செவ்வாய், 26 ஜூன், 2012

குவாண்டம் -(பால குவாண்டம்)




"ஊதா கலர் நைலான் சேலை கட்டியிருந்தாள். கொஞ்சம் வியர்வை வாடையுடன் பாண்ட்ஸ் பவுடர் வாசமும் அவள் மீதிருந்து வந்தது. நான் பின்னே நிற்பது தெரிந்ததும் அலமாரியை துடைப்பதை நிறுத்தி விட்டு திரும்பி நின்று "என்ன??" என்பது போல் புருவத்தை உயர்த்தினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கன்னத்தை கிள்ளினேன். "அர்ஜுன் எங்க??" என்றேன். அவள் உள்ளறையை பார்த்தாள். நான் அந்த திசையை நோக்கி பார்த்தேன். அர்ஜுன் உள்ளே கை சூப்பிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். அவளை வளைத்து பிடித்துக்கொண்டேன். என் மூக்கை பிடித்து திருகினாள். நான் அவள் தலையை கையால் பிடித்து உதட்டில் முத்தமிட்டேன். ஆரஞ்சு பழத்தில் தேன் ஊற்றியது போல் இனிப்பு. உடல் முழுக்க ஒரு பரவசம் பரவியது. கொஞ்சமாய் கண்ணை திறந்து என்னை பார்த்தாள். அந்த பார்வை முத்தத்தை விட போதையாய் இருந்தது. என்னை முழுவதுமாய் கட்டிக்கொண்டாள். எனக்கெல்லாமே நீ தான் என்பது போல் ஒரு ஸ்திரம் அந்த தழுவலில் இருந்தது. என் உடல் முழுக்க அவளது அணைப்பால், வெதுவெதுவென இருக்கிறது."   

  எழுந்துவிட்டேன். அது கனவு. ஏமாற்றமாய் இருந்தது. விளக்கை போட்டேன். மேலே நிர்மலாவும், அர்ஜுனும் மாலை போட்ட புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்தார்கள். புகைப்படத்தில் அர்ஜுனின் நெற்றியில் சந்தனம் இருந்தது. கண்ணீர என் கன்னம் தாண்டி இறங்கியது. ஓவென கதறி அழ வேண்டும் போலிருந்தது. சத்தம் கேட்டு அப்பா வந்துவிடுவாரென உணர்ந்து சத்தத்தை அடக்கிக்கொண்டேன். ரொம்ப அழுததால் வீசிங் வந்து மூச்சி வாங்கியது. என்னுடைய இன்ஹலிங் மிசின் தேடினேன். எடுத்து உறிஞ்சினேன். கொஞ்சம் பரவாயில்லை போல் இருந்தது. படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டிராயரில் அர்ஜுனின் கரடி பொம்மை இருந்தது. எடுத்து கட்டிக்கொண்டு படுத்தேன். தலை கொஞ்சம் வலித்தது. கொஞ்ச நேரத்தில் தூங்கிப்போனேன். "ரவி..ரவி" என அம்மா என் தோளை உலுக்கினாள். எழுந்தேன்.

"மணி ஒன்பதரைப்பா.. இன்னைக்கு ஆபிஸ் போலையா" என்றாள். பக்கத்தில் அப்பா சோகமாய் நின்றிருந்தார். அம்மாவின் கையிலிருந்த காபியை வாங்கிக்கொண்டு நடந்து பால்கேணி போனேன். "அருண்..கால் பண்ணாண்டா...நேத்து தான் ஹங்கேரில இருந்து வந்தானாம்.. சாயங்காலம் வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கான்.." என அப்பா என்னைப் பார்க்காமல் அந்த ரூமை நோட்டம் விட்டபடியே சொன்னார். சரி என்பது போல் தலையாட்டினேன். அம்மா அப்பாவை பொறுத்தவரை நான் இந்த துயரத்துல இருந்து வெளிய வந்திரனும். எதோ சுவிட்ச் போட்டமாறி நாளைக்கே ஈன்னு சிரிச்சுகிட்டு நிக்கணும். அதுசரி அவுங்கள சொல்லியும் குத்தமில்லை. அபார்ட்மென்ட்ல  இருக்குற பல பேரு என்னை பாவம் போல பார்க்கிறார்கள். "நாசமா போ" வை விட "ஐயோ பாவம்" நமக்கு மிக வலியை தரும்னு பலருக்கு புரிவதில்லை.

அருண் வருவான் என்பதால் ஆபிசில் இருந்து வேகமாய் வந்தேன். மேலே ரூமுக்கு படியேறினேன். அருண் அப்பாவுடன் பேசிக்கொண்டிருக்கும் குரல் கேட்டது. என்னோட க்ளோஸ் பிரெண்ட் அவன். பிசிக்ஸ்ல பி.எச்.டி பண்ணினவன். அமெரிக்க நிறுவனமான ஆல்பால ஆய்வு விஞ்ஞானியா வேல பண்றான்.ஒரு வருஷமா ஹங்கேரில வேலையா இருந்திட்டு அப்போ தான் சென்னை வந்திருக்கான். நான் உள்ளே நுழைந்ததும் ஓடி வந்து கட்டி பிடித்தான். நானும் அணைத்துக்கொண்டு அழுதேன். இப்போதெல்லாம் அழுகை எனக்கு நினைத்த நேரத்தில் வருகிறது. சோகத்தை பாக்கெட்டில் வைத்தே திரிகிறதாய் தோன்றுகிறது. "அப்பா பேசிட்டு இருங்க" என சொல்லி நகர்ந்தார். நானும் அருணும் ஓல்ட் மாங்க் ரம்மை எடுத்து கிளாசுடன் உட்கார்ந்தோம். நிறைய பேசினோம். மூன்று ரவுண்ட் முடிந்தது. நிறைய புலம்பினேன். நிறைய பேச வேண்டும் போல இருந்தது.




"ந்தா..இவ்ளோ தண்டி..கருப்பா கரிக்கட்டை மாதிரி ரெண்டு பொட்டணம் கொண்டு வந்து இது தான் நிம்மியும்,அர்ஜுனும்னு சொல்றானுங்க டா..  தாங்கள டா.. அர்ஜுன் எங்கூட வரேன்னு அழுதான்..நான்தான் நீயும் அம்மாவும் பிளைட்ல போங்கன்னு அனுப்பினேன்...மைசூர் ஏர்போர்ட்ல இறங்கிரப்போ....." மீண்டும் அழுகை. ஐந்தாவது ரவுண்ட்டுக்கு தயாரானேன். நிம்மி இருந்திருந்தா காதை பிடிச்சு திருகிருப்பா.. அருண் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

"நோஸ் லேன்டிங்கா..."

"ஆமா"

"ஸ்கௌண்ட்ரல்ஸ்..."

"தினமும் ஆயிரம் விபத்துல ஆயிரம் பேரு சாகுறான். எல்லாரையும் போய் திட்ட முடியுமா...எல்லா என் விதி.." சொல்லி விட்டு அருணை பார்த்தேன். அவன் அர்ஜுன் போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் கழித்து "சாகாம இருந்திருக்கலாம்.." என்றான், நான் "ம்ம்.." என்றேன். அவன் கொஞ்சமாய் சிரித்து "இல்லடா அவுங்க உயிரோட இருக்கலாம்..இப்போ இந்த நொடில...". 

