின் அழகே அந்த 'முழு நீள' என்ற வார்த்தையில் ஒளிந்திருப்பதாய் படுகிறது. அது இல்லாமல் கவிதை படிக்கிற போது அந்த அடர்த்தி இல்லாமல் போவதாய் தோன்றுகிறது. கீழே உள்ள கவிதை ரெண்டு மூன்று வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்தது.அழகான நகைச்சுவை ,கொஞ்சம் எதார்த்தம் கலந்து எழுதி இருக்கிறார். படித்தவுடன் கண்டிப்பாய் 'அட' என மூளைக்குள் ஒரு சத்தம் கேட்கும்.

'இருப்பதிலேயே நல்ல புகைப்படத்தை
பெண் வீட்டிற்கு அனுப்பினேன்.
அவர்கள் வந்ததிலேயே நல்லதை
தேர்வு செய்திருப்பார்கள் போல
பதிலில்லை!!!'




இதோ இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும் இந்நேரம் பெங்களூரில் மழை பெய்து கொண்டிருக்கிறது. எதிர் வீட்டு வாண்டுப்பெண் பால்கனியில் நின்றபடி நனைந்து கொண்டிருக்கிறாள். அவள் அம்மாவின் 'கத்தல்கள்' அவள் காதில் விழவில்லை. ரொம்ப நேரமாய் ஒரு 'சப்பை' கவிதையுடனாவுது முடித்துவிடலாம் என எண்ணி இல்லாத மூளையை கசக்கி கொண்டிருந்தேன். கடைசியில் தோன்றிவிட்டது.

'அவளை நனைத்து விட்டு
இன்னும் அழகாகிறது
மழை!!!'








செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஏழாம் உலகம்/ நான் கடவுள்





வாசிப்பு எப்போதும் சுகந்தமானது. அதுவும் ஜெயமோகன் போன்ற 'எழுத்து அரக்கர்களை' வாசித்தால் ரெண்டு நாள் யாரிடமும் பேசத்தோன்றுவதில்லை. 'நான் கடவுள்' படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. நான்கு முறை பார்த்து முடித்திருந்தேன். நண்பர்கள் சிலர் என் மனநிலையை சந்தேகித்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் படத்தின் முக்கியமான பகுதி ஏழாம் உலகம் நாவலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன். படத்தின் வசனகர்த்தா ஜெ.மோ தான் ஏழாம் உலகத்தின் சிருஷ்டி கர்த்தா என்பதும் தெரிந்தது.மிகச்சமீபத்தில் தான் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரண்டு போனேன்.தமிழில் இப்படிக்கூட எழுத ஆள் இருக்கிறார்களா??

சபிக்கப்பட்டவர்களின் உலகமே இந்த ஏழாம் உலகம் என்பது முன்னுரையிலும்,அட்டை விளம்பரங்களிலும் நமக்கு சொல்லப்பட்டுவிடும். நாம் எல்லா கூட்டங்களிலும்,கோவில்களுக்கு வெளியேயும்,வீதிகளிலும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை தினமும் பார்க்கிறோம். என்றாவுது இவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்?, இவர்களுக்கு காதல் இருக்கிறதா?, குழந்தைகள் உண்டா என்பதெல்லாம் யோசித்ததுண்டா.. இல்லை என்பதே நம்முள் அனேக பேரின் பதிலாய் இருக்கும். இந்த நாவலில் ஜெ.மோ நம்மை இவர்கள்உலகத்துக்கு அழைத்துப்போகிறார்.உண்மையில் இழுத்து போகிறார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நாவலை வாசித்து முடிந்தவுடன் எல்லார்மனதிலும் ஒரு குற்றவுணர்வு வருவதை தடுக்க இயலாது. ஆங்காங்கே சில சித்தாந்தங்களையும் தெளிக்கத் தவரவில்லை ஜெ. நான் கடவுளில் ஒரு காட்சி. அகோரியான ருத்ரன் நள்ளிரவில் கோவிலுக்கு வெளியே நிறைய 'சாமிகளுடன்' கஞ்சா இழுத்து கொண்டிருப்பார். சுருட்டை பற்ற வைக்க ,கோவிலில் உள்ள தீபத்தை உபயோகிக்கப்போவார். ஒரு சாமி ,'அது கோயில் தீபம்' என ருத்ரனைபார்த்துப் பதறுவார். உடனே ருத்ரன் 'தீயில என்னடா நல்லது?? கெட்டது??' என கேட்பான். தியேட்டரில் பலத்த கைதட்டல் இந்த காட்சிக்கு. இப்படி அடர்த்தியான அர்த்தங்களை ஒரே வரியில் சொல்வது அரிது.


படத்திலும் நாவலிலும் சிலாகிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எந்த இடத்திலுமே போதனைகள் இல்லை. புரட்சி வசனங்கள் இல்லை. காட்சிகள் எதார்த்தமாய் அணுகப்படுகிறது. ருத்ரன் என்ற அகோரியை ஏழாம் உலகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டார் பாலா.உண்மையில் இந்த படத்திற்கு பாலாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யமாய் இருந்திருக்கும்.உடல் சவால் நிறைந்தவர்களை படம் முழுக்க நடிக்க வைத்திருப்பதின் பின்னணியில் கண்டிப்பாய் நிறைய உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்றாலே அழகியல் சமாச்சாரங்கள், பதுமை பெண்கள், எழிலான காட்சிகள் என்ற கோட்டை தாண்டி ,ரோட்டில் எதெல்லாம் பார்க்க தயங்குகிறோமோ அதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பூஜா கடைசியில் பேசும் அந்த வசனம் அவ்வளவு கூர்மையாய் இருக்கும். இவ்வளவு நாள் நாம் கட்டி வைத்திருக்கும் நம்பிக்கைகள் எல்லாத்தையும் 'கட்டுடைத்தல்' செய்யும்.இரவில் படம் பார்க்கும் பட்சத்தில் தூங்க நெடு நேரம் ஆகும்.


