திங்கள், 8 மே, 2023

சில சம்பவங்கள் : THE COLLEGE ( Chapter: ஒரு பூங்காற்றும்.. சில இலைகளும்.. )

 



திகாலை வேளையின் குளிர்ந்த காற்று முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது. study hourல் ஜன்னல் வழியாக வயக்காடுகளையும், இரயில்களையும் வேடிக்கை பார்ப்பது சுகானுபவம். திரும்பி ஹாலை பார்த்தேன். எனக்கு வலது பக்கத்தில் குணா ,சாய்ந்த கோபுரம் போல ஒருக்கழித்து படுத்திருந்தான். புத்தகம் ஒன்று கடனுக்கு அவனருகில் கிடந்தது. சூப்பர்வைசர் வார்டன் ஹாலுக்கு வரும்போது லாவகமாய் அவனது காலைத்தட்டுவேன். அவன் சுவடில்லாமல் எழுந்து புத்தகத்தை எடுத்து அடுத்த பக்கத்தை திருப்புவான். இப்படி தூங்கும் எல்லா பன்னாடைகளுக்கும் பக்கத்தில்  ஒரு "ஆபத்துதவி" ஸ்டடி ஹாலில் இருப்பான். அன்றைக்கு வார்டன் முத்தையா தன் இருக்கையில் உட்காராமல் அடிக்கடி  "ரவுண்ட்ஸ்" வந்து பீதியை கிளப்பிக்கொண்டிருந்தார். 

" இந்த முத்தையாவுக்கு என்னாவாம்..நடந்த மணியமாவே இருக்கான்.. இவனுக்கு பெரிய மிலிட்ரில கர்னலா இருக்கோம்னு நெனப்பு.."

குணா அலுத்துக்கொண்டு மூன்றாவது தடவையாக நிமிர்ந்து உட்கார்ந்தான். அதிகாலை எழுதல்,மூன்று முறை பிரார்த்தனை, மூச்சைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் என எல்லோருமே "எப்போடா டிகிரிய முடிப்போம்" மனநிலையில் தான் இருந்தோம்.  இருந்தும் நண்பர்கள் சூழ கழிந்த அந்த கடினமான நாட்கள் எப்போதும் கொண்டாட்டமாகவே கழிந்து கொண்டிருந்தது. எதிர்காலம் குறித்த பயங்கள் என்னை அரித்துக்கொண்டிருக்க, குருகுல வழிக்கல்விமுறை உருவாக்கும் தினச்சூழல்கள் எனக்கு ஆசுவாசத்தை கொடுத்தது. தினமும் புது புது கதாப்பாத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அத்தனை கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் "யாசர் அராஃபட் " என்கிற பெயரில் கடிதத்தின் மூலம் காதலை தொடர்ந்து கொண்டிருந்த ஒருவன். புகையிலை, குட்கா,பீடி போன்றவற்றை ஒரு வேப்ப மரத்தில்  துளையிட்டு வைத்துவிட்டு.. தேவையானவர்கள் கேஷியரிடம் காசை கொடுத்துவிட்டு அங்கு போய் எடுத்துக்கொள்ளலாம் என தங்களுக்கான அறத்துடன் இயங்கிய போதை கேங். கிரிக்கெட் வாக்குவாதத்தில் "இன்னைக்கு இந்தியா தோத்தா..நா மொட்டையடிச்சுக்குறேன்" ன்னு சொல்லி அன்றைக்கு சாய்ங்காலமே மொட்டைத்தலையுடன் வந்த வாக்குத்தவறாத ஒருத்தன். எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சினிமா போலவே போய்க்கொண்டிருந்தது. 

இன்னும் study hour முடிய ஐந்து நிமிடம் இருந்தது. அதற்குள்ளாகவே முத்தையா எங்கள் தளத்திலிருந்து  கிளம்பிக்கொண்டிருந்தார். எனக்கு வலது பக்கத்தில் நஜிமுதீன் உட்கார்ந்திருந்தான். மொத்தக்கல்லூரியிலேயே  இரண்டு மூன்று இஸ்லாமியர்கள் தான் இருந்தார்கள். தினமும் இந்துத்துவாவை சுவாசிக்கும் கல்லூரியில் அவர்களும் ஏன் இருந்தார்கள் என எனக்கு விளங்கவில்லை. எப்போதாவது "சுவாமிஜிக்கள்" மத நல்லிணக்கம் பேசும் போது  அவர்களுக்கு நஜுமுதீன்கள் தேவைப்படுவார்கள். நான் நஜுமுதீனை தோளில் இடித்தேன்.

"என்னப்பா..'

"பூங்காற்றிலேயா..ப்ளீஸ்யா"

நஜீம் எனப்படும் நஜுமுதீன் செம்மையாக பாடுவான். அவன் "கண்ணே கலைமானே"  பாடினால் நமக்கு கண்கள் கலங்கிவிடும். எனக்கு தனிப்பட்ட விருப்பம், உயிரே படத்தில் வரும் "பூங்காற்றிலே"  பாட்டு. 

"இல்லங்க..தொண்ட சரியில்ல.."

நல்லா பாடுகிறவர்கள் பெரும்பாலும் இதை சொல்லுவார்கள். நாம தான் அவர்களை தாஜா செய்து பாட வைக்கவேண்டும்.

"சும்மா பாடுய்யா..உன் ஆளுட்ட பாடுறப்ப கரெக்ட்டா பாடிக்கோ..என்ன வருதோ எங்களுக்கு போதும்.." 

அவன் எதுவும் சொல்லவில்லை. அப்படியென்றால் பாடப்போகிறானென அர்த்தம். குணா எழுந்து உட்கார்ந்தான். பக்கத்திலிருக்கும் பட்சிகளும் நெருங்கி வந்து உட்கார்ந்துகொண்டார்கள்.கண்ணை மூடிக்கொண்டு பாடத்தொடங்கினான். " இதயம் கருகும் வாசம் வருகிறதே .."  என  அவன் குரலை ஒரு தொனியில் இறக்கி பாடுகையில் உன்னி மேனனை ஓவர் டேக் செய்ததாய் தோன்றியது . குணா என் பக்கத்தில் வந்து "லவ் பண்ணுவானோ..இல்லேன்னா இப்பிடி பாட முடியுமா.." என்றான். நஜீம் மிகப்பெரிய பாடகனாய் வருவான் என எல்லோரும் நினைத்தோம். இப்போது எங்கிருக்கான்..என்ன செய்து கொண்டிருக்கிறானென தெரியவில்லை. மீண்டுமொருமுறை அவனிடமிருந்து "பூங்காற்றிலே" கேட்கவேண்டுமென மனம் ஏங்கித் தவிக்கிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ல்லூரியில் திங்கட்கிழமையும், புதன்கிழமையும் இரவு சாப்பாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். சப்பாத்தி மற்றும் தால். மூன்று சப்பாத்தி கொடுப்பார்கள். அதற்கு அளவில்லாத தால்..தக்காளி வெங்காயம் போட்டு தாளித்த தால். முதலில் சப்பாத்தியை சின்ன சின்னதாய் பிய்த்து தட்டில் போட்டுக்கொள்வோம். அதற்குப்பின் தட்டு முழுக்க தால் ஊற்றப்படும். சிலர் ,இதற்கு மேல் ஒரு சொட்டு ஊற்றினாலும் தால் வழிந்துவிடும் என்கிறளவுக்கு வாங்குவார்கள். தால் நன்றாக குழைந்து குடிக்கும் கணிசத்தில் இருக்கும். சப்பாத்தியும் தாலும் ஊற்றப்பட்டு மணியடிக்க காத்திருந்தோம். சாப்பாடு தட்டில் போடப்பட்ட பிறகு மணியடிக்க காத்திருக்கும் நொடிகள் நீளமானவை.

"மணியடிங்களேன்டா"  .குணா சத்தம் வராமல் கத்தினான்.  எல்லோருக்கும் பரிமாறப்பட்டுவிட்டதா என உறுதி செய்துகொண்டு ஒரு வார்டன் மெஸ் ஹாலின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் மணியை அடித்தார். ஆயிரம் பேரும் ஒரு குரலில் பாடத்தொடங்கினோம்.

"ஓம் பிரம்மார்ப்பணம் ..பிரம்ம ஹவிர்.. பிரமாக்ணவ்.. பிரம்மணாஹுதம்..   ப்ரம்மைவ  தேன கந்தரவ்யம்..பிரம்ம கர்ம சமாதினா..ஹரி ஓம் தட்க்ஷித்.."


பாடல் பாடி முடித்த வினாடியில் தட்டில் பாய்ந்தோம். சிலர் தட்டை தூக்கி தாலை குடிக்கத்தொடங்கியிருந்தார்கள். நான் சாப்பிடத்தொடங்கியபோது பக்கத்தில் குணா இடுப்பை சுரண்டினான். திரும்பிப்பார்த்தேன். கையில் இரண்டு சப்பாத்தி வைத்திருந்தான்.

"இந்தாடா..வேமா வாங்கு" என்றான். கல்லூரியில் இது போல பிளாக்கில் சப்பாத்தி கிடைப்பது அரிது. அது பெட்ரோல் போல கிடைப்பதற்கரிய பொக்கிஷம்.அப்படியாப்பட்ட பொருள் நம் தட்டுக்கு தானா வருகிறதென்றால் இதிலேதோ உள்ளடி வேலை இருக்கிறதென்று மூளை உசாரானது.

"ஏதிது.."

"டே சும்பக் வேணும்னா வாங்கு..இல்ல நானே திண்டுக்கிறேன்"

நானவனை சந்தேகமாய் பார்த்தேன். அவன் பின்னால் ரோவை திரும்பிப்பார்த்தான். நானும் திரும்பிப்பார்த்தேன். கவட்டையன் உட்கார்ந்திருந்தான். என்னைப்பார்த்ததும் சிரித்தான். எனக்கு விஷயம் புரிந்து போனது. எங்களுக்கு சீனியர் அவன். மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தான் .அவனின் உண்மையான பெயர் எனக்கு நியாபகத்தில் இல்லை. கல்லூரி முழுவதும் நிறைய பேர் பட்டப்பெயர்களிலேயே  அறியப்பட்டார்கள். குணாவிற்கு கபடி தோஸ்த்து அவன். அவனுக்கு பழைய இங்கிலிஷ் பேப்பரில் அரியர் இருந்தது. குணாவின் மூலமாய் அதற்கு முந்தைய வாரம் அவன் என்னிடம் வந்தான். அவர்களின் திட்டப்படி ஹால் டிக்கெட்டில் அவனின் போட்டோவுக்கு பதில் என் போட்டோ மாற்றப்பட்டு அவனுக்கு பதிலாய் நான் ஆங்கிலப்பரிட்சை எழுத வேண்டும். அந்த மொத்த பிளானை என்னிடம் விளக்க முற்பட்டான்.அதற்குள் நான் "ணே..நானே ஆயிரம் கஷ்டத்துல  இங்க படிக்க வந்திருக்கேன்..ஏழரைய இழுத்து விட்றாதீங்க ப்ளீஸ் " என்றேன். உண்மையில் ஆடிப்போனேன். என்னை பிறகு அவன் எதுவும் வற்புறுத்தவில்லை. "இத பத்தி வெளில பேசாத தம்பி .." என தோளில் சினேகிதமாய் தட்டிவிட்டு சென்றான்.

"லேய் குணா..நா அவ்வளவு சொல்லியும் திரும்பவும் இழுத்து விடுறியா " 

 குணா செய்வது எனக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியது. அந்த சிரிக்கும் வாயை சுடச்சுட தால்  நிரம்பிய தட்டால் அடித்தால் என்ன எனத்தோண்றியது. பசி அதிகம் இருந்த படியால் அந்த முடிவை கைவிட்டேன்.எதுவும் பேசாமல் சாப்பிடத்தொடங்கினேன்.

"நீ தப்பா புரிஞ்சிகிட்ட..இப்போ விஷயம் வேற .." 

 நான் எதுவும் கேட்காதது போல சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

"நீயொரு பயந்தொளினு அவய்ங்க புரிஞ்சிக்கிட்டாய்ங்க..இப்போ ஃபர்ஸ்ட் இயர்ல வேறொருத்தன ரெடி பண்ணிட்டாங்க. ராத்திரி தான் எல்லாம் பைனல் ஆச்சு..நீ ஒரேயொரு ஹெல்ப் பண்ணனும் "

 "ஒரு மயிறு ஹெல்ப்பும் பண்ண முடியாது.."