"என்னடா அருண்..அஞ்சு ரவுண்ட்ல தூக்கிருச்சா.." சத்தமாய் சிரித்தேன். குடித்து விட்டு சிரிப்பது சுகமானது. அருண் பேசாமல் உட்கார்ந்திருந்தான். "சயின்டிஸ்னா அமைதியா இருக்கனுமாடா குண்டா.." னு அவனை நானே பல முறை கேலி பண்ணியிருக்கேன். என் சேரை அவன் பக்கம் திருப்பினான். என் தலையை தூக்கினான்.

"சொல்லுடா ரவி...பூமி எப்டி உருவாச்சு..." 

யோசிச்சேன். எங்கோ படிச்சது ஞாபகம் வந்தது. "பிக் பேங்..." இழுத்தேன்.

"கரக்ட்..அப்டினா.."

"மறந்து போச்சுடா.."

" அதாவுது ஒரு பெருவெடிப்பு. அதுல உருவான ஒரு சின்ன தூசு மண்டலம் தான் பூமி. சூரியன்,சந்திரன், நம்ம பக்கத்து கோள்கள் எல்லாம் அந்த வகைல உருவானது தான். இந்த மாதிரி லட்சமோ, கோடியோ இல்ல எண்ணவே முடியாத அளவு உருவாக்கங்களை இந்த பெருவெடிப்பு பண்ணிருக்கு. நிறைய யுனிவர்ஸ்கள்,நிறைய கேலக்சிகள்... "

"சரி இப்போ அதுக்கென்ன..."


"இப்போ நீ பேப்பர்ல பேனா வச்சி கண்டா மாதிரி கிருக்கிறேன்னு வை. உன்னையே அறியாம அதுல ஒரு பேட்டர்ன் இருக்கும். அதாவுது வளைவுகளில், கோடுகளில் சில ஒற்றுமை வந்திரும். இத மாத்ஸ்காரன் ப்ரூவ்லாம் பண்ணிட்டான்.அத விடு. அப்போ இந்த பெருவெடிப்புல உருவான அமைப்புலேயும் ஒரு பேட்டர்ன் இருக்கும். எங்கயாவுது லட்சம் கோள்கள் தள்ளி பூமீ மாதிரி ஒரு கோள் திரும்பவும் உருவாகியிருக்கும்.."

"ஸோ ??"

"ஸோ வா... அதுக்கும் அதே புவிஈர்ப்பு விசை..அதே சுழற்சி...அதே மாதிரி கடல்கள்...பக்கத்தில் நிலா..அதே ஓஸோன்...ஆக்சிஜன்..சூரிய ஒளி...போட்டோசின்தசிஸ்..."

"அதுனால.... புரில மச்சி எனக்கு.." குழப்பமாய் இருந்தது.



"சரி உனக்கு புரிற மாதிரி சொல்றேன். எல்லாம் பூமியை மாதிரியே இருந்துச்சுன்னா என்ன நடந்திருக்கும். இங்க மாதிரியே அமீபா தோன்றிருக்கும்.அப்புறம் நிறைய உயிர்கள். பரிணாமம். டினோசர்கள், குரங்குகள்,மனிதர்கள்.." கொஞ்சம் இடைவெளிவிட்டு  "ஆதாம்-ஏவாள்...உன் கொள்ளு தாத்தன்..உன் அப்பன்...நீ,நிம்மி,அர்ஜுன்....." என்றான்.

எனக்கு கொஞ்சம் கோபமாய் இருந்தது. என் சிந்தனைக்கு அப்பாற்பட்டதாய் தோன்றியது. "அப்போ இங்க மாதிரியே ஆளுங்க அங்க பிறந்திருப்பாங்கன்னு சொல்றியா.."

"ஆமா கண்டிப்பா. ஆனா நடந்த விஷயங்கள் மாறி நடக்கலாம். ஹிட்லர் கடைசி போர்ல ஜெய்ச்சிருக்கலாம். காந்தி அமைதியா குடும்பஸ்தனா அவருண்டு அவர் வேலையுண்டுன்னு இருந்திருக்கலாம். தோனி வேல்டு கப் பைனல்ல மொத பால்லையே அவுட் ஆகி இருக்கலாம்...அதே மாதிரி..."

"அதே மாதிரி.."

"அன்னைக்கு விமானம் மைசூர்ல நோஸ் லேன்டிங் ஆகாமவோ...இல்ல நிம்மியும் அர்ஜுனும் அதுல போகமாவோ இருந்திருக்கலாம். இப்போ இந்த நொடில ரவி, நிர்மலா, அர்ஜுன் மூனு பேரும் பெசென்ட் நகர் பீச்ல ஜாலியா கடலைப்பொறி வாங்கி சாப்டுகிட்டு இருக்கலாம்......."

இப்போது அழுகை வரலை.அவன் சொன்ன காட்சியை மன கண்ணில் ஓட விட்டு ரசித்தேன். ஜன்னல் வழியே வானத்தை பார்த்தேன். ஆங்காங்கே சின்ன வெள்ளை புள்ளிகளுடன் வானப் பெருவெளி தெரிந்தது. 

                                                                                                                          





                                                                                                         -----குவாண்டம் தொடரும் 

திங்கள், 19 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-2)







நானும் பிரபுவும் தண்ணி குடிக்க,மூச்சா போக என ஒன்றாகவே போனோம். வேணியக்கா எங்கள் நட்பை பலப்படுத்தியிருந்தாள். "மச்சி...கவனிச்சியா ஆம்பள பேய்களெல்லாம் ரொம்ப கம்மிடா..இவளுக தான்டா செத்தும் நம்மள டார்ச்சர் கொடுக்குராளுக...". நான் தலையாட்டினேன். "ஏன்டா இந்த விஜய் டீவில காமிக்குறானுகளே ஆவி,தீயசக்தி, அதெல்லாம் உண்மை தான் போலடா.." . பிரபு கொஞ்சம் அதிகமாய் பேசிக்கொண்டிருந்தான். பயமாய் இருக்கலாம்.நான் அமைதியாய் இருந்தேன். எனக்கும் கூட பயம் தான். எனக்கு இந்த முட்டை கண்ணுள்ள பெண்களை க்ளோஸ் அப்-ல் பார்த்தாலே கொஞ்சம் பதறும். இந்த லச்சனத்தில் பேயை,அதுவும் முகம் முழுக்க முடியுள்ள பேயை...அய்யோ நினைத்து பார்க்கவே கொடூரமாய் இருந்தது. இது தவிர காற்று வேற தீவிரமாய் அடித்து பீதியை அதிகமாக்கிக் கொண்டிருந்தது. இன்னும் நைட் சாப்பாடு வேற சாப்பிடவில்லை என்பதால் பேயை பார்த்தால் பயப்படக்கூட தெம்பில்லாமல் இருந்தேன்.

" டேய்...ரொம்ப பசிக்குது.பாத்துக்கோ...நா பக்கத்துல போய் எதாவுது சாப்டு வந்திடுறேன். ஒரு மாதிரி கிறுகிறுனு வருது.." என்றேன்.

"ரொம்பத் தெளிவுடா நீ..எதாவுது பிகர் கூட பேசுறப்ப கூடவே ஒட்டிக்கிட்டே இருந்து உயிர வாங்கிறது. இந்த மாதிரி சிக்கல்ல இருக்கிறப்போ தனியா விட்டுட்டு ஓடுறது..."

"சத்தியமா பசிக்குதுடா..ஷிப்ட்ல யாராச்சும் ஒராளாவுது இருக்கனும்ல...பத்து நிமிஷம்தான்டா வந்திருவேன்...அப்டி இல்லேன்னா நீ வேணும்னா வண்டி எடுத்திட்டு போய் எனக்கு சாப்பாடு வாங்கிட்டு வா..."