விந்தணுவில் இருந்து புறப்பட்டு கருமுட்டையில் இணைந்து உருவாகும் 'உயிர்' , யாராய் பிறக்கும்?, யாருக்கு பிறக்கும்? என்பதெல்லாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அப்படி பூமியில் உயிராய் ஜீவிப்போர் கொடூரமான வறுமையிலோ, தாங்கொனா உடல் கோளாறிலோ பிறப்பது யாரின் சித்தம். ரோட்டில் அழுக்கு உடையுடன், பரட்டை தலை, ஒழுகும் மூக்குடன் பிச்சை எடுக்கும் சிறுவன் , ஐஸ்க்ரீம் பார்லர்களில் அமர்ந்து 'Chocobar'களை சுவைக்கும் குழந்தையை ஏக்கமாய் பார்க்கும் காட்சி பெரு நகரங்களில் தினமும்பார்க்கலாம். நாவலில் முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண்ணுக்கு பிரசவ நிகழ்வு தான் முதல் பகுதி. இந்த இடத்திலேயே மிரட்டி விடுகிறார் ஜெ.மோ. ' கதையில் கதா பாத்திரம் பீடி புகைத்தால் அந்த வாடையை வாசகனும் உணரனும்' விளக்கங்கள்,உவமானங்கள் பற்றி ஜெயகாந்தன் ஒருமுறை இப்படி சொன்னார். இங்க நம்ம ஜெ.மோ கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் நம் மூக்கையும் வேலை செய்ய வைக்கிறார். இது பல இடங்களில் நமக்கு அருவருப்பை தருகிறது. உண்மையாய் சொன்னால் 'ஏழாம் உலகம்' என்ற முரட்டு கள்ளில் நிறைய தண்ணீர் ஊற்றியே பாலா கொடுத்திருக்கிறார். உருப்படிகளை வைத்து தொழில் நடத்தும் போத்திபண்டாரம், சித்தர் பாட்டுகளை பாடும் மாங்காண்டி சாமி, குசும்பு பிடித்த குய்யன், எருக்கு, முத்தம்மை என கதா பாத்திரங்களை வைத்து ஏழாம்
உலகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.



எப்போதும் நகைச்சுவையாய் பேசும் குய்யன் கதாபாத்திரம் மறக்க முடியாதது. பழனி அடிவாரத்தில் போத்திபண்டாரம் செய்யும் 'உருப்படி' வியாபாரத்தில் ஒருவன் இந்த குய்யன். இரண்டடியில் கால சூம்பிபோய் இருப்பவன். தன் முதலாளி பெண் கல்யாணத்தில் இலை போட்டு, வெள்ளை சாதம் வைத்து நல்ல குழம்பு ஊற்றி சாப்பிடலாம்.பாயாசம் வேறு கிடைக்கும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.தான் இதுக்கு முன்னாடி ஒருமுறை அப்பிடி சாப்பிட்டு இருப்பதாகவும் சொல்லுவான். கடைசியில் முதலாளி வீட்டு சாப்பாடு கிடைக்காமல் போக, குய்யன் ஏங்கி அழுவான். அவன் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுவது கொஞ்சம் நம்மையும் 'அசைத்து' பார்க்கும்.நமக்கு தினம் கிடைக்கும் சாப்பாடு சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிற உண்மை முகத்தில் 'சடார்' எனஅடிக்கும் இடம் இது.


உண்மைகள் அம்மனமானவை. அவைகள் எப்போதும் நம்மை சங்கடப்படுத்தும்.ஏழாம் உலகம் அதே போன்ற அனுபவத்தை தான் நமக்கு கொடுக்கும். படித்து முடித்தவுடன் 'கரண்ட் பாதி நேரம் இருக்கிறதே இல்லை', 'ஆபீஸ்ல உயிர வாங்குரானுங்க', 'இதே தோசையே எத்தன நாளைக்கு சாப்புடுறது' போன்ற புலம்பல்களை எல்லாம் கண்டிப்பாய் குறைத்துக்கொள்வோம். வானத்தை அன்னாந்து பார்த்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களை ,நமக்கு கீழே நசுங்கிகிடக்கும் உலகத்தை பார்க்க வைக்கிறார்கள்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

நடுநிசி நாய்கள்







'ஹே..உண்மைய சொல்லு .... நீ தான நகட்டுற...'

'உஷா எரும..நீதான் பொய் சொல்ற..நீயே மூவ் பண்ணிட்டு என்னைய சொல்றியா..'

'என்னடி மதி சொல்ற..' எனக் கேட்ட உஷா முகத்தில் வியர்வை துளிகள் படர்ந்திருந்தன. அவர்கள் முன் ஒரு பெரிய அட்டை இருந்தது. அதில் ஆங்கில எழுத்துக்கள், எண்கள் போன்றவை ஒரு வட்டத்திற்குள் எழுதப்பட்டிருந்தன. அந்த அட்டையில் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தில் மதி,உஷா இருவரும் வலது கை ஆள்காட்டி விரலை வைத்துக்கொண்டே எதிரெதிரே அமர்ந்திருக்கிறார்கள். உஷாவும்,மதியும் நாணயத்தையே பார்த்தபடி இருந்தனர்.இருவரும் சகோதரிகள் என பார்த்தவர் சொல்லிவிடும் தோற்றமே பெற்றிருந்தனர். 'ஆவிகளுடன் பேசுவது எப்படி' என்ற திகில் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர். அறையின் அத்தனை ஜன்னல்களும் மூடப்பட்டு இருந்தது. நாம் கேட்கும் கேள்விக்கு ஆவிகள் நாணயத்தை நகர்த்தி கட்டத்தில் உள்ள எழுத்துக்கள் மூலம் பதில் சொல்வது அந்த ஆட்டத்தின் சாராம்சம்.நாணயம் மெல்லமாய் வலப்புரமாய் ஊர்ந்து கொண்டிருந்தது. மதி முகத்தில் பயம் பரவி இருந்தது.

'போடீ..நீ தான் பயமுறுத்துற... நான் வரல..' என சொல்லிக்கொண்டே மதி அறையை விட்டு வெளியே ஓடினாள்.

'நா ஒன்னும் பண்ணலடீ.. 'வழிஅனுப்புதல்' பண்ணனும் மதி.. நில்லுடீ..'

'போடி லூசு'

உஷாவும் கொஞ்சம் பயந்து அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.வீட்டின் முகப்பில் இருந்த கடிகாரத்தில் மணி 7.30 என காட்டிக்கொண்டிருந்தது. அடுப்பறையில் கேட்கும் விசில் சத்தம் தவிர காலை வேளை என்பதற்கான அறிகுறி அந்த வீட்டில் தெரியவில்லை.
கோமதி காபி டம்ளர்களை கையில் வைத்தபடியே அடுப்பறையில் இருந்து வந்தாள். 'காலங்காத்தால பரணி ரூம்ல என்னடி பண்ணிக்கிட்டிருக்கீங்க??' எனகேட்டாள். 'நானும் மதியும் படிச்சிட்டு இருந்தோம்மா' என்றாள் உஷா. மதி கண் சிமிட்டி உஷாவை பார்த்து சிரித்தாள்.

