புதன், 15 ஜூன், 2011

Case நம்பர் 4771


(ஒரு எந்திரப் பெண் குரல்) இது ரிஷி Memory Trimmers கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஒலிக்கோப்பு. Case நம்பர் 4771 ல் குறுப்பிடப்பட்ட பங்குதாரர்களை தவிர்த்து வேறு யாரும் இந்த ஒலிப்பேழையை உபயோகிப்பது தெரிந்தால் அவர்கள் மீது "Corporate Neural act:2065" சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெல்லிய இசை ஐந்து வினாடிகள் தொடர்கிறது.

(குரல் தொடர்கிறது) This is post service feedback of case no:4771. இது கேஸ் நம்பர் 4771 ன் சேவைக்குப்பின் கேட்டறிதல் நிகழ்வு.

ஒரு புல்லாங்குழல் இசையுடன் 'நினைவை வென்று உலகில் நின்று ....' என்று RMTன் (Rishi memory Trimmers) கார்பரேட் பாடல் பாடி முடிந்தது.

டாக்டர் R.V சுதீப் :
நம் ஆனந்தங்கள்,சங்கடங்கள்,பழக்க வழக்கங்கள் என எல்லாமே மூளையின் ஏதோ ஒரு முடிச்சுக்குள் ஒளிஞ்சிருக்கு. உதாரணமா 'அம்மா' னு உள்ளுக்குள் நினைக்கிறோம்னு வச்சுக்கோங்க.அவளுடைய உருவம்.குரல்...incidentsனு எல்லாம் நமக்கு ஞாபகம் வருவதற்கு காரணம் இந்த மூளையின் Cortex பகுதி. அம்பது வருசத்துக்கு முன்னாடி எதோ ஒரு poet 'பிரிவு கொடிது..நினைவுகள் அதனினும் கொடிது'னு சொன்னது எவ்ளோ உண்மை. நமக்கு இந்த ஞாபகங்கள் தருகிற தொல்லைகள் இருக்கே 'its terrible..isnt it'. இந்த 2070 வருசமா மனிதனுக்கு இருக்கிற முக்கிய பிரச்சனை இது.அதுக்கு ஒரு வரப்பிதா...சாரி வரப்பிரசாதம் தான் இந்த Human Memory Clearance (HMC). கடவுளுக்கும் மனுஷனுக்கும் உள்ள தூரத்தை குறைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புனு சிலர் கிண்டல் பண்றதுலேயும் உண்மை இல்லாமல் இல்லை. விஷயம் என்னனா Cortex ல இருந்து தகவல்களை சுமந்துக்கிட்டு போகிற Neuron ஏற்கனவே இருக்கிற தகவல்களை சரி பார்த்து Associate பண்ணுவதே ஞாபகங்கள். நாங்க இந்த மேப்பை கண்டுபிடிச்சு அதை சில வேதியல் திரவியங்களின் உதவியோடு நிரந்தரமாய் நீக்கி விடுவோம். seems complex right?? but not actually... உதாரணமா செத்துப்போன உங்க நாயை மறக்கனும்னு வச்சுக்கோங்க. நாங்க உங்க தலையில் சென்சொர்களை பொருத்தி,உங்கள் நாயை ஞாபகப்படுத்துகிற அதனுடைய உடமைகளை உங்களிடம் கொடுப்போம். நீங்கள் அதனுடைய நினைவுகளை திரட்டும் போது,எங்களுக்கு அதிர்வலையின் மூலமாய் உங்கள் Neuron,Axon களின் உதவியோடு அந்த "Mapping Mechanism' புலப்பட்டு விடும்.பிற்பாடு அழிக்கப்படும். நீங்கள் விழித்து எழுந்து சந்தோசமாய் வீட்டுக்கு போய்விடலாம்.அது ஒரு மறந்த கனா போல. இந்த கேஸ் நம்பர் 4771, என்னோட பதிமூனாவது Assignment. 'Went Really well'. இப்போ ஆஷிகா ரொம்ப நல்ல இருக்காங்கனு கேள்வி பட்டேன். அவுங்க பிரதர் சொன்னாரு.


ஆஷிகா :
எப்டி இருக்கேனா ... நீங்களே பாத்து சொல்லுங்க ...ஹஹா.. ஒரு சின்ன Europe Tour போய் அங்கவுள்ள சேரிகளையெல்லாம் பாத்துட்டு வரதா பிளான்..பாக்கலாம்... போன வாரம் ரெண்டு பியர் சாப்டிட்டு "Happy Newyear 2070" னு நானும் தன்யாவும் கத்திக்கிட்டு பைக்ல போனோம்... பைக்ல இருநூற்று எழுபது தாண்டுனவுடனே தன்யா கதறிட்டா...She is like a pain in the ass..ஹஹா ..ஆனா அவ ரொம்ப talented..தமிழ் எழுதக்கூடத் தெரியும்னா பாத்துக்கோங்க..


வருண் :
நா ஆஷியோட தம்பி. அக்காவும் பிரபாவும் அப்பிடி ஒரு pair.ரெண்டு பெரும் சேர்ந்து நின்னா எனக்கே அவ்ளோ பொறாமையா இருக்கும். மூணு வருஷமா ஒண்ணா தான் இருந்தாங்க.அடுத்த வருஷம் கொழந்த பெத்துகிறதா கூட முடிவு பண்ணிருந்தாங்க,அதுக்குள்ளேயும் இப்படி ஒரு ஆக்சிடென்ட். அதுவும் பிரபா ரொம்ப ஜோவியல் வேற. எந்நேரமும் ஜோக் பண்ணிட்டே இருப்பான். அவன மார்சுரில பாத்துட்டு ஆஷி வீல்னு கத்தி அழுதப்போ நானும் அழுதிட்டேன். அவனோட சட்டைய வச்சிக்கிட்டு ஒரு மாதிரி யார் கூடயும் பேசாம ஒரு மாசமா இருந்தாள். அவளோட "ஆஸ்மா" Tablets கூட சாப்ட மாட்டேன்டா. எதாவுது பண்ணிப்பாளோனு பயந்தப்போ தான் RMT ad பாத்தோம். சும்மா try பண்ணலாமேனு தான் வந்தோம். ஆனா இது உண்மையிலேயே அற்புதம்..இப்போ எங்க ஆஷி மறுபடியும் பழைய ஆஷி. ரொம்ப ஜாலியா life என்ஜாய் பண்றா. போனவாரம் ரவினு ஒருத்தன் ப்ரபோஸ் பண்ணினானாம்,யோசிச்சு சொல்றேன்னு சொல்லிருக்காளாம். Im Happy...