 சில நேரத்துல நம்ம நாக்குல சனி உக்காந்து நமக்கு பதிலா டப்பிங் கொடுக்கும். அந்த மாதிரி தேவையில்லாம நா வாய விட்டேன். ஸ்லிப் கேட்ச்க்கு காத்திருந்த ராகுல் டிராவிட் மாதிரி பிரபு அந்த பாயிண்ட்டை கபக்கென கவ்வினான்.அவன் முகம் ஏதோ ஜெயிலில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை கைதி போல மிக பிரகாசமானது. "சரி..ஓகே மச்சி...நா வாங்கிட்டு வரேன்.." என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான். நான் சுதாரிப்பதுக்குள் ஆள் கேட்டுக்கு பக்கத்தில் போய் விட்டான். 

"டேய் நில்லுரா...."

"மச்சி..உங்கக்காவுக்கும் சேத்து சாப்பாடு வாங்கிட்டு வரவா..ஹிஹி.."

போய்விட்டான். இருந்த ஒரே துணையும் ஓடிருச்சு. எப்படியும் அவன் வர முப்பது நிமிஷம் ஆகும். அது வரைக்கும் பேசாம போன்ல ரத்தினம் அண்ணனோட பேசிட்டு இருப்போம்னு அவருக்கு கால் பண்ணினேன். ஒரு ஹிந்திக்காரன் எடுத்தான். ரத்தினம் ஒடம்பு சரி இல்லேன்னு சொல்லிட்டு ரூம்ல தூங்கிட்டு இருக்காரு என்றான். எனக்கு நடுராத்திரியில் எமகண்டம் ஆரம்பமாகிருச்சுனு புரிந்தது.போனை வைத்துவிட்டு ஆபிஸை ஒரு நிமிடம் நோட்டம் விட்டேன். எவனும் இல்லை. நான் உட்காந்திருக்கும் ஏரியால மட்டும் தான் லைட் எரியுது. மத்த பக்கம்லாம் இருட்டா இருக்கு. ஏன்டா லைட்லாம் ஆப் பண்ணீங்கன்னு கேட்டா "காஸ்ட் கட்டிங்" னு சொல்வாய்ங்க. இந்த பட்ஜெட் போடுறவனையெல்லாம் நைட் ஷிப்ட்ல வேல பாக்கவிடனும்னு நெனச்சுகிட்டேன். ஒரு முறை இருமினேன். ரெண்டு மூணு தடவை எதிரொலித்தது. காண்டாமிருகம் கர்ஜித்தது மாதிரி இருந்தது. நம்ம இவ்வளவு கொடூரமாவா இருமிறோம்னு கொஞ்சம் வியப்பாய் இருந்தது.

சத்தமே இல்லாமல் இருப்பது தான் பிரச்சனை என்று தோன்றியது. என்னுடைய சோனி எரிக்சன் மொபைலில் இருந்த ஐயப்பன் பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு விட்டேன்.கொஞ்சம் நிலைமை கட்டுக்குள் வந்தது போல் இருந்தது.எங்கும் ஒரு தெய்வீக வாசனை வருவது போல் பட்டது. கொஞ்சம் தெம்பு வந்தது. நேராய் என் கணினி முன் அமர்ந்து மெயில் செக் செய்து கொண்டிருந்தேன். திடீரென "தொப்ப்....." பென ஒரு சத்தம். இதயம் பட படவென அடித்தது.யாருமே இல்லாத இடத்தில் இதென்ன சத்தம். ஒருவேளை எலி எதையும் உருட்டுதோ...இல்லை வாய்ப்பில்லை...எழுந்து போகலாமா.... என் மூளைக்குள் பலவாறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும் எழுந்து நடந்தேன். எவனோ முழு வாட்டர் கேனில் தண்ணியை நிரப்பி வைத்திருக்கிறான், அது காத்துக்கு கீழே விழுந்திருக்கிறது.கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. என் இடத்துக்கு திரும்ப நடந்த போது தான், எனக்கு அந்த சத்தம் கேட்டது.


முதலில் பூனை கத்துவது போல் தான் இருந்தது. கவனித்து கேட்ட போது தான் அழுகும் குரல் என்று தெரிந்தது. என் முதுகு தண்டு முழுதும் குளிர் பரவியது.கொஞ்சம் யோசித்து பார்த்தால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதே இல்லை. வெறும் பயத்தால் தேவையில்லாமல் குழம்புகிறேனோ என்று தான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அழுகை சத்தம் எந்த திசையில் இருந்து வருகிறதென தெரியவில்லை. அடி வயிற்றில் இருந்து பீறி அழுகும் அழுகை சத்தம். எனக்கு நடுக்கம் அதிகமானது. வேகமாக நடந்து செக்யூரிட்டி இருக்கும் இடம் வந்து விட்டேன். இதயம் கண்டபடி வேகமாக துடித்தது. கண்ணாடி வழியாய் உள்ளே பார்த்தேன். அந்த ஹிந்திக்கார செக்யூரிட்டி என்னை வித்யாசமாய் பார்த்தான்.

"என்ன சார் லேடீஸ் யாரும் இன்னும் வேல பாக்குராங்களா...நைட் பத்து மணிக்கு மேல நாட் அளவுட்னு தெரியாதா..."

"இல்....இல்லையே...நீங்க யாரையும் பாத்தீங்களா..."

"அட என்னங்க..இப்பத்தானே மமதா மேடம் டேபிள்ள இருந்து அந்த பொம்மைய எடுத்துட்டு ஒரு மேடம் உள்ள போனாங்க..போறப்பகூட வாட்டர் கேன தள்ளிவிட்டுகூட போனாங்களே...நீங்க பாக்கலீங்களா..."

எனக்கு புரிந்து போனது. அந்த செக்யூரிட்டியிடம் நான் எதுவும் சொல்லவில்லை. நிம்மதியாய் இருப்பவர்களை பேய் கதை சொல்லி சங்கடபடுத்த வேண்டாமென நினைத்தேன். பிரபு சரியாய் வந்து சேர்ந்தான். "டேய் தோசைக்கு தேங்கா சட்னி தர மாட்டேன்னாய்ங்க..சண்ட போட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்... என்ன இங்க நிக்குற,வா உள்ள போவோம்" என்றான். 

உள்ளே வந்தோம். "ஆமா...அப்பிடி இப்டி எதுனா பாத்தியா..இந்த ரத்தினம் சரியான டுபாக்கூர்டா..இப்பிடித்தான் ஒரு நா என்கிட்ட பதினஞ்சு அடில ஒரு பாம்ப ரோட்ல பாத்தேன்னு கத விடுராறு..அவரு நம்ம ஆபிஸ் பிகர் எதையாச்சும் மேக்அப் இல்லாம பாத்திருப்பாராயிருக்கும்... "


கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். பிரபு ரொம்ப இயல்பாய்,கலகலப்பாய் இருந்தான்.அவனே தனியாய் போய் பிஸ் அடித்துவிட்டு வந்தான். இவன்கிட்ட எதுவும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம்  என நினைத்துக்கொண்டேன். ஒருவழியாய் விடிந்தது. கீழே இறங்கி வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தோம். ரத்தினம் அண்ணனும் கிளம்பி நடந்தார். நான் அவர் பக்கத்துலே போனேன். எதுவும் பேச வில்லை. அவர் சொன்னார்.