கோமதி ''நீ காலைல உட்காந்து படிச்சேன்னு அந்த ஈஸ்வரன் சொன்னாலும் நா நம்ப மாட்டேன்டீ.. எந்நேரம் பாரு ஒரே டிவி, விளையாட்டு... உங்களை சொல்லி என்ன செய்ய, மூத்தவளே அப்படித்தான் இருக்கா..போய் குளிங்கடீ ஸ்கூல் பஸ் வந்துரப்போகுது...''

மதி சிரித்துக்கொண்டே வந்து அம்மாவை தலையால் முட்டினாள்.கோமதி அவளை விளையாட்டாய் பின்புறம் தட்டினாள். மாடியில் மூத்தவள் பரணியின் அறையில் ஜன்னல் காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்டது. உஷா மேலே ஒருமுறை பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கிக்கொண்டாள். பள்ளிக்கு கிளம்பினாள்.

மாலை பள்ளி முடிந்து அனுவிடம் பேசிக்கொண்டே வந்தாள் உஷா. 'உனக்கு நேத்தே மூனு தடவ சொன்னேன்.. 'வழி அனுப்புதல்' பண்ணலேனா ஆவிகள் போகாது..வீட்டுக்குள்ளேயே தான் இருக்கும்'. உஷாவை பார்த்து அனு ரகசியமான குரலில் சொல்லிக்கொண்டு இருந்தாள். உஷா குழப்பமாய் அவளை பார்த்து ,'அதுக நம்ம வீட்ல இன்னுமும் இருக்கானு நாம எப்டி தெரிஞ்சிக்கிறது' . என்றாள்.



'அதுக இருந்ததுனா நாய்களுக்கு தெரியும். கொலச்சிகிட்டே இருக்கும் விடாம..'

உஷா Tution முடித்து வீடு வந்து சேர மணி இரவு ஏழாகியிருந்தது..மேலே பரணி அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மதி ஹாலில் உட்காந்திருந்தாள். பேப்பரில் பென்சிலை வைத்து எதையோ வரைய முற்பட்டுக்கொண்டிருந்தாள். உஷாவை பார்த்தவுடன் ,'உஷாக்கா.. எப்டி இருக்கு 'யானை' ??' என பேப்பரை திருப்பி காண்பித்தாள்.

'ஓ..இது யானையா ??..எதுக்கும் கீழ யானைனு எழுதீறு...'

உஷாவும் மதியும் கொஞ்ச நேரம் தலை மயிரை பிடித்து சண்டை போட்டனர். டிவி,சாப்பாடு முடித்து விட்டு இருவருக்கும் படுக்கைக்கு செல்ல மணி பத்து ஆகியிருந்தது. மேலே பரணியின் அறையில் விளக்கு அணைந்திருந்தது. 'பரணிக்கு எதோ தலைவலியாம்' என அம்மா சொல்லியிருந்தாள். இருவரும் கொஞ்ச நேரத்திலே தூங்கிப்போயினர்.பக்கத்து வீட்டு நாய் குலைக்கும் சத்தம் கேட்டு உஷா விழித்தாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். நாய் இவர்கள் வீட்டை நோக்கித்தான் குலைத்துக்கொண்டிருந்தது. காலையில் அனு சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது. வேகமாய் திரும்பவும் படுக்கைக்கு வந்து மூஞ்சு வரை பெட்ஷீட்டை மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.அப்போதுதான் அந்த சத்தம் மாடியில் இருந்து வந்தது 'ஆ...' வென காற்றைகிழித்து கொண்டு வந்த அந்த சத்தம் வீடு முழுக்க எதிரொலித்தது..கோமதி எழுந்து விட்டாள். உஷாவும் அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள்.. 'என்னடி..ஆச்சு இவளுக்கு... கண்ட கண்ட கதை புஸ்தகத்த படிக்க வேண்டியது..அப்புறம் கனா கண்டு கத்துறது' என சொல்லிக்கொண்டே மாடியில் இருக்கும் பரணியின் அறை நோக்கி நடந்தாள். உஷாவும் அம்மாவின் பின்னாலேயே நடந்தாள். அவளுக்கு அடி வயிற்றில் பய உருண்டை உருண்டுகொண்டிருந்தது.கதவை திறந்து கோமதி முதலில் அறைக்குள் சென்றாள்.

அறை முழுக்க இருளாய் இருந்தது. 'டக்..டக்' என கட்டிலில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது.கோமதி விளக்கை போட்டாள். பரணி உட்கார்ந்து கொண்டு அந்த கட்டிலில் தலையை முட்டிக்கொண்டு இருந்தாள்.கோமதி மிரண்டு போய் ,'பரணிம்மா..என்னடா ஆச்சு ' என சொல்லிக்கொண்டே அவளருகே போய் கையை பிடித்தாள்.பரணி முகத்தை திருப்பினாள். அவளின் அந்த பெரிய கண்ணில் கருவிழியே தெரியவில்லை.கண் முழுக்க வெள்ளையாய் இருந்தது.வாயின் ஒரு பக்கம் உமிழ் நீர் ஒழுகிகொண்டே இருந்தது. கோமதி பயந்து போய் ரெண்டு அடி பின்னே நகர்ந்து விட்டாள். பின்னாலே பார்த்துக்கொண்டே இருந்த உஷாவும் 'வீல்' என கத்திவிட்டாள். பரணியின் முக்கத்தில் நிறைய 'மூர்க்கம்' தெரிந்தது. அவள் லேசாய் உறுமுவது போல் சத்தம் கேட்டது. நைட்டியில்,தலைவிரி கோலத்துடன் அந்த உருவம் யாரையும் மிரட்டிவிடும் என்றே இருந்தது. 'உஷா பக்கத்துக்கு வீட்ல ராதாக்காவை கூப்டு வா...' என கோமதி உஷாவை பார்த்து கத்தினாள்.

