வெள்ளி, 22 ஜூலை, 2011

சொப்பன சுந்தரி (கவிதை(யாம்))



                                     

                                

 அன்றும் தற்காலிகச் சாவு வர  
          பன்னிரெண்டாகிவிட்டது..
 இமைகளுக்கும் விழிகளுக்கும் 
       இடைவெளியே இல்லை..

 அத்துனை புலன்களும் நிம்மதியாய் 
                   ஓய்வெடுக்க 
 நாசி மட்டும் கோபத்தில் 
        பெருமூச்சி விட்டுக்கொண்டிருந்தது.
 தூக்கம் என்னைத்தழுவ மீண்டும் 
     நான் தூக்கத்தைத் தழுவினேன்.


விளம்பரமேதும் போடாமல் 
  தரச்சான்று காட்டாமல்  
   யாருக்கும் நன்றி கூட சொல்லாமல் 
   ஒரு கனவுக்காட்சி ஆரம்பமானது.


கன்னிகை ஒருத்தி வந்து 
  புன்னகை பூத்தாள்.
கருத்த கானகம் போல் 
        தலைமயிர் 
எதிராளி இதயத்தை 
   ஊடுருவும் கண்கள்..


பாந்தமான மூக்கு 
 அழகாய் படர்ந்த காதுகள்...
தாமரையே தோல்வியை 
 ஒப்புக்கொள்ளும் இதழ்கள்..
வித்தகன் செதுக்கியது 
        போல் கழுத்து...


கீழ்கொண்டு சொன்னால் என்னை 
   கீழானவன் என்பீர் என்பதால் 
விவரனை விடுத்து 
   விஷயத்தை மேற்கொண்டு சொல்கிறேன்.


அந்த பேரழகி வந்து 
  தன் பிஞ்சிக்கரம் நீட்டி 
   "காதல் கொள்வாயா??" என்றாள்.

சொக்கியிருந்த நான் 
      சுதாரித்தேன்.
கோபம் வந்ததெனக்கு 
  கொடுஞ்சொல் செலவிட்டேன்.

"ம்..காதல் கொல்வேன்" என்றேன் 





அவள் "ல"கரம் தெரியாதவள் போல ...  
  தன் லாவண்யத்தை தொடர்கிறாள்.
"இத்தனை அழகை ஆள 
         ஆசையில்லையா??" என கொஞ்சினாள்.

அவள் சற்று உயரமானவள் 
  அவளை விட உயரம் அவள் கர்வம்.

நான் சிரித்தேன். பின் சொன்னேன்.
 "மன்னிக்கவும்.தற்சமயம்
      ஆட்சியமைக்க எண்ணமில்லை"

"ஏன்??"-- அவள் உதட்டை பிதுக்கி 
  கேள்விக்குறி ஆக்குகிறாள்.
"என் பொருளாதாரம் உன் இடை 
  போல மெலிந்தே இருக்கிறது..." விளக்கினேன்.

"பரவாயில்லை". அடம்பிடிக்கிறாள்.


"என்னவள் ஆனால் நீ 
  தங்கத்தை விளம்பரத்தில் தான் பார்ப்பாய்" என்றேன்.

"சொகமான வாழ்க்கைக்கு சொர்ணம் பொருட்டா??" என்கிறாள் 

கேள்வியில் பதிலை 
 சொல்ல முயல்கிறாளாம்.


தங்கத்தை புறக்கணிக்கும் பெண்ணா??
 செவ்வாயில் பிறந்தவளோ??..
ஆச்சர்யத்தில் அவளை பார்த்தேன் 
  இன்னுமும் அழகாய்த்தெரிகிறாள்.


"நிலபுலன்கள்..." என தொடரப்போனேன் 

"தோளில் சாய்ந்து கொள்கிறேன்" என 
  சொல்லி சொன்னதை செய்தாள்.

பெண்ணின் ஸ்பரிசம்
  போதைகளின் அரசி. 
 தெரிந்தும் மீள முயலவில்லை.


பின் குழந்தைகள் பெற்றோம் 
 பெயரிட்டோம்.செலவிட்டோம்.
இருந்த காசில் 
  எங்கள் உலகம் வாங்கினோம்.


பல நேரங்களில் உதடுகளின் வேலையை 
          கண்களே செய்கிறது.
எங்களுக்கு அழுகையென்ற உணர்ச்சி 
        இருப்பதே தெரியவில்லை.


கவிதையாய் வாழ்கிறோம்.
  கணங்கள் உறைகின்றன.....


ஏதோ சத்தம் கேட்டு 
   உயிர் பெற்று உலகுக்கு திரும்பினேன்.
அலைப்பேசி தும்மி இருக்கிறது.
  எடுத்துப்பார்த்தேன். குறுஞ்செய்தி.


"Fool..kirukkaa..loosu...
   itz 10..im already in PVR"

சுந்தரிகள் கனவில் 
 மட்டுமே சுந்தரமாய் வருகிறார்கள்.....



செவ்வாய், 19 ஜூலை, 2011

கேள்வி பதில் (பகுதி 2)


                                                                    


"யாரு பராக்கா..சொல்லுங்க ரொம்ப நாளா Phone பண்ணவே இல்ல..மிச்சல் சௌக்கியமா...ஒயிட் ஹவுஸ் மழை பெஞ்சா ஒழுகுதுனு சொன்னீங்களே சரி பண்ணிடீங்களா??"


" "




"ம்..நா நல்லா இருக்கேன்...வேறென்ன விசேசம்.."




" "


"என்னது..நம்ம ப்ளாக்ல வர்ற கேள்வி பதில ஒங்க ஊர் பாடதிட்டத்துல சேக்கனுமா..அங்கெல்லாம் சமச்சீர் கல்வி கெடையாதா..."




"  "


"ஓ அப்டியா..இருங்க எதுக்கும் நா நம்ம மன்மோகன்ட்ட கேட்டு சொல்றேன்..."




" "


"இல்ல இல்ல ..அவர் பார்லிமென்ட்ல தான் பேச மாட்டாரு ..என்கூடலாம் நல்லா பேசுவாரு..தங்கமான ஆளுங்க..."