"ஒவ்வொரு பெரிய கட்டடம் முடியறதுக்குள்ளேயே எப்பிடியும் ஒருத்தராவுது அங்க செத்துருவாய்ங்க...அப்டியே அவுக அங்குட்டுத் தான் சுத்துவாகளாம்..பாவம் எம்புட்டு ஆசைக..பாசங்க...."  சொல்லிவிட்டு நடந்து போக ஆரம்பித்தார். நான் ஒருமுறை அந்த பிரமாண்ட கட்டிடத்தை திரும்பி பார்த்தேன்.ஆகாயத்தை நோக்கி வளர்ந்து ஆணவமாய் சிரித்துக்கொண்டிருப்பது போல் இருந்தது.இதெல்லாம் நடந்து 
இரண்டு.மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் பெரிய கட்டிடங்களை பார்த்தால் வேணியக்கா ஞாபகம் வருகிறாள்.



                            
                                                         ---------  முற்றும் --------

புதன், 14 டிசம்பர், 2011

வேணியக்கா..(பகுதி-1)


                                       வேணியக்கா..(பகுதி-1)




கண்ணை திறந்து பார்த்தேன் ,மணி சாயங்காலம் ஆறு. கை,காலெல்லாம் எதோ ரக்பி விளையாண்டவன் மாதிரி ஒரே வலி. இன்னும் ஒரு வாரம் நைட் ஷிப்டில் வேலையா என மலைப்பாய் இருந்தது. டீ.வி யை போட்டேன். சன் மியூசிக்கில் பொம்மரேனியன் நாய் மாதிரி முடி வைத்திருந்த ஒருத்தன் ,"ஹை குட்டீஸ்..நீங்க பாட்டு பாடுரீங்களா, இல்ல ரைம்ஸ் சொல்றீங்களா" என பெனாத்திக் கொண்டிருந்தான். வயிறு பசித்தது. ஊரே தூங்கப்போகும் நேரத்தில் நான் ஆபிஸ் போனுமா என கோபமாய் இருந்தது.கடவுள் அசிடிட்டி பிரச்சனையில் இருக்கும் போது என் தலை எழுத்தை எழுதி இருப்பாரோ என நொந்து கொண்டேன்.வழக்கம் போல குளித்துக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு ஆபிஸை அடைந்தேன். சாந்தோமில் கடலை முத்தமிடும் தூரத்தில் இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தில் தான் அலுவலகம் இருந்தது. பத்து அடுக்கு கட்டிடம் அது. மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கடல் அழகாய் தெரியும். ஒன்பது மணிக்கு தான் நம்ம டுயூட்டி ஆரம்பம் அதனால் நேராய் லிப்டில் என் பத்தை அழுத்தி கடலை சைட் அடிக்க மாடிக்கு கிளம்பினேன். வாகனங்கள்,மனிதர்கள் எல்லாம் பொடிப்பொடியாய் தெரிந்தனர். கடல் காற்று ரம்யமாக என் மூஞ்சில் வந்து அடித்துக்கொண்டிருந்தது. எவன் சொன்னது சென்னை அழகான ஊரில்லை என. .


"டே வெண்ணை கால் பண்ணா எடுக்க மாட்டியா.... ". பிரபு போனை காட்டிய படி வந்தான்.ஜீன்ஸ் பேண்டை இதற்குமேல் இறக்க முடியாது என்கிற நிலையில் அணிந்திருந்தான். என்னுடன் நைட் ஷிப்டில் வேலை பார்க்கும் மற்றொரு பட்சி. நான் பதிலேதும் சொல்லாமல் கடலை பார்த்துக்கொண்டிருந்தேன். "கடல் கடவுளோட மாஸ்டர் பீஸ்" ல என்றேன் பிரபுவை பார்த்து. வாயில் சிகரெட்டை பத்த வைத்தவாரே என்னை பார்த்தான்.


"கடவுள் ஒரு மாவுருண்டை செஞ்சு வச்சாராம் அது பூமியாகிருச்சாம்...அப்புறம் அதுல ஒன்னுக்கடிச்சாராம் அது கடலாகிடுச்சாம்.. அப்டின்னு எங்க பாட்டி சொல்லும்.." என சொல்லி சிரித்தான்.


"உங்க பாட்டி இப்போ உயிரோட இருக்கா..???"


"இல்ல டா..போன வருஷம் டெங்கு காச்சல்ல போயிருச்சு"


"நல்லவேளை..எனக்கு முன்னாடி டெங்கு முந்திருச்சு". சிகரட்டை என்மேல் சூடு வைப்பது போல பாவனை காட்டினான். பேசிக்கொண்டே கீழே அலுவலகத்துக்கு போனோம். எல்லா பய புள்ளைகளும் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்தார்கள். எங்களை பார்த்ததும் ஜெயராமன் மட்டும் சிரித்துக்கொண்டே "வந்துட்டாய்ங்கடா.. வாட்ச்மேனுக..." என்றார். மதுரைக்காரர். பேண்டை டக் இன் பண்ணாமல்,செருப்புப் போட்டுக்கொண்டு வந்து வேலை பார்க்கும் ஐ.டி போராளி. பிரபு அவர் பக்கத்தில் போனான்.


"யோவ் ஜெயா... நல்லா Laughing புத்தா மாதிரி தொப்பையும் தொந்தியும் வச்சிக்கிட்டு ஒனக்கெல்லாம் குசும்பு ஜாஸ்தியா போச்சு" என்றான்.


."டேய் நாய் நக்குன மண்டையா.. உங்கள செக்குயூரிட்டி ரத்தினம் தேடுனாரு..அத சொல்லத்தான் கூப்டேன்.."


இரவு மூணு மணிக்கு மேல் எங்களுக்கு செக்கியூரட்டி ரத்தினம் அண்ணன் தான் தூக்கம் போக்கும் ரட்சகர்.அரசியல்,சினிமா என புகுந்து விளையாடுவார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். எதற்காகக் கூப்பிட்டிருப்பாரு என யோசித்துக்கொண்டே அவருக்கு போன் செய்தேன். "நான் நேரா வரேன்" என சொல்லிவிட்டு கொஞ்ச நேரத்தில் வந்தார்.சாம்பல் நிறத்தில் அந்த செக்யூரட்டி உடுப்பில் இருந்தார். முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லை, நெற்றியில் பெரிய திருநீர் கோடு. "என்னாச்சுண்ணா...எதாவுது பிரச்சனையா??" என்றேன். "நேத்து ராத்திரி சிக்கலாகிப்போச்சு பா" என்றார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார். இப்போது அலுவலகம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது. 


"நேத்து ஒரு மணியிருக்கும் ரிசப்சன் ஷோபால பாட்டுக்கேட்டுக்கிட்டே படுத்துக்கிடந்தேன். ஜன்னலெல்லாம் தெறந்து கெடந்து இருந்ததால,கடல் காத்து ஜிலு ஜிலுனு அடிச்சிட்டு இருந்தது. என்னடா யாரோ பின்னாடி நிக்குராப்ல இருக்கேன்னு திரும்புறேன். கரு கருனு ஒரு உருவம். மூஞ்சு முழுசா முடி முளச்சிருக்கு. உதடு மட்டும் ரத்தச் செகப்பா துருத்திக்கிட்டே தெரியுது. எனக்கு தூக்கி வாரிப்போட்ருச்சி. நல்லா பின்னாடி நீளமான மயிர பாக்குறப்ப தான் பொம்பளனு தெரியுது. கத்தலாம்னு பாக்குறேன் வாய் வர மாட்டிங்குது. "நூறு ரூவாய கொடுரா..எம்டு நூறு ரூவாயா.." னு சொல்லிக்கிட்டே பக்கத்துல வர பாக்குது. திரும்பி ஓடிரலாம்னு திரும்புறேன். முதுகுல ஒரு அடி. எம்மா சவுக்க சொழட்டி அடிச்ச மாதிரி அந்த வலி. அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரில.முழிக்குறப்ப விடிஞ்சிருச்சு."