"என்னனாச்சும் கேளுடா வெண்ண .."

குணாவை நினைக்கையில் சில நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அவனுக்கே ஊர்ப்பட்ட அரியர்கள் இருக்கையில் யாருக்காகவோ இந்த கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். அவன் நட்புக்காக எந்த எல்லைக்கும் போவான். நான் கேட்கிற வரை விடமாட்டான்னு தோன்றியது.  "செரி..சொல்லு கேப்போம்" என்றேன்.

"இங்கிலிஷ் நான் டீட்டைல்  பேப்பர்..பரிச்ச எழுதுற பையன் இப்போ தான்  படிச்சிட்டு இருக்கான்..மூனு  ஸ்டோரி படிச்சிட்டான். லாஸ்ட் லீஃப் கதைய மட்டும் யாராச்சும் படிச்சிட்டு ஒரு தடவ சுருக்கமா தமிழ்ல சொன்னா போதும் பாத்துக்குறேன்றான்..நீ படிச்சிட்டு அவனுக்கு கதைச்சுருக்கத்த சொன்னா போதும்..வேறெதுவும் பண்ண வேண்டாம்..ஒனக்கு ஒரு பிரச்சனை வராது..மதர் ப்ராமிஸ்"

நானெதுவும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். 

"கவட்டையன் இந்த தடவ எல்லா அரியரையும் கிளியர் பண்ணியாகனும் டா .. பாவப்பட்ட  பேஃமிலி. டிகிரி முடிச்சான்னா கபடி கோட்டால யூனிவர்சிட்டில பி. ஜி கிடைச்சிரும்..இல்ல ரயில்வேல அப்பிளை பண்ணலாம்"   

"அப்போ மிச்சமிருக்க பன்னென்டு அரியர, அந்த கஷ்டப்பட்ட ஃபேமிலில இருந்து ஆயா வந்து எழுதுமா.."

மேற்கொண்டு எதுவும் பேசாமல் குனிந்து சாப்பிடத்துவங்கினான். நான் பெரிய ஷேக்ஸ்ப்பியர் என்பதற்காக என்னிடம் அவர்கள் வரவில்லை. விஷயம் வெளியே தெரியாமல் இருக்க அவர்களுக்கு நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டார்கள். இதை நண்பனுக்காக செய்வதா..வேண்டாமா என உள்ளுக்குள் மனம் சோக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது.

"சரி படிச்சிட்டு சொல்றேன்..எப்போ சொல்லனுமாம் " 

"நைட்டு ஒன்பதுக்கு ...ஃபுட் பால்  கிரவுண்ட் பக்கத்துல இருக்கிற ரெண்டாவது தென்னைமரம் ..அங்க வந்திரு "

"ரெண்டாவது தென்ன மரமா ..வந்து ஏதாவது கோட் வேர்டு சொல்லனுமா "

குணா லேசாய்  சிரித்தான்.


--------------------------------------------------------------------------------------------------------------

ற்கனவே முதலாமாண்டு படித்த  ஓ.ஹென்றியின் Last Leaf  கதை எனக்கு நியாபகம் இருந்தது. மீண்டுமொருமுறை புத்தகத்தை எடுத்து வாசித்தேன். கேரக்டரின் பெயர்களை இரண்டு மூன்று முறை படித்துக்கொண்டேன்.கதை இவ்வாறு போகிறது.


"ஸூவும் ஜான்சியும்  தோழிகள். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள கிரீன்விச் கிராமத்தில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார்கள். ஓவியமும் வறுமையும் இவர்களது நட்பை இன்னும் பலப்படுத்தியிருந்தது. அவர்களிருந்த கட்டிடத்தில் இன்னொரு தளத்தில் பெஹர்மென் என்கிற பெரியவர் தங்கி இருந்தார். அவரும் இவர்களை போல ஓவியத்துறையில் சாதிக்க வேண்டுமென பல ஆண்டுகளுக்கு முன் அங்கு வந்தவர். எதுவும் முடியாமல் ஓவியர்களுக்கு மாடலாய் வேலை செய்து கொண்டிருந்தார். அவரை எல்லோரும் வாழ்க்கையில் தோல்வியடைந்தவராய் பார்த்தார்கள். "நீயும் பெஹர்மென் மாதிரி ஆயிருவ பாத்துக்கோ" என்பது ஓவியர்கள் மத்தியில் பேசிக்கொள்ளும் சொலவடையாக இருந்தது."

"ஒரு மோசமான குளிர் காலத்தில் நிமோனியா காய்ச்சல்  க்ரீன்விச்சில் பரவிக்கொண்டிருந்தது. அந்த கொடூர காய்ச்சல் ஜான்சியையும் தாக்கியது.  நாளுக்கு நாள் நிலைமை மோசமாகியது. வீட்டுக்கு வந்த டாக்டர்  ஸூவிடம் தயங்கி பேசினார் ."ஜான்சி மனதை விட்டுவிட்டாள். எப்படியும் தான் இறந்து விடுவோம் என நம்புகிறாள். மனது விட்டவர்களை எந்த மருந்தும் காப்பாற்றாது " என்கிறார்.  ஜன்னலின் ஓரம் படுக்கையில் படுத்துக்கிடந்த ஜான்சியிடம் ஸூ போய் ஆறுதல் சொன்னாள். அவள் தான் சாகும் தருவாயில் இருப்பதாய் நம்பினாள். ஜன்னலின் வெளியே பனி விழுந்து கொண்டிருந்தது. காற்றும் வீசிக்கொண்டிருந்தது. எதிர்த்தாப்பில்  இருந்த ஒரு மரத்தின்  இலைகள் விழுந்து கொண்டிருந்தது . ஜான்சி "இந்த மரத்தின் கடைசி இலை விழுகும் போது ..நானும் இந்த பூமியில் இருந்து உதிர்ந்து போவேன்" என்றாள் . திரும்ப திரும்ப அதையே சொல்லிக்கொண்டு அந்த மரத்தின் மிச்ச இலைகளை எண்ணிக்கொண்டிருந்தாள் . அவள் பேசுவதை பெஹர்மென் கேட்டுக்கொண்டிருந்தார் ."

" ஜான்சி இரவில்  திரும்பவும் முழித்து பார்த்த போது  கடைசி  இலை  தொக்கிக்கொண்டு இருந்தது. மிச்ச இரவு முழுவதும் அதையே பார்ததுக்கொண்டு இருந்தாள் . விழாமல் அது தொங்கிக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்ததும் ஜான்சி புது உத்வேகம் கொண்டாள். தானும் அந்த இலை போல போராட வேண்டும் என எண்ணினாள். இரண்டொரு நாளில் அவள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது . எழுந்து நடமாட தயாராகிக்கொண்டிருந்தாள் . ஸு சோகமாய் இருந்தாள் . ஜான்ஸி என்னவென்று விசாரித்த போது தான்  உண்மை தெரிந்தது . அந்த இரவில் ஜான்சி தூங்கும்போது  மரத்தின் எல்லா இலையும் உதிர்ந்துவிட்டதாகவும், பெஹெர்மென் தான் ஒரு இலையை பக்கத்து கட்டிடத்தில் வரைந்து அது மரத்தில் தொங்குவது போல தெரிய செய்தார்  என்றும் சொன்னாள். ஏற்கனவே காய்ச்சலில் இருந்த பெரியவர் குளிரில் நீண்ட நேரம் உட்கார்ந்து வரைந்ததால் மேலும் உடல் நிலை மோசமாகி இன்று இறந்து போனார்  என்றாள் . ஜான்சி துக்கம் தாளாமல் அழத்துடங்கினாள் "


நான் நேரத்துக்கு அந்த தென்னைமர கூட்டத்திற்கு போயிருந்தேன். கவட்டையன்,குணா மற்றும் அந்த முதலாமாண்டு பட்சி உட்கார்ந்திருந்தனர். பட்சிக்கு அது செய்யும் வேலையின் தீவிரம் தெரிந்தது போலில்லை. ஏதோ பிளட் டொனேஷன் செய்வது போல பெருமையாய் உட்கார்ந்திருந்தான். முழுக்கதையையும் சொன்னேன். குறிப்பு எடுத்துக்கொண்டான். கடைசி பிரார்த்தனைக்கு மணி அடித்தார்கள்.எல்லோரும் எழுந்து நடக்கத் தொடங்கினோம். கவட்டையனும்,குணாவும் முன்னால் நடந்தார்கள். நானும் பட்சியும் பத்தடி கேப்பில் பின்னால் நடந்து வந்தோம்.

"கதை புரிஞ்சது தான தம்பி "

"நல்லா சொன்னீங்க..பக்கானே "

"அதாவது சில நேரம் உதவி வாங்குனவங்க பொழச்சுக்குவாங்க..உதவி செஞ்சவுங்க  செத்திருவாங்க.." 

அவன் என்னையே ஒரு மாதிரியாய் பார்த்தான். நான் அவனை பார்க்காமல் வேகமாய் நடக்கத்தொடங்கினேன்.

------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்த நாள் அந்த முதலாமாண்டு மாணவனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அந்த ஆங்கில  பரீட்சை எழுத முடியாமல் போனதற்கும்.. எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை இன்றளவும்  நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.  

                                                                                                                  


திங்கள், 24 ஏப்ரல், 2023

சில சம்பவங்கள் : THE COLLEGE ( Chapter: Rise of Rebels)

 

                                                   ஜூன் 2001




ராண்டாவில் கூட்டமாய் பெற்றோர்களும், மாணவர்களும் நின்றிருந்தனர். ஒரு மாதிரி "ங்கொய்ங்" என்ற  சத்தம் அங்கெங்கும் ரீங்காரமாய் எதிரொலித்துக் கொண்டிருந்தது.வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். கல்லூரியின் கட்டிடங்கள் பெயர்களெல்லாம் வித்தியாசமாக இருந்தது. "சிவா" "விஷ்ணு" "கணபதி" "குமரன்".  கோவில்களுக்கு அடிக்கப்படும் இளஞ்சிவப்பில் கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது.கூட்டத்தில் திடீரென சலசலப்பு  அதிகமானது. அட்மிஷன்களை கவனிக்கும் அலுவலர்கள் கோஷம் போல கத்தினர் 

"அடுத்த இருபதை உள்ள அனுப்புங்க"  

சரியாய் இருபது சேர்கள் போடப்பட்டிருந்தது. பெற்றோர்கள் சேர்களில் உட்கார்ந்து கொள்ள.. நாங்கள் நின்றுகொண்டிருந்தோம். பி.டி எனப்படுகிற இராமச்சந்திரன் சார் உள்ளே வந்தார். அவரை ஒரு கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியர் என்று பார்ப்பவர்களால் சொல்லிவிட முடியாது. ஒரு சாயம்போன சட்டை, வெள்ளை வேட்டி, அடர்ந்த வெள்ளைத்தாடி,கண்ணாடிக்குள் தெரியும் முழியாங்கண்கள்  என  பயமுறுத்துவதெற்கென்றே  செய்து வைத்தார்ப்போல ஒரு தோற்றம். குரலும் சளைத்ததல்ல என அவர் பேசத்தொடங்கியதும் தெரிந்தது.

"ராமகிருஷ்ண தபோவனத்தால் நடத்தப்படும் இந்த கல்வி நிறுவனம் குருகுலக்கல்வியை கற்பித்து, விவேகானந்தர் கூற்....கூற்றின் படி இளைஞர்களை  உருவாக்கி.."

தான் பார்த்து வாசித்துக்கொண்டிருந்த பேப்பரை ஆழமாய் பார்த்தார்.பின்பு மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். நிமிர்ந்து எங்களெல்லோரையும் பார்த்தார். அந்த வெள்ளைத்தாடியை தன் இடது கையால் தடவிக்கொண்டார்.