கோமதி பரணியின் அருகே சென்று தலையில் கைவைத்தாள். அவள் அதை பொருட்படுத்தாமல் தலையை வைத்து கட்டிலில் மீண்டும் முட்ட முற்பட்டாள். கோமதிக்கு அழுகை பீறிட்டது. 'இவரு வேற இந்த நேரம் பாத்து ஜெய்ப்பூர்க்கு போய் தொலைஞ்சிட்டார்..'
என புலம்பிக்கொண்டே வாசலை எதிர்பார்த்தாள். பரணி 'உர்..உர்' என இப்போது அதிக சத்தத்துடன் கத்திக்கொண்டிருந்தாள்.தன் கூரிய நகங்களால் அவள் கைகளில் அவளே பரண்டினாள். சுண்ணாம்பு சுவற்றில் நகத்தை வைத்து கீறினாள். கோமதியால் அந்த அசுர பலம்கொண்ட கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லவேளையாய் 'ராதாக்கா' வந்து சேர்ந்தாள். பரணியின் அந்த தோற்றத்தை பார்த்து கொஞ்சம் விக்கித்து நின்றாலும்,சுதாரித்துக்கொண்டு பரணியின் அருகே போனாள். கையில் வைத்திருந்த திருநீறை பரணியின் மேல் எறிந்தாள். உர் என உறுமிய அவளை கன்னத்தில் ரெண்டு முறை பளார் என விளாசினாள் ராதாக்கா. பரணி மயங்கி விழுந்தாள். உஷாவுக்கும் கண்கள் கலங்கியிருந்தது. வேப்பிலை,திருநீர் போன்றவற்றை தண்ணீரில் கலக்கி பரணிக்கு கொடுத்தாள்.

ராதாக்கா கோமதியை பார்த்து 'எதோ கெட்டதுக நடமாட்டமா தெரியுது' எனச்சொன்னாள். வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்தார்கள். வீடு முழுக்க சாம்பிராணி புகை போட்டார்கள். உஷா கவனித்து இருந்தாள். பக்கத்து வீட்டு நாய் இப்போது அமைதி கொண்டிருந்தது. கொஞ்சம் அவளுக்கு நிம்மதியாய் இருந்தது. பரணி லேசாய் முழித்தாள். கண்கள் பழைய நிலைக்கு வந்திருந்தன. ஒரு முறை எல்லாரையும் பார்த்து விட்டு 'ரொம்ப Tiredஆ இருக்கும்மா' எனச்சொல்லிவிட்டு தூங்கிப்போனாள். அன்று இரவு எல்லாரும் ஹாலிலேயே படுத்துக்கொண்டார்கள். உஷாவுக்கும் கோமதிக்கும் நடுவே பரணி படுத்திருந்தாள். மதி கைசூப்பிக்கொண்டே கோமதியை கட்டிக்கொண்டு தூங்கினாள். ' நாளைக்கு முதல் வேளையாய் யாருக்கும் தெரியாம..அந்த 'வழி அனுப்புதல்' ஸ்லோகத்தை சொல்லி அந்த அட்டையை தூக்கி எரிந்திடனும்' என உஷா எண்ணிக்கொண்டாள். எல்லாரும் தூங்கிபோனார்கள். மணி ரெண்டு ஆகியிருந்தது.

பக்கத்துக்கு வீட்டு நாய் மீண்டும் முழு வீரியத்துடன் குலைக்கும் சத்தம் கேட்டது. உஷா விழித்து விட்டாள். உடல் அவளுக்கு நடுங்க தொடங்கியது. மெல்லமாய் இடது பக்கம் திரும்பி பரணியை பார்த்தாள். அவள் முழித்து இருந்தாள். அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.

****************************************************************************************
திகில்,அமானுஷ்ய பிரியர்களுக்கு கதை இத்துடன் முடிந்து விட்டது. மற்றவர்களுக்கு இன்னும் ரெண்டு வரி பாக்கி இருக்கிறது.தொடருங்கள்.

********************************************************************************************


அவளின் அந்த முட்டை கண்கள் மேலே விட்டத்தை பார்த்த படி இருந்தது.உதடு லேசாய் சிரிப்பது போல் இருந்தது. உஷா பெட்ஷீட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.பலமாய் அடித்த காற்றில் காலண்டரில் நேற்றைய தேதி ஆடிக்கொண்டே இருந்தது. மார்ச் 31.












வியாழன், 22 ஜூலை, 2010

தமிழர்க்கோர் கடிதம்


நேற்று மாலை பொழுதுபோகலையேனு மாடிப்பக்கம் போனேன். லேசான தூறல்,குளிரிந்த காற்று, வானம் கொஞ்சம் உறுமிக்கொண்டு வேறு இருந்தது..அப்போது தான் மேலே அதை பார்த்தேன்.முதலில் பறவை என்று தான் நினைத்தேன். தாழ்வாக கீழே என்னை நோக்கி பறந்து வரவும் தான் காகிதம் என்று தெரிந்ததது. கையில் அந்த காகிதம் வந்து அகஸ்மாத்தாய் படர்ந்தது. அக்கம்பக்கம் பார்த்தேன் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அது ஒரு கடிதம். படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள தமிழர்க்கு,

வணக்கம். நலமாய் உள்ளீரா?? தமிழ் செம்மொழியானதை ஒட்டி மகிழ்ச்சியில் திளைத்து போயிருப்பீர்கள். அதுவும் செம்மொழி மாநாடெல்லாம் நடத்தி முடித்து ,ஒரு வார விடுப்பெல்லாம் பெற்று கொஞ்சம் களைத்தும் போயிருப்பீர்கள்.பக்கத்து தீவில் இதே செம்மொழியை பேசுவோர் கருவறுக்க பட்டார்களே?? எனக்கேட்டால் ,'அரசியல் பேசாதீர்' என்பீர்கள். உங்களை பொருத்தவரை செய்திதாள்களில் பிணக்குவியல்களை பார்த்து 'உச்' கொட்டுவதே உச்சகட்ட மனிதாபிமானம். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்... உங்களுக்கு நித்யானந்தரை திட்டவும்,நயன்தாராவின் காதலை பற்றி பேசவுமே நேரம் சரியாய் இருக்கிறது. அதுவம் உங்க நேரமின்மை காரணமாக ஒட்டுச்சாவடிக்கு உங்களை வரவைக்க கட்சிகள் கூட 'ஆயிரங்களை' தள்ள வேண்டியிருக்கிறது.