தன்யா(ஆஷிகாவின் தோழி):

இந்த HMC பத்தி கேள்விப்படிருந்தாலும், நேர்ல பார்க்கிறப்போ ஆச்சர்யப்படாம இருக்க முடியல. ஒரு மாசத்துக்கு முன்னாடி வரையும் என்ன ஆவாளோனு நாங்க பயந்துக்கிட்டிருந்த ஆஷி,இன்னைக்கு ரொம்ப சந்தோசமா வாழ்ந்திட்டிருக்கா. இந்த மூணு வருஷம் பிரபா கூட இருந்த எதுவுமே அவளுக்கு ஞாபகம் இல்லை. போன வாரம் அவ என் வீட்டுக்கு வந்திருந்தப்போ,பழைய ஆல்பம் பார்த்துக்கிட்டு இருந்தாள். பிரபாவோட நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிக்குற போட்டோவ பார்த்துட்டா. நான் பயந்துட்டேன். அவளாவே " யாருடி இவன் எனக்குத்தெரியாம...உன்னோட பாய் பிரண்டா...Smart..ஆளுக்கு 50/50" னு சொல்லிட்டு கண்ணச்சிமிட்டி சிரிக்கிறா...என்னால கண்ணீரை கட்டுப்படுத்த முடியல தெரியுமா... அப்போ தான் பிரபா முழுசா செத்துப்போனதா உணர்ந்தேன். எது எப்படியோ she is happy
these days... ரொம்ப சந்தோசம்.



தாரா (வருணின் காதலி):

ஆஷி திரும்பவும் டென்னிஸ் ஆடுறா. மாசத்துக்கு மூணு தடவ எதாவுது ட்ரிப் அடிக்குறா. எங்ககிட்ட வந்து ஏன் டல்லா இருக்கீங்கனு கேட்டு adviseலாம் பண்றாள். lookslike she is back.நேத்துகாலைல சிரிச்சிக்கிட்டே என்கிட்ட வந்து "நைட் ஒரு கனவு" என்றாள் ... என்னதுனு கேட்டேன். ஏதோ ஒரு உருவம் வந்து விசில் அடிச்சுக்கிட்டே அவள பார்த்து கண்ணடிச்சதாம்... உருவம் சரியா தெரியலேன்னு சொன்னா... 'ஒரு வேளை அந்த ரவியா இருப்பானோ' னு என்கிட்ட வெட்கப்பட்டுகிட்டே கேட்டாள். எனக்கு ஒரே ஷாக். எனக்குத்தெரியும் அது யாருன்னு. அது யாரோட ஸ்டைல்னு... Somehow i believe பிரபா அவளுக்கே தெரியாம அவளுக்குள்ள ஒளிஞ்சிட்டு தான் இருக்கான்னு நினைக்குறேன்..


மீண்டும் புல்லாங்குழல் இசையுடன் 'நினைவை வென்று உலகில் நின்று ....' என்று RMTன் கார்பரேட் பாடல் தொடங்குகிறது.

வெள்ளி, 10 ஜூன், 2011

வாசகர் கேள்வி-பதில்




நம்ம வலைத்தளத்தில் கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்புங்கன்னு சொன்னாலுஞ்சொன்னோம்,தபால் நிலையங்களிளெல்லாம் ஒரே தள்ளு முள்ளு. உலகம்முழுவதும் கேள்விக்கணைகள் ஏவுகணைகள் போல் வந்து இறங்கியிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருந்துகூட ஏழு சாக்கில் கேள்விகள் வந்திருக்கின்றன. மூட்டை மூட்டையாய் கடிதங்களை தூக்கிவந்தே அந்த தபால்காரருக்கு 'சிக்ஸ் பேக்' வந்து விட்டது. இந்த மக்களின் அறிவுப்பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது. சிறப்பான கேள்விக்கு வாராவாரம் மெகா பரிசாக ரூபாய் 101 வழங்கப்படும்னு சொன்னதும் கூட காரணமாய் இருக்கலாம். இந்த வார பகுதிக்கு செல்வோம்.

1) கடவுள் இருக்கிறாரா?? இல்லையா ?? (நெடுமுடியான், திருப்பதி)

யோவ் நீ ஸ்டாம்ப் ஓட்டமா அனுப்பின லெட்டருக்கு நான் பதில் சொல்றேனே அப்பவே தெரிய வேணாம்....கடவுள் இருக்கான்யா....


2) தமன்னா அழகா? அனுஷ்கா அழகா ? நீங்களே சொல்லுங்களேன் ...??(அழகப்பன்,காரைக்குடி)

இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....


3) நான் தங்கள் வலைத்தளத்தை கடந்த முப்பதாண்டுகாளாய் படித்து வருகிறேன்.உங்களை மாதிரி ஒரு Writer தமிழகத்தில் இல்லையென்கிறேன்....சரி தானே?? (திருவள்ளுவர்,மயிலாப்பூர்)

என்ன இப்டி சொல்லிடீங்க..நம்ம R2 ஸ்டேஷன்ல ஒரு Writer இருக்காரு...சும்மா குண்டு குண்டா சூப்பரா எழுதுவாரு...உங்களுக்கு தெரியாதா...





4)கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...


5)இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்தியா முன்னேராததற்கு காரணம் 'கண் திருஷ்டி' தானே ??? (கேது,திருநள்ளாறு)

கரெக்டா கண்டுபுடிச்சீங்க...ஒரு ஹெலிகாப்டர்ல மிளகா அம்பது கிலோ ,எலுமிச்சை இருபது கிலோ...மஞ்சள் முப்பது கிலோனு எடுத்துகிட்டு போய் இந்தியாவையே சுத்திவந்து வங்கக்கடல்ல போட்டு காரித்துப்பீருங்க ..திருஷ்டி கழிஞ்சிரும்...


6)அது ஏன் நூறு ரூபாய் நோட்ல காந்தித்தாத்தா படம் போட்டிருக்கு??? (அருமைநாயகம்,ஆத்தூர்)

அப்புறம்..உங்க அப்புத்தா படமா போடுவாங்க....




7)கௌதம் மேனனின் அடுத்த படம் எப்போ வரும்..??(சத்யஜித்ரே,வட பழனி)

அவர் வீட்ல HBO சேனல் ரெண்டு மாதமாய் வரவில்லையாம்.அதனால் படம் தள்ளிபோகும் என்று தெரிகிறது.


8)நான் குமாரை காதலிக்கிறேன்.குமாரோ மீனாவை காதலிக்கிறான்.மீனா பாபுவை காதலிக்கிறாள்.பாபு நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். நாங்கள் இப்போ என்ன செய்ய வேண்டும்.(ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி)

ம் ...நீங்க மருந்த குடிச்சி சாக வேண்டும்...