"இது ஒரு போர்டிங் காலேஜ். யாரும் டே ஸ்காலர் கிடையாது. எல்லா விவரமும் உங்க அப்ளிகேஷன்லேயே பார்த்திருப்பீங்க..இருந்தாலும் சொல்றோம் கேட்டுக்கிடுங்க. தினமும் காலைல நாலே  முக்காலுக்கு  எழும்பனும். அஞ்சறை  டூ  ஏழு ஸ்டடி அவர். ஏழு மணிக்கு பிஸிக்கல் ஜெர்க்ஸ் ..சூர்ய நமஸ்கார். எட்டுக்கு பிரேயர். அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட்"     

சொல்லிக்கொண்டே எங்களின் முகங்களையெல்லாம் நோட்டம் விட்டபடி இருந்தார். அது சிங்கம் காட்டுக்குள் வரும் புது விலங்குகளை பார்ப்பது போல இருந்தது. முகத்தில் மருந்துக்கு கூட சிரிப்போ..வரவேற்போ தென்படவில்லை.  மதுரைக்கும் சோழவந்தானுக்கும் நடுவில் விவேகானந்தா கல்லூரி ஒழித்து வைக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் "சாமியார் காலேஜ்" என அறியப்படும் இந்த கல்வி நிறுவனம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். 


"நைன் தேர்ட்டி டூ  டவெள் தேர்ட்டி கிளாசஸ்.. மேல இருக்கிற ஹால்ல தான் பிரேயர் நடக்கும். அந்த ஹால்ல ஒவ்வொரு ஸ்டூடெண்ட்டுக்கும் ஒரு ஸ்கொயர் பாக்ஸ் ஒதுக்குவாங்க. அங்க தான் பிரேயர் டைம்ல உட்காரனும். அதை வைச்சு தான் அட்டெண்டன்ஸ் எடுப்பாங்க. பெர்மிஷன் இல்லாம ரெண்டு பிரேயர் ஆப்சென்ட் ஆன்னா வீட்டுக்கு தந்தி போயிரும்..அப்புறம் என்கொய்ரி தான் "

அவர் பேசிக்கொண்டே போனார். கல்லூரியின் விதிமுறைகளை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு,தெரிந்தே வந்திருந்தாலும்... எனக்கு பி.டி யின் குரலில் அதை கேட்பது பேயே நேரடியாய் வந்து திகில் கதை சொல்வது போல இருந்தது.  கல்லூரியை பற்றி நமக்கிருக்கும் கனவுகளில் கண்ணிவெடி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . ஊரே "மின்னலே" வில் வரும் "வசீகரா" பாடிக் கொண்டிருக்கையில் நாங்கள் தினமும் மூன்று வேளை பஜனை பாடப்போகிறோம்.

"கைக்குத்தல் அரிசில சாப்பாடு.. இயற்கை உணவு .. சாப்பாடு ஆரோக்கியமானதா இருக்கும்.. நீங்க எதிர்பார்க்கிற டேஸ்ட்ல  இருக்காது.. மெஸ்ல பசங்களே தான் செர்வ் பண்ணனும். சாப்பிடறப்போ பேசக்கூடாது. மீறினா..நடவடிக்கைகள் இருக்கும்.."  

"நடவடிக்கை" கள் என்பது அரசாங்கங்கள் சொல்லும் "சட்டம் தன்  கடமையை செய்யும்" என்பது போன்ற சொலவடை. நாங்க "அடிச்சி தோலை 
உறிச்சிருவோம்" என்பதை  மறைமுகமாக சொல்வது.கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து எல்லா அப்ளிகேஷன்களையும் முடித்து..கட்டணத்தை கட்டிவிட்டு..ரசீதுக்காக காத்திருந்தேன். தோளில் யாரோ தட்டினார்கள். திரும்பினேன். கிட்டத்தட்ட ஆறடியில் ஆஜானுபாகுவாய் அவன் நின்று கொண்டிருந்தான்.



"பாஸ்...குணா..குணசேகர்" . கையை நீட்டினான்.

"சிவராஜ்" . கை கொடுத்தேன். பக்கத்தில் வந்து ஹஸ்கி குரலில் "பாஸ் பாட்டனிக்கு B வருமா..P வருமா .." என சொல்லி அப்ளிகேஷன் பாரத்தை என் கையில் அவசரமாய் திணித்தான். கொஞ்சம் குழப்பத்துடன் அதை வாங்கிப்பார்த்தேன். அவன் அங்கே இளங்கலை தாவரவியலுக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் Botanyக்கு ஸ்பெல்லிங் தெரியவில்லை. முதலில் கேலி செய்கிறான் என்று தான் நினைத்தேன். ஆனால் அவனது பனிரெண்டாவது மதிப்பெண்களை விண்ணப்பத்தில் பார்த்தேன். எல்லாப்பாடத்திலும் மதிப்பெண்களெல்லாம் மூன்று இலக்கத்தை அடைய  முக்கிக்கொண்டிருந்தது. இது பத்தாவது மார்க்ஸீட்டா என குழப்புவது போல மார்க்குகளை அள்ளியிருந்தான்.

"B தான் பாஸ் வரும்"  

"அப்பிடியே நீங்களே.." என சொல்லி தன் பேனாவையும் என் கையில் திணித்தான். அவன் விண்ணப்பத்தை ஒரு பெஞ்சில் உட்கார்ந்து பூர்த்தி  செய்தோம். பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து நின்றார். வேட்டியை ஒரு முறை சரி செய்து கெட்டினார். "லே..இந்த பாரத்தையே ரொப்ப முடியலேயே..நீ  எந்த காலத்துல டிகிரி வாங்கப்போற ..இதென்ன காசுக்கு பிடிச்ச கேடா ". அவர் மேல் பீடி நாற்றம் அடித்தது. 


குணா வேகமாய் எழுந்து அவரை தள்ளிக்கொண்டு நடந்தான். "ப்போய்.. உம்ம பேசாம தான வரச்சொன்னோம்..". அவரை  ஒரு மரத்தடியில் நிற்க வைத்துவிட்டு வந்தான்.

"பாஸ் ..ஃபாதர்...மதியம் சாப்பாடு லேட்  ஆவுதுல அதான் சூடாக்கிட்டாரு "

 அன்றைய தினம் குணா அந்த கல்லூரியில் வந்து சிக்கினானா அல்லது கல்லூரி அவனிடம் சிக்கியதா என்பது அந்த விவேகானந்தருக்கே வெளிச்சம்.
    
                   -------------------------------------------------------------------
                           ஆகஸ்ட்  2001

காலையில் நாளே முக்காலுக்கு எழுவதென்பது எரிச்சலை கொடுக்கும் தான்.  அத்துடன் வார்டன் தன் கையிலிருக்கும் பிரம்பை வைத்து ஜன்னல் கம்பிகளில் இழுத்து... அதிலெழும் ஒலியுடன் எழுவதென்பது பதினெட்டு வயதில் யாருக்கும் வரக்கூடாத சோகம் என எண்ணிக்கொண்டே எழுவேன் . அரைத்தூக்கத்தில் பெட்ஷீட்,தலையணையை சுருட்டிக்கொண்டு ரூமை நோக்கி நடந்து போய்க்கொண்டிருப்போம். நூற்றுக்கணக்கான சக மாணவர்களும் ஸாம்பிக்கள் போல அவ்வண்ணமே நடந்து போய்க்கொண்டிருப்பார்கள். குணா பக்கத்தில் இடித்தபடி வந்து கொண்டிருந்தான்.

"மல  மாடு..இடிக்காம வாயேன்டா.." 

"ஏன்..இந்த முத்தையா மூதேவிக்கு அந்த குச்சியை வச்சி சொரண்டாம எழுப்ப முடியாதாமா"

"நாளைக்கு காபி போட்டுட்டு வந்து எழுப்ப சொல்றேன்"

கண்ணை மூடிக்கொண்டே கனைப்பது போல  சிரித்தான். நானும் குணாவும் வேறு வேறு ரூம். தினமும் காலையில் எழுந்து...கூடவே என் ரூமுக்கு வந்து டூத் பேஸ்ட் கடன் வாங்குவது அவனது வாடிக்கை.

"யோவ் சிவா..இன்னும் கொஞ்சம் கொடும்யா..இழுவிக்கிட்ருக்க"  



கருகிக்கொண்டே கொடுப்பேன். முதல் மூன்று மாதத்தில் கல்லூரியின் நெளிவு சுளிவுகளை கற்கத்தொடங்கியிருந்தேன்.மெஸ்ஸில் வாயசைக்காமல் பேசுவதெப்படி..ஒரே வேட்டியை துவைக்காமல் ஒரு வாரம் மாற்றி மாற்றி கட்டுவதெப்படி..பிரேயர் ஹாலில் அதிவேகமாய்  தூங்குவதெப்படி...என கல்லூரியின் அத்தியாவசிய தேவைகளை கற்றிருந்தேன். ரூமில் கார்த்தி..தவசி என எங்களைத்தவிர ரெண்டு பேர் மட்டும் இருந்தார்கள். தவசி நாலரை மணிக்கே எழுந்து குளித்து விடுவான். திருநீர் பட்டை அடித்து வெள்ளை வேட்டி சட்டையில் ஸ்டடி Hour க்கு தயாராகியிருந்தான். அவன் பக்கத்தில் எப்பவும் திருநீர் வாடை அடிக்கும். தூரத்தில் கார்த்தி செல்ப்ஃக்குள் தலையை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

குணா தவசியை கூப்பிட்டான். "ஏம்யா..இவ்ளோ துடுக்கா ஸ்கூல்ல படிச்சிருந்தேன்னா..இன்ஜினியரிங்..கிஞ்சினியரிங்  போயிருக்கலாம்ல..."

தவசி தன் கையில் கட்டியிருந்த சில்வர் வாட்சில் டைம் பார்த்தான். நேர விரயம் செய்வது தவசிக்கு பிடிக்காது. யாரையும் சூடு சொல் பேசி காயப்படுத்த மாட்டான். அந்த கல்லூரியின் லட்சிய மாணவர்களில் ஒருவன் என்பது அவனை பார்த்த நாளிலேயே எனக்கு தெரிந்தது. மேத்ஸ்ஸில் பி.ஹ்ச்.டி வாங்க வேண்டுமென்பது அவனது கனவு. தவசி என் பக்கம் திரும்பி சிரித்துவிட்டுப்போனான்.

"பதிலே சொல்லாம சிரிச்சிட்டு போறான்..அப்டினா என்னவாம் .."

"அவன ஊத்த வாய கழுவிட்டு வந்து என்கிட்ட பேச சொல்லுங்கனு அர்த்தம் "

என் தலையில் டமால் என அடித்தான். திடீரென ரூமிற்குள் வார்டன் சின்னசாமி நுழைந்தார். அதுவரை தூங்கிக்கொண்டிருந்த கார்த்தி செல்ஃப்க்குள் தலையை விட்டு எதையோ தேடுவதைப்போல நடித்தான். கல்லூரி ஈடு இணையற்ற நடிகர்களை இந்த சமுதாயத்துக்காக உருவாக்கிக் கொண்டிருந்தது. சின்னச்சாமி அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர். முதலாமாண்டு மாணவர்களுக்கு பொறுப்பு வார்டன். அவர் என்னையும் கார்த்தியையும் பார்த்து "நீங்க ரெண்டு பேரும் குருகுல ஆபிசுக்கு சாப்டுட்டு வந்துருங்க..ஒரு என்கொய்ரி " . நாங்கள் பேச முனைவதற்குள் கிளம்பிப்போய்விட்டார். குணா எங்கள் இருவரையும் பார்த்து சிரித்தான். பக்கத்தில் வந்து கை குலுக்கினான். "First என்கொய்ரில்ல... வாழ்த்துக்கள்.. நீங்க ரெண்டு பேரும் வயசுக்கு வந்துட்டீங்க... நல்ல தரமான கேசா இருந்தா நா உங்களுக்கு கேன்டீன்ல பப்ஸ்  வாங்கித்தரேன்.."