"
   ஏங்க ஒங்க பொண்டாட்டிய நெனச்சிக்கிட்டு பயந்துகிட்டே தூங்கிருப்பீங்க. அதான் கெட்ட கனவா வந்திருக்கு.." ஜெயராமன் பையை தூக்கிகொண்டு கெளம்பும் போது கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றார்.நான் லேசாய் சிரித்தேன். பிரபு சிரிக்காமல் ரத்தினம் அண்ணனையே பார்த்தான். அவர் சட்டையை கழட்டி முதுகை காட்டினார்.முதுகில் பெரிய சிகப்பு கோடு தெரிந்தது. பயம் எனக்குள்  ஜிவ்வென பரவியது. கொஞ்சம் வேர்த்தது. காட்டிக்கொள்ளவில்லை. ரத்தினம் கொஞ்சம் இடைவெளிக்கு அப்புறம் பேசினார்.


"நம்ம எலக்ட்ரீசியன் குமார கேட்டேன்..அவன் தான் சொன்னான். இந்த பில்டிங் கெட்டுரப்ப கிருஷ்ணவேணின்னு பக்கத்துல பட்டினபாக்கத்துல இருந்து ஒரு பொண்ணு வந்து வேல பாத்துச்சாம். கொழந்தை க்கு சாப்பாடு வாங்க வச்சிருந்த நூறு ரூபாய தொலைச்சுப்புட்டதாம். மாடில போய் தேடி பாக்குறப்ப,மேல இருந்து தவறி கீழ விழுந்து செத்து போச்சாம். அதுல இருந்து இந்தப்பக்கம் அலையுதாம். அவனுங்கூட பாத்திருக்கானாம். நீங்களும் தனியா சுத்தாம..ஒன்னு மண்ணா சூதானமா இருந்துக்கோங்க.."


சொல்லிவிட்டு போனார். இப்போது எங்கள் ப்ளோரில் என்னையும் பிரபுவையும் தவிர வேற யாரும் இல்லை. பிரபு சோகமாய் என்னையே பார்த்தான். "டேய்...ஐநூறா இருக்கு...அஞ்சு நூறு சேஞ்ச் இருக்கா.." என்றான். நான் சிரித்தேன். "ஏன்டா நீ நம்புறியா..." என்றேன்.


"நம்புறேனோ இல்லையோ...ஆனா இவய்ங்க சந்திரமுகி கதை மாதிரி சொன்னத கேக்குரப்ப தொடை ஷேக் ஆகுது. லைட்டா பாத்ரூம் வருது."


"ஆமாடா..அவரு முதுகுல அந்த காயத்த பாத்தப்போ...எங்காதுல ஓநாய் ஊளையிடுற சத்தம் கேட்டுச்சுடா.."


"டேய் எனக்கு துணையா ரெஸ்ட் ரூம் வரையும் வர்றியா... அர்ஜென்டா பாத்ரூம் வருது..."


"வேணியக்கா லேடீஸ் டா. ஜென்ஸ் பாத்ரூமுக்கெல்லாம் வராது..தைரியமா போ.."


"என்னடா அக்கானு முறை சொல்லி கூப்பிடுற..."


"அதுகள மரியாதையா பேசினோம்னா நம்மள அண்டாதாம்...."





ரெண்டு பேரும் பேசிக்கொண்டே ரெஸ்ட் ரூம் போனோம். ஜன்னல் வழியே கடல் காத்து முகத்தில் அடித்தது. இந்த முறை பயமாய் இருந்தது.






                                                                                                                  தொடரும்...

புதன், 19 அக்டோபர், 2011

அப்பாடாக்கர்





காலையிலிருந்து மூனாவது காபி. எரிச்சல் குறைந்த பாடில்லை. அவனுடைய அந்த சிரிச்ச மூஞ்சி அடிக்கடி நினைவுக்கு வந்து என் கடுப்பில் இன்னும் காரம் சேர்க்கிறது. அவன..அவன கண்டாலே எனக்கு பிடிக்காது. அவனுக்கும் அப்பிடித்தான். அவனை நான் நாயை பாக்குற மாதிரி பார்ப்பேன். அவன் என்னை நாய்க்கழிவை பாக்குற மாதிரி பார்ப்பான். ரொம்ப திமிர் பிடிச்ச பய.ஆளு பாக்க ஏதோ சல்மான்கான் பட வில்லன் மாதிரி இருப்பான். சொந்த ஊரு விழுப்புரம்னு நினைக்குறேன். கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், அவன் கொஞ்சம் அழகான ஆளு தான்கிறத ஒத்துக்கிற வேண்டியிருக்கு. எல்லாமே அன்னைக்கு தான் ஆரம்பிச்சுது. ஆபிஸ்ல அன்னைக்கு ஒரு பார்ட்டி. எல்லாரும் ஒரே குஷி மூட்ல இருந்தாங்க. நான் வழக்கம்போல மூஞ்சிய உம்முன்னு வச்சிக்கிட்டு "எப்படா..சாப்பாடு போடுவாய்ங்க" மனநிலைல இருந்தேன்.
                                          

இந்தப்பய என்னோட பக்கத்தில வந்தான். தூரத்தில் இருந்து நிறைய கண்களும்,பெண்களும் என்னையே பார்ப்பது தெரிந்தது. "பாஸ்..உங்களுக்கு பிளட் கேன்சரா..." என்று ரொம்ப சீரியசான முகபாவத்தோட கேட்டான். நான் குழப்பத்தில் "வாட்??" என்றேன். அப்புறம் என் தோளில் கைவைத்து "அப்போ...கிட்னி பெயிலியரா..." என்றான். நான் அவன் கையையெடுத்து விட்டு "என்ன சொல்ற" என்றேன். அவன் உடனே  சிரித்த படி சத்தமாய் "இல்லேல்ல...அப்புறமெதுக்கு பாஸ், எப்போ பாத்தாலும் எமர்ஜென்சி வார்ட்ல இருகிற மாதிரி சோகமா இருக்கீங்க..கொஞ்சம் கலகலன்னு இருக்கலாம்ல" என சொன்னான். மொத்தக்கூட்டமும் என்னை பார்த்து சிரித்தது. அதுவும் சில பெண்கள் வயிற்றை பிடித்துக்கொண்டெல்லாம் சிரித்தார்கள். அவனின் சில நண்பர்கள் "விக்கெட்" எடுத்தவுடன் கை தட்டுவது போல அவனிடம் கை தட்டிக்கொண்டார்கள். பருத்திவீரன் க்ளைமாக்ஸ் பிரியாமணியாய் உணர்ந்தேன். என் மொத்த கோபமும் அந்த வெண்ணை மேல் திரும்பியது. மனதிற்குள் சத்தமாய் சொல்லிக்கொண்டேன்.