***********************************************************************************


மேற்கொண்டு எதுவும் பேசத்தேவையில்லை. நேரா கேள்வி பதிலுக்கு போயிருவோம்.






1) அது ஏன் கைது செய்பவர்கள் எல்லோரையும் திகார் ஜெயிலில் அடைக்கிறார்கள்???     (பாண்டி,பாளையங்கோட்டை) 


  ம்..அங்க புதுசா நூறு போதி மரம் நட்டிருக்காங்கலாம். எல்லா பய புள்ளைகளும் ரிலீஸ் ஆகுரப்போ புத்தராகி வந்திருவாய்ங்களாம். அதான்.




2) கடந்த ஆட்சி காலத்தில் செத்தவர்களின் சாவு செல்லாது என அம்மா அறிவிக்கப்போகிறாராமே???   (சித்தன், உன்னயேநீஎண்ணிபாருபட்டி)


  இதுக்கே இப்டி சொல்றீங்க கண்ணகி சிலைய Hongkongக்கு அனுப்பப் போறதாக் கூட ஒரு நியூஸ் இருக்கு..என்ன செய்றது...




3) உங்கள் ப்ளாக்ஐ தொடர்ச்சியாய் படித்துவந்தால் எயிட்ஸினால் சாவில்லை என விளம்பரம் கொடுத்துள்ளீர்களே இது எந்த வகையில் நியாயம்????  (புள்ளிராஜா ,கில்மாபுரம்)


 யோவ் நம்ம ப்ளாக்க தொடர்ச்சியா படிச்சா ரத்தம் கக்கி அவனே செத்திருவான். அப்புறம் எப்டி எயிட்ஸினால சாவான். கரக்ட் தானே ...




4) என் மகன் எவ்வளவு திட்டினாலும் தலையாட்டிக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம அப்டியே உட்காந்திருக்கான்..என்ன செய்வது ???  (நல்லதங்காள்,நாராயணபுரம்)


ரொம்ப சந்தோசமான விஷயம்மா இது. உங்க புள்ளைக்கு பிரதமர் ஆகுற எல்லாத்தகுதியும் வந்திருச்சு.ஜமாய்ங்க..




5) அந்த மாதிரி சர்வே ஒன்னு சொல்லுங்களேன்...ப்ளீஸ் ??  (காஞ்சவன்,வேலூர்.)


டேய் ஒன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்...எங்கள பாத்தா ஒனக்கு எப்டிடா தெரியுது...இல்ல இதுக்கு முன்னாடி நாங்க அந்த வேல பாத்திட்டு இருந்தோமா...இவரு பெரிய கலெக்டர்... இவருக்கு சர்வே எடுத்து குடுப்பாங்களாம்...





6) அமேசான் காட்டில் வாழும் "அரபகிமோ"ங்கிற இனப்பறவை தன் வாழ் நாள் முழுக்க கக்காவே போகாதாமே??   (அறிவழகன், அணைப்பட்டி.)


இந்த நாத்தம் பிடிச்ச கேள்விய கேட்ட பாரு ஒனக்கும் ஒரு வாரத்துக்கு போகாதுடா... தைரியமான ஆளா இருந்தா அடுத்த தடவ முழு அட்ரஸ் எழுதி இந்தமாதிரி கேள்வி கேளுடா...




7) ச்சே இப்படி விம்பிள்டன் இறுதி போட்டில ரபால் நடால் தோத்துட்டாரே??    (சார்லஸ்,பக்கிங்காம்) 


ஏன் செய்ச்சிருந்தா ஒம்பொண்ண கட்டிக்குடித்திருப்பியா?? அவனே வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்னு போயிட்டான்.ஒனக்கென்ன ஒப்பாரி??




8) ஒரு நாள் டிஸ்கவரி சேனல்ல வர நிகழ்ச்சில கரடிகள் பேசும்னு சொன்னாங்க...இது எந்த அளவு உண்மை??  (வீரப்பன்,சத்தியமங்களம் )


நூறு சதவீதம் உண்மை. டான்செல்லாம் கூட ஆடும். வீராசாமி படம் பாக்கலையா...




9) நம் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகிறதே இதை கண்டு உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா??? மனோகரன்,பராசக்திபுரம் 


அத விடு. ஒரு நூறு ரூபா தள்ளுனேன்னா இந்த கேள்விய முதல் கேள்வியா போட்டிரலாம்..என்ன சொல்ற ...




10) "தமிழர்களே நான் கடலில் போட்டாலும் கட்டுமரமா மிதப்பேன்"ங்கிற  கலைஞர் டிவி விளம்பரம் எப்படி?    (வீராசாமி, ஆற்காடு)


   அதுல போனா மட்டும் நம்ம தமிழக மீனவன சுடாம இருப்பாய்ங்களா....




                                                           
11) நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு பிடிபட்ட உண்மை என்ன??      (அரிச்சந்திரன், அரண்மனைப்புதூர் )


  வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.




12) ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் பற்றி என்ன சொல்றீங்க ??     (தீனா, அத்திப்பட்டி )


 உங்காத்தாவ முதல்ல பாரு 
  மங்காத்தவ பிறகு பாத்துக்களாம்ங்கிறாரு...நல்ல விஷயம் தானே 