எனக்கு பயமாய் இருந்தது. எவ்வளவு யோசித்தும் எந்தத்தப்பும் புலப்படவில்லை. கார்த்தி தான் "நீயா ஏதாவது  உளறாத..ஏதாவது சப்ப கேசா தான் இருக்கும்..பயப்படாத "  என தேற்றினான். சாப்பிட்டுவிட்டு நேராய் குருகுல ஆபிஸ் போனோம். உள்ளுக்குள் ஏற்கனவே இருபது பேர் இருந்தார்கள். குருகுல ஆபிஸ் என்பது விடுதியின் தலைமைச்செயலகம். காலை முதல் மாலை வரை அங்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும். பீடி..குட்கா குடித்தவர்கள்..பாத்ரூமில் வார்டன்களின்   அந்தரங்க படம் வரைந்தவர்கள்..இரவில் கொல்லைப்புறம் வழியாய் சோழவந்தான் போனவர்கள் என எல்லா நேரமும் சதா போராளிகளால் குருகுல அலுவலகம் நிரம்பி வழியும். 

உள்ளே நுழைந்ததும் இருப்பவர்கள் எல்லோரும் எங்களது பக்கத்து ரூம் காரர்கள் என தெரிந்தது. விஷயம் அவ்வளவு வீரியமில்லை என கிரகித்துக்கொண்டேன். ஆபிசின் உள்ளே பரமானந்த சுவாமியும் இருந்தார். அவர் புதிதாய் குருகுலத்தின் இணைச்செயலராய் பதவியேற்றிருந்தார். அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் படித்து..நல்ல வேலையெல்லாம் பார்த்து விட்டு..துறவறம் பூண்டிருக்கிறார்.  காவி அணிந்து,சந்தனம் பூசிய படி  அவரது சாரில் அமர்ந்திருந்தார்.

"ரூம் நம்பர் 23,24 காரவிய்ங்க எல்லாம் வலது பக்கம் வந்து நில்லு.." சின்னச்சாமி எங்களை கை காட்டி சொன்னார்.எல்லோரும் வலது பக்கம் போய் நின்றோம். "டேய் நீ வாடா ..நீ அந்தப்பக்கம் நில்லு.. " .சாமியண்ணன் வந்து எங்களுக்கு எதிரில் நின்றான். பெயரைப்போலவே சாமியண்ணன் ஒரு வித்தியாசமான ஆசாமி. அதிகம் பேச மாட்டான். ஏதாவது ஒரு கேசில் சிக்கிக்கொண்டே இருப்பான். சின்னச்சாமி கேஸை சாமிக்கு விளக்கினார்.

"சாமிஜி..இந்தப்பையன் மூனு  நாளா பிரேயருக்கு ஆப்சென்ட்..ரூல் படி வீட்டுக்கு தந்தி கொடுத்திட்டோம்..நேத்து வந்து நான் இங்கே தான் இருக்கேன்றான்..விசாரிச்சா..தினமும் ப்ரேயருக்கும் வர்றானாம்..அப்புறம் ஏன்டா ஆப்சென்ட் விழுகுதுனு கேட்டா..அவனோட எடத்துல உட்காராம பேன் காத்து வருது னு  வேற இடத்துல உட்கார்ந்திருக்கான்

எல்லோரும் சிரிப்பை கட்டுப்படுத்தி நின்று கொண்டிருந்தோம். சாமியண்ணனை பார்ப்பதை தவிர்த்தேன். அவன் முகத்தை பார்த்தால் நம்மையறியாமல் சிரிப்பு வந்து விடும்.திரும்பி சுவாமிஜியை பார்த்தேன். கதை கேட்பது போல கண்களை குறுக்கி கேட்டுக்கொண்டிருந்தார்
 
"இந்த பசங்க பக்கத்தில தான் உட்கார்ந்திருக்கான்..விசாரிச்சிட்டேன்.."

எங்கள் பக்கத்தில் இருந்து சிலர் தலையாட்டினார்கள். எனக்கும் அவனை பார்த்த நியாபகம் இருந்தது. பரமானந்த சுவாமி அவன் பக்கம் திரும்பி  "கையடிச்சு சொல்லு..நீ பிரார்த்தனைக்கு வந்தேன்னு" . நாங்கள் ஒருவரையொருவர் திகிலாய் பார்த்துக்கொண்டோம். சாமியண்ணன் சின்னச்சாமி சார் பக்கம் திரும்பி "சார்" என்றான். சின்னச்சாமி சுதாரித்துக்கொண்டு "டேய்.. சாமிஜி..கைல அடிச்சு சத்தியம் பண்ணச்சொல்றாரு"  



எங்களை கொஞ்ச நேரத்திலேயே வெளியனுப்பி விட்டார்கள். வெளியே வந்து ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தோம். எல்லோரும் கலைந்து கிளாசுக்கு போய்விட்டார்கள். சாமியண்ணன் ஆபிசிலிருந்து வெளியே வந்தான். அவன் வெகுளியாய் இருந்தான். எந்த வித சங்கடமுமின்றி தனக்குத்தோணுவதை செய்ய ஒரு தில் வேண்டும். சிஸ்டம் கேட்கிற கேள்விகளுக்கு சாமி சொல்லும் பதில்கள் சுவாரஷ்யமானவை. பல பேரின் மனஅழுத்தத்தை சாமி போன்றவர்கள் போக்கிக்கொண்டிருந்தார்கள். அவனிடம் பேசணும் போல இருந்தது. 

"என்னடா ..என்ன சொன்னாங்க" 

"பனிஷ்மென்ட் சர்விங்காம்.. ஒரு மாசத்துக்கு" (ஒரு மாத காலம் எல்லா வேளை யும் மாணவர்களுக்கு பரிமாறிவிட்டு இரண்டாவது பந்தியில் தான் சாப்பிட வேண்டும் )

"பரமானந்தா சாமி..நல்லவர்..ஹார்ஸ் பனிஷ்மென்ட் தரமாட்டார்னு சொன்னானுங்க.."


"ஆமாயிவனே..நானும் அப்பிடித்தான் நினைச்சேன்... மொத ஒரு வாரம் தான் போட்டாரு..அப்புறம் பொசுக்குன்னு  ஒரு மாசம்ட்டாரு.."

"ஏன் என்னாச்சு நடுவுல.."

"சாமிஜி  வெக்கையாயிருக்கு..இன்னைக்கு ஒரு நா மட்டும் பேனுக்கு கீழ அதே யெடத்துல உட்கார்ந்திட்டு..நாளைல இருந்து என்னோட இடத்துல உட்கார்ந்திக்கிறேன்னு சொன்னேன் "

அவன் கேலி செய்யவில்லை. மனதிலிருந்து எழும் எண்ணங்களை நிறைய வடிகட்டிகள் போட்டு சலித்து..உலகியல் நடைமுறைக்கு ஒத்துவருகிறதா என்று சரிபார்த்து தான் எல்லோரும் பேசுகிறோம். சாமியண்ணன் போன்றோருக்கு அந்த வடிகட்டிகள் இல்லை. உலகத்திற்கு பொழுதுபோக்காய் அவர்கள் தென்பட்டாலும் அவர்கள் போராளிகள் தான்.




திங்கள், 27 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 4

                                         CHRONCILES OF AYYAMMA




தொண்ணூறுகளில் சைக்கிள் ஓட்டத்தெரிந்து  கொள்வதென்பது ஒரு கௌரவ மைல்கல். பாலகனிலிருந்து பருவத்திற்குள் பயணிக்கும் முதற்படிக்கட்டு. பல அடிகளையும், விழுப்புண்களையும் பெற்று ஒரு வழியாய் நான் என்னுடைய எட்டாவது வயதில் அந்த சிறப்பிற்குரிய வித்தையை கற்றிருந்தேன். வாடகை சைக்கிளை எடுத்து மணிக்கணக்கில் தேனியின் எல்லா சந்துகளையும் சுத்தத்துவங்கியிருந்தோம். ரெண்டு கைகளையும் விட்டு சைக்கிள் ஓட்டுகிற பையன்கள் எங்கள் உலகத்தில்  மிகப்பெரிய ஹீரோக்களாய் பார்க்கப்பட்டனர்.  "முக்கா ரூவா" கொடுத்தால் லட்சுமி சைக்கிள் கடையில் ஒரு மணி நேரத்துக்கு வாடகை சைக்கிள் கிடைக்கும். அதிலும் சிறுவர்கள் ஓட்டும் "அரை வண்டி" நாளோ ஐந்தோ தான் இருக்கும். சனி,ஞாயிறுகளில் காலையில் வேகமாய் போகவில்லையென்றால் ஏதாவது மொக்கை வண்டி தான் மிச்சமிருக்கும். அவைகளில் பெல் வேலை செய்யாது, பிரேக் பேருக்கென்று இருக்கும், செயின் எந்த நேரமும் அறுந்துவிடும். எங்கள் எல்லோருக்கும் "மெஜென்டா" கலரில் இருக்கும்  ஒரு சைக்கிள் தான் டாப் டார்கெட். காலை எட்டு மணிக்கெல்லாம் சைக்கிள் கடையின் முன் "FERRARI" க்கு காத்திருக்கும் மைக்கில் ஷூமேக்கர் போல உட்கார்ந்திருப்போம். யாரோ ஒரு அதிர்ஷ்டசாலிக்கு "மெஜன்டா" கிடைப்பாள். மற்றவர்கள் கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுவார்கள். 

பல வாரங்களுக்குப்பின் அன்றைக்கெனக்கு "மெஜென்டா" கிடைத்தாள். நேரான ஹேண்ட் பார்,கனீரென்ற பெல். அழுத்திப்பறந்தேன். பங்களா மேடு, மதுரை ரோடு, என்.ஆர்.டி ரோடு எல்லாவற்றையும் சுற்றிவிட்டு மணியை பார்த்தேன். இன்னும் கால் மணி நேரம் தான் இருந்தது. இன்னொரு "ஒரு மணி நேரத்திற்கு" நீட்டிப்பு செய்து வண்டியை வைத்துக்கொள்ள மனது ஏங்கியது. வீட்டில் போய் காசு கேட்டால் அம்மா தோசைக்கரண்டியால் வெளுத்து வாங்க வாய்ப்பு பிரகாசமாய் இருந்தது. ஏற்கனவே "சட்டையில் இன்க் கொட்டியது", "கையெழுத்து கேவலமாய் இருப்பது" போன்ற பெண்டிங் கேஸுகள் என் மேல் இருந்ததால் அம்மாவிடம் போகும் முடிவை கைவிட்டேன். இந்த நேரங்களில் எல்லாம் எனக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது அய்யம்மா தான். அப்பாவின் அம்மாவை நாங்கள் "அய்யம்மா" என கூப்பிடுவோம். அய்யம்மாவின் வீட்டிற்கு வண்டியை விட்டேன்.

அய்யம்மா வீட்டில் சும்மா இருந்து நான் பார்த்ததில்லை. தரைகள் பேர்ந்து கிடந்தால் சிமெண்ட் கலந்து அவளே பூசுவாள். சுண்ணாம்பு கலந்து சுவற்றிற்கு வெள்ளையடித்துக்கொண்டிருப்பாள். வெளியே திடீரென செடிகள் வைத்து பதியம் போடுவாள். வாத்துப்படம்  போட்ட கூடை பின்னுவாள். ரொம்ப டயர்ட் ஆன நேரங்களில் வித விதமாய் சாமி கும்பிட துவங்கிவிடுவாள். கண்களை மூடிக்கொண்டு உதடுகள் நடுங்க சாமிப்படங்களின் முன் நின்றிருப்பாள். சில நேரங்களில் நானும் அய்யம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொள்வேன். அய்யம்மாவின் முகத்தை உற்றுப்பார்த்து என் முகத்தை அதே போல பக்தி டோனில் வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். இடையிடையே கண்களை திறந்து அய்யம்மா ஆன்மீக உலகத்திலிருந்து இந்த உலகத்திற்கு வந்து விட்டாளா என பார்த்துக்கொள்வேன். கண் விழித்தவுடன் அய்யம்மா எனக்கு  திருநீர் பூசிவிட்டு  "கால் ரூபா" கொடுப்பார். அந்த கால் ரூபாயை பாக்கெட்டில் போட்டுவிட்டு நான் பக்தியில் நெகிழ்வேன். 