9) நான் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் ...அதற்கு என்ன செய்ய வேண்டும்?? (முலாயம் சிங், மூணாறு)

இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி எழுதிப்போடுவதை விட்டுவிட்டு வேலை மயி&** ஒழுங்காய் பார்க்க வேண்டும்.


10)ஊழலை ஒழிக்க வேண்டும்னு நம்ம ஆ.ராசா சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்க போறாராமே அப்டியா???(2G.கோபாலன், பெரம்பலூர்)

பிளாஸ்டிக்க ஒழிக்கணும்னு எங்கயாச்சும் பிராய்லர்கோழி போராட்டம் பண்ணி பாத்திருக்கீங்களா???

---தொடரும்



.

வெள்ளி, 3 ஜூன், 2011

கிரிக்கெட் தெரிந்தது போல காட்டிக்கொள்ள முத்தான முப்பது வழிகள்




இந்தியா சுதந்திரம் அடைந்த போது இவ்வளவு கொண்டாடினோமோ தெரியாது ஆனால் இந்த முறை உலகக்கோப்பை வென்ற போது மொத்த இந்தியாவும் ஆனந்த கூத்தாடி மகிழ்ந்தது.பள்ளியில்,கல்லூரிகளில்,வேலையிடங்களில்,தொலைப்பேசி உரையாடல்களில் என எப்போதும் கிரிக்கெட், விவாதத்துக்குள் நுழைந்துவிடும்.நம் நாட்டைப்பொருத்தவரை நமக்கு உயிர்வாழ ஆக்சிஜனுடன் கொஞ்சம் கிரிக்கெட்டும் வேண்டும். இந்த சூழலில் கிரிக்கெட் நடப்பு தெரியாமல் இருக்கும் சிலர் படும் பாடு இருக்கிறதே.. அது சொல்லி மாளாது... போன மாதம் இந்திய,மேற்கிந்திய தீவுகள்க்கு இடையிலான உலககோப்பை கிரிக்கெட் போட்டியை நண்பரின் வீட்டில் பார்த்துக்கொண்டிருந்தோம். 260 ஸ்கோரை மேற்கிந்திய தீவுகள் சேஸ் செய்வார்களா என்று நானும் நண்பரும் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தோம். திடீரென விவாதத்துக்குள் புகுந்த நண்பரின் மனைவி "லாராவ அவுட் ஆக்கிட்டா முடிஞ்சது..." என்றார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கிரிக்கெட் தெரியாதவர்கள்,பிடிக்காதவர்கள் ஆகியோரை "யாரு பெத்த பிள்ளையோ" என்று பரிதாபமாய் பார்க்கும் நிலை தான் உள்ளது. அந்த அபாக்கியவான்களுக்கு தான் இந்த கட்டுரை.

யாராவுது கூட்டமாக நின்று பழைய கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேசிகொண்டு இருந்தால் நடுவில் புகுந்து , "World Cupல சச்சின் அடிச்ச அந்த சிக்சர் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குதுங்க..Chanceless" என அடித்து விடுங்கள். எந்த World Cup, எந்த சிக்சர் என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. நீங்கள் சொல்லி முடித்தவுடன் எதோ ஒரு மொக்கைச்சாமி "ஆமாங்க" என சொல்லிவிட்டு "அக்தர் பால்ல அங்க அடிச்சார்,கேடிக் பால்ல இங்க அடிச்சார்"னு வரலாற்றை பிரிச்சு பேன் பார்ப்பான்.இடையிடையே மண்டையை ஆட்டிக்கொண்டே எதோ ஏற்கனவே தெரிந்த விஷயத்தை கேட்பது போல அசால்டாய் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்டியே "பெங்களுர்ல அடிச்ச செஞ்சுரி தான் அவரோட Best" என எதாவுது ஒரு ஊர் பெயரை சொல்லி ஒரு பிட்டை போடுங்கள். அந்த ஆள் எல்லா ஊர்லயும் செஞ்சுரி அடிச்சு வச்சிருக்கிறார். ஆகையால் மேற்படி பார்ட்டிகள் எதோ ஒன்றை எடுத்து அரை மணிநேரம் பேசி முடிப்பார்கள். அப்புறம் தோனியை "மஹி" என்றும் ஷேவாக்கை "வீரு" என்றும், காம்பீரை "கெளதம்" என்றும் ஏதோ உங்க மாமா பையனை சொல்வதைப்போல் செல்லமாய் குறிப்பிடுங்கள்.



அப்புறம் கூட்டமாய் எல்லோரும் உட்கார்ந்து டிவியில் போட்டிகளை பார்த்துக்கொண்டிருக்கும்போது ,"அந்த "Deep square Leg" ல நிக்குறது யாருப்பா...ஓட்டைய விட்டுக்கிட்டே இருக்கான்" என ஒரு போடு போடுங்கள். கொஞ்ச நேரம் பதிலே வராது. ஏன்னா இந்தியாவில் கிரிக்கெட் பார்க்கும் தொண்ணூறு சதவீதம் பேருக்கு 'Fielding Position'களின் பெயர் தெரியாது. நம்ம தோனியே கூட "எப்பா ...போய் சோத்தாங்கைப்பக்கம் நில்லுப்பா" என்று பீல்டர்களை சொல்லுவதாய் கேள்வி. ஆகையால் உங்கள் இமேஜ் எக்குத்தப்பாய் எகிறும். ராகுல் டிராவிடும், லக்ஷ்மனும் எந்த ஷாட் அடித்தாலும் "வாவ்..சூப்பர்...இது ஷாட்..." என உச்சுக்கொட்டுங்கள்.அதிலும் அம்பயரை குறிவைத்து நேராய் அடிக்கும் ஷாட்களுக்கு எழுந்து நின்று கைதட்டி விடுங்கள். இந்த T20 வந்து கிரிக்கெட்டையே குலைச்சிருச்சு...குதறிருச்சு என புலம்பித்தள்ளுங்கள்.உங்களை பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர் என நினைத்துக்கொள்வார்கள்.