திங்கள், 18 ஜூலை, 2011

ஹாஸ்யம்





யம் பேரு ராமச்சந்திரன். நல்லா கவனமா கேட்டுக்கிட்டீயளா... 'ச்' பேருக்கு ஊடாப்ல வரணும். பாதிப்பய சந்திப்பெழயோடதா பேசுதாம். கேட்டா நா கம்ப்யூட்டர் வேல பாக்கோம் முழுத்தும் இங்கிலிஷ்ல தேன் பேசணும்பான்.இந்த அகராதி புடிச்சதுகளெல்லாம் எழுவது,எம்பதுல வேலயில்லாம நாண்டுகிட்டு செத்தானுவளே அப்போ பொறந்திருக்கணும். நான்லா தூத்துக்குடி நாச்சியப்பன் ஹைஸ்கூல்ல வேல பாக்கேல முப்பது ரூபாதா ச்சம்பளம். அருள படிக்க வைய்க்கேளே எவ்ளோ கஷ்டம்.. ஷ்..சொல்ல மறந்துட்டனே இப்போ நா உயிரோட இல்ல. போன வாரம்கூட தினமலர்ல மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலினு எம்படத்தோட வெளம்பரம் குடுத்திருந்தாங்களே... "அன்னாரது பிரிவில் வாடும்"னு அன்னம்,அருளு,மாப்ள பேரெல்லாம் கூட போட்டிருந்தாவளே. இந்தப் பொடுசுக ஜீவா,யாழினி பேரும் கூட இருந்துச்சு. மூணு வருசமும் மறக்காம பண்றா அருளு.ஒத்தைக்கு ஒரு புள்ளங்கிறதுனால எனக்கு அவனா உசுரு.அவளுக்கும் அப்டித்தான். சாகுறது அப்டிலாம் ஒன்னும் கஷ்டமான விஷயமில்ல. என்னெல்லாம் மூச்சுத்தெனறுதுனு திருநவேலி அப்பல்லோல சேத்தப்போ மெரண்டு தே போனேன்.

அவிய ஆஸ்பத்ரில பேசுறதும் பயமா தா இருக்கும்.ஒரு செவ்வாக்கெலம காலைல முதுகுல ஒரு ஜிவ்வுன வலி. யாரோ ஐச தூக்கி வக்கிற மாறி இருக்கு.அது அப்பிடியே அந்தாள மேல தல வரைக்கும் போகுது. திருப்பவும் கீழ கால் வரைக்கும் வருது. பேச வாய் வர மாடிங்குது. அன்னம் தூங்கிட்டுக் கெடக்கா. நானு "அடியே பொசமுட்டி எந்திரிடி...நீ அருந்தாளியாக போறே ,உசுரு போகுதுடீ..ஒன்ன ஒரு தடவ பாத்துக்கிடுதேன்.."னு கத்த நெனைக்கேன்.முடில. கை,கால் அசைக்க வர மாட்டேன்னுது.அப்புறம் பொசுக்குனு எதுலையோ குதிச்ச மாதிரி இருந்துச்சு.இந்த ஆறு,குளத்துளயெல்லாம் குதிச்சோனே ஒரு 
மாதிரி தண்ணிக்குள்ள கம்முன்னு இருக்கும்ல அப்டிஇருந்துச்சு.இப்டியா சொகமா தான் எங்கதை முடிஞ்சது. அப்புறம் எல்லாங்காலைல அழுதாவ. அருளு ஏங்கி ஏங்கி அழுவேல எனக்கே பாவமா இருக்கு. அப்பா நல்லாதாம்ல இருக்கேன் சொல்ல ஆசையா இருக்கு.முடியாதே. இந்த கடைசி பத்து வருசத்த நெனச்சு பாக்கேன். எவ்வளவு சீக்கிரமா போயிருச்சு..

                                           


அருளு மாப்ளைக்கு பாங்குல மாத்தலாகி திருநவேலி போயிட்டா. இந்த ஜீவா பயல பாக்காம ச்சங்கடமா போச்சு. தாத்தா தாத்தானு கழுத்துல தொங்கிட்டே கெடப்பான்,இப்டி விட்டுட்டு போயிட்டானேனு இருக்கும். ரெண்டு நாளுக்கு ஒரு தரம் போன்ல பேசிட்டு இருப்பான். அப்புறம் அதுவும் கொறஞ்சு போச்சு.பெறவு யாழு பொறந்தா.ஜீவா "இங்கிலீஷ் மீடியம் படிக்கேன்னு" பெருமையா சொல்லுவான். "சோசியல் சயன்ஸ் நா சொல்லித்தரேம்" டா ம்பேன். சிரிப்பான். அந்தப்பைய சிரிக்கைல கன்னத்துல எடது பக்கம் குழி விழுகுமே..அத பாக்கவே ஆச ஆசயா இருக்கும். அவன் ச்சின்னப் புள்ளைய இருக்கேள அதுக்காகவே அவன் அக்கிள்ள "கிச்சனம்" செய்வேன். சின்னவ யாழுவும் பிடிக்கும் தான். இந்த ஜீவா பய மேல தான் ஒட்டுதல் சாஸ்தி. அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவ இதுக முழுப்பரிச்சை லீவுக்கு தான் தூத்துக்குடி வருவாய. அந்த ஒரு மாசமும் அவளவு சந்தோசமா திரிவேன். வீடே ஒரே சத்தகாடா கெடக்கும். நா காலைல டீ கடைக்குக் கூட போறதில்லே.இந்த ஜீவா பய பாதி நேரம் இந்த வீடியோ கேம்ஸ் வெளாண்டுக்கிட்டே கெடப்பான். வளர வளர என்கூட அதிகமா பேச மாட்டிங்குதான். முன்னம்லா அவுகம்மா ஏசுனா எம்ட தான் ஓடி வருவான்.

ஒருக்க அருளு வீட்டுக்கு போயிருந்தப்போ கவனிக்கேன். இந்த ஜீவா பய அவுக சித்தப்பா கால் பின்னாலே சுத்துதான். அந்தாளே அந்த அறவேக்காட்டு பய என்ன சொன்னாலும் சிரிக்கான். "இப்டித்தான் ஒரு வாத்தியார் இருந்தார்..", "இப்டித்தான் ஒரு வக்கீல் இருந்தார்.." னு என்னென்னமோ சொல்லுதான். இந்த ரெண்டு கழுதைகளுக்கும் ஒரே சிரிப்பு.

 "எலே பத்தாப்பு படிக்கவனே..இங்காடே..உங்கூட்டு ஆளுவ கூட தா பேசுவியா..கெளவய்ங்க கூட பேச மாட்டியோ.." ங்கேன். வந்து நின்னு கிட்டு என்ன பாக்கான். மொகரைல கொஞ்சமா பருவெல்லாம் வந்திருக்கு.இந்த பொடுசு யாழுவ தூக்கி ,'ஏம்டி தாத்தா கூட பேச மாட்டியோ' ங்கேன். அவ "போ தாத்தா நீ ஒரே போர்.எப்ப பாரு சயின்ஸ் கேள்வியா கேட்டுக்கிட்டு கெடப்ப..எங்க சேகர் சித்தப்பா எவளோ ஜாலி தெரிமா..எந்நேரமும் எங்களுக்கு ஜோக் சொல்லிட்டே இருப்பாங்க"ன்னுதா. அவெ சொன்னதெல்லாம் சொல்லி சிரிக்காவ ஜீவாவும் இவளும். எனக்கு கெடந்து எரிச்சலா கெடக்கு. இதுகள பாக்க அவளவு தூர போயிருக்கேன்..என்கூட மூஞ்சொடுத்து பேச மாட்டிங்கிறாவ...