தெருவில் காய்கறிகாரனிடம் உயிரைக்கொடுத்து பேரம் பேசுவீர்கள். ஆனால் 'Multiplex'களில் ஒரு சமோசாவை நூறு ரூபாய்க்கு பெருமையாய் வாங்கி சாப்பிடுவீர்கள். பாரதியார் பாடல்களை பரீட்சைகளில் மதிப்பெண் பெறவும்,மேடைகளில் பேசும்போதும் உபயோகப்படுத்துவீர்கள்.வள்ளுவருக்கு சிலை வைப்பீர்கள். குஷ்புவுக்கு கோயிலே கட்டுவீர்கள். தமிழில் 'ழ'கரத்தை தப்பாக உச்சரித்து பெருமையாய் சிரிப்பீர்கள்,எவராவுது ஆங்கிலத்தில் is,was களில் சொதப்பினால் 'பட்டிக்காட்டான்' என்று கேலி பேசுவீர்கள். இந்தியா ஒலிம்பிக்கில் ஆப்பு வாங்குவதை பார்த்து கோபப்படுவீர்கள்.ஆனால் உங்கள் பிள்ளைகளை 'விளையாட போன காலை உடைச்சிருவேன்' னு அதட்டுவீர்கள்.உங்கள் வீட்டுக்குழாய்களில் தண்ணீர் வரலேனாலும் எல்லாம் இந்த 'I.T'னால் தான் என குறைப்பட்டுக்கொல்வீர்கள்.தெருவிளக்கு நின்று போனால் கூட போய் புகார் செய்யமாட்டீர்கள்,ஆனால் தி.மு.க வும் அ.தி.மு.க வும் நாட்டை சீரழித்து விட்டதாக வாய் கிழிய பேசுவீர்கள். கடவுளே உங்கள் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்க ஜாதிக்காரருக்குத்தான் தான் ஓட்டுபோடுவீர்கள்.

'சுறா'களையும்,'அசல்'களையும் கேலி செய்து குறுஞ்செய்திகளும்,மின்னஞ்சல்களும் அனுப்புவீர்கள். 'அப்போ ஏம்பா 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அன்பே சிவம்' லாம் ஓடல' னு கேட்டா பதில் சொல்ல மாட்டீர்கள். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் 'Vuvuzela' என்ற வாத்திய கருவி காதுகளுக்கு எரிச்சல் தருவதாய் உலகமே கொக்கரித்தது.அது எங்கள் பாரம்பரியம் அதை தடை செய்ய முடியாது என ஆப்பிரிக்கர்கள் உறுதியாய் நின்றார்கள். கடைசியில் உலகம் முழுக்க அந்த வாத்தியம் பிரபலமானது தனிக்கதை. ஆனால் நீங்களோ உங்களின் வேட்டி,சேலை,மண் குவளைகள்,சிலம்பாட்டம்,நாட்டுப்புற பாட்டுக்கள்,சிற்பங்கள் என எல்லாத்திற்கும் இறுதி அஞ்சலி செலுத்தி நிறைய நாட்கள் ஆகிறது.

உங்கள் பிள்ளைகளை அடுத்த வீட்டு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கொண்டே இருப்பீர்கள். இளநீர் உங்கள் தொண்டைகளில் இறங்குவதில்லை,கோக்களும் பெப்சிகளும் பெருமை பொங்க பருகுவீர்கள். பொழுது போகாத போது யாருக்காவுது 'டாக்டர்' பட்டம் கொடுப்பீர்கள்.கண்ணகி சிலையை வைத்து கபடி விளையாடுவீர்கள். யார் 'எதுகை.மோனையில்' பேசினாலும் கை தட்டுவீர்கள். உங்களில் பாதி பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே தெரியாது.வந்தாரை வாழ வைப்பீர்கள்,இங்கேயே இருப்பவர்களுக்கு ஆப்பு வைப்பீர்கள். யாராவுது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பட்சத்திலாவுது புறநானூற்றையும்,தொல்காப்பியத்தையும் படித்து உங்கள் வரலாற்றையும்,பண்பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கடிதம் படித்து முடித்தவுடன் எனக்கு கோபம் தலைக்கேறியது.நரம்பு புடைத்தது.கண்கள் சிவந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் 'தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்' தொலைகாட்சியில் நடந்து கொண்டிருந்ததால் வீட்டை நோக்கி ஓடினேன்.







சனி, 26 ஜூன், 2010

அனத்தல்கள்


மொட்டைமாடி நட்சத்திரத்தை
எண்ணும் போது
கணித பயம் வருவதில்லை!!






இவ்வளவு இறுக்கமாய் உடை அணிகிறார்கள்
எத்துனை புழுக்கம் எங்களுக்கு !!!




பெயர் முதற்கொண்டு தயார்
இன்னும் பிறக்காத என் மகளுக்கு !!!



சிலருக்கு பெரிய ஹோண்டா கார்
சிலருக்கு அழகான காதலி
சிலருக்கு அடுத்த வேலை சோறு ..

தேவைகளிலும் எவ்வளவு பேதம் நம்முள் !!!




கடையில் அவ்வளவு நஷ்டம்
இருந்தும் சிரிக்கிறது
ஜவுளி கடை பொம்மை !!!





பீச்சில் சிலர் காதலிக்கிறார்கள்
குழந்தைகள் மணல் வீடு கட்டுகிறார்கள்
இரண்டுக்கும் பெரிதாய் வித்யாசம் இல்லை...





வெள்ளி, 11 ஜூன், 2010

Corporate திருவிளையாடல் (பகுதி 2)


நட்டுவிற்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. பெரியவர் கொடுத்த ‘Code’ அவனுடைய ‘Pen Drive’ இல் இருந்தது. மீண்டும் ஒருமுறை அதை ‘Run’ பண்ணி பார்த்துக்கொண்டான். எல்லாமே சரியாய் இருப்பதுபோல் பட்டது. அவனே ‘Develop’ செய்தது போல் கையை மடக்கி ‘Yes’ என சொல்லிக்கொண்டான். ‘அவருக்கு எப்படி அவனுடைய ‘Project’ விஷயங்கள் தெரிந்தன?? எப்படி இவ்வளவு சீக்கிரம் தவறுகளை சரி செய்ய முடிந்தது??’ போன்ற நியாயமான கேள்விகள் நட்டுவிடம் தோன்றவில்லை. நட்டு அதே சம்பளத்தையே மூன்று வருடமாய் வாங்கிக் கொண்டிருப்பதிற்கு இதுவும் கூட காரணமாய் இருக்கலாம்.