இந்தியா எத்தனை ரன் எடுத்தாலும் 'இன்னும் ஒரு பத்து ரன் ஈசியா எடுத்திருக்கலாம்' என சொல்லுங்கள். அப்புறம் குறிப்பாய் முக்கியமான வெளிநாட்டு வீரர்களின் பெயரை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.பிரேமானந்தா போல முடி வைத்துக்கொண்டு சைடு வாக்கில் மாங்கா அடிப்பது போல பந்து வீசுபவர் பேர் மலிங்கா. பெயரை நன்றாக படித்துக்கொள்ளுங்கள்.நீங்க பாட்டுக்கு மகாலிங்கம் என்று சொல்லி விடாதீர்கள். பேட்டை காஜா பீடியை பிடிப்பது போல அசால்டாய் பிடித்துக்கொண்டு கருப்பன சாமியாய் நின்று வெளுத்துக்கட்டுபவர் பெயர் கெயில். மேட்ச் முடிஞ்சவுடன் ஓட்டமாய் ஓடி வந்து ஒரு வெள்ளைக்கார புள்ளைக்கு கிஸ் அடிப்பவர் பெயர் வார்னே. பேட் பிடிக்க வந்தவுடனே தலைக்கு மேலே நூறு மீட்டருக்கு தூக்கி அடிச்சு அவுட் ஆகிட்டு போற பாய்க்கு பேர் அப்ரிதி. எந்நேரமும் சிவிங்கியை மென்னுகிட்டே எல்லாருகூடயும் சண்டை கட்டுபவர் பேர் பாண்டிங் (பாண்டி அல்ல)


யாராவுது ஆஷஸ் பாத்தியா என்று கேட்டால்,ஆஷ் ட்ரேயை நோக்கி ஓடாதீர்கள்.அது ஒரு கிரிக்கெட் தொடர். "இல்ல மச்சி..போன தடவ மாதிரி இல்ல" என கூசாமல் சொல்லுங்கள். எந்த ஆஷஸ் தொடரும் அதுக்கு முந்துன தடவை போல இருந்ததில்லை. ஆஷிஸ் நெஹ்ரா,ஸ்ரீசாந்த் போன்றோரில் யாராவுது அணியில் இருந்தால் 'இவய்ங்கள ஏன் தான் சேக்குராங்களோ'னு கோபமாய் கத்துங்கள். அவர்களை பெற்றவர்களை தவிர இந்தியாவில் யாருக்கும் அவர்களை பிடிப்பதில்லை.அதனால் உங்களுக்கு ஆதரவு ஓட்டுக்கள் அதிகமாய் விழுகும். ஐ.சி.சி....பி.சி.சி.ஐ....,ஐ.பி.ல்,.....போன்ற keyword களை ஞாபகமாய் வைத்துக்கொள்ளுங்கள் பின்னாடி உபயோகமாய் இருக்கும்.


மேற்கூறிய எல்லாம் செய்தும் பாச்சா பலிக்கவில்லை, விடாமல் கிரிக்கெட் அரக்கர்கள் ரத்தம் குடிக்கிறார்கள் என்றால் நமக்கு இருக்கவே இருக்கிறது பிரம்மாஸ்திரம் அதை சொல்லி ஆட்டையை முடியுங்கள். " Fraud பசங்கப்பா...எல்லாம் மேட்ச் பிக்சிங் ..ஸ்பாட் பிக்சிங் ....ச்சீ இத பாக்குறதுக்கு........"

செவ்வாய், 31 மே, 2011

என்னத்த எழுத??







ஒரு வலைத்தளம் ஆரம்பித்து தொடர்ச்சியாய் விடாமல் எழுதுவது என்பது மக்கள் டிவியை அரைமணிநேரம் உட்கார்ந்து பார்ப்பதை விட கடினமானது. ஆரம்பிச்ச நாளுல இருந்தே அப்படி என்னதான் எழுதுறதுனு மூளைல ஒரே புகைச்சல். சரி அக்கம்பக்கத்துல Blog எழுதுறவுங்க என்ன எழுதுறாங்கன்னு பார்த்தா நமக்கு ஒரு க்ளு கிடைக்குமேனு ஒரு நோட்டம் விட்டேன். சில பேரு புது படம் வந்தவுடனே அதுக்கு ஒரு விமர்சனத்த போடுறாங்க. படம் பாத்துக்கிட்டு இருக்கிறப்பவே "Interval" கேப்புல விமர்சனம் போடும் விட்டலாச்சாரியார்கள் கூட உண்டு. அதில் "திரைக்கதை சரியில்ல..", "நடிகை நடிகர்கள் தேர்வு கச்சிதம்..", "ஒளிப்பதிவு அருமை..."னு ஆனந்த விகடன் பாதிப்புகள் அதிகமாய் இருக்கிறது. வேறு சிலர் ஆங்கில படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று வெள்ளைக்காரன் பிஸ் அடிச்சாக்கூட "அவுங்கள மாதிரி மூச்சா அடிக்க ஆள் இல்லைங்க"னு புலம்புகிறார்கள்.

இப்படி அடுத்தவுங்கள லொட்டை சொல்றது ரொம்ப எளிது.ஆனா எழுதிப்பார்த்தா தான் அதில் டவுசரை கிழிக்கும் சமாச்சாரங்கள் இருப்பது தெரியும். ரொம்ப நாளைக்கு முன்னாடி இல்லாத மூளையை இறுக்கிக் கசக்கி ஒரு பதிவு எழுதினேன். எல்லோருக்கும் அதை மின்னஞ்சல் வேறு செய்தேன். அனுப்பிய பத்தே நிமிடத்தில் ஒரு தோழியிடம் இருந்து பதில் வந்தது. சந்தோசமாய் திறந்து படித்துப்பார்த்தால் ,"டேய் லூசு ..உனக்கு வேற வேலையே இல்லையா.. " என்று என் தன்மானத்தின் மேல் தடியடி நடத்தப்பட்டிருந்தது. "எப்படிங்க பொறுமையா உட்கார்ந்து எழுதிறீங்க" ,"ஆபிஸ்ல "பெஞ்ச்ல" இருக்கீங்களா", "தூக்கத்துல எழுதுற வியாதி ஏதும் இருக்கா??' னு ஏகப்பட்ட ஏவுகணைகள் வந்து தாக்கும். ஒரு பயலும் நம்ம எழுதியது பற்றி பேச மாட்டார்கள். ஆங்காங்கே ஆலங்கட்டி மழை போல எப்போதாவது நல்ல விமர்சனங்கள் வரும். ஒரு எழுத்தாளனுக்கும் ,வலைத்தளத்தில் எழுதுபவனுக்கும் உள்ள வித்யாசம் என்பது சச்சினுக்கும் ,தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவனுக்கும் உள்ள தூரத்துக்கு சமமானது.இந்த யதார்த்தை புரிந்து கொண்டு எழுதுதல் நலம். ஏதோ படத்தில் மம்மூட்டி சொல்வது போல சில நேரங்களில் "உப்மா" கூட நல்லா இருக்கும்.