ஊரு வந்து சேந்ததும் மனசுக்கு ரொம்ப சங்கடமா கெடந்துச்சு. இதுக இந்த மே க்கு ஊருக்கு வரேலே நாமளும் சிரிக்க சிரிக்க பேசனும்னு வைராக்கியம் வந்துச்சு. நாம்லா பேசுதோம்னா ஆறுமுகநேரி பக்கம் அஞ்சூறு ஒக்காந்து சிரிக்க கேட்டுட்டு இருப்பாய.ஒருக்க எங்கூரு பக்கம் ஒரு பெரியவர் போலி விப்பாரு. அவரு சத்தம் போட்டு "போலி..போலி..." கத்திட்டு வர ,நான் "இவரு தாம்ல உண்மையச்சொல்லி விக்காரு" ஞ்சொன்னேன் பாக்கனும். கூட இருந்த பயகெல்லாம் அப்டி ஒரே சிரிப்பு.ஆனா இப்ப இருக்குறதுகளுக்கு நம்ம பேசுதது பிடிக்க மாடிங்குது போலுக்க.. "சித்திரமும் கைப் பழக்கம்" னுவாய.லைப்ரரில போயி சிரிப்பு புத்தோமா எடுக்க ஆரம்பிச்சேன்.அங்க அங்க எழுதி வச்சிக்கிடுதுவேன். டீவில கூட சிரிப்பு நிகழ்ச்சிலாம் பாக்க ஆரம்பிச்சேன்.அன்னத்துக்கு கூட ஒரே ஆச்சிரியம். ஓரமா சிரிச்சுக்கிடுதா.கழுத..அப்டி ஒரு நா ராத்திரி தான் மூச்சு தெனரல் வந்துச்சு. அதத்தான் முன்னமே சொன்னனே..ஆஸ்பத்திரிக்கு போயி ..போய் ச்சேந்தென்னு...



ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டாக,ஜீவாவும் குட்டியும் கூட அழுவுதாவ. சாவுற வீட்ல ஏம்ல அழுவுறாகனு இப்பல புரியுது.செத்தவனுக்கு புரிய வைக்க போலுக்க. பெறவு எல்லா முடிஞ்சு போச்சு. ஜீவா என்னோட ரூமுக்கு போயி நோட்டிண்டு கெடந்தான்.கைல அவனுக்கு அந்த பேப்பர் ஆப்டிருச்சு.எடுத்து படிக்கான்.

தொண்டர் 1: தலைவர் ஏன் ஞ்சோகமா இருக்காருல ...

(கொஞ்சம் இடைவெளி விட்டு)

தொண்டர் 2: அவரு கட்சி மாறுனத விளையாட்டுச்செய்திகள்ள சொல்லிட்டாவளாம்...


படிச்சிட்டு அவனுக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சு. ஆனா அப்றம் சிரிக்கான். நல்லா சிரிக்கான்.கன்னத்துல குழி தெரிய சிரிக்கான். ரொம்ப சந்தோசமா இருந்துச்சு தெரியுமா...

செவ்வாய், 5 ஜூலை, 2011

விலைமாது(A)






தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி 
 என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு 
  கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....


அவன் முயன்று முன்னேற 
  அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.
மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே 
             நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல் 
         அவசியம் இல்லை...


ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம் 
           நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
   முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.


 அவன் கலைமகன். 
  அவள் விலைமகள்.


கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி 
    காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை 
   ஆக்கியவள் அவள்.


நாற்பதை தொட்டவன் அவன்.
 இலக்கியம் இறுமாப்பு இரண்டும் 
   இரு கண்கள் அவனுக்கு...
 குடும்பம்,பொறுப்பு போன்ற 
     இமைகள் கிடையாது..


பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத 
  வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த 
 "ஒரு மணி நேர மனைவி"- இவள்


ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்.. 
                           பேனா புத்தி அது 
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும் 
             நிர்வாணமாய் இருந்தது......




                                                


புகைக்க தொடங்கினான்.
  அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது 
   அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள் 
  முன்னமே செய்த ஒப்பந்தம்!!!


அவனை ஏசினாள்.
  காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
 "வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான். 
  அவளோ எரிமலையானாள்.


அவள் கண்கள் சிவப்பானது. 
   அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என 
              ஆரம்பித்து தொடர்ந்தாள்.


என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
   நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ 
       எனக்கும் அப்படியே...


துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
  எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து 
  மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம் 
              நாறி நாற்றமடிக்கும்.... 


இதுவும் ஒரு வியாபாரமே ....
         ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள் 
  நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.


கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில் 
    நீயும் ஒரு வேசை தானே......


"வேசி" பெண்பால் என 
  எவன் சொன்னது??...


அவனருகே வந்து தாழ்ந்த குரலில் 
         மீண்டும் சொன்னாள்....


"உனக்குக் காமம் எப்படியோ 
   எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து 
    விடைபெற்றாள்....


அவன் கண்ணிமைக்காமல் அவள் 
     சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
  விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!