குமாரிடம் சொல்லவேண்டாம் என முடிவு செய்து,அடுத்த நாள் மதிய வேளையில் ‘Project Manager’ ஷியாமிடம் சென்றான்.

‘வாயா.. நட்ஸ்... என்ன தனியா வந்திருக்கியே...எப்பவுமே உங்கூடவே சுத்துற ‘வேதாளம்’ வரலயா?? ‘


நட்டுவிற்கு எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.


‘இல்ல ஷியாம்... வந்து நா அந்த Java Module ஐ சரி பண்ணிட்டேன்..அத உங்க கிட்ட சொல்லலாம்னு.......’


‘ A.C ல ரொம்ப சத்தம் வருதில்ல....இப்போ கூட பாரு நீ எதோ சொல்ற..என்காதுல ‘Java Module’ ஐ சரி பண்ணிட்டேன்னு விழுகுது....’

நட்டு கொஞ்சம் கடுப்பானான்.

‘அலோ ஷியாம்... நான் அதை சரி பண்ணிட்டேன்.... வேணும்னா செக் பண்ணி பாருங்க..’

ஷியாமும் கொஞ்சம் சீரியஸ் ஆனார். ‘நட்டு Calm down. relax. ஒரு தடவ நீ எழுதின Code ஐ நாம Server ல போட்டப்போ , ‘குப்பை கூளங்களை உள்ளே போடாதீர்’ னு Message வந்துச்சே அது ஞாபகம் இருக்கா?’ என கேட்டு மெலிதாய் சிரித்தார்.

அது ஆயிரந்தா உண்மையாய் இருந்தாலும் நட்டுவிற்கு கோபம் வரத்தான் செய்தது.அந்த இடத்திலிருந்து கிளம்ப எத்தனித்தான். ஷியாம் அவன் தோளை பிடித்தார்.

‘இருய்யா கோவிக்காதே... சரி உன்னோட ‘Code’ ஐ ஓட்டு.... பாப்போம்.’
என நக்கலாய் சொல்லி கண்ணடித்தார்.
நட்டு தன்னுடைய ‘Code’ ஐ ‘Execute’ செய்தான். எல்லாமே சரியாய் இருந்தது. Result அசுரத்தனமாய் படு வேகமாய் வந்தது. ஷியாம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தார்.கண்ணாடியை வேறு கழற்றினார். ஆச்சர்யத்தை வெளிப்படுத்த தமிழகத்தில் பின்பற்றப்படும் பாரம்பர்ய முறை அதுதானே!!!

‘ ஹே... நட்ராஜ்... என்னய்யா இது....எப்டி பண்ண...’ என கேட்டுக்கொண்டே நட்டுவை கட்டிப்பிடித்தார்.விஷயம் அரைமணிநேரத்தில் அலுவலகம் முழுவதும் பரவியது. எல்லோரும் சொல்லிவைத்தார் போல் ‘நம்ம நட்டு வா ??’ என கேட்டுகொண்டார்கள்.

அதுவரை அவனிடம் பேசியே இருக்காத சுனிதா வந்தாள். ‘நட்ஸ்...கிரேட்..Office முழுக்க உன் பேச்சு தான்...ஆமா எதை Use பண்ணின...Servletடா... Strutsஸா?? என்றாள்

‘Keyboard’ என்றான்.
‘You Naughty!!!..’ என சொல்லி அவன் தலையை குலைத்து விட்டு சென்றாள்.

நட்டுவிற்கு எல்லாம் கனவு போல் தெரிந்தது. எல்லாம் சரியாய் நடந்தால் குலதெய்வம் கோவிலில் மொட்டயடிப்பதாய் வேண்டிக்கொண்டான். விஷயம் கேள்விப்பட்டு குமார் கூட வந்தான்.

‘ மச்சி..நேத்து வரைக்கும் நல்லா தானே இருந்த?? எதுவும் ஆவி கீவி உனக்குள்ள இறங்கிருச்சா??’


நட்டு புன்னகைத்தான். அதற்குள்ளாகவே நட்டுவை ஷியாம் கூப்பிட்டனுப்ப... அவன் Meeting Hall போனான்.

‘நட்ஸ்..Congrats.. எல்லாரும் உங்க Codeஐ பாத்து இம்ப்ரெஸ் ஆகிட்டாங்க...நம்ம mangement இப்பவே உங்களுக்கு Compliment கொடுக்கணும்னு முடிவு பண்ணி...’ என சொல்லிக்கொண்டே டேபிளில் இருந்த கவரை எடுத்தார்.

நட்டுவின் காதில் PULSAR சத்தம் கேட்டது.

‘ஒரு நிமிஷம்..’ என ஒரு கரகரப்பான குரல் கேட்டது.
வெங்கி நின்று கொண்டிருந்தான்.அந்த டீமின் ஆஸ்தான ‘டெஸ்டர்’.

‘நா அந்த Code ஐ டெஸ்ட் பண்ணனும்.’ என்றான்.

‘அதுவும் சரி தான்..வெங்கி நீயும் ஒரு தடவ பாத்திரு...ஆனா எல்லாம் பக்கவா தான் இருக்கு...’ என சொன்னார் ஷியாம்.

அந்த Code ஐ ஆராய்ந்தான் வெங்கி. நட்டுவின் அடி வயிற்றில் IPL நடந்துகொண்டிருந்தது.

‘இதுல ஒரு தப்பு இருக்கு ‘ என உரக்க சொன்னான் வெங்கி. நட்டுவிற்கு வியர்க்க தொடங்கியது.
‘ இந்த Window வை close பண்ணினா உடனே க்ளோஸ் ஆகுது... க்ளோஸ் பண்ணவா வேணாமானு ஒரு Message box வரணுமே’ என்றான்

நட்டு வெறுப்பாகி ,’ஏங்க.. விட்டா காபி வேணுமா.. டீ வேணுமான்னு கேக்க சொல்வீங்க போல... எவ்ளோ BUG இருக்கோ அவ்வளவு குறைச்சிட்டு மிச்ச காச கொடுங்க பாஸ்...’ என்றான்

‘This is not the place to crack stupid jokes...’ என கோபமாய் சொன்னான் வெங்கி. அந்த இடமே கலேபரமானது.