முதல் முதலில் மின்னல் என்ற கவிதை எழுதினேன். என்னை தவிர ஒரு பத்து பேர் அதை படித்திருப்பார்களா என்பது சந்தேகம். இருந்தும் அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்.எழுதுவது கலவி போல. யாரும் பாராட்டுவதற்கு செய்வதில்லை. புத்தகங்கள் படிக்கிற போது அந்த கதா பாத்திரங்கள்,சம்பவங்கள் நம் முன் வாழ்ந்து கொண்டே இருக்கும். நல்ல எழுத்து நம்மை அந்த உலகில் பயணிக்க வைக்கும்.ஜெயமோகன் சொல்வது போல ஒரு எழுத்தாளன் நிஜத்தைப்போல ஒரு நிழலான வரலாற்றை உருவாக்குகிறான். நானும் வாழ்நாளுக்குள் நல்லோர் மெச்சும் ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்று எத்தனித்துக்கொண்டே இருக்கிறேன், ஆண்குழந்தை வேண்டி அடுத்தடுத்து பெண்குழந்தைகள் பெற்றெடுக்கும் பெற்றோர் போல.சரி வாழ்க்கையில் தான் தினமும் சமாளிப்புகள் செய்கிறோமே...எழுத்திலாவது முரண்டு பிடித்து சுயத்தை காப்போம் என எப்போதும் முயல்கிறேன். படிப்பதே பத்து பேர் அதில் என்ன பகுமானம் என்றெல்லாம் கேலி செய்தாலும் பரவாயில்லை என.


Cyanide கண்டுபிடித்தவர் அதை உண்டு பார்த்துவிட்டு அதை விவரித்து எழுதி விட்டு இறந்ததாய் சொல்லுவார்கள். ஒரு சிகரெட்டை வாங்கி ஒரு முறை புகைத்து பார்த்து அந்த அனுபவத்தை ஒரு பதிவாய் எழுதலாமா என யோசித்தேன்.ம்ஹூம்...ஏற்கனவே எனக்கு அறிவுரை சொல்ல தனியாய் ஒரு கழகமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவேற வேண்டாம் என விட்டு விட்டேன். பிறகு ஆர்வக்கோளாறில் வெண்பா பற்றி படித்து "ஈற்றடி சிறுத்து இருக்கும்" என ஒரு பதிவு தயார் செய்து ,சரி தப்பு பார்க்காமல் நாலஞ்சு வெண்பா அடித்து விட்டேன். பதிவேற்றும் அளவு அந்தப்பதிவுக்கு தகுதியில்லாமல் அது தூங்கிகொண்டிருக்கிறது.இலங்கைப்பிரச்சனையின் வரலாற்றை படித்து உணர்ச்சிமயமாய் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. போதிய அறிவு இல்லாமல் பதிவு எழுதுவது குறைகுடம் குத்தாட்டம் போடுவது போல. ஆகையால் வாசித்தலை அதிகப்படுத்தி இருக்கிறேன்.


கொஞ்ச நாள் முன்னாடி சென்னையில் இருந்த போது பக்கத்து வீட்டு சிறுவன் ஓடி வந்தான்.

"அங்கிள் நீங்க தமிழுல ப்ளாக்லாம் எழுதுவீங்கன்னு உங்க பிரெண்ட்ஸ் சொன்னாங்க... அப்டியா"

இத்தன நாளா நம்ம பெருமைய நாமளே தெரியாம இருந்திருக்கோம் என மனதில் நினைத்துக்கொண்டு "ஆமா ...அதுக்கென்ன..." என்றேன்.

" அது ஒண்ணுமில்ல...எங்க கிளாஸ் மிஸ் தமிழ் மிஸ்... எனக்கு லீவ் லெட்டர் தமிழுல எழுதித்தாங்களேன் ப்ளீஸ்...."




செவ்வாய், 25 ஜனவரி, 2011

பெக்-3 : காதல்



முன்குறிப்பு: உள்ளதை உள்ள படி உரைக்க முயன்றதால் இது வயது வந்தோருக்கான கட்டுரை ஆகிறது. கலாசார காவலர்கள் படிக்காமல் இருப்பதே உத்தமம்.


ஹைதராபாத்தில் குளிர் எட்டு டிகிரியை தொட்டிருந்த ஒரு இரவுப்பொழுது. விவேக் சத்தம் போட்டு ஏப்பம் விட்டபோது எல்லோரும் எங்களையே பார்த்தார்கள். உபயம் அல்கஹால். நகரின் பெரிய ஹோட்டல்களில் அதுவும் ஒன்று. 'லேட்டாகுதுடா கெளம்புவோம்..' என நான் சொன்னது அவன் காதுகளை சென்றடைந்ததாய் அறிகுறி எதுவும் இல்லை. 'ஒன் பெக் ஓல்ட்மங்க்' என்றான் வெயிட்டரிடம்.எனக்கு அடி வயிற்றில் கோபப்பந்து உருண்டது. எனக்கு வந்த பிரியாணியை நான் சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. விவேக் என்அலுவலகத்தோழன்.ஒரே வீட்டில் வேறு தங்கியிருக்கிறோம்.

'டேய்..போதும்டா..நெறையா குடிச்சா யாராவது ஒனக்கு அவார்டு தரேன்னு சொல்லிருகாங்களா' என்றேன் அலுப்புடன்.

விவேக் குனிந்தான்.அந்த குண்டான உடம்பு மட்டும் குலுங்கியது.பிற்பாடு தான் புரிந்தது அவன் அழுது கொண்டிருக்கிறான். 'அய்யயோ..அந்த விஷயமா' என எனக்கு கொஞ்சம் பீதி ஏற்பட்டது. விவேக் போதை முத்திப்போனால் தன்னுடைய காதல் கதையை சொல்லித்தொலைவான்.கிட்டத்தட்ட இருபது முறைக்கு மேல் நானே கேட்டிருக்கிறேன்.

'இன்னைக்கு என்ன நாள் தெரியுமா??'

'அவ குழந்தைக்கு பொறந்த நாளா??'

என்னை முறைத்து பார்த்துவிட்டு 'அவ கிட்ட என்னோட காதல சொன்ன நாள்' என்றான்.

'ஓ அப்டியா..காலெண்டர்ல எதுவும் போடல சாரி... அதான்...'

இந்தியாவில் மக்கள் தொகைக்கு அப்புறம் அதிகமாய் இருப்பது காதல் தான். அதுவும் முக்கால் வாசி காதல்கள் இந்திய கால்பந்து அணி போல,தோத்து தான் போகும்.அவன் உளறத்தொடங்கினான். நான் வழக்கம்போல் அக்கம்பக்கத்து டேபிள்களில் அமர்ந்திருக்கும் வட இந்திய பெண்களை சகோதர பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.ஒரு பெரியவர் ஜீன்ஸ் டீ சர்ட் சகிதமாய் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் கண்கள் விவேக்கையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. இடதுகை ஆள்காட்டி விரலால் அடிக்கடி மூக்கை சொரிந்து கொண்டிருந்தார்.