                                         1-0

தர்மயுத்தம் அன்று முதல் ஆரம்பமானது.அவனை பதிலுக்கு பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தேன். ஆனால் உல்டாவாய் அவன் என்னை எப்போதாவுது பார்க்கும் போதெல்லாம் "ஹே.. ஐ.சி.யு.." என கூப்பிட்டுக்கொண்டிருந்தான். அவனது அடிப்பொடிகளெல்லாம் என்னை கடந்து போகையில் கொல்லென சிரித்தது. சொன்னால் அசிங்கம் அவனை எப்படியாவுது பழிதீர்க்கவேண்டுமேன சாமியை கூட தீவிரமாய் கும்பிட பார்த்தேன். பாரதத்தில் சொல்வது போல் பழி தீர்த்தல் ஒரு உன்னத உணர்ச்சி. நான் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தேன். கும்பிட்ட தெய்வம் என்னை கை விடவில்லை. அடுத்த ரெண்டாவுது மாதத்தில் ஆபிசில் "ரங்கோலி" கோலப்போட்டி வந்தது. பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் போட்டி. ஒரு குழு மெகா கோலம் ஒன்றை போட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் ஒரு மொத்தக்கூட்டம் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நம்ம பய வந்தான். "வாவ்..சூப்பர் ..." என்றான். எனக்கு அன்று என்னுடைய நாள் என புரிந்துபோனது.பய மேலும் பேச்சை தொடர்ந்தான். "நானும் இதுல Participate பண்ண முடியுமா.." என ஆர்வமாய் கேட்டான். நான் உடனே "கண்டிப்பாய் பண்ணலாம்.." என்றேன். அவன் பரபரப்புடன் "அதுக்கு நான் என்ன செய்யணும்.." என்றான். நான் ஒரு வினாடி இடைவெளி விட்டு அவன் கண்ணை பார்த்து "ஒரு ஆப்பரேசன் செய்யணும்" என்றேன். கூட்டம் கொடூரமாய் சிரித்தது. அவனுக்கு விசயம் புரிந்து போய் முகம் சுருங்கிப்போனது. சிலர் அவனை நோக்கி கை நீட்டி சிரித்தார்கள். எனக்கு பழிதீர்த்த சந்தோசம். அவன் முகம் ரோஸ் கலரானது.

                                                         1-1






அதற்கப்புறம் அவன் என்னை முறைத்து பார்க்க ஆரம்பித்தான். அவனது உதவியால் மறந்து போன பழைய தமிழ் கெட்டவார்த்தைகளை Renewal செய்து கொண்டேன். அவன் என்னை அட்டாக் செய்ய காத்திருப்பான் என்பதால் ரொம்ப ஜாக்கிரதையாய் இருந்தேன்.கூட்டங்களை தவிர்க்க ஆரம்பித்தேன். அந்தப்பையளும் வெறிகொண்ட வேங்கையாய் காத்திருந்தான் என்பது அன்று தான் தெரிந்தது. அன்னைக்கு சரியான மழை. வீட்டுக்கு போகும் நேரம் பார்த்து மழை பவர்ப்ளே விளையாடியது. சரி ஆபிஸ் வாசலில் இருந்து மெயின் ரோடுக்கு ஓடிப்போய் ஆட்டோவில் ஏறிவிடலாம் என ஐன்ஸ்டீன் போல கணக்குப்போட்டேன். அந்த மழையில் ஓடும்போது கால் வழுக்கி கீழே விழுந்தேன். கால்,கை,நெத்தி என எனக்கு கொஞ்சம் சேதாரம் அதிகம் தான். இறைவனால் அனுப்பப்பட்ட சில தேவ தூதர்கள் வந்து என்னை காப்பாற்றினார்கள். “பாத்து வரக்கூடாதாங்க..” என சிலர் வருத்தம் கொண்டார்கள். “ஆமாடா..எனக்கு மழைல அங்கபிரதட்சணம் செய்யணும்னு வேண்டுதல்” னு சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை. ஆனால் அந்த நிமிடம் உலகம் எவ்வளவு அன்பானது என புரிந்து கொண்டேன்.உதவியவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். நானும் இது போல் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என அந்த ரண வேதனையிலும் கோல் செட் பண்ணினேன்.  

மறுநாள் காலை அலுவலகம் வந்தேன். மெயில் செக் பண்ணிய போது தான் அந்த அதிர்ச்சி. “நீச்சல் வீரன்” என்ற தலைப்பில் நான் விழுந்த காட்சி புகைப்படங்கள் இருந்தது. இலவச வேட்டி சட்டை போல் எல்லாருக்கும் அந்த மெயில் அனுப்பப்பட்டிருந்தது. உதவி செய்த எந்த நாயோ தான் இந்த நாச வேலையை செய்திருக்கிறது.  அதுவும் ஒரு போட்டோவில் எங்கெங்கே அடிபட்டிருக்கிறது என வட்டம் போட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த க்ரூப் மெயிலில் சிலர் ,”ஸ்னோல சரிக்கிட்டு போற மாதிரி போறாருப்பா..” ,”சிங்கம்டா ..”,“பாடிய எப்போ எடுக்குறாங்க...”,“மூஞ்சில என்னப்பா தக்காளி சட்னி...” போன்ற கமெண்ட்கள் வந்து என் எரிகிற புண்ணில் எரிச்சலை கிளப்பின. மெயில் அனுப்பியவன் வேற யார். அவனே தான்.  

                                                       2 -1

நான் எவ்வளவு வெறியாய் இருந்திருப்பேன் என இந்த இடத்தில் விலாவாரியாய் சொல்லத்தேவையில்லை. ரெண்டுநாள் இஞ்சி ஜூஸ் குடிச்ச தனுஷ் போல சுத்திக்கொண்டிருந்தேன். எவனாவுது எங்காவது சிரித்துக்கொண்டிருந்தால் நம்மள நெனச்சுத் தான் சிரிக்குறானோ என நினைத்துக்கொண்டேன். மனிதவெடிகுண்டுகள் எப்படி உருவாகிறார்கள் என்பது புரிந்தது. இந்த முறை நான் கொடுக்கிற தாக்குதலில் அவன் நிலை குலைந்து போக வேண்டும் என உக்கிரமாய் சிந்தித்தேன். என் அரைவேக்காட்டு மூளையில் ஏதும் ஐடியாக்கள் உதிக்கக்காணோம். அன்று டீம் மீட்டிங். டீம்மில் உள்ள எண்பது பேரும் அந்த பெரும் அறையில் கூடினோம். மீட்டிங் ஆரம்பிக்க கொஞ்ச நேரம் ஆகும் போல் இருந்தது. அதுவரை வந்து சேராத நபர்களை போன் செய்து அழையுங்கள் என்றார்கள். நம்ம பயலுக்கு போன் செய்தால் என்னவென்று எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. நண்பனின் மொபைலில் இருந்து அவனுக்கு கால் செய்தேன். போன் ஸ்பீக்கரில் இருந்தது.


   "ஹலோ..."


   "ஹலோ"


  "சார் நாங்க சிட்டி பேங்க்ல இருந்து பேசறோம். உங்களுக்கு நாங்க பதினஞ்சாயிரம் வரைக்கும் பெர்சனல் லோன் தரலாம்னு முடிவு பண்ணிருக்கோம். இனிமேலாச்சும் கிழிஞ்ச ஜீன்ஸ் போடாதீங்க சார் "


  "ஹெல்லோ...யாரு நீங்க ..தேவையில்லாமா லூசு மாதிரி................"


  "சார்..மிச்சம் இருக்குற பணத்துல ஜட்டி,பனியன் வாங்கிகோங்க. மறக்காம அந்த பில்லுல உங்க தாசில்தார்கிட்ட அட்டெஸ்ட் வாங்கி எங்க ஹெட் ஆபீஸ்க்கு கொரியர் பண்ணிருங்க..."


  "மரியாதைய யார் பேசுறதுனு சொல்லுங்க... நான் கால ரெகார்ட் பண்றேன்... அப்டியே சைபர் கிரைம்ல கொடுக்க போறேன்.."