ஞாயிறு, 26 ஜூன், 2011

இரத்த பூமி (பகுதி 2)


                                 

அடுத்த நாள் கோவையின் அப்பா ஊரில் இருந்து வந்தார். அலுவலகத்தில் வார்டன்களை சந்தித்தார். சில பாதிக்கப்பட்ட வார்டன்கள் பழைய கதைகளை விளக்கிக்கொண்டிருந்தார்கள். கோவை கையை கட்டிஅமைதியாய் நின்று கொண்டான். இது போன்ற விசாரணை நாட்களில் எப்போதும் தலைக்கு எண்ணெய் வைத்து உச்சியெல்லாம் எடுத்து சீவி விடுவான். எல்லாம் முடிந்து "பிரகாஷ் ஒரு வாரம் வெள்ள உடுப்பு போட்டு "punishment serving" செஞ்சிருப்பா.." என ஒழுங்கு முறை கமிட்டி முடிவு செய்தது. மூன்று வேளைகளும் மெஸ்ஸில் முதல் Batchஇல் சாப்பிடுவோருக்கு வெள்ளை உடை அணிந்து சாப்பாடு பரிமாற வேண்டும். அதுவே தண்டனை. போகும் போது கோவையின் அப்பா எதுவும் பேசாமல் ஐந்நூறு ரூபா பணத்தை எடுத்து ,"இந்தாப்பா..அந்த ஜென்மத்துக்கு கொடுத்துரு.." என நாரையனிடம் கொடுத்து விட்டுப்போனார்.


எல்லோரும் "ElectriCity" கிளாஸ் முடிந்து, நடந்து தமிழ் வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தார்கள். "நா..என்னென்னமோ எதிர் பாத்தேன் கடைசி சப்புன்னு போயிருச்சுடா சும்பக்" என்றான் பூச்சி.

"ஏன்...அவன அம்மணமா ஓட விடுவாய்ங்கன்னு பாத்தியா"

"இல்லடா போயும் போயும் "Punishment Serving" போட்டு கோவைய அசிங்க படுத்துறாய்ங்க...அதும் அவனோட அப்பா என்னடான்னா நாரையன்லாம் ஒரு நல்லவன்னு அவய்ங்கிட்ட காச கொடுக்கிறாரு..."

"போன தடவ நாரையனோட அப்பா வந்தப்ப நம்ம கோவைகிட்ட தான காச கொடுத்தாரு..உலகம் வட்டம் தான் போல பூச்சி.."

எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே வந்த நாரையன் முறைத்தான்.இவர்கள் அனைவரும் Bsc Physics படிக்கிறார்கள்.கல்லூரியில் ஒவ்வொரு  Departmentக்கும் ஒரு அடைமொழி உண்டு. "Golden" chemistry, "Excellent" mathematics என ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்துக்கொள்வார்கள். Physicsல்  படித்த முன்னோர்கள் எந்நேரமும் படித்துக்கொண்டே திரிந்ததாலும்,அதிகம் பேசாததாலும் அவர்களை  கல்லூரியில் எப்போதும் "Psycho" physics என்று கேலி செய்வார்கள்.அந்த களங்கத்தை துடைக்க கோவை,நாரையன் போன்ற பெருந்தலைவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.பத்துமுறை பல் தேய்த்துவிட்டு பேசினாலும் அவன் வாய் நாறும் என்பதால் அவன் நாரையன். இருளுக்கும் அவனுக்கும் இரண்டு வித்யாசம் கண்டுபிடிப்பதே அரிது என்பதால் அவன் கருவாயன். நாலடியில் குழந்தை போல் இருப்பதால் அவன் பூச்சி. கிட்டத்தட்ட எல்லாருக்குமே ஒரு புனைப்பெயர் உண்டு. வார்டன்களுக்கும் ஆடுவெட்டி,நாய்க்கொல்லி,விடாதுகருப்பு என பல பெயர்கள் புழக்கத்தில் இருந்தன.

கங்கா,சும்பக்,கருவாயன் முதல் வரிசையிலும் மற்றவர்கள் எல்லோரும் பின்வரிசையிலும் அமர்ந்து கொண்டார்கள். தமிழ் வகுப்பு ஆரம்பமானது. நெற்றியில் சந்தனத்துடன் வந்திருந்தார் தங்கவேலு அய்யா. எப்போதும் உச்சஸ்தாயில் தான் பேசுவார். வகுப்பை தொடக்கினார்.


"தம்பிகளா..வர்ற மூனாம் தேதி நம்ம "Prayer Hall"ல அந்தர்யோகம் நிகழ்ச்சி இருக்கு.எல்லாரும் மறக்காம கலந்துக்கணும்...சுவாமி ஸ்ரீமத் பரமானந்த மகாராஜ் உங்களோட ஆன்மிக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவாங்க. சுவாமிஜியோட அருளுரை கேக்க கொடுத்து வச்சிருக்கனும்....உங்களுக்கு எதாவுது ஆன்மிகக்கேள்விகள் இருந்துச்சுனா இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி கொடுங்க."

                                                                                                                         

                                                              


மாணவர்கள் பெரிதாய் உற்சாகம் அடைந்ததாய் தெரியவில்லை. சில பேர் கேள்விகளை எழுதிக்கொடுத்தார்கள்.அய்யா வந்த கேள்விதாள்களை இடது ,வலது பக்கமாய் அடுக்கிக்கொண்டார்.திடீரென ஜெகதீசன் கொடுத்த கேள்வியை படித்த அய்யா உற்சாகமானார். 

"டேய் தம்பிகளா.. இந்த கேள்விய கேளுங்கடா...நம்ம ஜகதீசன் கேட்டிருக்கான். இதுக்குப்பின்னாடி அத்வைதம்,த்வைதம் லாம் இருக்கு..ஆனா கேள்வி வேடிக்கையா இருக்கும்..."ஜகதீசன் பெருமையாய் முன்னாடி நின்றிருந்தான்.

அய்யா தொடர்ந்தார். "சுவாமிஜி.. கோடி நமஸ்காரங்கள்.பிள்ளையாரோ கனமானவர். எலியோ சின்ன உயிரினம். எலி எப்படி பிள்ளையாரின் வாகனமாக 
முடியும்??...". கூட்டம் கொல்லென சிரித்தது.

"தம்பிகளா கேள்வி வேடிக்கையா இருக்கும்..இதுக்கு பின்னாடி இந்துமதத்தின் உருவவழிபாட்டு சித்தாந்தங்கள் இருக்கு.." என்றார் அய்யா. கருவாயன் சும்பக் காதில் "டேய் மாப்புள நாமளும் ஒரு கேள்வி எழுதி கொடுக்கணும்டா.." என்றான்.