அந்தக்காலங்களில் அய்யம்மாவிற்கு மாரியம்மா என்ற ஆன்மீக தோழியிருந்தார்.  மாரியம்மா எப்போதும் மஞ்சள் அல்லது சிகப்பு சேலை தான் கட்டியிருப்பார். எனக்கு மாரியம்மாவை பார்த்தாலே பயம். குரல் ஒரு மாதிரி கீச்சு கீச்சு என்றிருந்தாலும் ,பேசும் போது கண்கள்   திடீரென பெரிதாகும். லாரி பிரேக் அடித்தாற்போல்  "உஸ்" என சத்தம் கொடுத்து  வித்தியாசமாய் ஒலியெழுப்பி  முன்னறிவிப்பின்றி அருள் இறங்கி சாமியாடுவார்.

"பங்குனிக்கப்புறம்  எல்லா விசேஷமா இருக்குமுத்தா..கலங்காதடி .. எம்பிள்ளைகள அப்பிடி விட்ருவேனா..வீரபாண்டிக்கு  நடந்து போய் ஆறு செவ்வாய்க்கு  தீபம் போடு  அப்புறம் பாரு   "

இப்படியாக கொஞ்ச நேரத்தில் பேச்சுவார்த்தை முற்றுப்பெற்று அய்யம்மா மாரியம்மாவிற்கு டீ போட்டுக்கொடுத்து வழியனுப்பி வைப்பாள். மாரியம்மா வந்துவிட்டு போன சில நாட்கள் அய்யம்மாவின் வீட்டில் ஆன்மீக நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். கோயில்களுக்கு நேர்த்திக்கடன்கள் போடப்படும். எலுமிச்சைப்பழங்கள் வீட்டின் ஏதோ ஒரு மூலையில் குங்குமம் தடவி வைக்கப்படும். கையில்  கலர் கயிறுகள் கட்டப்படும். 

நான் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அய்யம்மாவின் வீட்டிற்குள் போனேன். வீட்டில் இருக்கும் மர டேபிளில்  எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் அய்யம்மா. நான் உள்ளே வரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தாள். 

"என்ன சிவராஸ்..சும்மா வந்தியா.." 

"ம்ம்.."

என்னை ஒருமுறை கவனமாய் பார்த்துவிட்டு 

"லேய் ..என்னடா கரிச்சட்டிகனக்கா  போய்க்கிட்டிருக்க... வெயில்லயே ஆடுவியோ..  "

அது அன்பின் வெளிப்பாடு. பாடி சேமிங் எல்லாம் எங்கள் சிலபஸ்ஸில் இல்லை. 

"அய்யம்மா..சைக்கிள் ஓட்டனும்..காசு வேணும் "  

"ஓ... அதான் கோளாறா இங்க வந்தியா..எம்புட்டு"

"முக்கா ரூவா "

"ஏய்..கொள்ளக்காசா இருக்கு..நீ சின்னப்பயனு ஏமாத்துறானுக போலுக்க.."

"ம்ஹீம் .. எல்லாருக்கும் அதான் ..."

கொஞ்ச நேரம் யோசித்து பார்த்துவிட்டு தன் சுருக்குப்பையை எடுத்தாள். அதற்குள் சில்லறைகள் சத்தம் போட்டது. எச்சில் முழுங்கிக்கொண்டேன். ஒரு ரூபாய் எடுத்து கையில் கொடுத்தாள். 

"சூதானமா ஓட்டு..மெயின் ரோடு போகக்கூடாது.." 

இது போன்ற நேரங்களில் சொல்லப்படும் எல்லா அறிவுரைக்கும் நல்ல பிள்ளை போல தலையாட்டி விடுவது மரபு.

"தேங்க்ஸ் அய்யம்மா "

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பத்தயாரானேன்.


"டேய் நில்லு..உனக்கு இங்கிலிஷ் தெரியுமா " .வீட்டின் வாசலுக்கு பக்கத்தில் வந்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் அய்யம்மா கேட்டாள். கொஞ்சம் யோசித்தேன். எப்படியும் இங்கிலீஷிஸில் அய்யம்மா கேள்வி கேட்பதற்கு வாய்ப்பில்லை எனபதை உறுதி செய்துகொண்டு "ம்ம் ..தெரியுமே "  என்றேன்.

"சைக்கிளுக்கு காச கொடுத்திட்டு ஒரு எட்டு இங்க மறுபடியும் வந்திட்டுப்போ.." 

"ம்ம் "

போய் சைக்கிளுக்கு அடுத்த ஒரு மணி நேரத்திற்கான காசை கொடுத்து விட்டு திரும்பவும் அய்யம்மா வீட்டுக்கு வந்தேன். வீட்டின் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு வீடே பாதி இருளில் இருந்தது. நான் முதலில் வழக்கம்போல அய்யம்மாவின் "வீட செம்மடுத்துறேன்" வேலையாய் தான் இருக்குமென நினைத்தேன். ஆனால் இது வேறு வில்லங்கம் என பின்னர்தான் தெரிந்தது. வீட்டின் ஹாலில் இருந்த மர டேபிளின்  முன் அய்யம்மா உட்கார்ந்திருந்தாள்.  ஆங்கில  ஆல்ஃபபெட்டுகள்,எழுத்துக்கள்  எழுதப்பட்ட போர்டு ஒன்று டேபிளின் மேல் இருந்தது. பக்கத்தில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருந்தது.

"என்னய்யம்மா தாயம் விளாடுறீங்களா.."


அய்யம்மா திரும்பி என்னைப்பார்த்தாள். அது ஒரு மாதிரியான சந்தேகப்பார்வை. எனக்கு அந்த வயதில் மிகவும் பரிட்சயமான பார்வையது. "இவன ஆட்டைல சேக்கலாமா வேணாமா" என பெரியவர்கள் எங்களை ஒரு மாதிரி குழப்பத்தில் எப்போதும் பார்ப்பார்கள்.

"இங்க வந்து உட்காரு.. உனக்கு இதெல்லாம் தெரியும்ல"

முன்னமே சொன்னது போல அந்த போர்டில் கட்டங்கள் போட்டு ஆங்கில ஆல்ஃபபெட்டுகள் எழுதப்பட்டிருந்தது. ஸ்கேர்ள்  வைத்து  அளந்து ஒரேயளவாய் எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன. சில கட்டங்களில் "யெஸ்" "நோ " வென இருந்தது.  நான்  "தெரியும்" என்பது போல தலையாட்டினேன்.

"சிவராஸ்.. இந்த ஒரு ரூவா காச நடுவில அந்த கட்டத்துல வைக்கணும். நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா அதுல வலது கை ஆட்காட்டி விரலை வைக்கணும். பெறகு அவுங்க கூட நாம பேசத்தொடங்கலாம். கேள்வி கேட்கலாம். அப்புறம் காசு நம்ம விரலோடு சேர்ந்து அதுவா நகந்து போகுமாம். காசு எந்தெந்த கட்டத்துக்கு போகுதோ அந்த எழுத்தும் வார்த்தையும் தான் அவங்க நமக்கு சொல்ற பதில்.." 

கேம் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. "எவுங்க? "

"ஆவிகள் ...நாம சித்தப்பாட்ட பேசப்போறோம்...பழனிசாமிட்ட"

பிற்காலத்தில் தான் அது ஆவிகளிடம் பேசுகிறவர்கள் பயன்படுத்தும் ஓஜா போர்டு என்பதை தெரிந்து கொண்டேன்.அப்போது தெரிந்திருக்கவில்லை. அய்யாமாவிற்கு பழனிசாமி என்கிற ஆண்குழந்தை இருந்ததாகவும் அவர் சிறுவயதிலேயே அம்மையில் இறந்ததாகவும் கேள்விப்பட்டிருந்தேன். அய்யம்மாவின் புத்திர சோகத்தையும் ,பிள்ளையிடம் பேச வேண்டும் என்கிற ஏக்கத்தையும் புரிந்து கொள்கிற அறிவும் ஆற்றலும் எனக்கு அப்போது வாய்க்கவில்லை. எனக்கு அது ஒரு போர்டுகேம். ஆவி என்கிற வார்த்தை ஒரு வித பயத்தையும்,கிளர்ச்சியையும் தந்தது.

மெழுகுவர்த்தியின் நிழல் அந்த வெள்ளை நிற போர்டில் கோணலாய் தெரிந்தது. அய்யம்மாவின் சோகமான முகத்தை  அந்த மஞ்சள் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. கைகளை கூப்பி அய்யம்மா பேசத்தொடங்கினாள். யாரிடமோ கேட்டு மனப்பாடம் செய்து சொல்வது போல இருந்தது.

"பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம். உங்களின் அமைதிக்காக நாங்கள் பிராத்திக்கிறோம். எங்களின் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுடன் பேச உங்களுக்கு சம்மதமா"

கையிலிருந்த ஒரு ரூபா காசை "ஸ்டார்ட்" என்ற கட்டத்தில் வைத்தாள். என்னைப்பார்த்து கண்ஜாடை காட்டினாள். நான் எனது வலது கை ஆட்காட்டி விரலை காசின் ஒரு மூலையிலும் ,அய்யம்மா மறு  மூலையிலும் வைத்துக்கொண்டோம். எனக்கு கொஞ்சம் படபடப்பாய் இருந்தது. ரெண்டு, மூன்று நிமிடங்கள் ஆகியும் காயின் நகரவில்லை. எனக்கு வியர்க்கத் தொடங்கியது. கை வேற வலிக்கத்தொடங்கியது.

"அய்யம்மா..தண்ணி தவிக்குது..உள்ளபோய் குடிச்சிட்டு வந்திரவா"

"கிருத்துவம்  புடிச்சிவனே..செத்த நேரம் அமேதியா உட்கார முடியாதா "

அமைதியானேன். இந்த பாழாய்ப்போன ஆவிகளுக்கு ஒரு பங்க்சுவாலிட்டி இல்லையே என எனக்கு கோபமாய் இருந்தது.எனக்கு அந்த இருட்டில் ஆவிகளை விட அய்யம்மாவை பார்க்கத்தான் பயமாய் இருந்தது. போன மாதத்தில் பத்ரகாளியம்மனுக்கு வேண்டுதல், இந்த மாதத்தில் ஆவிகள் உலக தொடர்பு என அய்யம்மாவின் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ் எல்லை மீறி போய்க்கொண்டிருந்தது.தவிர என் சைக்கிள் வேற ஏக்கத்துடன் வெளியே நின்றுகொண்டிருந்தது. அய்யம்மா ஏழாவது முறையாக  "பூலோகத்தில் உள்ள ஆவிகளுக்கு வணக்கம்.." என்று ஆரம்பித்தாள். எப்பேர்ப்பட்ட பேய் வந்தாலும் "தேங்க்ஸ் ஃபார் கமிங்" சொல்லும் மன நிலையில் இருந்தேன். "எங்களுடன் பேச சம்மதமா" என அய்யம்மா சொல்லி முடிக்கையில் காயின் நகரத்தொடங்கியது. எனக்கு குபீரென்று இருந்தது. ஒரு ரூபா காசு மெதுவாய் நகர்ந்தது. அய்யம்மா என்னையே  பார்த்தார்.   சத்தியமாய் நான் நகர்த்தவில்லை. நகர்ந்து வந்த காயின் சரியாய் "YES " என்ற கட்டத்தில் நின்றது. அதே நேரத்தில் ஜன்னல் கதவும் லேசாய் சத்தத்துடன் அடித்தது. வீல் என கத்தி வீட்டிலிருந்து தெறித்து ஓடி வெளியே வந்து நின்றேன். அழத்தொடங்கினேன். அய்யம்மாவும் வெளியில் வந்தார்.

" லேய்..ஊமக்குசும்பா..வெளாட்டுத்தனம் பண்றியா"

"அய்யம்மா சத்தியமா நான் நகட்டல..நீங்க தான நகுட்டினீங்க..பயமாருக்கு"


  இந்தமுறையெனக்கு அழுகை பீறிட்டு வந்தது. வீட்டிற்குள் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அய்யம்மாவின் முகத்திலும் கலவரம் தெரிந்தது.   நான் கொஞ்ச நேரத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அய்யம்மாவும் நானும்  அதற்கப்புறம்  இந்த சம்பவம் பற்றி  பேசியதாய் நினைவில்லை.  கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஓடிவிட்டது. பல ஆங்கிளில் யோசித்து பார்த்துவிட்டேன் ,இதுவரை  திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.  எனக்கு காசு அதுவாக நகர்ந்ததோ என்கிற  பயம், அய்யம்மாவிற்கு நான் நகட்டினேனோ என்கிற பயம். ஆவிகள் சிலருக்கு பயம்..சிலருக்கு நம்பிக்கை. 