'2007ல அவ பிறந்த நாளன்னைக்கு நைட் 12 மணிக்கு நேரா போய் wish பண்ணேன். என் கை நிறைய அவளுக்கு புடிச்ச பூக்களும்,புத்தகங்களும்.அவளோட கண்ணுல அப்டியே தண்ணி அருவி மாதிரி கொட்டியது. நேரா ஓடி வந்து என்ன கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தா தெரியுமா?? அத என்னைக்கும் மறக்க முடியாது'

கன்னத்தில் கொடுத்தாளா?? இல்லை உதட்டில் கொடுத்தாளா?? என்ற உன்னத சந்தேகம் எனக்குள் தோன்றியது. தருணம் சரி இல்லை என்பதால் கேட்கவில்லை.

முகத்தை அஷ்ட கோணலாய் வைத்துக்கொண்டு ஒரு Pegஐ நிறுத்தாமல் குடித்தான். முகமெல்லாம் வியர்த்து போயிருந்தது. அவன் மேல் ஒரு வித வாடை வேறு வர தொடங்கி விட்டது.மட்டையாகி போனால் ,நான் ஒருத்தனாய் இவனை எப்படி வீடு போய் சேர்ப்பது என்ற கவலை வேறு வந்துவிட்டது. டீ ஷர்ட் பெரியவர் இப்பவும் விவேக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். ஒரு வேளை இந்த ஆளு இவனுக்கு சொந்தக்காரரோ என்றெல்லாம் எனக்கு யோசிக்க தோன்றியது.

எது நடந்திருமோனு பயந்தனோ அது அப்போது தான் நடந்தது. 'என் கைல மோதிரம்லாம் போட்டு விட்டு ,நீ தான் என்னோட புருசன்னுலாம் சொல்லிட்டு கடைசி என்னை விட்டுட்டு போயிட்டாடா அந்த தேவிடியா....' என மிகச்சத்தமாக சொல்லிவிட்டு பொல பொல வென வாந்தி எடுத்தான்.என் பேண்டும் கொஞ்சம் நாஸ்தி ஆனது.சாரில் இருந்து கீழே தரையில் உட்கார்ந்தான். நான் வேகமாய் கீழே விழுந்து விடுவானோ என்கிற பயத்தில் தோளை பிடித்தேன்.கொஞ்சமாய் திறந்த கண்களில் என்னை பார்த்தான். எல்லோரும் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் முகம் சுளித்தார்கள். பலர் 'இவனுகள யாருடா உள்ள விட்டது' என்பது போல பார்த்தார்கள்.

'எவ்வ்வ்ளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..நிம்மதியா தூங்கி ரெண்டு வருஷம் ஆச்சுடா...' எனச்சொல்லி என் மடியில் படுத்து அழத்தொடங்கினான். அடிவயிற்றில் இருந்து இரைந்து அப்படி ஒரு அழுகை. எனக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனை பார்க்க ரொம்ப பாவமா இருந்தது. நட்சத்திர ஹோட்டல் என்பதால் அதற்குள் சிப்பந்திகள் வந்து நாகரிகமாய் எங்களை வெளியே தள்ளினார்கள்.விவேக்கை தூக்கி வந்த ஒருத்தன் கடுப்பில் 'பென் சோத்' என்றான் சத்தம் குறைவாக.


ஹோட்டலின் வெளியே ஆட்டோவுக்காக காத்திருந்தோம் இருவரும். விவேக் என் தோளில் சாய்ந்திருந்தான். அந்த டீ ஷர்ட் பெரியவர் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து எங்கள் பக்கத்துக்கு வந்தார்.தலையில் நிறைய முடிகள் வெள்ளை.ஆனால் உடம்பு இருக்கமாய் இருந்தது. அவரும் கொஞ்சம்போதையில் தான் இருப்பதாய் தோன்றியது.விவேக்கின் அருகில் வந்து அவன் தாடையை பிடித்து முகத்தை தூக்கி , 'என்ன லவ் Failure ரா??' என்றார். மவுனமாய் இருந்தான்.

'காலைல எழுந்ததும் கை அடிச்சிடு ..எல்லாம் சரி ஆகிடும்' என சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார். நாங்கள் அவரை பார்த்துக்கொண்டே நின்றோம்.

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழி விட்டு
ஏறுங்கரைகண்டி லேன் ,இறைவா , கச்சியேகம்பனே

- பட்டினத்தார்




புதன், 29 டிசம்பர், 2010

புத்தாண்டு தீர்மானங்கள்

அலுவலகத்தில் வேலை பார்ப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிக்கொண்டிருந்த போது தான் நண்பர் அதை கேட்டார். 'ஏன்டா சிவா.. ஒன்னோட 'Newyear resolutions' என்னாதுடா ??' என்றார். 'ம்ம்.. உங்க Frienshipஐ கட் பண்ணலாம்னு இருக்கேன்' னு எப்போதோ கேட்ட ஒரு சினிமா ஜோக்கை வைத்து அவர் மூக்கை பதம் பார்த்தேன். சிரிப்பதற்காக மட்டுமே அலுவலகம் வரும் நாலு பேர் அருகில் சிரித்தனர். இருந்தாலும் அவர் கேள்வியின் நியாயம் எனக்கு உறைக்கத்தான் செய்தது. Newyear Resolution எடுக்காத பட்சத்தில் நம் மீது சில நாச சக்திகள் 'உதவாக்கரை' பட்டம் சூட்டி விடும் அபாயம் இருப்பது எனக்கு அப்போது தான் புலப்பட்டது. இப்போது புத்தாண்டு வேறு நெருங்கி கொண்டிருப்பதால், இதுசமயம் 'Resolution'களுக்கு செம்ம கிராக்கி ஏற்பட்டு விட்டது போல. 'மாப்ள எதுனா Resolution இருந்தா சொல்லுடா..' என கேட்கும் நண்பர்கள் மூலம் இது உறுதியாகிறது.

எது எப்டியோ நானும் புத்தாண்டு தீர்மானம் எடுத்துவிடுவது என முடிவு செய்து, சிந்தனை கிடங்கை தோண்டினேன். என்ன ஆச்சர்யம் நிறைய விசயங்கள் இருக்கின்றன. பின்பு மிகுந்த வீராப்புடன் எழுத தொடங்கினேன்.