பின்னாடி இருந்து நாரையன் "முருகனோட மூனாவுது பொண்டாட்டி எங்க இருக்குன்னு கேளு" என்றான் மெதுவாக.

"டேய் நாரையா..வெளாட்டு மயிரா பேசாத ...அவரு உன் சூ%&ல சூலாயுதத்த எறக்க போறாரு.. ஜென்மத்துக்கும் அரியர கிளியர் பண்ண மாட்ட.." .கருவாயன் காட்டமானான்.

சும்பக் கொஞ்சம் யோசித்து விட்டு பேப்பரில் எழுதினான். "சுவாமிஜி... கருணையே கடவுள் என்கிறோம். அன்பே சிவம் என்கிறோம். ஆனால் ஆடுகோழிகளை வெட்டுகிறோம்.அலகு குத்துகிறோம்.தீ மிதிக்கிறோம். நம்மை வருத்தி இறைவனை அடைவதை விட ,நம்மை உயர்த்தி இறைவனை அடையலாமே???" கருவாயன் படித்து பார்த்து விட்டு "மாப்ள சூப்பர்...நா எம்பேர போட்டு கொடுத்திர வா" என்றான். சும்பக் தலையாட்டினான். 

அய்யா படித்து பார்த்தார்.அவர் கண்ணெல்லாம் சிவந்து விட்டது.தாளை இரண்டாக கிழித்தார். "ஏன் ..வேற எந்த மதத்துலயும் இந்த மாதிரி நம்பிக்கை இல்லயா ..அங்க போய் கேளு.............கேளு.... கேக்க மாட்ட..ஏன்னா அவன் கூட்டமா சேர்ந்து விரட்டுவான்...நாம தான இளிச்சவாயங்க...அதான் இங்க வந்து வாலாட்டுற.." கருவாயன் தலை குனிந்து நின்ருந்தான். 

"அதுக்கு நாங்கேட்ட கேள்விய கேட்ருந்தாகூட அந்தாளு இவ்வளவு கோவிச்சிருக்க மாட்டார்" என்று முனு முனுத்தான் நாரையன். "போய் உக்காருடே.." என கருவாயனை அனுப்பினார். எல்லொரும் அமைதியாய் இருந்தார்கள். அய்யா முகம் மூர்க்கமாய் இருந்தது. அதற்கு மேல் வேற எதையும் பேசாமல் புத்தகத்தை எடுத்து செய்யுள் பகுதியை நடத்த ஆரம்பித்தார்.

பாடம் ஆரம்பமானவுடன் அய்யா வழக்கம்போல் பேச ஆரம்பித்தார். ஊடே சித்தர்களை பற்றி பேச்சு போய்,சித்த மருத்துவம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். 

"அதுல அளப்பெரிய விசயங்கள் இருக்குடா. ஏன் நம்ம மாட்டுச்சாணம் இருக்கே அது பெரிய மருந்துடா...எல்லா புண்களுக்கும் போடலாம். நெற்றிப்புண்...கைல வர்ற கைப்புண், தலைல வர்ற புண்..."என அய்யா சொல்லிக்கொண்டிருக்கயிலையே சும்பக் குனிந்து "அய்யா வாய்புண்ணுக்கு என்னய்யா செய்றது.." என்றான். மொத்த வகுப்பும் சிரித்தார்கள்.கருவாயன் எதோ வாழைப்பழ நகைச்சுவை பார்த்தவன் போல பயங்கரமாய் சிரித்தான்.அய்யா மீண்டும் காளியானார்.கண்கள் சிவந்தது.சிரித்துக்கொண்டிருந்த கருவாயனை பார்த்ததும் அய்யா கோபம் ஆறாக பெருகியது. சொன்னது அவனாகத்தான் இருக்குமென நினைத்து கையில் இருந்த மர "Duster"ஐ வைத்து கருவாயனை மொத்தி எடுத்தார். 

"அய்யா நா சொல்...." என கருவாயன் வாயை திறக்கையில். "வாய மூடு .." என அய்யா சொல்லி சொல்லி அடித்தார்.அந்த ஆக்சன் சீன் ஒரு நிமிடம் தொடர்ந்தது. அடித்து முடித்து விட்டு அய்யா மூச்சு வாங்கினார். கருவாயனுக்கு மூஞ்சு ஆங்காங்கே வீங்கி இருந்தது அப்பட்டமாய் தெரிந்தது.வகுப்பு முடிந்து அய்யா வெளியேறினார். கருவாயன் கோபத்தை அடக்க முடியாமல் "டேய் சும்பக்கூ& யானே..." என  கத்திக்கொண்டு சும்பக்கை விரட்டினான். இருவரும் மைதானத்தில் ஓடினார்கள்.


                                                                                                                   
                                           



இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஓடியது. காலம் கண்டபடி சுத்த ஓவ்வொரு வரும் ஒவ்வொரு திசைகளில் கிடக்கிறார்கள். எட்டு வருடங்கள் ஓடி விட்டது.கடந்த மே மாதம் கங்காவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது. கருவாயனை தவிர எல்லோரும் வந்திருந்தார்கள்.அவன் மும்பையில் இருந்ததால் வர முடியவில்லை. கோவை தற்சமயம் ஒரு புகழ்பெற்ற ஆங்கில பத்திரிக்கையில் நல்ல பதவியில் இருக்கிறான். திருமணமாகி இரண்டு ஆண்டு ஆகிறது. நாரையன் வாத்தியாராக உள்ளான். "நீ எங்களுக்காகவா படிக்குற..." "ஒழுக்கம் தான் ரொம்ப முக்கியம்" போன்ற வசனங்களை மாணவர் மத்தியில் அடிப்பதாய் கேள்வி. இது தவிர ஒரு குழந்தையின் தகப்பன் என்கிற கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பூச்சி சென்னையில் வேலை பார்க்கிறான். நிறைய வளர்ந்து விட்டான். கொஞ்சம் மீசையும் வளர்ந்து 
விட்டது. "என்ன பூச்சி..வயசுக்கு வந்துட்டியா " என கேலி செய்தார்கள். சும்பக்கும் பெரிதாய் மாறவில்லை. அவனும் கங்காபோல  கணினியை தட்டுகிறான். பொழுது போகாத நேரங்களில் ப்ளாக் எழுதுகிறானாம்.