ஞாயிறு, 12 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 3

                                     தியாக தீபம்  திலீபன் 




எல்லாக்காலத்திலேயும் விசித்திரமானது இந்த இலக்கிய உலகம். இலக்கியவாதிகள் கனவுலகில் இருந்து வந்த ஸ்லீப்பர் செல்கள்.  சமையல் எரிவாயு விலை கூடிவிட்டதென ஊரே அரசுகளைத் திட்டிக்கொண்டிருந்தால், எதையாவது படித்துவிட்டு ,இவர்கள் எங்கோ ரஷ்யக்கல்லறையில் உறங்கிக்கிகொண்டிருக்கும் "டால்ஸ்டாய்"க்கு அறைக்கூவல் விட்டுக்கொண்டிருப்பார்கள். அடுத்தவேளை சோறு உறுதி செய்யப்படாத நேரத்திலும் அத்தனை ஆனந்தமாய் சுற்றுவார்கள். ஒரு புத்தகமும், மரத்தடியும் கிடைத்தால் போதும் இந்த பாழாய்ப் போன உலகத்தில் இருந்து, "போர்டிங் பாஸ்" இல்லாமலே கனவுலகில் பறக்கத் துடங்கிவிடுவார்கள்.  அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தின் சகவாசம் எனக்கு 2008ம் ஆண்டின் புத்தக கண்காட்சியில் கிடைத்தது.

நான் ரொம்ப நேரம் யோசித்து விட்டு தி.ஜா வின் "மரப்பசு"வை கையில் எடுத்தேன். பில் போடுமிடத்தில் இருந்த பெரியவர் "மோகமுள் ஆச்சா"  என்றார். என் முகத்தை பார்க்கவில்லை. கேள்வியின் கோணத்தை புரிந்துகொண்டு "ஆங்..படிச்சிட்டேங்கைய்யா" என்றேன். பாக்கி ரூபாயும் ,பில்லையும் கையில் கொடுத்து விட்டு ஒரு விசிட்டிங் கார்டையும் கையில் கொடுத்தார். நான் வாங்கி வாசிக்கும் முன்பாகவே "சனிக்கிழமைகள்ல இலக்கிய கூட்டம் இங்க நடக்கும்..Do Come if you are free" என்றார்.  தட்டையாய் பார்த்தார். எந்த வித சலனமுமில்லை.  முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு "கல்யாணத்துக்கு வந்துருங்க" என பத்திரிக்கை நீட்டுவது போல இருந்தது. சரியென தலையாட்டிவிட்டு நடந்தேன். போகும்போது அவரை திரும்பிப்பார்த்தேன். அவரின் முகம் அந்த தாடிக்குள் ஒளிந்து கிடந்தது. நாய்க்குட்டியை தடவிக்கொடுப்பது போல தன் தாடியை தடவிக்கொண்டே இருந்தார். பின்னாளில் அவர் தான் எழுத்தாளர் விக்ரமாதித்தன் என அறிந்து கொண்டேன்.(சில வருடங்களுக்குப்பின் "நான் கடவுள்" படத்தில் நடித்தார்)


பெரும்பாலும் என்னுடைய எல்லா சனிக்கிழமைகளும் வேலையில்லாதவை என்பதால் அந்த இலக்கியக்கொட்டகைக்கு போகத்தொடங்கியிருந்தேன்.கே.கே நகரில் இருக்கும் ஒரு புத்தக கடையின் மொட்டை மாடியில் தான் அந்த கூட்டங்கள் நடக்கும். அதிகம் போனால் இருபது பேர் வருவார்கள். நான் நினைத்தது போல இல்லாமல் எல்லா வயதினரும் வந்துகொண்டிருந்தனர். ஒரு நாள் தாஸ்தோவாஸ்கியின் "வெண்ணிற இரவு" பற்றி பேசுவார்கள். முன்னறிவிப்பின்றி மாக்சிம் கார்க்கியின் "தாய்" யை சிலாகிப்பார்கள். உலக நாவல்கள் பற்றி பேசத்தொடங்கினால் கச்சேரி கேட்பது போல பல பச்சிகள் தலையாட்டி ரசித்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.  பால்வாடி பையன் பன்னெண்டாம் வகுப்பு மேத்ஸ் க்ளாஸ் அட்டென்ட் செய்வது போல இருந்ததெனக்கு. கூட்டத்தில் கலந்து ஓரமாய் உட்கார்ந்து கொள்வேன். இப்படிக்கூட ஒரு நாவலையோ,சினிமாவையோ ரசித்து பார்க்க முடியுமா என்றிருக்கும். அவர்கள் சொன்ன அந்த கதைகளை என்னால் அதேயளவு ரசனையோடு படிக்க முடியவில்லை. "அவுங்க சொன்னதே இத விட நல்லாருந்துச்சு"  என்றிருக்கும். இந்தக்கூட்டங்களில் பெரும்பாலும் சண்டைகள் இல்லாமல் முடிந்ததில்லை. சில நேரங்களில் கை கலப்பில் கூட முடியும். அந்தச்சண்டைகள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.  

"என்ன பெரிய ஜேன் ஆஸ்டின்..சாண்டில்யனோட கடல்புறா படிச்சிருக்கியா.. அவன விட Period Fiction எவன்டா எழுத முடியும்..  வெள்ளைக்காரய்ங்க  மோண்டா கூட உங்களுக்கு தீர்த்தம்.."

"அய்யா தேசப்பிதா..எங்கிட்ட சொன்னதையெல்லாம் போய் உங்க சுஜாதா,மணிரத்னம்,கமலஹாசன் கிட்ட சொல்லுங்க.. நீ சத்தியம் பண்ணி சொல்லு கணேஷ் வசந்த ஒரிஜினல்னு... இவனுங்க "Bourne Identity" நாவல சுட்டு வெற்றி விழா னு ஒரு படத்த எடுத்தத கூட மன்னிச்சிடுவேன்..ஆனா ஹாலிவுட்டுக்கு சவால் விடுகிற படைப்புனு பேசுறப்போ காண்டாகுமா..ஆகாதா"

இது போன்ற சண்டைகளில் உணர்ச்சி வசப்பட்டு  ஏதோவொரு கூட்டணியை ஆதரித்தோ எதிர்த்தோ பேசிவிடக்கூடாது. அப்படி பேசினால் வண்டி நம்ம பக்கம் திரும்பி விடும். அமைதியாய் இந்த சண்டைகளில் கேட்கும் முக்கிய வார்த்தைகளை குறிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். ஜேன் ஆஸ்டின், கடல் புறா, Bourne Identity  போன்றவைகள் பின்னாட்களில் புத்தக,திரைப்பட தேடல்களில் உதவக்கூடும். இந்தக்கூட்டங்களில் அதிகமாய் விக்கிரமாதித்தன் அய்யா உட்காரமாட்டார். தாடியை தடவிக்கொண்டே பேசுவதை குனிந்த படி கேட்டுக்கொண்டேயிருப்பார். திடீரென  எழுந்து கீழே போய்விடுவார். அப்படியொரு நாள் கூட்டத்தின் நடுவே அய்யா திடீரென குனிந்த அழுது கொண்டிருந்தார். சத்தம் கேட்காத படி அழுததால் பேசிக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். சுந்தரம் தான் கவனித்து சுட்டிக்காட்டினார். 
எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் எழுந்து கீழே போய்விட்டார்.

சுந்தரம் எழுந்தார். இடது கையால் தன் கண்ணாடியை சரி செய்தார். உடைந்த குரலில் பேசினார். "நண்பர்களே..வீழ்ந்து விட்டோம்..முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாய் நம் உறவுகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.. திகில் செய்திகளை சுமந்த வண்ணம் வங்கக்காற்று இங்கே வந்து நித்தம் நம்மை பயம் கொள்ளச்செய்கிறது". அழுது விடுவார் போலிருந்தார். ஈழ யுத்தத்தின் கடைசி நாட்கள் அவை. இலங்கை அரசு மொத்த நிலத்தையும் சுற்றி வளைத்து ஷெல் மழை பொழிந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் அந்த மொட்டை மாடி கூட்டத்தில் அமைதி நிலவியது. எனக்குத்தெரியும் அது நீடிக்காதென்று. எதைப்பற்றி பேசவும் அவர்களுக்குத் தயக்கமே இருந்ததில்லை. சென்சிடிவ் விஷயங்கள் என்றென கடந்து செல்ல மாட்டார்கள். வெந்த புண்ணில் ஏறி உட்கார்ந்து விவாதம் செய்வார்கள். அப்படித்தான் அந்த பச்சை டீஷர்ட் ஆரம்பித்தார்.

"இத்தனை இழப்புகளுக்கும் என்னைப்பொறுத்தவரை புலிகளின் யுக்திகளும் ஒரு காரணம்..தற்கொலைப்படை தாக்குதல்கள் கொன்றது எதிரிகளை மட்டுமா..எத்தனை அப்பாவிகள் செத்தார்கள்.."

எல்லோரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டே குரல் வந்த திசை நோக்கி பார்த்தோம். சுந்தரம் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவருக்குத்தெரியும் இது "Just another day in that bloody terrace" . அது ஒரு கருத்துப்பெருவெளி. எக்கருத்தையும் களமாடலாம். பச்சை தொடர்ந்தார்.

"இங்க ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தாக்குதலில் செத்தது எத்தனை உயிர்கள். Fatal Injury எத்தனை பேருக்கு... புலிகள் செய்த மிகப்பெரிய ஸ்ட்ராட்டஜிக் ப்ளன்டர் அது..ஒரு கொலை மற்றொரு கொலையை  பிரசவித்தே தீரும்... "

மொட்டைமாடி கொஞ்சம் வெப்பமானது. சுந்தரம் கையை தூக்கி எழுந்தார். அவர் எப்போதும் காவி வேஷ்டி தான் அணிந்திருப்பார். என்ன வேலை செய்தார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. செருமிக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"தமிழரின் ஆதிப்பிரச்சினை இது தான். வரலாறு தெரியாமல் வாயாடுவது.."




வாலிபால் போல, சில நேரங்களில் எவ்வளவு வேகமாய் சர்வீஸ் போடுகிறோமோ அவ்வளவு வேகமாய் பந்து திரும்ப வரும். அதை பெர்சனலாய் எடுத்துக்கொள்ளக்கூடாதென்பது விதி. சுந்தரம் தொடர்ந்தார்.

"இலங்கையில்  நடந்த கருப்பு ஜூலை பற்றி கேள்வி பற்றிருப்பீர்கள்..ஒரு யுகத்தில்  நடக்கக்கூடாத அட்டூழியங்கள் இலங்கையில் அந்த ஒரு வாரத்தில் நடந்தது. கும்பல் கும்பலாய் வந்து தமிழர்களை சிங்கள அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்று குவித்தார்கள். இளைஞர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டார்கள். குங்குமம் அணிந்திருந்த பெண்கள் எல்லாம் சூறையாடப்பட்டார்கள். போலீஸாரெல்லாம் அரணாய் நின்றார்கள் சிங்களருக்கு. பிணங்களின் நடுவே புத்த பிட்சுக்கள் சிரித்தபடி நடந்தார்கள்.. இதையெல்லாம் நான் சொல்லவில்லை. நேரில் பார்த்த நார்வே டூரிஸ்ட் ஸ்கார்ஸ்டீன் சொல்கிறார். குஜராத் கலவரம் போல பத்து மடங்கு வன்முறை அது. பிணக்குவியல் மேலே எந்த உலக நியாயங்களும் எடுபடாது.  "

பச்சை உட்கார்ந்த படி பேசினார். "மறுக்கல சார்..அறவழிபோராட்டம் தானே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.."