  "ஆமா..இவரு பெரிய இளையராசா..ரெகார்டிங் பண்றாரு...நம்ம கூர்க்காவ பாத்தாலே கக்கா போவ...நீ சைபர் கிரைம் போறியா.." 


  " இவ் ...இவ்ளோ தான் உங்களுக்கு லிமிட்டு சொல்லிட்டேன்..."


  "மச்சி ஏர்டெல்லுக்கு மாறு அன் லிமிடெட் டாக் டைம்...ஒவ்வொரு பிரெண்டும் தேவ மச்சான்..."


 "எனக்கு வேல இருக்கு வெளாடாதீங்க...யாருன்னு சொல்லுங்க..."


 "டீம் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்டி என்ன புடுங்கிற வேல.. Googleஐ க்ளோஸ் பண்ணிட்டு மீட்டிங் ஹாலுக்கு வா தம்பி "




கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சிரித்தார்கள். ஒருவர் படுகிற அவமானம் அடுத்தவர் சிரிக்கிற சிரிப்பிலே அளக்கப் படுகிறது போல. ஏதோ சாதித்த சந்தோசம் என் தலையில் வந்து ஏறியது. அவன் மீட்டிங் ஹாலுக்கு வந்து சேர்ந்ததும் சிரிப்பு சத்தம் அதிகமானது. அவன் விளையாட்டாய் எடுத்துக்கொண்டது போல் சிரித்தான்.


                                                           2-2


அன்று சாயங்காலம் அவனுடைய சீட்டுக்கு போனேன். சிரித்தேன். "டேய்..இன்னும் முடியல..உன்ன அழ வைக்குறேன் பாரு " என்றேன். அவன் அசால்டாய் "ஏன்..வந்து வெங்காயம் உரிப்பியோ.." ன்னான்.
நல்லவேளை அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் இது கணக்கில் வரவில்லை. அவனே பிற்பாடு கடுப்பில் "நீ என்ன பெரிய அப்பாடக்கரா.." என சொல்லிக்கொண்டே என் சட்டையை பிடித்தான். நானும் "நீ பெரிய அண்டர்டேக்கரா டா" என சொல்லி அவன் சட்டையை பிடித்தேன். ரெண்டு பேர் முகமும் அருகருகே. அவன் மேல் கொஞ்சம் சிகரெட் வாடை கூட அடித்தது. அவன் குபீரென சிரிக்க ஆரம்பித்தான். சட்டையை விட்டு விட்டு அழகாய் சிரித்தான். நானும் சிரித்தேன். சிரிப்பு அடங்க கொஞ்ச நேரம் ஆனது.






புதன், 28 செப்டம்பர், 2011

கல்லறை கவிதைகள்




 புகைப்படங்களில் அந்த உறைந்த நொடிகளில்
  இன்னும் உயிர் வாழ்கிறார்கள் 
   மரித்துப்போனோர்.


இறந்தவர் கடவுளை அடைகிறாரெனில் 
 இனி வெள்ளிக்கிழமைகளில் 
  கல்லறை செல்வோம்.


இந்தியாவில் ஊருக்குள் கல்லறை 
 ஈழத்தில் கல்லறைக்குள் ஊர்.





வயதான விதவை சாவுக்கு 
 நன்றி சொன்னாள்-இறுதி 
 ஊர்வலத்தில் அவ்வளவு பூவாம்.


பாதி ஆசையில் மறைந்தோரை
 பூமியில் புதைக்காதீர்-இன்னுமா 
  புரியவில்லை பூகம்ப காரணம்.


வேகமாக செல்லும் வண்டிகளில் 
 பயணிகளுடன் சேர்ந்து தானும் 
 ஏறிக்கொ(ல்)ள்கிறது-மரணம்.


இறந்தவுடன் மனிதனுக்கு
 பூமியின் நாற்றம் தாங்கவில்லை 
   மூக்கில் பஞ்சு.


சூடான காபியையே நான் 
 குடிப்பதில்லை என்னையா 
  எரிக்கபோகிறீர்கள்....


பிரியமானவர்களை இழந்தவனே 
 ஆவிகள் நம்பிக்கையை 
  உருவாக்கினான்.





உயர்திரு, திருவாளர் , திரு , திருமதி,
 எல்லாம் 'அது' வாகிப்போகிறார் 
  அந்த நொடியில்...


நல்லா கேட்டுட்டேன் மண்ணுக்கும் தீயுக்கும்
 நம் கண்களும்,உள் உறுப்புக்களும் 
  தேவையில்லையாம்...
  

வியாழன், 8 செப்டம்பர், 2011

தி FACEBOOK காரன்





"ஹே சிவா...எப்டி இருக்க..வா(ட்)ஸ்அப்...". ஒரு கீச்சு கீச்சு குரல் எனக்குப் பின்புறம் இருந்து வந்தது. மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்தின் ஒரு சனிக்கிழமை காலை நேரம். யாரென திரும்பி பார்த்தேன். முக்கால் டவுசர் ஒன்னு போட்டிருந்தான். மூஞ்சில் மீசை இல்லை, ஆனால் வாய்க்கு ஜட்டி போட்டது போல் தாடைக்கு அடியில் தாடி வைத்திருந்தான். அந்த மொகர கட்டையை  நான் அடிக்கடி பார்த்திருப்பது போல் இருந்தது. "டேய் நான் தான்டா ரகு" என சொல்லி அந்த கருமம் பிடித்த கூலிங்கிளாசை கழட்டினான்.

 'அட கோணயா...நீயா..' என்றேன். என்னுடைய பள்ளி நண்பன். ஒரு மூன்றெழுத்து கம்பெனியில் ஐந்து வருடமாய் வேலை பார்க்கிறான்.

'இன்னும் நீ நிக்நேம்ஸ்லாம்..மறக்கல..ஹி ஹி' என சொல்லிக்கொண்டே மொபைலை எடுத்து ஏதோ டைப் செய்து கொண்டிருந்தான்.

'என்னடா பண்ற...'

'இல்ல..உங்கூட பேசிக்கிட்டு இருக்கேன்னு Facebookல அப்டேட் பண்றேன்'

'அடங்... ஏன் மூச்சா போறதையும் அப்டேட் பண்ணேன்'

'அத one hour முன்னாடியே அப்டேட் பண்ணிட்டேன்.... அதுக்கு 18 'Likes'....'

'டேய் மூச்சா போனதுக்கு எதுக்குடா 18 Likes...'

'இதுக்கே இப்டி சொல்ற..போன வாரம் எங்க ஜிம்மி கக்கா போயிருச்சுன்னு ஒரு status மெசேஜ் போட்டேன்..அதுக்கு 27 likes...'

'அட கழிசடைகளா அந்த கண்றாவி facebookல அப்படி என்னதாண்டா இருக்குது...'







ரகு கண்ணாடியை கழட்டிவிட்டு என்னை மேலும் கீழுமாய் பார்த்தான். கொஞ்சம் பழைய காலத்து உவமையோடு சொல்லவேண்டுமென்றால் புழுவை பார்ப்பது போல பார்த்தான்.  கண்கள் நம் கேப்டனின் கண்கள் போல சிவப்பாயிருந்தது. கோபமாகிவிட்டானாம். அவன் குடும்பத்தையே திட்டி இருந்தாலும் இவ்வளவு கோபித்திருப்பானா தெரியவில்லை. இருந்தாலும் அவனை வெறியேற்றுவது அவ்வளவு நல்லதில்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.


'இல்ல மச்சி... அந்த Facebook வென்ற எங்களுக்கும் சொல்லி குடுத்தேனா நானும் இந்த மாதிரி சீன் போடுவேன்ல....'