இதோ அடுத்தடுத்த நண்பர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். பழைய அரட்டையை மீண்டும் அடிப்பார்கள்.கதைகள் பேசுவார்கள்.கடந்த காலங்கள் எப்போதும் அழகானதாகவே இருக்கிறது.அடுத்த முறை சந்திக்கையில் கருவாயனிடம் போன் பேசும் அந்தப்பெண் யாரென விசாரிக்க வேண்டும் என முடிவாயிருக்கிறது.  



                                                                                                               (தற்சமயம் முற்றுகிறது)



வியாழன், 23 ஜூன், 2011

இரத்த பூமி (பகுதி 1)

                                                          
                                                                                                      


சினிமாக்களில் பார்ப்பது போல கல்லூரிகள் நிஜத்தில் இல்லை தான். ஆனால் இந்தக்கல்லூரி நெறிகெட்டுத்தெரியும் சமுதாயத்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத கல்லூரி. ராமகிருஷ்ண மடத்தால் நடத்தப்படுகிறது.மாணவர்கள் எல்லோரும் கண்டிப்பாக விடுதியில் தங்கிவிட வேண்டும் (Residential). தினமும் காலையில் 4.45க்கு எழுதல். 5.30 மணிமுதல் Study hour.பிற்பாடு கட்டாய உடற்பயிற்சி. தினமும் மூன்று வேளை கூட்டுப்பிரார்த்தனை. நாடே மறந்துபோன கைக்குத்தல் அரிசியில் தான் சாப்பாடு. திங்கள்,புதன்,சனி களில் வெள்ளை வேஷ்டி சட்டை தான் அணிய வேண்டும்.காலில் செருப்பு அணிதல் கூடாது. இவ்வாறு 'wassup...yo' என அலைவோரை சுளுக்கெடுப்பதற்காகவே ஏகப்பட்ட விதிவகைகள் அந்த கல்லூரியில் உண்டு.இன்றளவும் சோழவந்தானில் இயங்கி வரும் அந்த கல்வி நிலையத்தின் பெயர் விவேகானந்தா கல்லூரி. மதுரை ஏரியாக்களில் சேட்டை செய்யும் பிள்ளைகளை "ஒழுங்கா இருக்கியா..இல்ல சாமியார் காலேஜ்ல சேத்து விடவா" என பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுப்பார்கள். ஆக இது ஒரு ஆண்கள் கல்லூரி என்பதை தனியாக வேற சொல்லத்தேவை இல்லை.

சும்பக் அந்தக்கல்லூரியில் ஒரு வருடத்தை தள்ளி இருந்தான். கங்காவும் அவனும் மெஸ் ஹாலில் உட்கார்ந்து மால்ட் குடித்துக்கொண்டிருந்தார்கள். மால்ட் என்பது ஒரு மாதிரியான தானியச்சாறு. விடுதியில் டீ,காபி கிடையாது.அதைத்தான் கொடுப்பார்கள்.கங்கா மாடு ஊரத்தண்ணியை உறிஞ்சி குடிக்கும் காட்சியை ஞாபகப்படுத்தும் வண்ணம் குடித்துகொண்டு இருந்தான்.கொஞ்சம் ஒல்லியாய்,கண்ணாடி அணிந்து இருப்பான். ஒரே வேட்டியை ஒரு வாரம் கட்டுவதை தவிர அவனிடம் வேறு கெட்ட பழக்கங்கள் கிடையாது.பாத்ரூம் போகும் நேரங்கள் தவிர மற்ற நேரமெல்லாம் சும்பக்கும் கங்காவும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.சும்பக்கின் உண்மையான பெயர் வேற ஏதோ ஒன்று.ஆனால்அவன் அடிக்கடி உபயோகப்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தையின் முதல் பகுதி அவனுக்கு காலப்போக்கில் பெயராகிப்போனது.திடீரென மெஸ்ஸில் முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. சில சீனியர் விஷமிகள் "மால்ட் குடித்தால் ஆண்மைக்குறைவு ஏற்பட்டுவிடும்" என முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் வதந்தியை பரப்பியுள்ளனர். உச்சியெடுத்து தலை சீவிய ஒரு முதலாமாண்டு சின்னபையன் கங்கா அருகில் வந்து அமர்ந்தான்.

"அண்ணா..மால்ட் குடிச்சா அப்டி ஆயிருமாண்ணா...அதான் சாமிஜிலாம் குடிக்குறாங்களாமே..."

கங்கா டம்ளரை வைத்துவிட்டு அவன் காதருகே சென்று, "அதெல்லாம் சும்மாடா.. இவன்லாம் ஒருவருஷமா குடிக்குறான்...போன மாசம் இவன்பொண்டாட்டி ஒரே பிரசவத்துல பத்துப்பிள்ளை பெத்தா தெரியுமா... " என சும்பக்கை காட்டி சொன்னான். 

"விளையாடாதீங்கண்ணா..."

"ஆமா இவரு எங்க மாமா பொண்ணு..விளையாடுறோம்...ஆளைப்பாரு..ஹார்லிக்ஸ் விளம்பரத்துல வர பப்பா மாறி இருந்திட்டு ஒனக்கு இந்தக்கேள்வி தேவையா??.." என்றான் கங்கா. இருவரும் கொஞ்ச நேரமாய்  சத்தமாய் சிரித்தார்கள். அந்த முதலாமாண்டு பச்சி முறைத்துக்கொண்டே பறந்தது. 