சுந்தரம் தீ பிளம்பானார். "மடையா..கிறுக்கா.." மாடி அதிரும்படி கத்தினார். ஏதாவது கெட்ட வார்த்தையில் திட்டுவாரென எதிர்பார்த்திருந்தேன். நடக்கவில்லை. சுந்தரம் முகமெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்தனர். தண்ணீர் குடித்தார். திரும்பவும் எழுந்தார். எல்லாரையும் பார்த்து கேட்டார் "எந்த மயிராண்டிக்காச்சும் திலீபன தெரியுமா...அப்பறமென்ன அறம்,அஹிம்சை "




எல்லோரும் அமைதியாய் அவரையே பார்த்தோம். அந்தப்பேரை சத்தியமாய் அதற்குமுன் நான் கேள்விப்பட்டதில்லை. அவர் கையிலிருந்த ஒரு புத்தகத்தை திருப்பி மாவீரன் திலீபனின் உருவத்தை எங்களுக்கு காட்டினார். கண்ணாடி போட்டுகொண்டு அந்த சரித்திர நாயகன் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தான். அவனைப்பற்றி எதுவுமே தெரியாமலே உடல் ஒரு மாதிரி சிலிர்த்தது.





"திலீபன் இருபத்து மூன்று வயதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரானார். ஈழப்போரில்  இந்திய தலையீடுகள் அதிகமிருந்த காலமது. அஹிம்சை தானே இந்தியா பேச நினைக்கும் மொழி. அதிலேயே பேசுகிறேன் என்று இறங்கினார்.  1987 செப்டெம்பர் 15ல் இந்தியாவிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் தொடங்கினார். அவைகள் மிகவும் எளிமையானவை மட்டுமல்ல நியாயமானவையும் கூட.  பொடா சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்பது பிரதானமானது. இந்த அரசியில் கோமாளிகள் செய்கிற உண்ணாவிரதமில்லையது, உரிமை மீட்கும் வெறி கொண்ட புலியின் உண்ணாவிரதம். அன்றைய தினம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், உண்ணாவிரதம் நடந்த  நல்லூர் கந்தசாமி கோயிலில் கூடினார்கள்.  தாய்மார்கள் பயத்துடன் திலீபனுக்கு திருநீரிட்டு வாழ்த்தினார்கள்."

எனக்கு அந்த காட்சிகள் மனக்கண்ணில் படம் போல ஓடிக்கொண்டிருந்தது. காற்றின் மெல்லிய சத்தத்தை தவிர வேறேதும் சத்தம் அங்கே கேட்கவில்லை.

" மேதகுவிடம் கூட திலீபன் 'அண்ணா..நா எதோ மிரட்றதுக்காக இத செய்யல..கடேசி வர பின் வாங்க மாட்டேன்' என சொல்லித்தான் சென்றிருக்கிறார். இந்தியாவும் இலங்கையும் இந்த சம்பவங்களை பொருட்படுத்தவில்லை. காந்தி அதே மொழியில் பேசியபோது உற்று நோக்கிய உலகம், திலீபனை கண்டுகொள்ளவில்லை. நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது. நீரைக்கூட தவிர்த்து திலீபன் காலனையும் கலங்க வைத்துக்கொண்டிருந்தான். உடல் உருகிபோய்க் கொண்டிருந்தான். அறம்,நீதி,அமைதி எல்லாமே திலீபனுடன் சேர்ந்து செத்துக்கொண்டிருந்தன."

"நாட்கள் போய்க்கொண்டே இருந்தன.யாருமே எதுவும் செய்யவில்லை. பத்தாவது நாளில் அபாயக்கட்டம் அடைந்தான் அந்த மாவீரன். அப்போதும் மருத்துவ உதவியை தவிர்த்தான். வேண்டாமென வீம்புகொண்டான். அவன் துப்பாக்கி முனையில் பேராசை கோரிக்கைகள் வைக்கவில்லை. அறத்தின் வழி நின்று சில நியாயங்களை கேட்டான். உலக நாடுகள் வேடிக்கை பார்த்தன. இது உலகின் வேறேதோ இனத்தில் நடந்திருந்தால் குறைந்த பட்சம் அதைப்பற்றிய பதிவாவது இருந்திருக்கும்."


"கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையிலேயே திலீபன் செப்டம்பர் 26ல் இறைவனடி சேர்ந்தான் . இல்லை இறைவனானான். நல்லூர் உண்ணாவிரத திடலில் பெரிய மரண ஓலம் கேட்டது.  அவன் ஆயுதத்தால் வீழவில்லை அஹிம்சையால் வீழ்ந்தான். அஹிம்சையும் அறமும் ஈழத்தை காப்பாற்றவில்லை. வெறும் இருபத்து மூன்று வயதில் அத்தனை வைராக்கியத்துடன் உயிர் விட எவனுக்கு தைரியம் வரும். அவன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தவன். நினைத்திருந்தால் "தானுண்டு தன் வேலையுண்டென" இருந்திருக்கலாம். இந்நேரம் ஏதோ ஒரு நாட்டில் பெரிய டாக்டராய் ,தன் குடும்பத்துடன்  வாழ்ந்திருக்க முடியும். அவனேன் இந்த இனத்திற்காக உயிர் நீத்தான்..இங்கே பாருங்கள் யாருக்குமே அவன் பெயர் நியாபகத்தில்  இல்லை. அவனுக்காக வைக்கப்பட்ட நினைவிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன.  எந்தத்தாய் நிலம் தம் இனம் காக்குமென நினைத்தானோ அது இன்று இனச்சாவு நடக்கையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது "

சுந்தரம் அமைதியாய் சாரில் உட்கார்ந்தார். பக்கத்துக்கு வீட்டு மாடியில் சில இளைஞர்கள் மஞ்சள் டீசர்டில் டி.வி முன் உட்கார்ந்து கொண்டு டி.வி  ஒலியை அதிகப்படுத்தினர். "எங்க தல தோனிக்கு பெரிய விசில அடிங்க.." என்ற சத்தம் விண்ணைப்பிளந்தது.



ஞாயிறு, 5 மார்ச், 2023

சில சம்பவங்கள் : பகுதி 2

 

                                             மெமரீஸ் 

நான் கொஞ்சம் குரலை உயர்த்தி  "ப்ளீஸ் நிறுத்துங்க ..." என்று கத்திய பிறகு தான் வண்டியை நிப்பாட்டினான்.  "என்ன பிரச்சனை"  என்பது போல சலீம் அதிர்ச்சியாய்  என்னைப்பார்த்தான். நான் காரின் பின்சீட்டில்  தலையில் கையை வைத்து உட்கார்த்திருந்தேன். எனது உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. வெளியில் பெய்யும் பனிமழைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இது பயத்தில் நடுங்கும் நடுக்கம்.  டிரைவர் சீட்டின் மேலே இருக்கும் கண்ணாடியை சரி செய்து அது வழியே  என்னைப்பார்த்து "என்னாச்சுங்க..தலை வலியா "  என்றான். வண்டியை ஓரங்கட்டி நிப்பாட்டினான்.

"என்னோட ஷோல்டர் பேக் கார்ல ஏத்தல..ட்ரன்க்க திறங்க.. செக் பண்ணனும்"

" சர்ஜி.. அதுல எதுவும் எக்ஸ்பென்சிவ்வா இருந்துச்சா"

உண்மையில் அதில்தான் எல்லாமுமே இருந்தது. ஒரு மனிதன் வெளிநாட்டில் வந்து எதையெல்லாம் தொலைத்து விடக்கூடாதோ அதெல்லாமும் அந்தப்பையில் இருந்தது. என்னுடைய பாஸ்போர்ட், சான்றிதழ்கள், பணப்பை , லேப்டாப் மற்றும் சில முக்கிய கோப்புகள். பாக்கெட்டில் இருந்த நூறு ஈரோவைத்தவிர அனைத்தையும் அந்தப்பையில் தான் வைத்திருந்தேன். சமீர், காரின் ட்ரங்க்கை திறந்தான். ரெண்டு குண்டு டிராலிகள் மட்டும்  இருந்தது. "எங்களை வச்சு நீ என்ன பண்ணப்போற..மெய்ன் பீச விட்டுட்டியே" என்று அவைகள் சிரிப்பது போல இருந்தது. சமீருக்கு விஷயம் புரிந்தது. "வண்டில ஏறுங்க..திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் போய் பாக்கலாம்" என்று கூறி வண்டியில் ஏறினான். நானும் எதுவும் சொல்லாமல் மந்திரிச்சு விட்ட கோழி போல வண்டியில் ஏறினேன். 

மணி இரவு பதினொன்றை தாண்டியிருந்தது. என்ஸ்கடேவின் தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தது.  மிக மெதுவாய் வெள்ளை மழை போல பனி பெய்து, ரோடு, மரங்கள், தெருவிளக்குகள் எல்லாவற்றின் மீதும் வெள்ளை பூசிக்கொண்டிருந்தது. இது நெதர்லாந்தின் கடைக்கோடி ஊர். இங்கே வந்து இறங்கி அரைமணிநேரத்தில் ஒரு திகில் அனுபவத்தில் தள்ளப்பட்டிருக்கிறேன்.

"ஜி..உங்க பேரு "

"சிவராஜ்"

"இந்தியாவா "

"ம்ம் "

"அந்த பேக்க  ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில வரும்போது கைல வச்சிருந்தீங்களா... யாருன்னா உங்க கூட பேச்சு கொடுத்தாங்களா.."

இது போன்ற சூழ்நிலையில்,  கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்பது அந்த பொருளைத் தொலைத்ததை விட அதிக வலியைக்கொடுக்கும். திரும்பவும் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தோம். கிட்டத்தட்ட காலியாக இருந்தது. என் மண்டைக்குள் கடைசி ரெண்டு மூன்று மணி நேரத்தில் நடந்ததெல்லாம்  "ஹைலைட்ஸ்" ஓடியது. அதில் கூட அந்த பேக் சம்பந்தப் பட்டவை  ரப்பர் வைத்து அழிக்கப்பட்டிருக்கிறது.  எல்லா இடத்திலும் தேடினோம் . நான் நின்று தண்ணீர் குடித்த இடம், காருக்காக காத்திருந்த இடம்,தலையை சொரிந்த இடம்..ம்ஹீம் எதிலும் இல்லை. நெதர்லாந்து மண்ணில் கால் வைத்து நாலு மணி நேரம் தான் ஆகிறது. தற்சமயம் "நான் இன்னார்" என நிரூபிக்க என்னிடம் எந்த ஆவணமும் இல்லை. என்னை நினைத்தால் எனக்கே பரிதாபமாய் இருந்தது. இந்த பாவ உடலை விட்டு தப்பித்து எங்கேயாவது ஓடி விட வேண்டுமென்பது போல இதயம் கன்னாபின்னாவென துடித்துக்கொண்டிருந்தது. இதெல்லாம் பத்தாதென நினைத்த விதி, அந்த கணத்தில்  இன்னொரு டீ ஸ்பூன் காரத்தை சேர்த்தது.

இரண்டு போலீஸ்காரர்கள் வாக்கி டாக்கி ,துப்பாக்கி சகிதம் எங்களை நோக்கி வந்தார்கள். எனக்கு அவ்வளவு பதட்டம் இல்லை. நீச்சல் தெரியாதவனுக்கு அம்பது அடி ஆழமோ, நூறடி ஆழமோ  எல்லாம் ஒன்று தான். சமீர் தான் பயந்து போனான். அந்த மாதத்தில் தான் பாரீஸ் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நடந்திருந்தது. ஐரோப்பா முழுவதுமே ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தார்கள்.

"ஜென்டில்மென்..கைகளை மேலே தெரியும் படி தூக்கி ..சுவற்றை நோக்கி திரும்பி நில்லுங்கள்..நகராதீர்கள்.."


போலீஸ் இருவரும் ஆறடியில் மல்லுயுத்த வீரர்கள் போல இருந்தார்கள். நானும் சமீரும் அவர்கள் சொன்னதை செய்தோம். சமீர் கொஞ்சம் தெளிவான பவ்யமான குரலில் "ஆபிசர்.. நா கேப் ட்ரைவர்..என்னோட கஸ்டமர் அவரு ..பேக்க மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாரு.. அதா(ன்)தேடிட்டு இருந்தோம்.." .  அதில் ஒரு போலீஸ்கார் சமீரின் முகத்திற்கு பக்கத்தில் வந்து "உஸ்ஸ்ஸ்" என்றார். அமைதியானான். எங்களை பரிசோதித்தார்கள். பிற்பாடு ரயில் நிலையத்தில் இருந்த ஒரு அறைக்கு கூப்பிட்டு போனார்கள். சமீரை பார்க்க சங்கடமாய் இருந்தது. எனக்கும் அவனுக்கும் வெறும் அரைமணிநேர சகவாசம் தான். அதுக்கே அல்லல் படுகிறான்.நான் நடந்தவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் அவர்கள் முன் கொட்டினேன். அதில் ஒருவர் என்னை ஆழமாய் பார்த்தார். திரும்பவும் பேசத்தொடங்கினார். எல்லா டச்சுக்காரர் களையும் போலவே இலக்கணத்தை துறந்த ஆங்கிலம் பேசினார். 