1.இனிமேல் மேனேஜர் சொல்லும் மொக்கையான ஜோக்குக்கு தேவைக்கு அதிகமா சிரிக்கக்கூடாது.

2.மதிய வேளைகளில் தாங்கள் கொண்டு வந்த சாப்பாட்டை பகிர்ந்து கொண்டு ,'எப்டி இருக்கு' என கேட்கும் தோழிகளிடம் 'கேவலமா இருக்கு' னு உண்மையை சொல்லி விடுதல் வேண்டும்.

3. 'பஜாஜ் எவ்வளவு மைலேஜ் தருது...ஹோண்டா என்ன ரேட் ??' என்று கேட்பதை விட்டுட்டு முதலில் டூ வீலர் லைசென்ஸ் வாங்குதல் வேண்டும்.

4. போடும் ஜீன்ஸ் பேண்டுகளை ஒரு மாதத்திற்கு ஒரு தடவையாவது துவைத்து விட வேண்டும்.


5. 'வித்யாசமா எடுத்திருக்கோம்' ,'அவரே பாத்திட்டு அழுது வடிஞ்சிட்டார்', 'அப்டியே வாழ்ந்திருக்காங்க..' னு வரும் விளம்பரங்களை நம்பி மொக்கை படங்களை பார்க்க தியேட்டர் செல்லுதல் கூடவே கூடாது .

6) 'ஏன்டா தமிழுல 'சீக்கு' ங்றத தான் இங்கிலிஷ்காரன் 'Sick' னு காப்பியடிச்சுடானா டா ??' போன்ற முற்போக்கு சந்தேகங்கள் கேட்க நண்பர்களை இரவு பனிரெண்டு மணிக்கு எழுப்புதல் கூடாது.

7) பெரியவர்கள் உயிரை உருக்கி அறிவுரைகள் சொல்லுகையில் கொட்டாவி விடக்கூடாது.

8) 'நாங்கெல்லாம் காலேஜ் படிக்கிறப்போ..' னு யாராவுது ஆரம்பித்தால், அவர் வாங்கிக்கொடுத்த ஓசி டீயையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்து ஓடி விடுதல் வேண்டும்.

9) 'நா இப்போ தலைய சொறிஞ்சிட்டு இருக்கேன்.நீ என்ன பண்ணிட்டு இருக்க??' போன்ற Chat Messageகளை தவிர்க்க வேண்டும்.

10)நண்பர்கள் யாராவுது புகைப்பிடித்தால் ,'உங்கூட எங்கம்மா சேரக்கூடாதுனு சொல்லிருக்காங்க' என சொல்லி அவர் நட்பை முறித்து விட வேண்டும்.


எழுதிய முத்தான பத்து தீர்மானங்களையும் அடுத்த நாள் நம்ம அலுவலக நண்பரிடம் காட்டினேன். வாசித்து பார்த்தார். அவரின் முகம் மாறியது. கண்களிலே நீர் கொட்டியது. 'இருக்காத பின்னே..' என பெருமைபட்டுக்கொண்டே ,'அவ்வளவு நல்லவா இருக்கு' என்றேன். 'சுகாதாரமா இருக்கட்டுமேனு கண்ணாலேயே காரி துப்பினேன்' என்றார். மீண்டும் அந்த நாலு பேர் சிரித்தார்கள்.



வியாழன், 23 டிசம்பர், 2010

விக்கி- சில குறிப்புகள்




பெயர்: விக்னேஷ் (அ) விக்கி
நிறம்: மாநிறம்
குணம்:குசும்பு

எல்லா விக்னேஷ்களை போலவும் அவனும் 'விக்கி' என்றே அழைக்கப்பட்டான். விக்கியுடன் நான் அதுவரை அதிகம் பேசியது கிடையாது. பதினொன்றாம் வகுப்பில் எங்கள் பெஞ்சில் வந்து உட்காந்த போது முதலில் நானும் பிரிதிவியும் கொஞ்சம் பீதி ஆனோம். ஏனெனில் அதுவரை அவனை பற்றி கேள்விப்பட்ட விஷயங்கள் அப்படி. 'மாப்ள...நா இங்க உட்கார்ந்துக்கவா??' என விக்கி கேட்ட போது, நான் பிரிதிவியை பார்த்தேன். அவன் சாணியை மிதித்தவன் போல் முழித்தான். ஒரு வழியாய் 'ஹி..ஹி..' என இளித்துக்கொண்டே இடம் கொடுத்தோம். 'இனிமே நமக்கு சங்கு தான் டா' என பிரிதிவி என் காதில் மெல்லமாய் சொன்னான். அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. விக்கி தன் பணியை அன்றே செவ்வனே துவக்கினான். வாத்தியார் 'Computer Science' வகுப்பில் Internet க்கும் Intranet க்கும் என்ன வித்யாசம் என ஒரு கேள்வியை பொத்தாம் பொதுவாய் கேட்டார். வழக்கம் போல் மொத்த வகுப்புமே அமைதி காக்க, விக்கி "ஸ்பெல்லிங் சார்" என குனிந்து கொண்டு சத்தம் போட்டு சொன்னான். எல்லோரும் பயங்கரமாய் சிரித்தார்கள். கொடுமை என்னவெனில், யார் சொன்னதுனு யாருக்கும் தெரில. மொத்த வகுப்பும் எங்கள் பெஞ்சையே வெறித்து பார்த்தது.

வாத்தியார் எங்கள் அருகில் வந்து ,'மூணு பேருல யாருடா??' என்றார். நான் 'நாங்க இல்ல சார்' என்றேன். என் கன்னத்தில் ஜெட் வேகத்தில் ஒரு அறை விழுந்தது.அடுத்து விக்கி கண் கலங்கி 'எனக்கு சத்தியமா தெரியாது சார்'னு என கேட்பதற்கு முன்னே சொன்னான்.அந்த உலக நடிப்பை பார்த்து மிரண்டு போனேன். கடைசியாய் நின்ற ப்ரிதிவியை பார்த்தார். கோழி திருடியவன் போல முழி,கையில் கலர் கலரான கயிறுகள், பாக்கெட்டில் சீப்பு என சந்தர்ப்ப சாட்சிகள் எல்லாமே பிரிதிவிக்கு எதிராக அமைந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன்னாலே வாத்தி அவன் கன்னத்தில் மானாவாரியாய் தூர் வாரினார். அவர் போனப்பிறகு விக்கி ப்ரிதிவியிடம் ,'மாப்ள அப்டி இப்டி அழுது சீன போடுறத விட்டுட்டு ..மலையூர் மம்பட்டியான் மாதிரி வெரப்பா நின்னா இப்டி தான்' என்றான். பிரிதிவி பதிலேதும் பேசவில்லை. அவ்வளவு அடி வாங்கினால் யாரால் தான் பேச முடியும்.