‘அந்த ‘Code’ ஐ அவர்கிட்ட கொடுத்தவனே நான் தான் ‘ என சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் சுந்தராஜன். எல்லோரும் எழுந்தார்கள்.அவர் தான் அந்த Corporate அலுவலகத்தின் CEO. நட்டுவிற்கு Code கொடுத்தவரும் இவரே. கதையில் இப்படி ஒரு ‘Twist’ஐ நட்டுவும் எதிர்பார்க்கவில்லை.

கொஞ்ச நேரம் அந்த அறையை அமைதி ‘Occupy’ செய்தது.
‘CEO வே கொடுத்தாலும் Codeஇல் இருக்கும் குற்றம் குற்றமே!!!’ என்றான் வெங்கி.

‘ அதெல்லாம் இருக்கட்டும் வெங்கி... நீங்க இன்ஜினியரிங் முடிச்சே ரெண்டு வருஷந்தான் ஆகுது...ஆனா நாலு வருஷம் ‘Experience’ னு காமிச்சு நம்ம ஆபிஸ்ல வேலைக்கு சேந்திருகீங்க...அந்த ‘குற்றத்தை’ நேத்து தான் கண்டுபிடிச்சோம். நாளைல இருந்து ஆபிஸ் பக்கம் வந்தீங்கனா உங்க காதை கடிச்சு துப்பிருவேன்...’ என சுந்தராஜன் சொன்னார்.

வெங்கி அதிர்ச்சியில் உறைந்தான்.ஷியாம் தன பங்கிற்கு எதாவுது பேச வேண்டுமென்று எண்ணி ஆரம்பித்தார்.

‘ கிரேட் சார் நீங்க.... யாராலையுமே சரி செய்ய முடியாத Codeஐ நீங்க எப்டி சரி பண்ணீங்க சார் ‘
சுந்தராஜன் குமுற தொடங்கினார்.

‘ Mr.Shyam எதாவுது அசிங்கமா சொல்லிறபோறேன். அந்த Code மேலே ‘முருகன் துணை’ னு எவனோ அடிச்சிருக்கான்... அத எடுத்து விட்டுட்டு ‘Run’ பண்ணினா சரியா வொர்க் ஆச்சு... இது தெரியாம இங்க இவ்வளவு நாளா எண்ணத்தையா ‘PLUCK’ பண்ணிட்டு இருந்தீங்க.... இந்த லட்சணத்துல ‘Appraisal’ கம்மினு பகுமானம் வேற...தூ...’

பேசிவிட்டு சுந்தராஜன் மும்பை ஆபிஸ்க்கு சென்று விட்டார்.

அடுத்த நாள் காலையில் ஷ்யாம் டீம் மீட்டிங்கில் பேசி கொண்டிருந்தார். ‘Guys we have sucessfully crossed our hurdles in our last project. we will be facing new challenges in the upcoming project...’

அந்த அலுவலகம் அடுத்த திருவிளையாடலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது!!!!



************************







புதன், 9 ஜூன், 2010

Corporate திருவிளையாடல் (பகுதி 1)











நிறைய பயணங்கள், இடைவிடாத அலுவல்(நம்புங்க..) கூடவே சோம்பேறித்தனமும் சேர்ந்துகிட்டதால எழுத முடியாம போச்சு.உன்னோட 'Blog' நூலாம்படை அடஞ்சிருச்சுனு சில விசமிகள் கேலி செஞ்சதால இந்த பதிவு எழுதி 're entry' கொடுக்கிறேன். நீங்க சந்தோசமோ/வருத்தமோ பட்டுக்கோங்க!!! Let me attack!!!!


எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் மாதத்தின் கடைசி தேதிகளில் வரண்டு கிடக்கும் 'Corporate' கனவான்களுக்கு இந்த புனைவு சமர்ப்பணம் .


Corporate திருவிளையாடல்(பகுதி 1)

அலுவலகம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது. எல்லோரும் கணினியை முறைத்துக்கொண்டிருந்தார்கள். வேகமாய் தன் இடத்திலிருந்து எழுந்து குமாரின் இடத்திற்கு போனான் நட்டு (எ) நடராஜ்.

'
டேய் குமாரு ..ஏதோ டீம் மீட்டிங்னு மெயில் வந்துச்சு பாத்தியா... என்னா விஷயம் டா... '


' ஒரு விசயமும் இருக்காது டா நட்டு... என்ன பெருசா சொல்லுவாங்க ... ' இது வரைக்கும் நாம புடிங்கின ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி ,இனிமேவாவுது ஒழுங்கா வேலை பாப்போம்' னு சொல்லுவாய்ங்க. கண்டபடி அரைமணி நேரம் திட்டிட்டு, கடைசியா 'Thanks for the Cooperation' னு சொல்லி முடிச்சிடுவானுங்க. இதுக்கு ஏன் பயந்து சாகுறே??... சரி வா மீட்டிங்குக்கு போவோம்..'


எல்லோரும் அந்த அறையில் குழுமி இருந்தார்கள். நட்டுவும் குமாரும் வழக்கம்போல பின்னால் நின்று கொண்டார்கள். Project Manager ஷியாம் உள்ளே நுழைந்தார். பேண்டை ஒரு முறை தூக்கிவிட்டுக்கொண்டு பேச தொடங்கினார்.


' உங்களுக்கே தெரியும் இப்போ நம்ம ப்ராஜெக்ட் 'Critical' போய்ட்டு இருக்கு....'

'
அது என்னைக்கு நார்மலா போச்சு' என குமார் தாழ்ந்த குரலில் நட்டுவின் காதில் சொன்னான். நட்டு சோடா உடைக்கும் சத்தத்தில் சிரித்தான். சிலர் திரும்பி பார்த்தார்கள். ஷியாம் தொடர்ந்து பேசினார்.

'அதுனால அந்த 'Java' Module லில் உள்ள பிரிச்சனைய 'Solve' பண்றவுங்களுக்கு ஒரு லட்ச ரூபா bonus னு management ல சொல்லிட்டாங்க.. so அது சம்பந்தமான விசயங்கள உங்களுக்கு மெயில் பண்றேன். Guys All the Best....'


கொஞ்ச நேரம் அந்த அறையில் சிறு சலனம் நிலவியது. எல்லோரும் பிற்பாடு கலைந்து அவரவர் இடம் போய் சேர்ந்தனர்.நட்டு இன்னும் வாயை மூடாமல் இருந்தான். நட்டுவும்,குமாரும் கேன்டீன் போனார்கள்.