' இந்தியால இருந்து இன்னைக்கு நைட் ஏழு மணிக்கு ஆம்ஸ்டெர்டாம் வந்தீங்க.. அங்கிருந்து ட்ரெயின் ஏறி என்ஸ்கடே வந்தீங்க..அப்புறம் கேப்ல ஏறி ஹோட்டல் கிளம்புனீங்க..திடீர்னு தான் பேக் காணோம்னு தோணிருக்கு '

நானும் சமீரும் கோரஸாய் தலையாட்டினோம். " ஒரு வேல பேக் இங்க இருக்குமோனு திரும்பவும் ஸ்டேஷன் வந்து தேடிருக்கிறீங்க..". திரும்பவும் தலையாட்டல். அவர் நாங்கள் சொல்வதையெல்லாம் போனில் யாருக்கோ டச்சில் சொல்லிக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் எழுந்து போய் தனியே பேசிக்கொண்டார்கள். என்னிடம் வந்து என்னுடைய பாஸ்போர்ட் நம்பரையும்..நான் வந்த பயண டிக்கெட்டயும் கேட்டார்கள். கொடுத்தேன். 

"ஆம்ஸ்டெர்டாம் ஏர்போர்ட் அத்தாரிட்ட பேசிட்டு வர்றோம்..உண்மை பேசுனா பயப்படத்  தேவையில்லை..ஒரு அரை மணி நேரம் இங்க வெயிட் பண்ண வேண்டி வரும்..அந்த மெஷின்ல காஃபி குடிக்கணும்னா குடிச்சிக்கோங்க... "  ஒரு ஓரத்தில் இருந்த காஃபி மெஷினை கை காட்டிவிட்டு வெளியே போனார். கொஞ்ச நேரம் நானும் சமீரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. எழுந்து போய் காஃபி எடுத்துக்கொண்டு வந்தேன். சமீர் என்னைப்பார்த்து "கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும் நீங்க.."என்றான். இதே வார்த்தையை முப்பத்திரெண்டு வருடமாய் எத்தனை குரல்களில்  கேட்டிருக்கிறேன். இப்போது ஒரு ஆப்கானி கேப்  டிரைவரிடம் கேட்கிறேன். நாடு விட்டு நாடு வந்து பிழைத்துக்கொண்டிருப்பவனின்  அன்றாடத்தில் வந்து குழப்பம் விளைவித்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் சொல்வதையே அவனுக்கும் சொன்னேன் "சாரி "  . அவன் எதுவும் சொல்லவில்லை. சுடச்சுட காஃபி வயிற்றுக்குள் இறங்கியது. உடல் கொஞ்சம் இலகுவானது. மூச்சை இழுத்து விட்டேன். நடந்தவற்றை நூறாவது முறையாக மனதிற்குள் ஓடவிட்டேன். இந்த முறை காட்சிகள்  பதட்டமில்லாமல்  ஓடியது..

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                    இரவு  7.40 மணி 

ஆம்ஸ்டர்டாம் ஏர்ப்போட்டில் இருந்து இரண்டு பெரிய டிராலிகள், கையில் ஒரு ட்ராவல் பேக் , தோளில் ஒரு கருப்பு பேக் சகிதம் வெளியே வருகிறேன். ஆம் அந்த பேக் இப்போது தோளில் தான் இருக்கிறது.  அத்தனை உருப்படிகளையும் வைத்துக்கொண்டு மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்கிறேன். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கிறேன். எனக்குப்பின்னால் ஒரு வயதான ஆண் நிற்கிறார். அவரை எந்த கோணத்தில் பார்த்தாலும் திருடராய் தெரியவில்லை. டிக்கெட் கவுண்டரை அடைந்தேன். ஒரு பெண் கம்பியூட்டர் முன் அமர்ந்திருந்தாள்.

"என்ஸ்கடே டிக்கெட் வேணும் "

"முப்பது ஒன்பது ஈரோ..கார்ட் ஆர் கேஷ் ?"

அவள் புருவங்கள் அடர்த்தியாய் இருந்தன.கண்களின் கருவிழி நீல விழியாய் இருந்தது. லிப்ஸ்டிக் போட்டிருந்தாளா இல்லையா என சொல்வது கடினம். வலது கையில் ஒரு விரலில் மோதிரம் அணிந்திருக்கிறாள். நிச்சயம் திருமணமானவள். இவையெல்லாம் தேவையில்லாத தகவல்கள். எடிட்டில் தூக்கியிருக்க வேண்டும். கதைக்குள் புகு.

"கார்ட் "

"வேகமா கொடுங்க..ட்ரைனுக்கு பத்து நிமிஷம் தான் இருக்கு "

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு ஓடுகிறேன். வண்டி வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு என் அனைத்து பொதிகளையும் ட்ரைனுக்குள் ஏற்றி நானும் ஏறிக்கொண்டேன்.இன்னமும் அந்த பாசக்கார பேக் என்  தோள்களை தழுவியிருக்கிறது.


                                           

                                                                   இரவு  09:00

ட்ரெயின் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.  நான் கையில் வைத்திருந்த "Fault in our stars" நாவல் படித்துக்கொண்டிருந்தேன். இன்னும் சில மணி நேரத்தில் நடக்கவிருக்கும் கிரக பலன்கள் தெரியாமல் சந்தோசமாய் இருக்கிறேன். எதிரில் இருப்பவர்கள் நெட்டி முறிப்பதும் , எழுந்து நடப்பதுமாக இருந்தார்கள். மிக முக்கியமாய் அந்த பிரசித்தி பெற்ற பேக் என் இடது பக்கம் இன்னமும் இருக்கிறது. அது அழகாய் ஒரு நாய்க்குட்டி போல என்  மேல் சாய்ந்திருக்கிறது.

 ஒரு நிறுத்தத்தில் சிலர் இறங்கினார்கள். ஒரு பெரியவர் தன் மனைவியுடன் எங்கள் பெட்டியில் ஏறினார்.என்னைப்பார்த்து லேசாய் சிரித்தார்.

"நீங்க ஆசியனா"

"ஆமா..இந்தியன் "

"ஓ..வெரி நைஸ் கன்றி அண்ட்  பீப்பிள்..என்னோட கசின் ரெண்டு முறை டெல்லி போயிருக்கிறான்.." 

"அப்பிடியா நல்லது "

"தாஜ்மஹால் பார்த்திருப்பீங்களே  ..எப்பிடி இருக்கும்  அந்த உலக அதிசயம்?"

'ஒரே ஒட்டக வீச்சம். போற வழியெல்லாம் குப்பை,சாக்கடை,ஏமாத்துக்காரர்கள். சம்மர்ல போனா அடிக்கிற வெயிலுக்கும் அந்த சூழலுக்கும்  காதல் மேலேயே ஒரு வெறுப்பு வந்திரும்'னு சொல்ல நினைத்து தேச நலன் கருதி "நல்லாருக்கும்"மென முடித்துக்கொண்டேன்.


                                                   இரவு 09:30

ட்ரைன் என்ஸ்கடேவை அடைந்திருந்தது. அது தான் கடைசி ஸ்டேஷன். எல்லோருமே இறங்கினார்கள். நானும் இறங்கும் உத்வேகத்தில் இருந்தேன். இந்தியாவில் அப்போது இரண்டரை மணி ஆகிக்கொண்டிருந்திருக்கும். எனக்கு தூக்கம் கண்ணை கட்டிக்கொண்டிருந்தது. என்னுடைய தோளில் பேக்கை போட்டுக்கொண்டு மற்ற லக்கேஜுகளை எடுத்துக்கொண்டிருந்தேன். தோளில் இருக்கும் பை, புடைப்பாய் இருப்பதால் இறங்கிக்கொண்டிருப்பவர்கள் மேலே இடிக்கிறது. சிலர் முறைக்கிறார்கள். சிலர் முனங்கிவிட்டு செல்கிறார்கள். அந்த பெரியவர்  இறங்கும்முன் "நீங்க  அந்தப்பையை கீழே வச்சிட்டு..உங்க லக்கேஜையெல்லாம் எடுங்க..அது பெட்டர் ". அவசரமாய் பையை சீட்டில் வைத்து விட்டு எல்லாவற்றையும் எடுக்கிறேன். பின்னால் ஒருத்தர் தள்ளுகிறார். அப்பிடியே நடக்கத்தொடங்குகிறேன். ட்ரெயினில் இருந்து இறங்குகிறேன். நடக்கத்தொடங்குகிறேன். பை அனாதையாய் பயத்துடன் அந்த சீட்டில் உட்கார்ந்திருக்கிறது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் காபி குடித்து முடிப்பதற்கும் ,போலீஸ்காரர்கள் உள்ளே வருவதற்கும் சரியாய் இருந்தது.

"நீங்க இந்தியன் எம்பசிக்கு ஒரு .."

அவர்களை பேசவிடாமல் நான் பேசினேன்.

"சார். என் பேக் ட்ரெயின்ல  தான்  இருக்கு. நா வந்தது தான் கடைசி ட்ரெயின்..இது தான் கடைசி ஸ்டாப்..யாருகிட்டயாச்சும் சொல்லி ட்ரெயின்ல செக் பண்ண முடியுமா..இப்போ உடனே பண்ண முடியுமா "

அவர் என்னை போய் பெஞ்சில்  உட்காரச்சொன்னார். திரும்பவும்  யாருக்கோ போன் பண்ணி டச்சில் பேசினார்.ஒரு அரைமணிநேர காத்திருப்பிற்கு பின் சில போலீஸ்காரர்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்கள் கையில் என்னுடைய அழகு பெத்த பேக் இருந்தது. போன உயிர் எனக்கு இன்ஸ்டால்மென்ட்டில்  வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் உள்ளிருந்த ஆவணங்களை சரிபார்த்து , சில கையெழுத்துக்களை வாங்கிக்கொண்டு என் உயிரினும் மேலான பையை என்னிடம் ஒப்படைத்தார்கள். வாங்கிக்கொண்டேன். போலீஸ்காரர் வெறுப்பாய் என்னைப்பார்த்து  "கொஞ்சம் பொறுப்போட இருக்கப்பாருங்க..எவனாவது இவ்வளவு முக்கியமான விஷயங்கள விட்டிட்டு போவானா..ட்ரெயின் அரைமணிநேரத்துல ஆம்ஸ்டெர்டாம் போயிருக்கும்..நீங்க வாரக்கணக்கா அலைய வேண்டி இருந்திருக்கும் "

முகம் சோகமாய் மாறிக்கொண்டது . "சாரி சார்..ஐ ல் பி கேர்ப்ஃபுள்..தேங்க்ஸ் எ லாட் ".  இனிமே இந்த யோகா கீகா செஞ்சாவுது இந்த ஞாபக மறதியை ஒழிச்சிக்கட்டணும்னு மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். காரை நோக்கி நடந்தோம். கார் வரை சமீர் எதுவும் பேசவில்லை. நான் பேக்குடன் பூனை போல அமைதியாய் பின்னால்  உட்கார்ந்து கொண்டேன். சமீருக்கு ஒரு போன் வந்தது. எடுத்துப்பேசினான். "ஓகே..ஓகே " என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தான். கொஞ்ச நேரத்தில் அவன் தலையில் அவனே அடித்துக்கொண்டான். நான் பதறிப்போனேன்.

"ஏம்ப்பா..என்னாச்சு"

திரும்பி  என்னைப்பார்த்து  "நீங்க உங்க போனை அந்த ரூம்லயே  வச்சிட்டு வந்திட்டிங்களாம்..போய் எடுத்துக்க சொல்லி அந்த ஆபிசர் கால் பண்ணாரு