கொஞ்ச நேரத்தில் சும்பக் கங்காவிடம்," டேய் வென்று..சாயங்காலம் அஞ்சு மணிக்கு நம்ம கோவைக்கு ஹாஸ்டல் office ரூம்ல Enquiry தெரியும்ல..என்னாச்சுன்னு பாப்போம்.." என சொன்னான். இருவரும் எழுந்து Office ரூம் நோக்கி நடந்தனர். பிரகாஷ் இவர்களுடன் ஒன்றாக சேர்ந்து இரண்டாமாண்டு Physics படிக்கும் மற்றொரு மனிதருள் மாணிக்கம். கோயம்பத்தூரில் இருந்து வந்து படித்ததால் அவனை எல்லாருமே கோவை என செல்லமாக கூப்பிடுவார்கள். சாயங்காலம் பிரார்த்தனைக்கூடத்தில் எல்லோரும் இறைவனை துதித்துக்கொண்டிருக்க இந்த கோவை மட்டும் சிம்ரன் ஏடாகூடமாய் குனிந்ததை அட்டைப்படமாய்கொண்ட ஆனந்தவிகடன் புத்தகத்தை ஒளித்து வைத்து படித்துகொண்டிருந்தான். அதை லாவகமாக "கருத்து" காளிமுத்து என்னும் வார்டன் பிடித்து விட்டார். அதற்காகத்தான் சாயங்காலம் கோவைக்கு விசாரணை. ஆபீஸ் ரூம் வெளியிலே நாரையன்,கருவாயன்,பூச்சி எல்லோரும் நின்றிருந்தனர். 

விடுதியில் Remark நோட் எனப்படும் ஒரு புத்தகம் இருந்தது. எல்லா மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல் புத்தகம் அது. ஏதேனும் குற்றம் செய்தால் அந்தப்புத்தகத்தில் அது பதிவேற்றப்படும். மாணவர்களின் நடத்தையை கண்காணிக்க காலங்காலமாய் விவேகானந்தா கல்லூரியில் பயன்படுத்தும் முறை. " வாடா தம்பி.." என கருத்துக்காளிமுத்து கோவையை அருகில் அழைத்தார். கோவையின் remark புத்தகத்தின் பக்கம் திறக்கப்பட்டது. கோவை சினிமா நடிகர் ராஜ்கிரண் போல் விரைப்பாய் நின்றிருந்தான். தூக்கு மேடையில் பகத்சிங்குக்கு இருந்த அதே பெருமிதம் அவன் முகத்தில் இருந்தது. "வாட்டர் டேங்க்கில் ஏறி குளித்தான். கிச்சனுக்கு வெளியே சிறுநீர் கழித்தான். மாணவர்களுக்கு பீடி சப்ளை செய்தான். டாய்லெட்டில் தவறான படங்கள் வரைந்தான்.." என தேதி வாரியாக Remark நோட் 
கோவையின் வரலாற்றை சொல்லியது. எல்லாத்தையும் படிச்சு முடிச்சிட்டு காளிமுத்து கோவையிடம் "ஓ அது நீ தானா " என்றார். பின்பு ரகசிய விசாரணை என்பதால் கதவுகள் மூடப்பட்டது.

"ஏன்டா இந்த தடவ டிஸ்மிஸ் பண்ணிருவாய்ங்கனு பேசிக்கிறாங்க.. அவ்ளோதானா..' என்றான் கருவாயன்.

"டேய் இது சப்ப மேட்டரு...ஸ்ரீதரு மண்டைய உடைச்சப்பவே தப்பிச்சிட்டான்..' என்றான் சும்பக்.



கதவு திறந்தது. கோவை சோகமான முகத்துடன் அவன் அறைக்கு நடந்தான். மொத்த நண்பர் கூட்டமமும் அவன் பின்னால் வந்தது. "டேய் என்னாச்சுடா..." என சும்பக் தான் முதலில் கேட்டான்.கோவை நகத்தை கடித்துக்கொண்டே 'அப்பாவை கூட்டிட்டு வரச் சொல்லிட்டாய்ங்க டா.." என்றான். 

"அடிங்கோ&*&*....நா என்னமோ ஏதோனு பயந்துட்டேன்..இதென்ன ஒனக்கு புதுசாடா வெளக்கெண்ண..." என நாரையன் சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். கோவை அவன் பெட்டியில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினான். எல்லோரும் குழப்பமாய் பார்க்க, கங்கா அதை வாங்கி சத்தமாய் படித்தான்.

"அன்புள்ள பிரகாசுக்கு...

அப்பா எழுதிக்கொள்வது.நாங்கள் அனைவரும் இங்கு நலம். உன்னுடைய கடிதம் கிடைத்தது. பரீட்சைக்கு Fees கட்ட வேண்டும் என பணம் கேட்டிருந்தாய். இந்த செமஸ்டர்க்கு மட்டும் இதுவரை நாம் ஆறு முறை Fees கட்டிவிட்டோம் என்பதை உனக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். இது வரை நாம் Fees கட்டிய பணத்தையெல்லாம் சேர்த்து வைத்திருந்தால், நாம் ஒரு unversityயே கட்டியிருக்கலாம் என்பதையும் நீ அறிவாய். நாம் சரியாகத்தானே மெஸ் பில் கட்டுகிறோம் அவர்கள் ஏன் சாப்பாட்டில் உப்பு போடுவதில்லை??...போன வருடத்தில் மட்டும் உன்னோட கல்லூரியில் என்னை ஏழு தடவை அழைத்திருந்தார்கள்.என் அலுவலக நண்பர்கள் கூட 'பேசாம மதுரை to கோயம்பத்தூர் பஸ் பாஸ் எடுத்திருங்களேன்' என கேலி செய்தார்கள். உனக்கு ஏழரைச்சனி மார்கழியுடன் முடிந்து விட்டது என தங்கராசண்ணன் சொன்னார். அதனால் தானோ என்னவோ இந்த வருடத்தில் உன் கல்லூரியில் இருந்து ஏதும் அழைப்பு வரவில்லை.இது தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

சிரித்தால் கோவையின் வாயில் சூடான வார்த்தைகள் வந்துவிடும் என்பதற்காக எல்லோரும் முட்டிக்கொண்டு நின்ற சிரிப்பை அடக்கிக்கொண்டார்கள். நாரையன் கோவையை தோள் தொட்டு "ஜோசியம் பொய்யின்னு நிருபிக்க நீயும் எவ்வளவு போராடுற..??"என்றான்.  எல்லாம் ஆர்ப்பாட்டமாய் சிரிக்க ஆரம்பிக்க,நாரையனின் மர்ம தேசத்தில் கோவை Football ஆடினான்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                -                                                                                                                                                                ---தொடரும்