'அப்டி வா...மொத இந்த மச்சி..மாப்பு..பங்குனு கூப்பிடுறத நிறுத்து....buddy...Dude...bro..folks..னு கூப்டு'

'ஆமா அதென்ன மூனாவுது.. லேடீஸ் மேட்டரா இருக்கு'

'டேய் ஸ்டுப்பிட்..அது ப்ரோ டா'

'சாரிப்பா'

'அப்புறம் பேப்பர்,பென்சில்,சட்டை,பனியன் எது வாங்குனாலும் Facebookல அப்டேட் பண்ணிரு...முடிஞ்சா ஒன்னோட மொபைல்ல போட்டோ புடிச்சு போட்டிரு...'

'எனக்கு புரிஞ்சு போச்சு..அதுக்கப்புறம் அதுக்கு 'cho sweet'னு நாலு பிகருங்க கமென்ட் போடுவாங்க. 'Nice' னு நாலு Formalityக்கு பொறந்தவனுங்க கருத்து தெரிவிப்பாய்ங்க. 

'எக்ஸாக்ட்லி...'



'ஒரு டவுட்ப்பா... 'எனக்கு எங்க ஆயாவ பிடிக்கும்..அப்பத்தாவ பிடிக்கும்...ஒனக்கும் புடிச்சிருந்தா இத ஒன்னோட Status மெசேஜா வைன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு அலையுதே அத follow 

பண்ணலாமா..'

'அது ஓல்ட் ஸ்டைலுடா... அந்த செண்டிமெண்ட் மேனியா இப்போ செட் ஆகாது...பேசாம நல்ல வீடியோவா பார்த்து upload பண்ணிவிடு'

'அஞ்சரைக்குள்ள வண்டி படத்தில இருந்து ரெண்டு செம்ம சீன Upload பண்ணிவிடவா...பசங்க மத்தில ரீச் ஆகிடலாம்..'

'பொண்ணுங்க செருப்பால அடிப்பாங்க...ஏற்கனவே ஒன்ன பாத்தா ஈவ் டீசிங் கேஸ்ல பெயில்ல வந்தவன் மாதிரி தான் இருக்கு..'

'ஹிஹி...ஒட்டு மொத்த கூட்டத்தையும் எம்.ஜி.ஆர் மாதிரி கவுத்த ஏதாவுது ஐடியா சொல்லுடா..'

'அண்ணா ஹசாரே..மங்காத்தா...கிரிக்கெட்ன்னு current affairs அடிச்சு விடு...உள்ள புகுந்து 'எஸ் யுவர் ஆனர்' னு ஆளாளுக்கு கருத்து சொல்லுவானுங்க..'

'வாவ்'

'பெறகு..ஆன்சைட்னு சொல்லிக்கிட்டு வெளிநாடு போனேனா..ஏர்போர்ட்ல இருந்து இறங்குனவுடனே "ஈ" னு சிரிச்சா மாறி போட்டோ எடுத்து ஒன்னோட Profile பிக்ச்சரா போட்டுரு..'

'டன்...அப்டியே தமிழுல கவிதை..ஹைக்கூனு பரிட்சார்த்த முயற்சிகள் செய்யவா...என்ன சொல்ற ??"

'ஆமா..இவர் பெரிய கமலு..Experiment பண்றாரு...தமிழுல கவிதை எழுதுறதுங்கறது பா.ம.க தனியா எலெக்சன்ல நிக்குற மாதிரி..கரையேற வாய்ப்பே இல்ல... அப்றம் முக்கியமான விஷயம் உங்க வீட்ல என்ன முக்கியமான விசேஷம் நடந்தாலும் உங்க சொந்தக்காரனுக்கு சொல்றியோ இல்லையோ Facebookல சொல்லிரனும். எவன் போட்டோ போட்டாலும் போயி "Like" பண்ணிரனும். பொண்ணுங்க போட்டோ போட்டாங்கன்னா போடுற மொத கமெண்ட் நம்மளோடதா தான் இருக்கும். எவனுக்காவுது பொறந்த நாள் வந்ததுன்னு வை...'

'கால் பண்ணி விஷ் பண்ணனும்...'

'யு இடியட்....அப்புறம் சாதா பப்ளிக்கும் நமக்கும் என்ன வித்யாசம். அவன் உன்னோட உயிர் நண்பனாவே இருந்தாலும் அவன் Wall ல போயி Happy Birthday எழுதணும். கால் பண்ணி விஷ் பண்றதெல்லாம் ஒரு Facebookகாரன் பண்ணக்கூடாது.'

'ஓகே'

'சிரிக்கிறது கூட கெக்கே பேக்கே னு சிரிக்கப்படாது. 'lol :)' னு தான் சிரிக்கணும். OMG,BRB மாதிரி வார்த்தைகளெல்லாம் யூஸ் பண்ணியே ஆகணும். தீபாவளி,பொங்கல் னா தலைவர்கள் மாதிரி வாழ்த்து செய்தி ஒன்ன போட்டு விட்ரு. எடேலே youTube போயி நாலு வீடியோவ upload பண்ணிவிடு. நீ ஓட்டுப் போடுறியோ இல்லையோ,டேக்ஸ் கட்டுவியோ மாட்டியோ, 'அவன் சரியில்லை இவன் சரி இல்லை..அய்யகோ நாடு எங்க போகுது னு' எந்நேரமும் பொங்கிக்கிட்டே இரு. உன்ன எல்லாரும் இவரு தாறுமாறான சிந்தனைவாதினு நம்பிருவாங்க.'

'டேய் பொறு...எனக்கு தல கிரு கிருனு சுத்துது..'

'சூப்பர்..இதான் சான்ஸ்.."Iam not doing well'னு ஒரு மெசேஜ் தட்டு.அப்புறம் பாரு...

'????????????????????'



புதன், 7 செப்டம்பர், 2011

குழந்தைகள் அல்லது கவிதைகள்



                     
                    
   ஆதாம் தவறு செய்தான் 
    இருந்தும் வரம் பெற்றான்- குழந்தைகள் 

  
  கடவுளும் குழந்தையும் ஒன்று தான் 
    என கேள்விப்பட்ட பின்னே தான் 
     கடவுளை நம்ப துவங்கியிருக்கிறேன்.

 
 "குழலினிது யாழினுது" குறள் படிக்கவில்லை போல
  தம் குழந்தையை தூங்க வைத்து விட்டு 
   "சூப்பர் சிங்கர்" பார்ப்போர்.


 ங்கா...அவ்வா...ப்ப்பா 
  வார்த்தைகளெல்லாம் தமிழகராதியில் 
   உடனடியாய் சேருங்களேன்.


"நிர்வாணம்"- ஒருமனதாய் 
  ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் 
   இவர்கள் உலகத்தில்..








இனி எந்தக்குழந்தைக்கும் முத்தம் கொடுப்பதில்லை 
         இப்போதே சேர்த்து வைக்குறேன் 
                இன்னும் பிறக்காத என் மகளுக்கு....


"பட்டாம்பூச்சிக்கு பெயிண்ட் அடிச்சது யாரு அங்கிள்??"
   போன்ற கேள்விகள் வளர்ந்த மூளைகளுக்கு 
         ஏன் தோன்றுவதில்லை...


பொம்மைகளுக்குள்ளும்,பலூன்களுக்குள்ளும் 
 இவ்வளவு சந்தோசம் ஒளிந்து கிடக்கிறதா...



ஒசாமா பின்லேடன் 
 குழந்தையாகவே இருந்திருந்தால் 
  செப்டம்பர் 11 வந்திருக்காது...