பிடிக்காத பாடம்:வேதியல்

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே நாங்கள் மூவரும் நெருங்கி விட்டோம். அதுவரை சாம்பார் பெஞ்ச் ஆக இருந்த நாங்கள் சண்டியர் பெஞ்சாக மாறினோம். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் திரும்பி பார்க்கும் முதல் பெஞ்ச் மாணவர்களுக்கு கெட்ட வார்த்தைகளை பரிசளித்தோம். விக்கி வேதியலை கண்டாலே சிலுவையை கண்ட ரத்த காட்டேரி போல் தெறித்து ஓடுவான். வேதியலில் இரண்டு இலக்க மதிப்பெண்களை அவன் வாங்கியதே இல்லை.இப்படி இருக்க, 'கொடுக்கப்பட்ட உப்பு என்ன வகையை சார்ந்தது' என்று கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூட சோதனை நடந்து கொண்டு இருந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுக்கப்பட்ட உப்பு எந்த வகையை சார்ந்தது என்று அவரவர் வேதியல் சோதனை செய்து கண்டு பிடித்து சொல்ல வேண்டும். விக்கி பாராளுமன்றம் சென்ற 'அண்ணன் அஞ்சாநெஞ்சர்'
போல் முழித்து கொண்டிருந்தான். 'டேய் மாப்ஸ்.. இந்த கருமம் என்னா உப்புடா??' என கேட்க, பிரிதிவி விளையாட்டாய் 'ஜாவா டை ஆக்ஸைட்' என்றான். அது கிண்டல் என்பது கூட தெரியாமல் வாத்தியாரிடம் போய் உப்பை காட்டி 'ஜாவா டை ஆக்ஸைட்' என்று பெருமை பொங்க சொல்லித்தொலைந்து விட்டான். அன்று விக்கிக்கு வேதியல் ஆய்வுக்கூடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மூஞ்சி வீங்கி வெளியே வந்த விக்கியை பார்த்து நானும் ப்ரித்திவியும் அடக்க முடியாமல் சிரித்தோம்.கடைசியில் ஒரு பப்ஸ் வாங்கி கொடுத்து அவனை சமாதான படுத்தினோம்.


பொழுபோக்கு: நடிகைகளின் புகைப்படங்களை சேகரிப்பது

விக்கியின் maths நோட்டுக்குள் அழகான பாலிவுட் நடிகைகளின் போஸ்டர்களை வைத்திருப்பான். கரீனா கபூரும் ,கரிஷ்மா கபூரும் இருக்கும் படத்தை காட்டி ,'மாப்ள அக்காள நீ கட்டுற..தங்கச்சிய நான் கட்டுறேன்..' என சொல்வான். எதாவுது சுமாரான பெண்ணாக பார்த்து ப்ரித்திவிக்கு ஒதுக்கி விடுவான். என்ன காரணத்தினாலாவோ விக்கிக்கு தென்னிந்திய நடிகைகளை பிடிப்பதில்லை.

பட்ட பெயர்: மாரி

சில நேரங்களில் கட்டுக்கு அடங்காமல் எங்களை கேலி செய்து கொண்டிருப்பான். அப்போது எங்களின் பிரம்மாஸ்த்திரம் 'மாரி' தான். அவனை மாரி என கூப்பிட்டால் வெறியாகி விடுவான். எதற்காக அவனுக்கு அப்படி ஒரு பட்ட பெயர் வந்தது என்பது தெரியவே இல்லை.

பிறந்த நாள்: 25-12-1983

பிறந்த நாளை எப்போதும் சீரும் சிறப்புமாய் கொண்டாடுவான். 'ஆமா..இவர் பெரிய நேரு மாமா..' என நாங்கள் கேலி செய்வதையும் பொருட்படுத்த மாட்டேன். அந்த பிறந்த நாளில் சூராம்பழம்,முட்டைபஜ்ஜி, Fanta என எனக்கும் ப்ரித்திவிக்கும் வாங்கித்தந்தான். பதிலுக்கு நாங்கள் சுமார் ரூபாய் நாலு பெருமானமுள்ள ஒரு Handband பரிசளித்தோம். வாங்கி பார்த்த விக்கி 'பிச்சைக்கார பசங்களா..' என சொல்லிக்கொண்டு எங்களை ரோட்டில் விரட்டி வந்தது இன்னமும் பசுமையாய் இருக்கிறது.

மறைந்த நாள்: 13-03-2003

என் வாழ்வின் சோகமான தருணங்களில் ஒன்று விக்கியின் மரணம். ஒரு பைக் விபத்தில் மரணித்தான். அதீத வேகமாய் மூவர் பயணித்த வண்டி மைல் கல்லில் மோதி ,இருவர் அந்த இடத்திலேயே மடிந்தார்கள். விக்கி மட்டும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவ மனையில் கோமாவில் ஒரு வாரம் இருந்து ,பின் மீண்டு எல்லோரையும் அழ வைத்து இறந்தான். விக்கியின் எல்லா செயல்களிலும் ஒரு மெத்தனம் இருக்கும். அந்த நேரத்தில் அது எங்களுக்கு சிரிப்பாய் இருக்கும். எத்தனையோ முறை அவனிடம் 'டேய் வெண்ணை.. மெதுவா போ... எங்கயாவுது விழுந்து வைக்கப்போறோம்' என அவன் வண்டி ஓட்டுகையில் சொல்லி இருக்கிறேன். 'மாப்ள மோளாத டா..இது தாண்டா திரில்லே' என்பான். ஹெல்மெட் போட்டிருந்தால்,மித வேகமாய் போயிருந்தால், சாலை விதிகளை மதித்து இருந்தால்..இப்படி எல்லா 'ஆல்களும்' நடந்திருந்தால் எங்கள் விக்கி இன்று எங்களுடன் இருந்திருப்பான்.விக்கியின் அம்மாவின் அழுகையை பார்த்த பிறகு விக்கி மேல் எனக்கு கோபமே மிஞ்சியது. இன்று ரோட்டில் மிக வேகமான பைக்குகளை செலுத்தும் நிறைய 'விக்கிகளை' பார்க்கிறேன். சொன்னால் கேட்பார்களா தெரிய வில்லை??

மெத்தனமாய் வாகனம் செலுத்துவோருக்கு ஒரு சின்ன வேண்டுகோள். விக்கியை பார்த்தால் நான் விசாரித்ததாய் சொல்லவும்!!!!