‘ என்னடா நட்டு ..வர வர ஐ.டீ கம்பெனிலாம் நாடக கம்பெனி யா மாறிட்டானுங்களா.. பரிசுத்தொகைலாம் அறிவிக்குறாயிங்க...’


‘ டேய் மச்சி... ஒரு லட்ச ரூபா டா... கிடைச்சா ஒரு ‘PULSAR’ வாங்கிடலாம் டா...’


‘அதுக்கு நெறைய நாள் பெட்ரோலும் போடலாம் டா நட்டு...’


நட்டுவுக்கு ஒரு லட்ச ரூபாய் மூளையை ஆக்கிரமிச்சிருந்தது. வாய்குள்ளேயே ஏதோ முனங்கிகொண்டிருந்தான்.கொஞ்சம் தயக்கத்துடன் குமாரிடம் பேசத்தொடங்கினான்.


‘குமாரு..நா அந்த Java Module try பண்ணலாம்னு நெனைக்குறேன்’

‘ ஹஹஹஹா...மச்சி நீ Java ‘Hello world’ program எழுதினாலே அதுல நூறு தப்பு வரும்...ஏன்டா இப்படி காமடி பண்ற...நாமெல்லாம் இன்னும் ஆபிஸ்ல வேலை பாக்குறதே அந்த ஆண்டவன் புண்ணியம் டா...’


‘ வேணும்னா கொஞ்சம் படிச்சு....’ என நட்டு இழுத்தான்.


‘ம்கும்... இதுக்கு மேலே நீ படிச்சு அந்த code ஐ திருத்திறதெல்லாம் கலைஞர் 100 மீட்டர் ரேஸ்ல ஓடி ஜெயக்கிற மாறி..அத மறந்திடு...


அதுமட்டுமில்லாம அந்த சுரேஷ்லாம் நூறு ரூபா கொடுத்தாலே மூனு நாள் கண் முழிச்சு வேல பாப்பான்..ஒரு லட்சம்னா விடுவானா??...’


குமாருக்கு எதோ போன் கால் வர ஓரமாய் எழுந்து கரை ஒதுங்கினான். நட்டு கையை தலையில் வைத்து தனியாய் உட்காந்து கொண்டான். அந்த நேரம் பார்த்து ஒரு அம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் அங்கு பிரசன்னமானார். ரொம்பவும் அழகாய் உடை அணிந்திருந்தார்.நட்டுவிடம் அவரே பேச தொடங்கினார்.

‘ தம்பி நீங்க பேசிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்’ என்றார் அவர்.

நட்டு கொஞ்சம் ஆச்சர்யமாய் அவரை பார்த்துவிட்டு ,’யார் சார் நீங்க ஒட்டுக்கேட்டதை இவ்வளவு பெருமையா சொல்றீங்க?’

அவர் லேசாய் சிரித்தார். மீசையை ஒருவாறு தடவிக்கொண்டு ‘உனக்கு அந்த ஜாவா ‘Code’ தானே வேணும்!!!’ என்றார்.

நட்டு இன்னும் கொஞ்சம் ஆச்சர்யமாகி ,’ ஆள் பார்க்க எதோ ஜவுளி கடை ஓனர் மாறி இருக்கீங்க... ஜாவா..கீவா னு பேசி என்னையே டபாய்க்ரீங்களா... ‘


பெரியவர் முகம் கொஞ்சம் சிவந்தது. ‘ டேய் தம்பி... நீ பிறக்கிறதுக்கு முன்னாடியே கம்ப்யூட்டர்ல ‘Code’ அடிச்சவன் நான்.. வேணும்னா எதோவுது கேள்வி கேட்டுப்பாரு...’ என்றார்.

‘சவுண்ட ஏத்துனா பயந்திடுவோமா... பாஸ் அப்டி சொன்னா கேள்வி கேக்கமாட்டோம்னு நெனச்சீங்களா... ‘ என சொல்லிக்கொண்டே நட்டு கேள்விகளை அடுக்க தயாரானான். பெரியவரும் ஆவலாய் எதிர்நோக்கினார். அங்கே ஒரு ‘அறிவுப்போர்’ தொடங்கியது.

‘ Apraisal Meeting’ என்பது??

தனியாய் பொய் சொல்வது ‘

‘Conference call’ என்பது??

கூட்டமாய் பொய் சொல்வது’

‘Recession’ வந்தால்??

‘ பாதி பேருக்கு வேலையில்லை’

‘Google’ இல்லையேல்??

‘ மீதி பேருக்கும் வேலையில்லை’






கொஞ்சம் மிரண்டு போய் அந்த பெரியவரை பார்த்துவிட்டு மீண்டும் கேள்விக்கணையை தொடர்ந்தான்.

‘ ‘Tester’ என்பவன்?? ‘

‘ ‘பேனை பெருமாளா’க்குபவன் ‘

‘ ‘Developer’ என்பவன்??

‘ ‘பெருமாளையே பேன் ஆக்குபவன்’


‘K.T’ என்பது ??

‘ ‘தனக்கு தெரியாததை ஊருக்கு தெரியப்படுத்துவது’ ‘



‘பிரிக்கமுடியாதது’ ‘

‘Client’ டும்... ‘Escalation’ னும்

‘சேர முடியாதது?’ ‘

‘ நல்லசம்பளமும்... நாமும் ‘



‘முதல் தேதில?? ‘

‘ பல்லை காட்டு ..



‘கடைசி தேதினா??’

‘ கையை நீட்டு ‘


‘ஐயோ தெய்வமே... நீங்க ஐ.டீ Encyclopedia... உங்களோட ‘Code’ ஐ கொண்டுபோய் கொடுக்கிறேன்... வர்ற ஒரு லட்ச ரூபால பதினஞ்சாயிரம் மட்டும் எனக்கு கொடுங்க போதும்....’ என கண்கலங்கினான் நட்டு.


‘ ‘எல்லா பணமும் உனக்கு தான்..சந்தோசமாய் இரு..’ என்றார்.


‘நெஜமாவா சொல்றீங்க... அப்டி மட்டும் நடந்து நான் பல்சர் வாங்கினா அதுக்கு உங்க பேரை வைக்குறேன் சார்...’ என்றான் நட்டு.


சொல்லிவிட்டு நட்டு சந்தோசமாய் சிரித்தான். அவன் சிரிப்பு நிறைய நேரம் நீடிக்கவில்லை!!!!



தொடரும்!!!! (அடுத்த பகுதியில் முற்றும்!!!)